Thursday 15 March 2018

S.M.SUBBAIYA NAIDU ,MUSIC DIRECTOR BORN 1914 MARCH 15




S.M.SUBBAIYA NAIDU ,MUSIC DIRECTOR 
BORN 1914 MARCH 15





‘‘வாய்யா ஹீரோ,’’ என்று  டி. எம். செளந்தரராஜனை இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு வாய் மணக்க அழைப்பார். 
கம்பீரமான குரலும் கதாநாயக நடிகர்களுக்கு சிறப்பாகப் பாடும் வாய்ப்பும் செளந்தரராஜன் பெற்றிருந்ததால், அவரை ‘ஹீரோ’  என்று அழைப்பார் நாயுடு. ஆனால் அப்படி டி.எம்.எஸ்ஸை உருவாக்கியதில் நாயுடுவுக்கு கணிசமான பங்கு இருந்தது! 
டி.எம்.எஸ். புன்னகைத்தவாறே சுப்பையா நாயுடு அருகில் வந்து அமர்வார். நாயுடுவுக்கு செளந்தரராஜன் என்றாலே ஒரு அன்பு, நட்புறவு. 
கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் செளந்தரராஜனை முதன்முதல் பாடவைத்தவர் நாயுடுதான்.  அப்படி டி.எம்.எஸ். பாடிய முதல் பாடல், ‘ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி’. சிந்தாமணியில் பாகவதரின் 
வெற்றிப் பாடலான ‘ராதே உனக்கு கோபம் ஆகாதடி’ மெட்டில் அமைந்த பாடல்.
பின்னர் செளந்தரராஜன் தனக்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டு முன்னேறிய காலகட்டத்தில், அவரைப் பல நல்ல பாடல்கள் பாடவைத்தார் சுப்பையா நாயுடு. எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான சுப்பையா நாயுடு, பட்சிராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு எடுத்த மலைக்கள்ளனுக்கு இசை அமைத்தார். டி.எம்.எஸ்ஸை எம்.ஜி.ஆருக்கு முதன்முதல், ‘எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்று பாட வைத்தார். படமும் பாடலும் மிகப்பெரிய வெற்றி அடைந்தன.
எம்.ஜி.ஆர் தானே தயாரித்து, இயக்கி இரு வேடங்களில் நடித்த படம், நாடோடி மன்னன். அதில்,  ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று சுப்பையா நாயுடுவின் இசையில்  வெற்றிகரமாகப் பாடினார் டி.எம்.எஸ்.
தாய்ப்பாசத்தின் உயர்வை மிகச் சிறப்பாக கூறும் சினிமா பாடல்களில் ஒன்று, ‘அன்னையைப் போல் 
ஒரு தெய்வமில்லை’. கா. மு. ஷெரீப் 
எழுதிய இந்தப் பாடலை சிவாஜி கணேசனுக்காக நாயுடுவின் இசை அமைப்பில் டி. எம்.எஸ். மிக உருக்கமாகப் பாடினார்.
எல்லோருடனும் அன்பாகப் பழகுவது, பணத்தாசை இல்லாமல் இருப்பது, காலத்திற்கு ஏற்ப 

இசையின் வண்ணங்களை 
கொஞ்சம் மாற்றியமைத்துக் 
கொள்வது என்கிற குணாம்சங்களால்,  தொடர்ந்து இசை அமைக்கும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தார் சுப்பையா நாயுடு. 
அறுபத்தி எட்டில் ஜெய் சங்கர், ஜெயலலிதா ஜோடியாக நடித்த படம், முத்துச்சிப்பி. அதில் பளிச்சென்று ஒலிக்கும் ஒரு டூயட் பாடலை டி.எம்.எஸ், பி.சுசீலாவிற்காக அமைத்தார் சுப்பையா நாயுடு. பாடல், ‘ஒரு நாள் பழகிய பழக்கம் அல்ல’.
அடுத்த ஆண்டு வந்த மன்னிப்பு படத்தில், நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய ‘நீ எங்கே என் நினைவுகள் அங்கே’ பாடலும் ‘வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்’ பாடலும் நாயுடுவின் வனப்பான இசைக்கு வாகான எடுத்துக்காட்டுகளாக அமைந்தன. 
