Thursday 29 April 2021

MAHMUD OF GAJINI 971 OCTOBER 2 -1030 APRIL 30

 


MAHMUD OF GAJINI 

971 OCTOBER 2 -1030 APRIL 30



கசினியின் மகுமூது அல்லது கஜினி முகமது (Mahmud of Ghazni) (02 அக்டோபர் 971 – 30 எப்ரல் 1030) முகமது தற்கால ஆப்கானித்தான் நாட்டில் உள்ள கஜினி என்ற நகரத்தில் பிறந்த காரணத்தினால், இவரை கசினியின் மகுமூது என்று அழைக்கப்பட்டார். கசானவித்து வம்சத்தில் பிறந்த கசினி மகுமூது தற்கால இந்தியாவை உள்ளடங்கிய பண்டைக் கால நாடுகளைப் பதினேழு முறை தாக்கி வெற்றி வாகை சூடியவர்.[2] இவரையே கசினி முகம்மது என்றும் குறிப்பிடப்படுகிறது.


மங்கோலியர்களை ஆசியா மைனரிலிருந்து (Asia Minor) விரட்டி அடித்து பெருமை பெற்றவர். கசினியின் மகுமூது அக்கால நாடுகளைக் கைப்பற்றி ஆளும் நோக்கத்தில் இல்லாது, உருவ வழிபாட்டாளர்களை வெல்லும் நோக்கிலும், உருவ வழிபாட்டு இடங்களை தகர்க்கும் நோக்கிலும், கோயிலில்களில் உள்ள பெருஞ்செல்வங்களை கொள்ளை அடிக்கும் நோக்கிலும் மற்றும் இந்து, பௌத்தர், சமணர்களை, இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றம் செய்யும் நோக்கிலும்[சான்று தேவை], இசுலாம் சமயத்தின் பெயரால் ஜிகாத் எனும், இசுலாமியர் அல்லாதவர்களுக்கு எதிரான போராகவே இருந்தது. கசினி முகமது தனது பேரரசை 998 முதல் 1030 வரை 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது வழித்தோன்றல்கள் கி.பி 1159 வரை 129 ஆண்டுகள் கஜினிப் பேரரசை ஆட்சி செய்தனர்.


குடும்பம்

கசினி மகுமூதின் இயற்பெயர் மகுமூது இப்னு சபுக்தசின். தந்தையின் பெயர் அபூ மன்சூர் சபுக்தசின் என்ற துருக்கிய மம்லூக் எனும் அடிமைப் போர் வீரன். இவரது தாய் ஒரு பாரசிகநாட்டு உயர்குடிப் பெண்.[3] மனைவியின் பெயர் கௌசரி செகான். பட்டத்து மகன்கள் பெயர்: சலால் முகமது உத் தெளலா, சிஆப்-உத்-தெளலா மசூத், அப்துல் ரசீத், சுலைமான், சூசா என்பன.


துவக்க அரசியல்

கசினி மகுமூதின் தந்தை அபூ மன்சூர் சபுக்தசின், பாரசிக பேரரசின் கீழ் அடங்கிய ‘புகாரா’ எனும் நாட்டை ஆண்ட இரண்டாம் சாமானிய (Sammanid) குல மன்னரின், ஒரு துருக்கிய அடிமைப் போர் வீரர் ஆவார்.


சாமானிய அரசின் மன்னர் ’இரண்டாம் நூ’ காலத்தில் கசினி மகுமூது குராசான் பகுதியின் அமீர் பதவியில் ’சைப்-உத்-தௌலா’ என்ற பட்டப் பெயருடன் நியமிக்கப்ட்டார்.


