Wednesday 9 October 2019

P.S.VEERAPPA,TAMIL MOVIE LEGEND OCTOBER 9,1911-1998 SEPTEMBER 11








P.S.VEERAPPA,TAMIL MOVIE LEGEND 
OCTOBER 9,1911-1998 SEPTEMBER 11



பி.எஸ்.வீரப்பா: திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், 1911 அக்.,9ல் பிறந்தார். வில்லன் வீரப்பாவின் குழந்தை உள்ளம்! காங்கேயத்தைச் சேர்ந்த பி.எஸ்.வீரப்பா அவர்கள், சாண்டோ சின்னப்ப தேவரைப்போல மில்லில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நடிப்பாசையால் சென்னை வந்தவர்... அன்றையகால சூப்பர்ஸ்டாராகத் திகழ்ந்த கே.பி.சுந்தராம்பாளைச் சந்திக்க நேர்ந்தது. தன் ஏரியாவைச் சேர்ந்தவ...

நாடகங்களில், இவரது நடிப்பை பார்த்த, கே.பி.சுந்தராம்பாள், சினிமாவில் நடிக்க, இவரை பரிந்துரைத்தார். முக்கிய வேடத்தில், கே.பி.எஸ்., நடித்த, மணிமேகலை என்ற படத்தில் அறிமுகமானார். சக்கரவர்த்தி திருமகள் என்ற படத்தில் கம்பீரமான சிரிப்பால், மக்களிடையே பிரபலம் அடைந்தார். தமிழ் படங்களில், வில்லன் கேரக்டரில் முத்திரை பதித்தவர்.

எம்.ஜி.ஆர்., - சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர்.

இந்தி பட தயாரிப்பால் தளர்ந்து போன பி.எஸ்.வீரப்பா

நாங்கள் சினிமாவைப் பார்த்து ரசிக்கத் தொடங்கியிருந்த காலத்தில், எங்களை பயமுறுத்துகிற வகையிலும், பெண்களிடம் கெட்டபெயரும், வசைபாட்டும் வாங்குகிற வகையிலும், வெள்ளித்திரையை ஆக்கிரமித்துப் போனவர்தான் பி.எஸ்.வீரப்பா.அவருடைய பயங்கரமான சிரிப்பும், வசனம் பேசுகின்ற பாணியும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. அது அவருக்கு கதாநாயகயர்களுக்கு இணையான ஆண் ரசிகர்களையும் பெற்றுத்தந்தது. வீரப்பா வருகின்ற முதல் காட்சியில் ஆண் ரசிகர்களிடம் இருந்து கைதட்டல்களும், விசில் சத்தங்களும் எழும் அதே நேரத்தில், பெண்களிடம் இருந்து வசைப்பாட்டுகள் வருவது வாடிக்கையாகிப் போனது.

சண்டைக் காட்சிகள் நிறைந்த எம்.ஜி.ஆர். திரைப்படங்களில், எம்.ஜி.ஆர். வந்ததும் தான் படம் சூடுபிடிக்கும். அதே வேளையில் எம்.ஜி.ஆர். படத்தில் பி.எஸ்.வீரப்பா இருந்தால், அவர் வந்ததுமே படம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும் என்பது தான் பி.எஸ்.வீரப்பாவுக்கு கிடைத்த வெற்றி. கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த பி.எஸ்.வீரப்பா, சினிமாத் துறையில் அறிமுகமானது 1939-ம் ஆண்டு வெளியான ‘மணிமேகலை’ திரைப்படத்தில் தான். ஆனால் அவருக்கு பெயர் பெற்றுத் தந்தது, 1948-ம் ஆண்டு தியாகராஜபாகவதர் நடிப்பில் வெளியான ‘ராஜமுக்தி’ திரைப்படம்.

தொடர்ந்து பி.எஸ்.வீரப்பா நடித்த படங்களில் தனக்கென நிலையான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவரது வசனங்களில், ‘மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’, ‘இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்’ போன்ற வசனங்கள் மிகவும் பிரபலம். இந்த வசனங்களை இன்றும் கூட சிலர் உச்சரிப்பதை கேட்க முடியும். தவிர ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் பத்மினியும், வைஜெயந்திமாலாவும் ஆடும் போட்டி நடனத்தின் நடுவே ‘சபாஷ்! சரியான போட்டி’ என்று சொல்லும் பி.எஸ்.வீரப்பாவின் வசனமும் குறிப்பிடத்தக்க ஒன்று.