ஒரு காலத்தில் நாயுடுவின் சக இசை அமைப்பாளரான சி.ஆர்.சுப்பராமன் அவரைக் கேட்டிருந்தார் - ‘‘என்ன, நாயுடு...இந்த செளந்தரராஜ பாகவதரை எப்படிப் பாட வைக்கிறீங்க. எதுவும் வர மாட்டேங்குதே அவருக்கு’’ என்று. 
‘‘அப்படியா? அப்போ அவருக்கு என்ன வருதோ அதை வச்சுப் பாட வைங்க,’’ என்று நாயுடு பதில் கொடுத்திருந்தார். எப்படி அவருடைய வழி? அந்தப் பாதையில் சென்று செளந்தரராஜனை எத்தனை வெற்றிப் பாடல்கள் பாட வைத்தார் சுப்பையா நாயுடு ! 
கோவையில் சுப்பையா நாயுடுவின் இசையில் தன்னுடைய அறிமுகப் பாடல்களைப் பாடிவிட்டு, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாட வந்தார் 
டி.எம்.எஸ். 
அங்கே பெருமைக்குரிய ஒரு ஆஸ்தான இசை அமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தார் சங்கீத சக்ரவர்த்தி ஜி. ராமநாதன். மந்திரி குமாரி படத்தில் அநியாயக்காரர்களை எதிர்த்து ஒரு குடியானவன் பாடுவதாக அமைந்த, ‘அன்னம் இட்ட வீட்டிலே’ பாடலை செளந்தரராஜன் பாட வேண்டும்.
எஸ்.எம். எஸ். என்பது இன்றைய சமுதாயத்துடன் ஒன்றி விட்டது. 1940 களில் எஸ்.எம்.எஸ்.என்றால் பிரபல இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைக் குறிக்கும் வார்த்தையாக அமைந்தது.
கவியரசு கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் திறமையை இனம் கண்டவர் ரி.எம். சௌந்தரராஜனின் முதலாவது பாடலுக்கு இசை அமைத்தவர். எம்.ஜி.ஆரின் முதலாவது கொள்கை விளக்கப் பாடலை உருவாக்கியவர் போன்ற பெருமைகளை உடையவர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு.

மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்த இவரின் குடும்பத்துக்கும் இசைக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
முத்து சாமி நாயுடு என்ற பொலிஸ்காரனுக்கு 1914 ஆம் ஆண்டு பிறந்தவர் சுப்பையா நாயுடு. திருநெல்வேலி மாவட்ட கடையநல்லூரில் பிறந்த சுப்பையா நாயுடு சிறுவயதில் அடங்காத பிள்ளையாக இருந்தார். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தால் மகன் திருந்துவான் என்ற நம்பிக்கையில் சுப்பையா நாயுடுவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அழைத்துச் சென்றார் தகப்பன்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பொறுப்பதிகாரி சுப்பையா நாயுடுவின் மேல் இரக்கப்பட்டு சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்காது தனது பொறுப்பில் வளர்த்தார். 
துடுக்குத்தனம் மிகுந்த அடங்காத சிறுவன் சுப்பையா நாயுடு அங்கும் தன் கை வரிசையைக் காட்டினார். சுப்பையா நாயுடுவின் நடவடிக்கை 
பிடிக்காததனால் அவரை மீண்டும் தகப்பனிடம் அனுப்பி வைத்தார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பொறுப்பதிகாரி.
அடங்காத பிள்ளையைஅடித்து வளர்த்தார் தகப்பனார். வீட்டிலே இருந்தால் பிரச்சினைஅதிகமாகும் என்பதனால் 100 ரூபா காசுடன் வீட்டை விட்டு வெளியேறினார். சுப்பையா நாயுடு. சிங்கப்பூருக்குச் சென்றால் கை நிறைய சாம்பாதிக்கலாம் என்று அறிந்ததும் சிங்கப்பூர் செல்வதற்காக தஞ்சாவூருக்குச் சென்றார்.