பின்பு 997ல் கசினி முகமது, குவாரகானித்து (Qarakhanid) அரசின் சுல்தானாக தன்னைதானே அறிவித்துக் கொண்டார்.[4]


சாமானிய அரசின் அமீர் மிகவும் பலவீனமாக இருந்த காலகட்டத்தில், கசினி மகுமூதும் அவரது தந்தையும் ஒன்று சேர்ந்து 998 இல் சாமானிய அமீரகத்தைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். பின்னர் கந்தகார், லச்கர்கா ஆகிய நகரங்களை கைப்பற்றி நாட்டை விரிவுபடுத்தியதுடன், நாட்டை இராணுவமய மாக்கினார். தன் நாட்டு பகுதிகளை நிர்வாகம் செய்ய ’சேவக் பால்” என்ற பெயருடன் நிர்வாகிகளை நியமித்தார்.


1001 இல் பலமுறை வடமேற்கு இந்திய பகுதிகளில் ஊடுருவி 28. 11. 1001 இல் பெசாவரில் நடந்த போரில் இந்து அரசன் செயபாலனைத் தோற்கடித்தார்.[5]


1002 இல் சிசுட்டன் (Sistan) நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு அரசன் முதலாம் ‘காலப்’பை (Khalaf) வென்று சபாரித்து (Saffarid) அரச குலத்தை பூண்டோடு ஒழித்துக் கட்டினார். இசுலாமியக் கலீபாவின் நல்லாசியுடன் கசினி மகுமூது கசினியின் தெற்கு நோக்கி படை எடுத்து முல்தான் அரசகுல மன்னன் இசுமாயிலை வென்று முல்தான் நாட்டை, தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.


மேலும் லாகூரை ஆண்ட இந்து அரசன் செயபாலனின் மகன் அனந்தபாலனை 1008 இல் வென்று தற்கால பஞ்சாப் பகுதி முழுவதும் தன் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.[5]





இசுலாம் சமயத்தின் பெயரால் ’ஜிகாத்’ எனும் புனிதப்போர்கள் மூலம் கசினி மகுமூது, கிழக்கு பாரசீகம், தற்கால ஆப்கானித்தான், பாகிசுத்தான், இந்தியாவின் வடமேற்கு பகுதிகள், பஞ்சாப் ஆகிய பகுதிகளை கி.பி., 997 முதல் 1030 இற்குள் கைப்பற்றி தனது ஆளுகையின் கீழ் ஆட்சி செய்தார். பெஷாவர், முல்தான், சிந்து ஆகிய பகுதிகளை ஆளும் மன்னர்களிடம் ஆண்டு தோறும் கப்பம் வசூலித்தார். தான் கைபற்றிய, தாக்கி அழித்த நாடுகளில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களைக் கொண்டு தனது பேரரசை செல்வச் செழிப்பாக்கினார்.


தெற்காசிய படையெடுப்புகள்

கசினி மகுமூது பஞ்சாபை மட்டும் தனது பேரரசில் இணைத்து கொண்டு, இராசபுத்திரகுல மன்னர்கள் ஆளும் நாடுகளை ஆண்டு தோறும் படையெடுத்து வெல்ல உறுதி பூண்டார்.


இந்து, பௌத்த, சமண சமய மன்னர்கள் ஆண்ட நாகர் கோட், தானேசுவரம், கன்னோசி, குவாலியர், கலிஞ்சர் கோட்டை மற்றும் உஜ்ஜைன் போன்ற நாடுகளை வென்று, அந்நாட்டு அரசர்கள் தனது பேரரசுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி ஒப்பந்தம் செய்து கொண்டார். மேலும் தனது படைபலத்தை உயர்த்த, ஆயிக்கணக்கான படைவீரர்களையும், குதிரைகளையும் தனது படையில் சேர்த்துக் கொண்டதுடன் நில்லாது அந்நாட்டின் பெருஞ்செல்வங்களை கவர்ந்து சென்றார்.