சிறுவர்களாக இருந்த எங்களை வீட்டில் உள்ளவர்கள் மிரட்டுவதற்குக் கூட பி.எஸ்.வீரப்பா பயன்பட்டார். வீட்டில் சொல் பேச்சு கேட்கவில்லை என்றால், ‘வீரப்பா வரப்போகிறார், அவரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவோம்’ என்று பெற்றோர் மிரட்டுவர். அதற்கு பயந்து அவர்கள் சொல்கிறபடி எல்லாம் நடந்துகொள்வோம்.
எங்களுடைய மண்டைக்குள் அரித்துக்கொண்டிருந்த சில கேள்விகளை, பெரியவர்களிடம் கேட்டும், மனம் திருப்தி அடையவில்லை. 15 வயது வரை அதற்கான சரியான விடைகள் கிடைக்கவில்லை.

‘எம்.ஜி.ஆரும், வீரப்பாவும் உண்மையிலேயே சண்டை போட்டால், யார் ஜெயிப்பார்கள்? உண்மையான பலசாலி யார்?’ எங்களின் சிறுவயதில் எழுந்த இந்த கேள்விகளுக்கு, பெரியவர்கள் அவரவரின் விருப்பத்திற்கும், வெறுப்பிற்கும் ஏற்றபடி பதில்களைக் கூறி, எங்களை குழப்பத்தில் ஆழ்த்துவார்கள்.

ஒரு சிலர் எம்.ஜி.ஆர். மீதுள்ள வெறுப்பில், ‘டேய் பசங்களா! வீரப்பாதாண்டா உண்மையான பலசாலி. எம்.ஜி.ஆர். அவர்கிட்ட ஒண்ணும் வாலாட்ட முடியாது. கையில் சிக்கினால் ஒரே அமுக்குதான், எம்.ஜி.ஆருக்கு வாயில் நுரை தள்ளிவிடும்’ என்பார்கள்.ஒரு சிலர் ‘வீரப்பா பலசாலிதாண்டா. ஆனால் எம்.ஜி.ஆர். 16 விதமான சண்டைகள் தெரிந்தவர். வீரப்பாவிற்கு கத்திச்சண்டை மட்டும் தான் தெரியும். எம்.ஜி.ஆர். கிட்ட வீரப்பா ஒண்ணும் செய்ய முடியாது’ என்றபடி எம்.ஜி.ஆருக்கு தெரிந்ததாக சொன்ன 16 விதமான சண்டைகளை அடுக்கி எங்களை கிறங்கடிப்பார்கள்.

இது போன்ற கேள்விகளும், சந்தேகங்களும் என்னுடைய 25 வயது வரை நீண்டது. ‘குத்துச்சண்டை வீரர் முகமது அலியும், புரூஸ்லியும் மோதினால் யார் ஜெயிப்பார்கள்?’ என்று, வயதுக்கு ஏற்றபடி அது வளர்ந்து கொண்டே சென்றது. இதற்கு ‘போலாரிட்டு’ என்று பெயர். அதாவது இருவேறு கருத்துகள், இருவேறு நாடுகள், இருவேறு மதங்கள், இருவேறு நபர்கள் என்று, உலகில் இரண்டு இரண்டாக எல்லாவற்றிலும் ஒப்பீடு செய்து மனிதர்கள் சண்டை போட்டுக்கொள்வதும், கருத்து மோதல்களில் ஈடுபடுவதும், மனிதகுலம் அழியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.இன்றைக்கு அவைகளை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு அறியாமையில் இருந்திருக்கிறோம் என்று வெட்கத்தில் தலைகுனிந்து எனக்குள் நானே சிரித்துக் கொள்வேன்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்.’ நான் அந்தப் படத்தை 1960-ம் ஆண்டு தான் பார்த்தேன். அந்தப் படத்தில் பி.எஸ்.வீரப்பாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதை, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தப் படம் வந்த நேரத்தில் சிறுவர்களாகிய எங்களுக்கு, அவர் ஒரு சிம்மசொப்பனமாக இருந்தார். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படம் பார்த்த இரவும், ‘மகாதேவி’, ‘கைதி கண்ணாயிரம்’ போன்ற படங்களைப் பார்த்த இரவுகளும் எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு, தூங்காத இரவுகளாக இருந்தன. அந்த அளவிற்கு அவர் அன்றைக்கு எங்களுக்கு உலகத்திலேயே மிகப்பெரிய வில்லனாகக் காட்சியளித்தார்.

