Wednesday 30 October 2019

JONAS SALK, FOUND MEDICINE FOR POLIO ATTACK BORN 1914 OCTOBER 28- 1995 JUNE 23




JONAS SALK, FOUND MEDICINE 
FOR POLIO ATTACK 
BORN 1914 OCTOBER 28- 1995 JUNE 23


போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு
? எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி
தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள்.

முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க
வைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும் வேகப்படுத்தியது.


உலகம் முழுக்க இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். அதில் தொன்னூறு சதவிகிதம் பேர் பால் மணம் மாறாத சிறுவர்கள். அமெரிக்காவில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு முறை நோய் தாக்கினால் பின்னர் அதில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அளவுக்கு கொடுமையான வியாதி இது.

பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். பெரும்பாலும் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ்களை கொண்டே சிகிச்சை தரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.ஜான் எண்ட்லர் ஆய்வுக்கு தேவையான்
தூய்மையான போலியோ வைரஸ்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருந்தார். சால்க் பார்மல்டிஹைடை கொண்டு போலியோ கிருமிகளை கொன்றார். முதலில் குரங்குகளில்
கொல்லப்பட்ட வைரஸ்களை கொண்ட மருந்தை சோதித்து பார்த்த பின்பு,தாங்களே மருந்தை செலுத்திப்பார்த்தார்கள்.

யாருக்கும் எந்த தீங்கும் உண்டாகாமல் இருக்கவே நாடு முழுக்க ஐந்து லட்சம் பிள்ளைகளிடம் இந்த மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில்
இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது.

சால்க்கின் தடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி
உடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டியிருக்க முடியும். சால்க் என்ன சொன்னார் தெரியுமா ? “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா ? சொல்லுங்கள் ?”. அத்தகு அரிய மனிதரை நினைவு கூர்வோம். போலியோ தடுப்பு மருந்து இன்றைய தினம் தான் முதன்முதலில் அமெரிக்காவில் பெருமளவில் சோதிக்கப்பட்டது 

ஒரு மாமனிதனின் பிறந்தநாள் இன்று.. யார் இவர்.?

"மொத்தமும் தேவையில்லை.அதில் இரண்டே இரண்டு சொட்டுக்கள் போதும்..."

--என்று அவர் கூறியதை உலகம் பலத்த அதிசம் கலந்த ஆச்சர்சயத்துடன் பார்த்தது.

அது எப்படி இரண்டே இரண்டு சொட்டுகள் போதும் என்கிறார் அவர்?

-- என மருத்துவ உலகம் கேள்விகளோடு தயாராக இருந்தது.

அவர் தரப்போகும் அந்த இரண்டு சொட்டுக்களுக்காக ஒட்டு உலகமே காத்திருந்தது.

ஏப்ரல் 12, 1955.

ஒட்டு மொத்த உலகமே இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தது.ஒரு மருத்துவர் தனது இரண்டு சொட்டுக்கள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடப் போகின்றார்.அவரது அந்த ஆராய்ச்சி முடிவுகளுக்காகத் தான் ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைமை மருத்துவரான டாக்டர்.தாமஸ் பிரான்சிஸ் மேடையில் ஏறி மைக்கின் முன் வந்து நிற்கிறார்.அவர் பேசப்போகும் வார்த்தைகளை எதிர் நோக்கி ஒட்டு மொத்த உலகமே எதிர்பார்ப்பில் அப்படியே உறைந்து நிற்கிறது,

"நீண்ட காலமாக மனித குலம்-நடத்தி வந்த யுத்தம் இதோ இன்றோடு முடிவுக்கு வருகிறது.ஆராய்ச்சி முடிவுகள் மிகச் சாதகாமான விளைவுகளைத் தந்துள்ளன.இந்த வேக்சின் அருமையான முடிவுகளைத் தந்துள்ளது.பலதரப்பட்ட சோதனைகளைச் செய்து பார்த்து விட்டோம்.அனைத்து சோதனைகளிலும் சாதகமான பலன்களே வந்துள்ளது.இந்த வேக்சின் முழுப் பாதுகாப்பானது.

இந்த வேக்சின் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.

இதை கண்டுபிடித்த நம் பல்கலைக்கழகத்தின் "அந்த மருத்துவர்" தனக்கு எந்தக் காப்புரிமையும் வேண்டாமென மறுத்து விட்டார்.

எனவே இன்றில் இருந்து இந்த மருந்து முழுக்க முழுக்க இலவசமாகத் தரப்படுகிறது"

---என்று பரபரப்பாக அறிவிக்கிறார்.