ஒருவேளை துணைக் கண்ட மன்னர்கள் ஒன்று சேர்ந்து தனது அரசுக்கு எதிராக படை எடுக்கும் எண்ணத்தை அவர்களின் அடி மனதிலிருந்து அடியோடு ஒழித்துக்கட்டவும், தன் மீது பயத்தை ஏற்படுத்தி வைக்கவும், ஆண்டு தோறும் துணைக் கண்ட நாடுகளின் மீது படையெடுத்து, அவற்றை வென்று, மன்னர்களால் கோயில்களிற் பதுக்கி வைக்கப்பட்ட செல்வங்களுக்காக அவற்றை இடித்துக் கொள்ளை அடிக்க உறுதி எடுத்துக்கொண்டார் கசினி மகுமூது.


கசினி மகுமூது இசுலாமிற்கு எதிரான, உருவ வழிபாட்டு இடங்களான காங்கிரா, (நாகர்கோட்) (இமாசல பிரதேசம்), தானேசுவரம், மதுரா, சோமநாதபுரம் (குசராத்து), துவாரகை, மகசுவரம், சுவாலாமுகி போன்ற இடங்களிலிருந்த இந்துக் கோயில்களை இடித்து தரை மட்டம் ஆக்கி இசுலாமிற்கு பெருமை சேர்த்தார்.


இசுலாமிய மதத்திற்கு மதம் மாற மறுத்த சிந்து நாட்டு இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றி, சிந்து நாட்டை தன் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.[5]


போர்க்களங்கள்

கி.பி. 995. சாமனித்து பேரரசின் உள் நாட்டுப் பகைவர்களான ஃபைக் (faiq) மற்றும் அபு அலியின் படைகளை வென்று அவர்களை நாடு கடத்தினார். மேலும் உள்நாட்டு பகைவர்களை ’துசு’ (Tus, Iran) என்ற இடத்தில் நடந்த போரில் விரட்டி அடித்தார்.

கி.பி.,1001. காந்தார நாட்டை ஆண்ட இந்து மன்னர் செயபாலனை பெசாவர் (புருசபுரம்) என்ற இடத்தில் நடந்த போரில் செயபாலனை பிடித்து, தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டு இறக்க கட்டளையிட்டார்.[சான்று தேவை]

கி.பி., 1004. தனக்கு கப்பம் கட்ட மறுத்த பாட்டிய (Bhatia) நாட்டு அரசை தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.[6]

கி.பி., 1005-1006. இந்து அரசன் செயபாலனின் நண்பரும், முல்தான் (Multan) நாட்டு சியா பிரிவு முசுலிம் அரசன் பாதே தாவூதுவையும், இசுமாயிலி ஷியா முசுலிம் மக்கள் கசினி மகமதுவால் படுகொலை செய்யப்பட்டனர்.[7]

பின்னர் கோர் (Ghor) பகுதியின் அமீர் சூரியையும் அவரது மகனையும் சிறை பிடித்து கசினி நாட்டு சிறையில் தள்ளிவிட்டார். பின்னர் அவர்கள் சிறையிலே மாண்டனர்.[8]

குவாரகானித்து (Qarakhanids) பேரரசுடன் போர்புரிந்து, சாமனித்து பேரரசின் நிசாப்பூர் நிலப்பரப்பை மீண்டும் சாமனித்து பேரரசிடம் இணைத்தார். தனக்கு எதிராக திரும்பிய (தன்னால் நியமிக்கப்பட்ட) சேவக்பாலர்களை போரில் தோற்கடித்தார்.

1008. பெசாவரில் நடந்த போரில், கூட்டாக போரிட வந்த உச்சையினி, குவாலியர், கன்னோசி, தில்லி, அஜ்மீர் மற்றும் கலிங்க நாட்டு இந்து அரசர்களை கசினி முகமது வென்று ’காங்கிரா’ (இமாசலப் பிரதேசம்) பகுதியில் பெருஞ்செல்வங்களை கொள்ளை அடித்தார்.[9]

1010. கோரி நாட்டின் அரசர் முகமது பின் சூரி மீது படையெடுத்து வென்றார்.

1010. முல்தான் பகுதியில் கலவரத்திற்கு காரணமான அப்துல் பதே தாவூது என்பவரை போரில் வென்று, சிறைபிடித்து கசினியில் மரணம் வரை சிறையில் அடைத்தார்.