பின்னாட்களில் நான் அவரைச் சந்தித்தபோது இவற்றையெல்லாம் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர், ‘என்னுடைய நடிப்பையும், என்னையும் பார்த்து ஏன் பயப்படுகின்றீர்கள்? நான் அவைகளை சாதாரணமாகத்தானே செய்தேன்’ என்றார்.திரைப்படங்களில் நாம் பார்த்து பயப்படுகின்ற வீரப்பாவை, நேரில் பார்த்தால் முற்றிலும் வேறுவிதமாகக் காட்சியளிப்பார். அந்த வீரப்பாவுக்கு சூது, வாது, தந்திரம், அடுத்தவர்களைக் கெடுத்து வாழுவது, அடுத்தவர்களை கவிழ்த்திவிடுவது போன்ற எந்தவித செயல்களும், குணமும் கிடையாது. ‘நான்’ என்னும் அகந்தை இல்லாமல் வெளிப்படையாகப் பேசும் மனம் படைத்தவர் அவர். அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், திரைக்கும், நிஜத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியை எண்ணி நாம் வியந்து போவதுண்டு.

1953-ம் ஆண்டு ஜூப்பிட்டருடன், மேகலா பிக்சர்ஸ் சேர்ந்து ‘நாம்’ என்ற படத்தை எடுத்தார்கள். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்தனர். அவர்களோடு பி.எஸ்.வீரப்பாவும் நடித்திருந்தார். படத்திற்கான வசனத்தை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. ஏ.காசிலிங்கம் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தை நான்கு பேர் இணைந்து தயாரித்திருந்தனர். அதில் ஒருவர் பி.எஸ்.வீரப்பா. அந்தப் பழக்கத்தின் காரணமாக 1958-ம் ஆண்டு ‘பிள்ளைக்கனியமுது’ என்ற படத்தை தனியாக தயாரித்தார். அதன்பிறகு பல படங்களை தயாரித்தார். அந்தப் படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களும் நடித்தார்கள்.

1962-ம் ஆண்டு தமிழில் ‘ஆலயமணி’ என்ற படத்தை எடுத்தார். சிவாஜி கணேசன், சரோஜாதேவி இருவரும் ஜோடியாக நடித்தனர். கே.சங்கர் இயக்கியிருந்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் தெலுங்கிலும், இந்தியிலும் கூட தயாரிக்கப்பட்டது. இந்தியில் பி.எஸ்.வீரப்பாவே தயாரித்தார். இந்தியில் பீம்சிங் இயக்கினார். இந்தியில் ‘ஆத்மி’ என்ற பெயரில் அந்தப் படம் உருவானது. அதன்பிறகு பி.எஸ்.வீரப்பா எல்லா நிலைகளிலும் வீழ்ச்சியைச் சந்தித்தார். இதை அவரே என்னிடம் சொன்னார்.

‘ஆத்மி’ படத்தில் இந்தியின் புகழ்பெற்ற நடிகரான திலீப்குமார் கதாநாயகனாக நடித்தார். படப்பிடிப்பின் ஒரு பகுதியாக கொடைக்கானலில் 45 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் 40 நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தால், சரியாக படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. ஷூட்டிங் இல்லாத அந்த நேரத்தில் எல்லாம் திலீப்குமாருக்கு சீட்டு விளையாடுவது தான் பொழுதுபோக்கு.மேலும் அந்த சமயம் காஷ்மீரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாவை, கொடைக்கானலில் ராணுவ பாதுகாப்பில் வைத்திருந்தார்கள். ஷேக் அப்துல்லாவும், திலீப்குமாரும் நெருங்கிய நண்பர்கள். ஷேக் அப்துல்லா எந்த ஓட்டலுக்கு தேநீர் அருந்தவும், சாப்பிடவும் வருவாரோ, அதே ஓட்டலுக்குத் தான் திலீப்குமாரும் செல்வார்.

முதல் நாளே பி.எஸ்.வீரப்பா அண்ணனுக்கு தலைவலி ஆரம்பமாகிவிட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளில் பெரும்பாலானோர், வீரப்பா அண்ணனின் ரசிகர்கள். எனவே தனிப்பட்ட முறையில் அவரிடம் வந்து, ‘சார்! தயவு செய்து திலீப்குமாரை இந்த ஓட்டலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது அவரிடமே சொல்லிவிடுங்கள். அப்படி முடியவில்லை என்றால், வேறு இடங்களுக்குச் சென்று ஷூட்டிங்கை நடத்துங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.காவல்துறையினர் சொன்ன விஷயங்களைக் கேட்டவுடன், வீரப்பா அண்ணனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. படத்தில் தான் பயங்கரமாக சிரிக்க முடியும். நிஜ வாழ்க்கையில் அப்படி முடியுமா? இந்த விஷயத்தை எப்படி திலீப்குமாரிடம் சொல்லுவது என்று குழம்பிப் போன அவர், காவல் துறையினரிடம் ஷேக் அப்துல்லா எந்த நேரத்தில் ஓட்டலுக்கு வருவார் என்பதை அறிந்து கொண்டு, அந்த நேரத்தில் திலீப்குமார் ஓட்டலுக்கு செல்லாதபடி பார்த்துக் கொண்டார்.

கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, திலீப்குமாரின் கால்ஷீட் அனைத்தும் வீணானது. பிறகு எப்படியோ திலீப்குமாரிடம் பேசி, தேதிகள் வாங்கி ஒருவழியாக படத்தை முடித்து வெளியிட்டார் பி.எஸ்.வீரப்பா.‘ஆலயமணி’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், மரணப்பாறை என்ற இடத்தில் இருந்து சக்கர நாற்காலியில் கடலுக்குள் விழுவது போல் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் ஒரு பொம்மையை வைத்து கடலுக்குள் விழுவது போல் எடுத்து, உண்மையிலேயே சிவாஜிகணேசன் விழுவது போல், அவ்வளவு தத்ரூபமாக எடுத்திருந்தார் அந்தப்படத்தின் இயக்குனர் கே.சங்கர்.

ஆனால் இந்தியில் அந்தக் காட்சியை இயக்குனர் பீம்சிங் எடுக்கும்பொழுது, ‘டம்மி’ என்று சொல்லக்கூடிய பொம்மையை வைத்து சக்கர நாற்காலியில் தள்ளிவிட்டு எடுப்பதைவிட, உண்மையாகவே ஒரு ஆளை வைத்துத் தள்ளிவிட்டு எடுத்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்றாராம் திலீப்குமார். அந்த யோசனையை கேட்ட இயக்குனர் பீம்சிங், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார். பி.எஸ்.வீரப்பாவும் இந்த யோசனையைக் கேட்டவுடன் அப்படியே உறைந்துபோய் நின்றாராம்.பின்னர் வீரப்பா, திலீப்குமாரிடம் உண்மையான நிலைமையையும், எதார்த்தமான உண்மையையும் கஷ்டங்களையும் விளக்கியிருக்கிறார். ‘அந்த அளவிற்கு மிக உயரமான இடத்தில் இருந்து எப்படிப்பட்ட திறமையான ஸ்டண்ட் நடிகர் விழுந்தாலும், அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி; எனவே மிகவும் தத்ரூபமாக, நீங்களே விழுவதுபோல், உங்களாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி எடுக்கின்றோம்’ என்று உறுதியளித்திருக்கிறார். அப்படி விளக்கிச் சொன்ன பிறகுதான் திலீப்குமார், ஒரு வழியாக சமாதானம் ஆகியிருக்கிறார். பின்னர் பொம்மையை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிவிட்டு, திலீப்குமாரே கண்டுபிடிக்க முடியாதபடி எடுத்து அவரை திருப்திபடுத்தி இருக்கிறார்கள்.

நீண்ட தயாரிப்பில் இருந்த பிறகு ஒரு வழியாக 1968-ம் ஆண்டு ‘ஆத்மி’ திரைப்படம் வெளியானது. படம் மூன்று பிரதமர்களை கடந்து வெளிவந்தது. ஆம்.. 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ந் தேதி பிரதமர் ஜவஹர்லால் நேரு காலமானார். அவர் காலமாவதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டது ‘ஆத்மி’ திரைப்படம். அதன்பிறகு லால்பகதூர் சாஸ்திரி, பிரதமர் ஆன பிறகும், அதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அவருக்குப்பின் இந்திராகாந்தி பிரதமரான பின்னர்தான் அந்தப் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படம் வெளியாகும் சமயம், அதற்கு முன்பு பி.எஸ்.வீரப்பா கையில் வைத்திருந்த பணமும், கார்களும் அவரை விட்டு போயி ருந்தது.படம் வெளியானதும் பி.எஸ்.வீரப்பா, பாம்பே சென்றிருந்தார். அங்கு அவரது படம் வெளியாகி இருந்த தியேட்டருக்குச் செல்லக் கூட சொந்த கார் இல்லாமல், வாடகைக் காரில் போனதுதான் மிகப்பெரிய கொடுமை.

‘ஆத்மி’ படத்தைப் பற்றி சொல்வதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பி.எஸ்.வீரப்பாவை புகழ்ந்து பேசியிருக்கிறார் திலீப்குமார். ‘இதுவரை நான் சந்தித்த தயாரிப்பாளர்களில், இவரைப்போல் ஒருவரை கண்டதில்லை’ என்று உயர்த்திப் பேசியிருக்கிறார்.ஆனால் ‘ஆத்மி’ திரைப்படத்தால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டமும், அது தந்த மனவேதனைகளும் மனதில் இருந்ததால், நடிகர் திலீப்குமாரின் பாராட்டுகள் அனைத்தும், பி.எஸ்.வீரப்பாவின் மனதைத் தேற்றும் வலுவில்லாத சொற்களாகவே போனது.