தஞ்சாவூரில் முகாமிட்டிருந்த ஜகந்நாத ஐயரின் நாடகக் கம்பனியில் இருந்த இரண்டு சிறுவர்கள் ஓடி விட்டனர் என்ற செய்தி பரபரப்பாக இருந்த வேளையில் தான் சுப்பையா நாயுடு தஞ்சைக்குச் சென்றார். சிறுவனான சுப்பையா நாயுடுவைப் பார்த்த ஒருவர் நாடகக் கம்பனியில் இருந்து ஓடி வந்த சிறுவன் என்று நினைத்து அவரைப் பிடித்துக் கொடுக்க முயற்சி செய்தார். நிலைமையை உணர்ந்து சுப்பையா நாடக கம்பனி எங்கே இருக்கிறது என்று கேட்டு சென்று அங்கு தஞ்சமடைந்தார்.
விதி சுப்பையா நாயுடுவை நாடகக் கம்பனியில் இணைத்தது. அதன் காரணமாக மிகச் சிறந்த இசை அமைப்பாளர் ஒருவர் தமிழகத்திரை உலகுக்கு கிடைத்தார். சுப்பையா நாயுடுவின் குரல்வளம் நன்றாக இருந்ததால் அவருக்கு நாடகக் கம்பனியில் இடம் கிடைத்தது. ஜாகந்நாதையரிடமிருந்து நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை பிறந்தபோது சுப்பையா நாயுடு அவருடன் சென்றார். சுவாமி ராஜமாணிக்கப்பிள்ளையின் ஆசியுடன் தனது சங்கீத அறிவை வளர்த்தார் சுப்பையா நாயுடு
.
நவõப்ராஜ மாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பனியில் நடிகராக இருந்த சி.எஸ். ஜெயராமன் தந்தையிடம் இசைப்பயிற்சி செய்யும் போது அதனை கவனமாகக் கேட்டு சங்கீத அறிவை வளர்த்தார் சுப்பையா நாயுடு. இசைக்கலைஞர் டி.என். சுப்பிரமணிய பாகவதரிடம் கீர்த்தனையும், ராஜகோபால் அய்யரிடம் ஆர்மோனியமும் கற்று தனது சங்கீத அறிவை வளர்த்தார். சுப்பையா நாயுடு கம்பனியின் முழு நேர ஆர்மோனியக் கலைஞரானார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் பக்த ராமதாஸ் என்ற நாடகம் 1935 ஆம் ஆண்டு திரைப்பட மானது. அப்போது எம்.எஸ். சுப்பையா நாயுடுவின் ஆர்மோனிய இசை திரையில் ஒலித்தது. அதன் பின்னர் கோவை சென்றல் ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்துக்கு ஆர்மோனியக் கலைஞராக கடமையாற்றும் சந்தர்ப்பம் எம்.எஸ். சுப்பையா நாயுடுவுக்குக் கிடைத்தது. ரம்பையின் காதல், பிரகலாதா, ஆர்யமாலா, ஜதகல பிரதாபன், சாலிவாகனன் என்மகன் ஆகிய படங்களில் சுப்பையா நாயுடுவின் ஆர்மோனிய இசை ஒலித்தது.எம்.ஜி.ஆர். முதன் முதலாக நடித்த ராஜகுமாரி என்ற படத்தில் சங்கீத டைரக்ஷன் மெட்டுக்கள் எம்.எஸ். சுப்பையா நாயுடு என்ற பெயர் ஜொலித்தது
ஜுபிடரின் அபிமன்யு படத்தின் காதல் காட்சிக்காக எழுதப்பட்ட பாடலுக்கு எஸ்.எம். சுப்பையா நாயுடு பலவிதமான மெட்டுக்களை அமைத்தார் எனினும், சரியாகப் பொருந்தவில்லை. ஸ்ரூடியோவில் உதவியாளராக இருந்த பையன் போட்ட மெட்டை தற்செயலாக கேட்ட சுப்பையாநாயுடு அந்த மெட்டை பயன்படுத்தினார். திருச்சி லோகநாதனும் ஜீவரத்தினமும் இணைந்து பாடிய புது வசந்தமாமே வாழ்விலே என்ற பாடல் மிகவும் பிரபல்யமானது. அப்பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் என்று போற்றப்படும் எம்.எஸ். விஸ்வநாதன். இப்பாடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் தான் இசையமைத்தார் என்ற உண்மையை பின்னர் சுப்பையா நாயுடு வெளியிட்டார்.