1012-1013. தானேசுவரத்தை போரில் வென்று அந்நாட்டின் செல்வத்தை சூறையாடினார்.[10]

1013. புல்நாத்து (Bulnat) போரில், இந்து மன்னர் திருலோசன பாலனை வென்றார்.

1014. குசராத்து மீது படையெடுத்து தாக்குதல் நடத்தினார்.[11]

1015. லாகூரை தாக்கி அழித்த பின், கடுமையான வானிலை காரணமாக காஷ்மீரை கைப்பற்ற முடியாது திரும்பி சென்றார்.[12]

1017. மீண்டும் காஷ்மீர் மீது படையெடுப்பு. அடுத்து ஆற்றாங்கரை அரசுகளான கன்னோசி, மீரட் மற்றும் மதுரா ஆகிய நாடுகளின் மீது படையெடுத்து வென்று, அளப்பரிய கப்பத் தொகையுடன், குதிரைகள் மற்றும் படைவீரர்களையும் கவர்ந்து தன் படைபலத்தை பெருக்கிக் கொண்டார்.

1018. வட மதுரையை சூறையாடி, மதுராவில் இருந்த கிருட்டிணன் கோயிலை இடித்துத் தள்ளினார்.[13]

1021. லாகூரை வென்று, மாலிக் அயாசுகான் என்பவரை அந்நாட்டு அரசனாக்கினார்.

1023. பஞ்சாப் நாட்டை அதிகாரப்பூர்வமாக தன் நாட்டுடன் இணைத்தார்.[14]

1023. இரண்டாம் முறையாக காசுமீரின் லொஹரா கோட்டையை முற்றுகை இட்டும் கோட்டையை பிடிக்க முடியாது திரும்பி விட்டார்.[சான்று தேவை]

1025 சனவரி மாதம், முப்பதாம் நாள், சோமநாதபுரம் (குசராத்து) கோயில் இடிப்பு: இராசபுதனத்தின் அஜ்மீர்ரை வென்று, தன்னை தடுத்து நிறுத்தி எதிர் நின்று போர் செய்வதற்கு எந்த எதிர்ப்பாளர்கள் இல்லாத நிலையில் சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள பிரபாச பட்டினத்தின் கடற்கரையில் அமைந்துள்ள சோமநாதபுர சிவன் கோயிலில் உள்ள சிவ இலிங்கத்தை கண்டு வியந்தும், கோயிலின் செல்வக் களஞ்சியத்தையும் கண்டு களிப்புற்றும், உருவ வழிபாட்டுக்கு எதிராக இருக்கும் கசினி முகமது சோமநாதபுர கோயிலை இடித்து தரை மட்டம் ஆக்கியதுடன், சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தார்.[15]

அங்கிருந்த ஐம்பதாயிரம் அப்பாவி மக்கள் எவ்வித காரணமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.[8] இருபதாயிரம் பேரை அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர்.[16] பல்லாயிரக்கணக்கான இந்துக்களை கட்டாயமாக இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றப்பட்டனர். மத மாற்றத்திற்கு உட்படாத மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.[சான்று தேவை] கசினி முகமதுவின் படைகளுக்கு அஞ்சி தப்பி ஓடிய 90 வயது முதியவர் கோகா இராணா என்ற அரசக் குலத் தலைவரை கொலை செய்தனர்.


சோமநாதபுர கோயிலின் சிவலிங்கத்தின் உடைந்த கற்களைக் கொண்டு, 1026ல் கசினியில் உள்ள ’ஜூம்மா மசூதியின்’ (வெள்ளிக்கிழமை தொழுகை மசூதி) வாசற் படிகளிலும் மற்றும் தனது அரண்மனை வாசற்படிகளிலும் பதித்து, இந்துக்களின் மனதை புண்படுத்தினார்.[சான்று தேவை] கோயில் செல்வக் களஞ்சியங்களையும், தங்கம், வெள்ளி மற்றும் சந்தனக் கதவுகளையும், கசினி நகருக்கு அருகில் உள்ள கொரசான் நகருக்கு கொண்டு சென்றார்.