-தொடரும்.

ஷூட்டிங் பார்த்த பழ.கருப்பையா

பழ.கருப்பையாவும், இயக்குனர் காரைக்குடி நாராயணனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; நண்பர்கள். 1971-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘இருதுருவம்.’ பி.எஸ்.வீரப்பா தயாரித்த கடைசிப் படம் இது தான். ‘இருதுருவம்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில், காரைக்குடி நாராயணனைப் பார்க்க பழ.கருப்பையா வந்திருக்கிறார். அவரை ‘ஷூட்டிங் பார்க்க வருகிறாயா?’ என்று, நாராயணன் கேட்டிருக்கிறார்.அதற்கு பழ.கருப்பையா, ‘நான் இதுவரை ஷூட்டிங்கே பார்த்ததில்லை. அத்துடன் சினிமாவிற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. நான் எதற்கு வர வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.

‘சிவாஜி, பத்மினி எல்லாம் இன்றைய ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். நீ கட்டாயம் வர வேண்டும்’ என்று சொல்லி அவரை அழைத்துச் சென்றிருக்கிறார் நாராயணன்.வலுக்கட்டாயமாக அழைத்ததன் பேரில் ஷூட்டிங் பார்க்க சென்ற பழ.கருப்பையா, அதன்பிறகு 20 படங்களைத் தயாரித்தார்.

தயாரிப்பாளர் தாணுவின் உதவி

இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பெரிய பெரிய நட்சத்திரங்களை வைத்து படங்களை தயாரித்துக் கொண்டிருப்பவர் கலைப்புலி தாணு. அவர் படத் தயாரிப்பாளர்கள் என்றைக்குமே கஷ்டப்படக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர். அதனால்தான், பி.எஸ்.வீரப்பாவின் ஒரே மகனான ஹரிஹரன், பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டப்படுவதைக் கேள்விப்பட்டு, ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். அவர் செய்த உதவி பற்றிய செய்தி, பத்திரிகைகளில் வராமல் ரகசியமாகக் கொடுத்தது அவரது பெருந்தன்மை







நான் நல்லவன் வேஷம் போடனுமே? - பி.எஸ்.வீரப்பா 


எனக்கு முதலில் கத்தி எடுத்துக் குடுத்து சண்டை போட கத்துக்க கொடுத்தவரே எம்.ஜி.ஆர் தான். அன்னிலேர்ந்து நானும் எம்.ஜி.ஆரும் கிட்டத்தட்ட நாற்பது வருடம் கத்திச் சண்டை, மற்றும் பல வித பைட்டிங் பண்ணியிருக்கோம். எங்க ரெண்டு பேருக்கும் என்னிக்குமே டூப்  போட்டதில்லே. எனக்குத் தெரிஞ்சு முதல் முதலிலே ஒரு படத்தின் வெற்றிக்கு விழா கொண்டாடியது , நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்களை கவுரவிச்சதுன்னா அது எம்.ஜி,.ஆரின் 'நாடோடி மன்னன்' படத்தில்தான்.

இப்போ ஆர்டிஸ்ட்டுகள் வந்து குறிப்பிட்ட ரோலில் தொடர்ந்து வந்தால், 'ப்ராண்ட்' பண்ணிடுவாங்கன்னு பயப்படுறாங்க.    நாங்க அப்படியில்லே. 'வில்லன் வீரப்பான்னா' வில்லன்தான். பயங்கரச் சிரிப்பு கூடவே சிரிக்கணும்.   முதலிலே படத்திற்காக அப்படிச் சிரிச்சேன். டைரக்டர் என்னை சிரிக்க வைச்சார். ஒவ்வொரு படத்திற்கும் அது ஒரு மஸ்ட்.ஜெமினி வாசன் சார்கிட்ட ஒரு நாள், :"நான் நல்லவன் வேஷம் போடனுமே " னு கேட்டேன்.  'நீ நல்லவன் வேஷம் போட்டால் அப்புறம் படமேது? உன் பயங்கரச் சிரிப்பைக் கேக்குறதுக்கே நிறைய இளைஞர்கள் படம் பாக்க வராங்க தெரியுமா?  என்று அவர் கேட்டார்.தமிழ் பட உலகிலே  ஒரு பெக்குலியாரிட்டி பாருங்க.மூன்று வில்லன்களான நான் நம்பியார்,மனோகர் மூன்று பேரும்  படங்களில் நிறைய கொலைகள் பண்ணிருக்கோம். ஏராளமான பொண்ணைக் கற்பழிச்சிருக்கோம். ஆனா எதோ கடவுள் புண்ணியத்திலே நிஜ வாழ்க்கையிலே மூன்று பேரும் தெய்வ பக்தி நிறைய உடையவர்களாக, நல்ல கவுரவமாக நாணயமாக வாழ்ந்துகிட்டு இருக்கோம்.  