எம்.ஜி.ஆர். முதன் முதலாக கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி' படத்துக்கு சங்கீத் டைரக்ஷன், மெட்டுக்கள் எஸ்.எம்.சுப்பையா நாயுடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய படங்களுக்கு ஒருவர் இசையமைக்க இன்னொருவர் மெட்டமைப்பார். கன்னியின் காதலி படத்தின் 10பாடல்களுக்கு சுப்பையா நாயுடுவும் ஐந்து பாடல்களுக்கு சுப்ப ராமனும் இசையமைத்தனர். மோகினி படத்துக்கு சுப்பராமனும் சுப்பையா நாயுடுவும்இசை அமைத்தனர். திகம்பர சாமியார் படத்துக்கு ஜி.ராமநாதனும், சுப்பையா நாயுடுவும் இசை அமைத்தனர்.
கிருஷ்ண விஜயம் படத்துக்கு சுப்பையா நாயுடுவும். சி.எஸ். ஜெயராமனும் இசையமைத்தனர். பாப நாசம் சிவன் எழுதிய ஐந்து பாடல்களுக்கு அவரே மெட்டமைத்தார். சுப்பையா நாயுடுதான் வாத்திய இசையை சேர்த்தார்.
எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்களையும், பிரசாரப்பாடல்களையும் பாடியவர் ரி.எம். சௌந்தரராஜன் எம்.ஜி. ஆருக்காக ரி.எம். சௌந்தரராஜன் பாடிய முதலாவது பாடல் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார். மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இந்தக் காலத்துக்கும் பொருத்தமாக உள்ளது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் சுப்பையா நாயுடு.
பட்டுக்கோட்டையார் பாப்பாக்களுக்குக் கூறிய அறிவுரை திருடாதே பாப்பா திருடாதே எம்.ஜி. ஆரின் கொள்கை விளக்கப்பாடல்களில் ஒன்றான இப்பாடலை தமிழ்த் திரையுலகுக்குத் தந்தவர் சுப்பையா நாயுடு.
19ஆம் நூற்றாண்டில் தமிழை வாழவைத்த தெய்வீகக்கவிஞர் வள்ளலார். இவருøடய பெருமையுடன் "நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்' என்ற விருத்தத்தை மிகவும் நேர்த்தியாக சூல மங்களம் ராஜ லக்ஷ்மியின் குரலில் தவளவிட்டவர்.
கொஞ்சும் சலங்கை படத்தில் சிங்கார வேலனே தேவா என்ற பாடல் காலத்தால் அழியாது சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்று. காரைக் குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசைக்கு போட்டியாக ஜானகியின் குரல் ஒலித்தது.
சிங்கார வேலனே தேவா என்ற பாடலுக்கான நாதஸ்வர இசையை ஒலிப்பதிவு செய்து விட்டு நாதஸ்வர ஸ்ருதிக்கேற்ப பெண் குரலைத் தேடினார்கள். பி.லீலா, லதா மங்கேஸ்கர் எனப்பலரும் நாயனத்தின் சுருதிக்கு இசைவாக பாட தங்களால் முடியாது எனக் கூறிவிட்டனர். நாதஸ்வர இசைக்கு லீலாவின் குரல் இசைவாக இருக்கும் என்று மீண்டும் ஒருமுறை அவரிடம் சென்று கேட்டார்கள். ஜானகியின் குரல் நாதஸ்வர இசைக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று லீலா கூறினார். 
லீலாவின் கூற்று பொய்க்கவில்லை. நாதஸ்வர இசைஎது ஜானகியின் குரல் எது என்ற வேறுபாடு காண முடியாத வகையில் இரண்டும் இணைந்துள்ளன.1962ஆம் ஆண்டு தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசையையும், ஜானகியின் பாடலையும் ஒன்றாக ஒலிப்பதிவு செய்த ஒலிப்பதிவாளர் ஜீவா பாராட்டுக்குரியவர்.
ஆமேரி ராகத்தில் அமைந்த சிங்கார வேலனே தேவா என்ற பாடல்தான் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது.