பின் துவாரகை நகரை சூறையாடி அங்குள்ள கிருட்டிணன் கோயிலில் உள்ள வெள்ளியால் ஆன இரண்டு அடி உயர கிருட்டிணன் சிலையை உடைத்தெறிந்தார்.[சான்று தேவை] மேலும் சௌராட்டிர நாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் சமணர் கோயில்களை முகமதின் படைகள் இடித்து தள்ளினர்.[சான்று தேவை]


சோமநாதபுரத்தில் மட்டும் கொள்ளையடித்த செல்வங்களின் மதிப்பு இரண்டு மில்லியன் தினார்கள் என்று, கசினி முகமதுவின் படைகளுடன் இந்தியாவிற்கு வந்த இசுலாமிய வரலாற்று அறிஞர் அல்-பருணி தனது நூலில் குறித்துள்ளார்.[சான்று தேவை]


சௌராஷ்டிர நாட்டை தொடந்து ஆள, தனது குலத்தில் பிறந்த ஒருவனை, அரசனாக நியமித்துச் சென்றார்.[சான்று தேவை] பிறகு தன் நாட்டிற்கு திரும்பிச் செல்கையில் இராசபுத்திரகுல அரசர்களுக்கு அஞ்சி, விரைவாக குறுக்கு வழியில் செல்ல, இராசபுதனத்தின் தார் பாலைவனம் வழியாக தனது நாட்டிற்கு திரும்பினார் கசினி முகமது.


1026. ஜாட் இன மக்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தார்.

1027. மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள இராய், பாரசீகம், இசுபாகன் மற்றும் அமதான் ஆகிய பகுதிகளை ’பையித்து’ (Buyid Dynasty) குல பேரரசிடமிருந்து கைப்பற்றினார்.[சான்று தேவை]

1028. செல்சியுக் துருக்கியர்களிடம் மோர்பி, நிசாப்பூர் பகுதிகளை கசினி முகமது இழந்தார்.[சான்று தேவை]

மதசகிப்பற்ற தன்மைகள்

கஜினி முகமதுவின் படையெடுப்புகள் மத சகிப்புத் தன்மை அற்ற அடிப்படையிலேயே இருந்தது. இதனால் இசுலாமியர்களின் கொள்கைகளுக்கு புறம்பாக செயல்படும் மக்களுக்கு எதிராக ஜிகாத் எனும் இசுலாம் வகுத்த புனிதப்போர்களை தொடர்ந்து நடத்தினார். இசுலாமின் சன்னி பிரிவு முசுலிம்களைத் தவிர, இதர பிரிவு முசுலிம்களான ஷியா முஸ்லிம்கள், பையித் ஷியா முஸ்லிம்கள் மற்றும் இசுமாயிலி ஷியா முசுலிம்களையும் படுகொலை செய்தார்.[17]


இறை உருவ வழிபாடு பழக்கம் உள்ள இந்துக்களையும், பௌத்த, சமணர்களையும் கடுமையாக வெறுத்தார். எனவே அவர்களது இறை உருவ வழிபாட்டு இடங்களை தகர்ப்பதில் குறியாக இருந்ததுடன், கோயில்கள், கல்விக்கூடங்கள், பல்கலைகழகங்கள் மற்றும் மடாலயங்களில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்தல் மற்றும் தீக்கிரையாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்.


மேலும் இந்துக்களை கட்டாயமாக இசுலாமுக்கு மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டனர். இசுலாமிற்கு மதம் மாறாத மக்களை அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற விரும்பாத மக்களிடமிருந்து வரி விதிக்கப்பட்டனர்.