குயிலி ராஜேஸ்வரி

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.02.82 இதழ்)


1950களில் வந்த வில்லன்களில் மட்டுமல்ல அதன் பிறகு 1960களில் வில்லன்களாக தமிழ்த்திரையில் நின்றவர்கள் எவரையும் விட மகத்துவம் நிறைந்தவர் வீரப்பா.

வில்லன் வீரப்பாவின் முக்கிய படங்கள் என்று சில சொல்வதென்றால்
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
’அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம் திறந்திடு சீஸே!’

மகாதேவி ( 1957 )
சாவித்திரியை அவர் காமம் பொங்கப் பார்க்கும் பார்வை.
’அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரண தேவி!’
எம். என்.ராஜம் அவரைப்பார்த்து வெட்கம், நாணம் கலந்து ’அத்தான்’ என்று குழையும்போது எரிச்சலுடன் வீரப்பா ’சத்தான இந்த வார்த்தைகளில் செத்தான் கருணாகரன்!’
’அப்படி அபசகுனமாக சொல்லாதீர்கள் அத்தான்’ என்று
எம்.என்.ராஜம் உடனே பதறும்போது ’சொல்லுக்கெல்லாம் கொல்லும் சக்தி இருந்தால் உலகம் என்றோ அழிந்திருக்குமடி!’
சந்திரபாபுவிடம் சீறல் ’கிளியைக் கொண்டு வரச்சொன்னால் குரங்கைக் கொண்டு வந்து விட்டாயே!’

'பெற்றவளுக்கில்லாத அக்கறை உனக்கென்னடி?’

ராஜராஜன் (1957)
’புகழ்ந்து பாடமாட்டானா இந்தப் புலவன்? பட்டினி போடுங்கள்! நான்கு நாள் பட்டினி கிடந்தால் கலிப்பா, வெண்பா என்று பொழிந்து தள்ளி விடமாட்டானா! ஹா ஹா ஹா ‘

நாடோடி மன்னன் (1958)
நாடோடி மன்னன் படத்தில் ’பிங்களனோ ஒரு அப்பாவி’ என்று நம்பியாரை எள்ளி நகையாடுவார்.
புதிய சட்டங்கள் பற்றி எம்.ஜி.ஆர் எடுத்துச்சொல்லும்போது ‘கற்பழித்தால் மரணதண்டனை.” என்ற சட்டம் குறித்து உடனே,உடனே வீரப்பா அதிர்ச்சியாகி முகத்தில் கடும்கோபக்குறி காட்டுவார். என்ன ஒரு வில்லத்தனம்!

வஞ்சிக்கோட்டை வாலிபன் (1957)
மிகப்பிரபலமான அந்த வசனம்! ’சாதுர்யம் பேசாதடி என் சதங்கைக்கு பதில் சொல்லடி’ என்று வைஜயந்திமாலா பொங்கி, பத்மினிக்கு நடன சவால் விடும்போது வீரப்பாவின் ஆரவார குதூகலம். ’சபாஷ்! சரியான போட்டி!’ வீரப்பாவின் வசனத்துக்கு தியேட்டரே அதிரும்!

சிவகெங்கைச் சீமை (1959)
’நள்ளிரவில் துள்ளி விழும் மருது பாண்டியரின் தலை!’ ஹாஹாஹா.
(ஜஞ்சஞ்சஞ்சங் ரீரிகார்டிங்க்) இடைவேளை! படத்துக்கு இடைவேளை! 

இடைவேளைக்குப்பின் கூட சிவகெங்கைச் சீமையில்  வீரப்பா பொறி சிந்தும் வெங்கனல் வசனங்கள் பிரமிக்க அடிக்கும்.
’கொள்ளையடித்தவன் வள்ளலாகிறான்!..... பல மண்டை ஓடுகளின் மீது சாம்ராஜ்யங்கள் அமைக்கப்படுகின்றன!......ஹாஹாஹா!..’
 வெள்ளையர்களுக்கெதிரான மருது பாண்டியர்களின் போராட்டம் தான் சிவகெங்கைச்சீமை. வெள்ளைக்காரன்கள் இருந்தால் தான் என்ன! சிவகெங்கைச்சீமையில் வில்லன் வீரப்பா மட்டும் தான்!