தியாகராஜா பாகவதர் பாடிய "ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற வர்ண மெட்டில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதடி' என்ற பாடலை ரி.எம். சௌந்தரராஜனின் குரலில் வெளியிட்டார். இன்றைய ரீ மிக்ஸ்பாடல்களுக்கு இப்பாடல் முன்னோடியாக உள்ளது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார். திருடாதே பாப்பா திருடாதே. சிங்கார வேலனே தேவா மட்டுமல்ல 1969 ஆம் ஆண்டு மன்னிப்பு படத்தில் சுப்பையா நாயுடுவின் இசையில் உருவான "நீ எங்கே என் நினைவுகள் அங்கே', "வெண்ணிலா வானில் வரும் வேளை' போன்ற பாடல்களும் அவரின் திறமைக்கும் சான்றாக உள்ளன.
ரமணி 
மித்திரன் 04/ 11.01.2009


மின்னலென விரல்கள் ஆர்மோனியக் கட்டைகளை வருட, ராமநாதன் பாடிக்காட்டிய மெட்டை செளந்தரராஜன் மனதில் நிறுத்திக்கொண்டார். பின்னாளில் நூற்றுக்கணக்கான வெற்றிப் பாடல்களை மாடர்ன் தியேட்டர்ஸில் பாடப்போகிறவர் பாடத்தொடங்கியது தான் தாமதம்...
ஒலிப்பதிவை நிறுத்திவிட்டார் ஒலிப்பதிவாளர் பத்மநாபன்.    ராமநாதனிடம் அவர் கூறினார் - ‘‘சார்...இது ரிக்கார்ட் பண்ண லாயக்கில்லாத குரல். பிசிர் அடிக்கிறது.’’
மெல்லச்சிரித்தார் ராமநாதன் -- ‘‘ஆமாம்பா... எப்போதாவது ஒலிக்கும் அந்தப் பிசிர் அழகான பிசிருதான். நான் உத்தரவாதம் தர்றேன். கவலைப் படாம ரிக்கார்ட் பண்ணுங்க,’’ என்றார்.
இந்த வகையில், ஒரு இசை மேதையின் ஆசிகளுடன் அவருடைய இசை அமைப்பில் தனது முதல் பாடலைப் பாடினார் டி.எம்.எஸ். பாடலும் ஓரளவிற்கு வெற்றியும் அடைந்தது.
சென்னைக்கு வாய்ப்பு தேடிச் சென்றவுடன், ராயப்பேட்டை செல்லும் சாலையிலிருந்த ராமநாதனின் வீட்டு வாசலில் ஒவ்வொரு நாளும் நின்று, அவருடைய கவனத்தைக் கவரும் முயற்சியில் இருந்தார் டி.எம்.எஸ்.
இரவு வெகு நேரம் விழித்து நாவல்கள் படிக்கும் பழக்கமுள்ளவர் ராமநாதன்.  எழுந்திருக்க நேரமாகும். எழுந்தவுடன் சட்டுபுட்டென்று நீராடிவிட்டு காரில் ஏறி பறந்துவிடுவார். அதனால் பல நாட்கள் அவர் டி.எம்.எஸ் காத்திருப்பதை கண்டும்காணாமல் இருந்துவிட்டார். கடைசியில் ஒரு நாள், ‘‘என்னடா செளந்தரராஜா...உனக்கு என்ன வேணும்னு இங்கெ வந்து 
தெனம் நிக்குற,’’ என்று கேட்டார். ‘பாடறதுக்கு வாய்ப்பு தருவே ளோன்னுதான் நிக்கறேன்,’’ என்றார் செளந்தரராஜன்.
‘‘இதோ பாரு... படம் எடுக்கறவா உன்னைப் போடணும்னு சொன்னா உன்னைப் பாட வைப்பேன். நானாப்போய் செளந்தரராஜனைத்தான் பாடவைக்கணும்னு சொல்ல 
மாட்டேன்,’’ என்றார் ராமநாதன். இந்தப் பதில் செளந்தரராஜன் மனதில் ஏமாற்றத்தையும் கசப்புணர்வையும்தான் ஏற்படுத்தியது.