சாதனைகள்

இராய் (Raay) மற்றும் இசபாகான் (Isfahan) பகுதியில் இருந்த மாபெரும் நூலகங்களை கஜினி நகரத்திற்கு மாற்றிக்கொண்டு வந்தார்.[18]


இதனால் தனது நாட்டின் கல்வி வளத்தை பெருக்கி கொண்டதுடன், தனக்கு கல்வி கற்றுக் கொடுக்க அரசியல், மொழி தொடர்பான அறிஞர்களை நியமித்துக் கொண்டார்.[18]


கி. பி. 1017ல் கசினி முகமதுடன் சேர்ந்து இந்தியா வந்த அறிஞர் அல்-பரூணியைக் கொண்டு, ’இந்திய மக்களும் அவர்தம் நம்பிக்கைகளும்’ என்ற நூலை எழுத ஊக்கமளித்தார்.


இந்தியாவில் கொள்ளை அடித்த செல்வக் களஞ்சியங்களைக் கொண்டு தனது பேரரசை வலுப்படுத்திக் கொண்டார்.


அப்பாசித் கலிபா, அல்-காதிர்-பில்லாவிடமிருந்து தனது பேரரசை விடுதலை அடைந்த நாடு என்ற தகுதியை கேட்டுப் பெற்றுக் கொண்டார்.


இசுலாமுக்கு எதிரான காபிர்கள் (இறை உருவ வழிபாட்டாளர்கள்) மீது புனிதப் போர் மேற்கொண்டதற்காக இசுலாமிய தலைமை மதத் தலைவரான கலிபாவிடமிருந்து ‘ ’யாமின் –உத் – தௌலா’ என்ற மாபெரும் விருது கசினி பெற்றார்.


அல்-பிருணியின் கூற்றுகள்

உருவ வழிபாட்டாளர்களான இந்துக்கள் மீதான ஜிகாத் எனும் புனிதப்போர்களின் (Jihad) போது, கசினி முகமது உடன் வந்த அரபு வரலாற்று அறிஞர் அல்-பரூணி தனது நூலில் கசினி முகமது பற்றிய செய்திகள்:[19]


கசினி முகமது மற்றும் அவரது மகன்களுக்கும அல்லாவின் அருள் இருந்தபடியால், தனது வழித்தோண்றல்களின் நலனுக்காகவும், தனது பேரரசின் நலனுக்காகவும், கசினி நகரத்தின் எல்லைப்புறத்தில் இருந்த இந்து, பௌத்த சமய அரசுகளான, தற்கால கந்தஹார், தற்கால பாக்கித்தான், வடமேற்கு இந்தியா, மதுரா, கன்னோசி, சௌராட்டிர தேசம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளையும் கசினி முகமதுவும் அவரது மகன்களும் நடத்திய முப்பது வருட தொடர் தாக்குதல்கள் காரணமாக, இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளை அடித்தும், இந்து, சமண, பௌத்த உருவ வழிபாட்டு இடங்களை இடித்தும், இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்ககளை கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டனர்.[20]


மத மாற்றத்தை விரும்பாத இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் தற்கால ஆப்கானித்தான் மற்றும் பாகிசுத்தான் பகுதிகளில் இருந்து வெளியேறி தற்கால மகாராட்டிரம், உத்திரப் பிரதேசம், பீகார், வங்காளம் மற்றும் தென்னிந்தியா போன்ற பகுதிகளில் குடியேறினர்.[21]


கஜினி முகமதின் இந்திய படையெடுப்புகளின் தொடர் வெற்றியால், துருக்கியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இந்தியாவை எளிதாக வெற்றி கொள்ள முடியும் எண்ணம் மனதில் விதைக்கப்பட்டது.


இந்தியாவில் இருந்த அறிவியல், மருத்துவம், சமயம், வானவியல், சோதிடம் தொடர்பான நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்து தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர்.


கஜினியின் தொடர் படையெடுப்புகளால் ஆப்கானித்தான் இசுலாமிய மயமானது.


பத்தாம் நூற்றாண்டில் பாரசீக மொழி, பண்பாடு, நாகரிகம் ஆப்கானித்தான் முழுவதும் பரவியது.