வீரப்பாவின் உச்சமான பெர்ஃபாமன்ஸ் என்றால் மகாதேவி, நாடோடி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், சிவகெங்கைச் சீமை என்ற நான்கு படங்கள் தான்.







vஉலக தரத்திற்க்கு நடிப்பை வெளிக்காட்டிய எம் ஆர் ராதா, பாலையா உருவத்திலேயே மிரட்டும் பி எஸ் வீரப்பா, செய்கைகளிலும் பேச்சிலும் மிரட்டிவிடும் நம்பியார், அசோகன், மனோகர், நாயகனாக அறிமுகமாகி வில்லனாக மாறிய ஜெய்சங்கர், ரவிசந்திரன், வில்லனாக நடித்து பின் கதாநாயகனாக மாறிய கமல்ஹாசன்,ரஜினிகாந்த், சத்யராஜ்,சரத்குமார். மாறுபட்ட நடிப்பை வழங்கும் நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ், தற்போது கலக்கிவரும் கிஷோர் (ஜெயம் கொண்டான், பொல்லாதவன்), டேனியல் பாலாஜி (வேட்டையாடு விளையாடு), சமுத்திரக்கனி (சுப்ரமணியபுரம்) என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டாலும் வில்லன் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை.


கேரளாவில் இருந்து திலகன்,முரளி,கலாபவன் மணி, ஆந்திரத்தில் இருந்து ராமிரெட்டி, கோட்டா சீனிவாசராவ், கன்னடத்தில் இருந்து தேவராஜ், உபேந்திரா என அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தராவிட்டாலும் நாயகிகளையும், வில்லன்களையும் மட்டும் தாராளமாய் தந்து கொண்டிருக்கின்றன. இந்தித் திணிப்பும் இதில் ஒரு பொருட்டே கிடையாது. அம்ரீஷ் பூரி, ஆசிஷ் வித்யார்த்தி என சகலரையும் ஏற்றுக் கொன்டிருக்கிறோம். பால் தாக்கரே கோபித்துக் கொள்வாரே என்று, மராத்தி நாடகங்களில் கலக்கி திரையுலகில் புகுந்த அதுல் குல்கர்னி, சாயாஜி ஷின்டே போன்றோரையும் தமிழ் சினிமா ஏற்றுக் கொண்டது.

பி எஸ் வீரப்பா

சென்ற தலைமுறை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வில்லன் என்றாலே நினைவுக்கு வருபவர் பி எஸ் வீரப்பாதான். வில்லனுக்கு ஏற்ற உடல் வளமும், குரல் வளமும் ஒருங்கே அமையப் பெற்றவர் இவர். 1948 ஆம் ஆண்டு வெளியான ராஜமுக்தி என்னும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமான இவர் பின்னாளில் சிறந்த வில்லன் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கினார்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் இருந்து விடுபட்ட எம் கே தியாகராஜ பாகவதர் தன் செல்வாக்கை நிலைநிறுத்த ஆரம்பித்த படம் ராஜமுக்தி. இதில் வி என் ஜானகி, பானுமதி, சிறு வேடத்தில் எம்ஜியார், எம் ஜி சக்கரபாணி, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை (நாகஸ்வரம்) ஆகியோரும் நடித்திருந்தனர். புதுமைப்பித்தன் வசனம் எழுத, எம் எல் வசந்தகுமாரி தன் முதல் திரைப்பாடலை பாட பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் தோல்வி அடைந்தது. ஆனால் பி எஸ் வீரப்பாவின் திரைப் பிரவேசத்துக்கு காரணமாய் அமைந்தது. இதன்பின் கருணாநிதி கதை வசனத்தில் வெளியான எம்ஜியார்,வி என் ஜானகி நடித்த மருத நாட்டு இளவரசியில் (1950) நடித்தார்.

1953 ஆம் ஆண்டு எம்ஜியார்,கருணாநிதி,காசிலிங்கம் ஆகியோருடன் இணைந்து நாம் என்னும் படத்தை பி எஸ் வீரப்பா தயாரித்தார். இது மேகலா பிக்சர்ஸ் பேனரில் வெளியானது. இதில் பி எஸ் வீரப்பா வீட்டு வேலைக்காரன் வேடத்தில் எம்ஜியார் நடித்திருப்பார். எம்ஜியாரை காலால் எட்டி உதைப்பதுபோல கூட காட்சி அமைப்பு இருக்கும். அதன்பின் வெளியான எம்ஜியார் படங்களில் இது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டதில்லை. இந்த காலகட்டத்தில் எம்ஜியார் உச்ச நட்சத்திரமாக மாறி பல சரித்திர படங்களில் நடித்தார். அவற்றில் பெரும்பாலான படங்களில் பி எஸ் வீரப்பா வில்லனாக நடித்தார். இயல்பாகவே இவரின் உடல்கட்டும்,முகவெட்டும் ராஜா, மந்திரி,ராஜகுரு போன்ற வேடங்களுக்கு பொருத்தமாய் இருக்கும். லேசாக முகத்தை இறுக்கினாலே வில்லன் தோரனை வந்துவிடும்.