ஆனால் அப்புறம் தூக்குத் தூக்கி வந்தது. ராமநாதன் இசை அமைப்பில் செளந்தரராஜன் பாடிய பாடல்கள் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு வழி வகுத்தன. (இதைக் குறித்த விரிவான தகவல்களை, எனது ‘டி.எம்.எஸ் - ஒரு பண்பாட்டுச் சரித்திரம்’ என்று நூலில் காணலாம்)
செளந்தரராஜன் என்ற பின்னணிப் பாடகரை   ‘நான் பெற்ற செல்வம்’, ‘அம்பிகாபதி’, ‘வணங்காமுடி’,  ‘சாரங்கதரா’, ‘உத்தமபுத்திரன்’, என்று படத்திற்குப் படம் பாடலுக்குப் பாடல் அரிய இசை வண்ணங்களில் செதுக்கியெடுத்தார் ராமநாதன்.
‘‘நான் வளர்வதற்கு...என் குரலைப் பக்குவப் படுத்துவதற்கு, நான் தைரியமா பாடறதுக்குக் காரணம் ஜி. ராமநாத அய்யரோட மியூசிக்தான்.  அவர் கொடுத்த வழியிலதான் நான் சிங்கம் மாதிரி பாடினேன். சாரீரத்தில ஆண்மை வேண்டும் என்பார். தானும் அப்படித்தான் பாடிக்காட்டுவார்,’’ என்று என்னிடம் கூறுவார் டி.எம்.எஸ்.  ‘‘என் இதயத்தைப் பிளந்து காட்டினா அதுல ராமநாத அய்யர்தான் இருப்பார்,’’ என்பதும் செளந்தரராஜனின் வாக்குமூலம். 
தான் பாடிய அன்னம் இட்ட வீட்டிலே பாடலை ஹெச்.எம்.வியில் இசைத்தட்டாகப் பதிவு செய்ய சென்றபோது, கே. வி. மகாதேவனை சந்தித்தார் செளந்தரராஜன்.  ஹெச்.எம்.வியில் இசை அமைப்பாளராக இருந்தார் மகாதேவன். பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்கும் நட்பு மலர்ந்து விட்டது. அடிக்கடி ஹெச்.எம்.வி அலுவலகம் சென்று மகாதேவனை சந்திக்கலானார் டி.எம்.எஸ். 
செலவுக்குப் பணமில்லாமல் சொந்த ஊரான மதுரை திரும்ப வேண்டிய நிலை வந்தபோது, செளந்தரராஜன் குரலில் இசைத்தட்டுகள் பதிவுசெய்து 
செலவுக்கு வழி செய்தார் மகாதேவன். ‘‘மகாதேவன் எனக்கு நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்’’ என்பார் டி.எம்.எஸ்.
மகாதேவனின் இரண்டவாது திரை இசை அத்தியாயம், குமாரி, மதனமோகினி முதலிய படங்களில் தொடங்கியபோது, அவற்றில் 
டி.எம்.எஸ். பாடவில்லை. ஆனால் 
ஏ.பி. நாகராஜன், எம்.ஏ.வேணு ஆகியோருடன் கே.வி.எம். இணைந்த ஒரு வெற்றிகரமான யூனிட் நால்வர் படத்துடன் உருவானது. தொடக்கத்திலிருந்தே அந்தக் குழுவில் இணைந்தார் டி.எம்.எஸ். ஏறுமுகமானது அவருடைய இசைப்பயணம். 
செளந்தரராஜனின் மகாதேவ ராகம், ‘ஏரிக்கரையின் மேலே’ என்ற ரீங்காரம் பெற்று,   ‘மணப்பாறை மாடு கட்டி’ என்று ஏற்றம் உற்று, ‘பாட்டும்  நானே பாவமும் நானே’ என்று திருவிளையாடலில் உச்சத்தைத்தொட்டது, 
முதல் பாடல் வாய்ப்புக்காக கோவை சென்டிரல் ஸ்டூடியோவில் முயற்சி செய்தபோதே, எம்.எஸ். விஸ்வநாதனைப் பார்த்திருந்தார் 
டி.எம்.எஸ். 