காந்தார நாட்டு இந்து மன்னன் சாகியை (Shahi) வெற்றி கொண்டு, தட்சசீலத்தில் (பண்டைய கால நாளந்தா பல்கலைக்கழத்திற்கு இணயானது) இருந்த மாபெரும் பல்கலைக் கழகத்தை தாக்கி அழித்தார் கசினி முகமது. காந்தாரா நாட்டு இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றினார்.


கி. பி., 998 முதல் 1030 வரை ஆட்சி புரிந்த கசினி முகமது இந்தியா மீது 17 முறை படையெடுத்தார்.


மக்கள் மனதில்

தற்கால பாக்கிஸ்தானிலும், ஆப்கானிசுதானிலும், இசுலாமிய மக்கள் இன்று வரை, கசினி முகமதுவை மாபெரும் வெற்றி வீரனாக கொண்டாடுகிறார்கள்.


பாகிசுதான் நாடு, தான் தயாரித்த ஏவுகணைக்கு ’கசினி’ எனும் பெயர் சூட்டி, கசினிமுகமதுவின் நினைவை பாராட்டினர். மேலும் பாகிசுதான் நாட்டு இராணுவம், தனது ஒரு படைப் பிரிவுக்கு ‘கசினி’ என்ற பெயர் சூட்டி கசினி முகமதை பெருமைப்படுத்தினர்.


ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் மனதில் கசினி முகமது ஒரு மனிதாபமற்ற, கொடுமைக்கார, கொள்ளைக்கார படையெடுப்பாளர் என்றும், ஈவு இரக்கமற்றவர் என்றும், சோமநாதபுரம் (குசராத்து), சிவன் கோயில், மதுராவில் உள்ள , ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடத்தையும், துவாரகை கிருட்டிணர் கோயிலையும், தட்சசீலத்தில் இருந்த மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை அழித்ததையும், காந்தாரம், பெசாவர், முல்தான், காங்கிரா மற்றும் லாகூரில் இருந்த பௌத்தர், சமணர் மற்றும் இந்துக் கோயில்களும், மடாலயங்களும், உயர் கல்விகூடங்களையும் கஜினி முகமது இடித்து தரை மட்டம் ஆக்கி, கோயில் செல்வங்களை கொள்ளை அடித்துச் சென்ற நிகழ்வுகள் குறித்து வட இந்திய வரலாற்றில் நீங்காத துயர நினைவாக இந்திய மக்கள் கருதுகிறார்கள்.


பெருமைகள்

இந்தியாவில் முதன்முதலாக இசுலாமிய மதத்தை புகுத்தியவர் என்ற பெருமையை தட்டிச் சென்றவர் கசினி.[சான்று தேவை]

இசுலாமிய தலைமை மத குருவான அப்பாசித்து கலிபா பாராட்டியதுடன், வரலாற்றில் முதன் முதலாக கசினி முகமதிற்கு ’சுல்தான்’ என்ற சிறப்பு விருதினை வழங்கி பெருமை படுத்தப்பட்டார்.

தன் பேரரசின் மேற்கில் குர்திசுதானம் முதல் வடகிழக்கில் சமர்கந்து மற்றும் காசுப்பியன் கடல் (Caspiean Sea) முதல் மேற்கில் யமுனை ஆறு வரையிலும் தனது பேரரசை விரிவு படுத்தினார்.

இந்தியாவில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களைக்கொண்டு தனது பேரரசின் தலைநகரான கசினியை அனைத்து துறைகளிலும் வளப்படுத்தினார்.


பாரசீக மொழி இலக்கியத்தை வளர்த்தார். உயர் கல்வி நிறுவனங்களை நிறுவினார். மத்திய ஆசியாவில் இருந்த அறிஞர்களை ஊக்குவித்து பரிசில்கள் வழங்கினார்.


இந்திய சமூக மக்கள் மற்றும் அவர்களது நம்பிக்கைகள் குறித்தும், தனது இந்திய படையெடுப்புகள் குறித்தும் அல்பருணி என்ற வரலாற்று அறிஞரைக் கொண்டு ‘தாரிக்-அல்-இந்த்’ என்ற நூலை எழுதச் செய்தார்.