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)

சக்கரவர்த்தி திருமகள் (1957)

மகாதேவி (1957)

பூலோக ரம்பை (1958)

நாடோடி மன்னன் (1958)

வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)

சிவகங்கை சீமை (1959)

மன்னாதி மன்னன் (1960)

ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அலிபாபாவும் 40 திருடர்களில் திருடர்கள் தலைவனாக குதிரையில் அவர் பவனி வரும் காட்சி கண்களை விட்டு அகலாதது. மகாதேவியில் அவர் பேசிய "அடைந்தால் மகா தேவி அடையாவிட்டால் மரண தேவி" வசனமும் வஞ்சிக்கோட்டை வாலிபனில் அவர் பேசிய " சபாஷ் சரியான போட்டி" வசனமும் தமிழ் சினிமா டாப் டென் பஞ்ச் டயலாக்குகளில் எப்போதும் இடம் பிடிக்கும். நாடோடி மன்னனில் வஞ்சக ராஜ குருவாக அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சிவகங்கை சீமை திரைப்படத்தில் சின்ன மருதுவான எஸ் எஸ் ராஜேந்திரன் தன் அண்ணனான டி கே பகவதியிடம் இவரை நம் படையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார். அப்போது அவையினர் சந்தேகமாகப் பார்க்க உடனே எஸ் எஸ் ஆர் இவரது வீரத்தை பரிட்சை செய்து பார்க்க வேண்டுமா என்று கேட்பார். அதற்க்கு டி கே பகவதி சொல்வார் "வேண்டாம் இவரைப் பார்த்தாலே இவரது வீரம் தெரிகிறது" என்பார்.

1960 க்குப் பின் சரித்திர கதைகளை தயாரிப்பது குறைந்து போனது. இந்த காலகட்டத்தில் வந்த ஸ்ரீதர், பாலசந்தர் ஆகியோரது படங்களில் பெரும்பாலும் சம்பவங்களே வில்லன்களாய் அமைந்தன. மற்ற சமூக கதையமைப்புள்ள படங்களிலும் பண்னையார், உள்ளூர் நகரசபைத் தலைவர் போன்ற உப்பு சப்பில்லாத திறமைக்கு அதிகம் வேலை வைக்காத வேடங்களே வில்லன்களுக்கு வாய்த்தன. இதுபோன்ற கேரக்டர்களுக்கு பி எஸ் வீரப்பா தேவையேயில்லை. ஐந்தையும் ஐந்தையும் கூட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் எதற்க்கு?

1977க்குப் பின் பாரதிராஜா,பாலுமகேந்திரா,மகேந்திரன் படங்களிலும் வில்லனுக்கு பெரிய தேவை ஏற்படவில்லை. இவர்கள் சித்தரித்த வில்லன்களுக்கு 40க்கும் குறைவான வயதுள்ளவர்களே தேவைப்பட்டர்கள். இக்காலத்தில் அலாவுதீனும் அற்புத விளக்கு படத்தில் (1979) நடித்தார்.முரட்டுக்காளைக்கு பின் ஜெய்சங்கர், அதன்பின் சத்யராஜ் என அடுத்த தலைமுறை வில்லன்கள் வந்த பின்னர் பி எஸ் வீரப்பாவின் தேவை குறைந்து போனது. பின் சுபாஷ் இயக்கத்தில் கலியுகம் (1988), வி சேகர் இயக்கத்தில் நீங்களும் ஹீரோதான் (1990) ஆகிய படங்களில் கடைசியாக நடித்தார்.

நீங்களும் ஹீரோதான் படம் சினிமா துறையை எள்ளல் செய்து எடுத்த படம். அதில் ஒரு காட்சியில் படபிடிப்புக்காக வரும் பி எஸ் வீரப்பாவையும் நம்பியாரையும் மக்கள் சபிப்பார்கள். நம்பியார் கூட தூறல் நின்னு போச்சு படத்துக்ப் பின் குணசித்திர நடிகராக மாறினார். ஆனால் வீரப்பா வீரப் பா தான். வீரப்பாவின் இன்னொரு முகம் தயாரிப்பாளர். தனது பி எஸ் வி பிக்சர்ஸ் மூலம் ஆனந்த ஜோதி,ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, ஆத்மி(இந்தி),வீரக்கனல்,பிள்ளைக்கனியமுது ஆகிய படங்களை தயாரித்தார். 1980 களில் சாட்சி,வெற்றி,கடமை,நட்பு ஆகிய படங்களை தயாரித்தார்.

No comments:

Post a Comment