அவர் அறிவித்து முடித்து மேடையை விட்டு இறங்கிய அடுத்த நொடி,பெருத்த ஆரவாரம் எழுந்தது.

மக்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு கண்ணீர் விடுகின்றனர்.

அமெரிக்க நாடு முழுவதுமுள்ள தேவாலயங்களின் மணிகள் ஒலிக்கப்படுகின்றன, பிரார்த்தனைகள் நடக்கிறது.

தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் கூட ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டு--மௌன மரியாதை தரப்படுகிறது.

எதற்காக?

"அந்த ஒரு மனிதருக்காக.."

பத்திரிக்கைகளும்,புகப்படக்காரர்களும் அந்த மனிதரை--அந்த மருத்துவரை மொய்த்துக் கொண்டு,பல கேள்விகளைக் கேட்டார்கள்.அனைத்திலும் பிரதானமாக அமைந்த கேள்வி

"நீங்கள் ஏன் இந்த வேக்சினுக்கு காப்புரிமையைப் பெறவில்லை,பெற்றிருந்தால் ட்ரில்லியன்களில் பணம் வந்திருக்குமே?" என்பது தான்.

இப்படிபட்ட ஒரு மாமருந்தை கண்டுபிடித்துவிட்டு,அதை காப்புரிமை செய்யாமல் இலவசமாகத் தந்துள்ளாரே.இதை மட்டும் இவர் காப்புரிமை செய்து இருந்தால் இந்த மனித இனம் உள்ள மட்டும் இவருக்கு பணம் கொட்டிக் கொண்டிருக்குமே...இவர் ஏன் அப்படி செய்யவில்லை....என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.

எனவே ஒருமித்த குரலில் அந்த ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்டனர்.

அமைதியான சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்த அந்த மருத்துவர்,

"காப்புரிமையா?இதற்கா?எனக்கா? உலகத்திற்கு ஆற்றலைத் தரும் சூரியன் அதற்காக காப்புரிமையைப் பெற்றுள்ளதா?"

---என்று மட்டும் சொல்லிவிட்டு தனது அடுத்த பணிக்கு சென்றுவிட்டார்.

விக்கித்து திகைத்து அதிசயித்து நின்றது உலகம்.

அதுமட்டுமல்லலல,அக்காலகட்டத்தில் வைரஸ் கிருமியால் பரவும் நோய்களுக்கு லைவ் வைரஸ்களைக் கொண்டு அதாவது உயிருடன் இருக்கும் வைரஸ்களைக் கொண்டு தான் வேக்சின்களைத் தயாரிப்பார்கள்.

அதாவது உயிருள்ள ஆனால் பலவீனமாக்கப்பட்ட வைரஸை உடலில் செலுத்தி--உடலின் நோயெதிர்ப்பு சக்தி--அந்த வைரசிற்கு எதிராக போராடும் வல்லமையை,ஆண்டிபாடிகள் வடிவில் உடலைப் பெற வைப்பார்கள்.எனவே பிற்காலத்தில் நிஜமான வைரஸ் தாக்குதல் வந்தால்,இவனைத் தான் நாம ஏற்கனவே அடிச்சுருக்கோமே என்று உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறன் அந்த நோயை விரட்டி விடும்.

ஆனால் அந்த மருத்துவர் பயன்படுத்தியது இறந்த வைரஸ்களை.வைரஸ்களை ஆய்வகத்தில் வளர வைத்து-பின் அதில் பார்மால்டிஹைடு வேதிபொருளை செலுத்த,அந்த வைரஸ்கள் முற்றிலும் செயலிழந்து போகும்.பின் அந்த செயலழிந்த வைரஸ்களை உடலின் செலுத்தினால்--உடல் வழக்கம் போல ஆண்டிபாடிகளை உருவாக்கும்.இதையும் அவர் காப்புரிமை செய்யவில்லை.

இப்படி மருத்துவ உலகின் மாபெரும் புரட்சிகளை செய்து விட்டு,அதை இலவசமாக மனித குலத்திற்கு அர்ப்பணித்துவிட்டு அமைதியாகத் தன் அடுத்த பணியைப் பார்க்க சென்ற,

அவர் மருத்துவர் தான் "ஜோன்ஸ் சால்க்."

அவரால் இரண்டே இரண்டு சொட்டில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த நோய்--"போலியோ"...

இன்று அந்த மாமனிதன் மருத்துவர் ஜோன்ஸ் சால்க்கின் 105 வந்து பிறந்தநாள்....

போட்டோவில் இருப்பவர் தான் டாக்டர் ஜோன்ஸ் சால்க்....

No comments:

Post a Comment