கசினி முகமதுவின் புகழ் பாடி, ‘ ஷா நாமா’ எனும் நூலை இயற்றிய கவிஞர் ‘பிர்தௌசி’ ( Ferdowsi) என்பவருக்கு 200 தினார்கள் வெகுமதி அளித்துப் பாராட்டினார் கசினி முகமது.


உயர்நிலை கல்விக்கூடங்களில் கணக்கு, மருத்துவம், அறிவியல், இசுலாமிய மதம், மற்றும் மொழிகள் பற்றிய பாடங்கள் கற்க ஏற்பாடு செய்தார்.


தனது பேரரசு ஒரு இசுலாமிய பேரரசு என்றும், தனது பேரரசின் ஆட்சி மொழியாக பாரசீக மொழியை அறிவித்தார்.


” யாமின் உத் தௌலா அபுல் காசிம் முகமது பின் செபுக்தெசின் “ என்ற மாபெரும் பட்டப் பெயருடன் தனது பேரரசை திறம்பட 32 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.


தொடர் வெற்றிக்கான காரணங்கள்

கஜினி முகமதின் படைகளில், வளுமிக்க உயர்ரக அரபுக்குதிரைப் படைகள் அதிகமாக இருந்தன. ஆனால் துணைக்கண்ட நாடுகளின் மன்னர்களிடம் வேகமாக பாய்ந்து சென்று தாக்குவதற்கு தேவையான வளு மிக்க குதிரைப்படைகள் குறைவாக இருந்ததும் கசினியின் தொடர் வெற்றிகளுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

இந்தியத் துணைக்கண்டத்தில் சத்திரிய வகுப்பினர் மட்டுமே படைவீரர்களாக இருந்தனர். சமூகத்தின் இதர பெரும்பாண்மையானவர்கள், உடல் வளு மற்றும் மன உறுதி இருந்தும்கூட படையணிகளில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்துக்களின் படைபலம் பெருக வாய்ப்பு இல்லாமல் போயிற்று.

இந்தியத் துணைக்கண்ட நாடுகளின் மன்னர்களிடம் ஒற்றுமை இன்மையாலும், தங்கள் நாட்டை மாற்றான் நாட்டு மன்னனிடமிருந்து காத்துக் கொள்வதிலேயே கவனமாக இருந்ததாலும், வேற்று நாட்டு மன்னனை, தங்கள் சொந்த நாட்டில் இந்தியத் துணைக்கண்ட நாடுகளின் மன்னர்கள் ஒன்று கூடி சுற்றி வளைத்து தாக்கி அழிக்க முடியவில்லை.

இந்தியத் துணைக்கண்ட மக்கள் பின் பற்றி வந்த இந்து, பௌத்த மற்றும் சமண சமயங்கள், சகிப்புத் தன்மை, அகிம்சை, தியாகம் போன்ற நன்னெறிகளை[சான்று தேவை] அதிகமாக வலியுறுத்திய காரணத்தினால் இந்தியத் துணைக்கண்ட நாடுகளின் மன்னர்களும் படைவீரர்களும், கசினி மகமதுவிற்கு எதிரான போர்களில் வெறித்தனமாக போரிடவில்லை என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

கசினி பேரரசின் வீழ்ச்சி

கி. பி. 1159ன் இறுதியில் கசினி பேரரசு நலிவடைந்த நிலையில் இருந்த போது, எல்லைப்புற பகை மன்னர்கள், பேரரசின் பல பகுதிகளை கைப்பற்றிக்கொண்டனர். இறுதியாக தற்கால ஆப்கானிசுதானில் உள்ள ’கோரி’ என்ற நகரத்து முகமது என்பவர் கசினி பேரரசை கைப்பற்றினார். அத்துடன் கசினி பேரரசு 1159ல் வீழ்ந்தது.

No comments:

Post a Comment