ஸ்டூடியோவிற்கு வரும் இசை அமைப்பாளர்களுக்கு உதவியாக இருந்து, இசை அறையையும் ஆர்மோனியப் பெட்டிகளையும் சுத்தமாக வைக்கும் பணிதான் விஸ்வநாதனுக்கு. ஆனால் அப்போதே தன்னுடைய ஞானத்தை அபிவிருத்தி செய்துகொள்ளும் கடுமையான முயற்சியில் இருந்தார் அவர்.  ‘‘நம்மோடு பேசவே மாட்டார் சார். தான் பாட்டுக்கு மறைவா ஆர்மோனியத்தை வாசிச்சப்படி, பாடல்களோட அமைப்பை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருப்பாரு,’’ என்பார் செளந்தரராஜன் (டி.எம்.எஸ் - ஒரு பண்பாட்டு சரித்திரம்).
எம்.எஸ்.வியுடன் அடுத்த சந்திப்பு, மயிலை தெற்கு மாடவீதியின் மேற்கு மூலையில் நடந்தது. ‘‘அண்ணே...நாங்க இப்போ படங்களுக்கு மியூசிக் போடறோம். உங்களுக்கு சொல்லி அனுப்பறோம்,‘’ என்று கம்பெனி வாகனத்தில் அமர்ந்தபடி, தெருவோரம் நின்ற டி.எம்.எஸ்.ஸைப் பார்த்து சொன்னார் எம்.எஸ்.வி.
அப்படி விஸ்வநாதன், ராமமூர்த்தி இணைக்கு முதன்முதல் டி.எம்.எஸ். படம், குலேபகாவலி. 
அதைத் தொடர்ந்து இசை வெள்ளமாக ஆயிரக்கணக்கில் பாடல்கள் வந்தன. பா-வரிசை படங்களின் பாடல்கள் 
ஒரு தேனிசை வரிசையாக வளர்ந்தன. டி.எம்.எஸ்.ஸும் எம்.எஸ்.வி.யும் பாட்டுத்தேரை வடம்பிடித்து இழுத்தபோது, அவர்கள் பரஸ்பரம் கைகளை இழுத்துக்கொண்டு அவதிப்பட்டதும் உண்டு. 
நிலவைப் பார்த்து வானம் சொன்னது பாடல் பதிவின் போது ‘டேக்’குகள் ஒரு பக்கம் கூடிக்கொண்டே போக, சர்க்கரை நோய் இருந்த செளந்தரராஜன் பசி பொறுக்க முடியாமல், ‘எனக்கு உங்கப் பாட்டே வேண்டாம்’னு வெளிநடப்புசெய்த சங்கதியெல்லாம் உண்டு. 
ஆனால் பாட்டு வண்டி தடம் புரளாமல் இருந்தது என்றால், உள்ளூற இருந்த இனிமையால்தான்.  உரசல்களை மீறி, ‘ஒரே சூரியன், ஒரே நிலா, ஒரே ஒரு எம்.எஸ்.வி’ என்று டி.எம்.எஸ். பதிவு செய்தார் (மெல்லிசை மன்னர்கள் பாட்டுப் பயணம்). 
சங்கர் கணேஷும் வி. குமாரும் செளந்தரராஜனைப் பாட வைத்த இசை அமைப்பாளர் வரிசையில் முக்கிய இடம் பெறுபவர்கள். மெலடி யுகத்தில் அவர்களுடைய பங்களிப்பிற்கும் குறைவில்லை என்பதற்கு செளந்தரராஜனின் வெற்றிப் பாடல் வரிசையே சான்று 
இளையராஜா அலை முதலில் கரையைத் தொட்ட போது செளந்தரராஜனின் குரலும் பாங்காக ரசிகர்களின் செவிகளை அடைந்தது (அன்னக்கிளி உன்னெத் தேடுதே, நல்லவர்க்கெல்லாம்..இத்யாதி). 
ஆனால் ராஜா, ராஜாதி ராஜா 
ஆனபோது செளந்தர-ராஜாவிற்கு 
அங்கு இடம் இல்லை! அதனால் என்ன. மற்ற இசை அமைப்பாளர்கள் 
அமைத்துக் கொடுத்த ராச்சியங்கள் அவருக்குப் போதுமானதாக இருந்தன. உலகம் சுற்றும் வாலிபனுக்குப் பாடியவர், தானே உலகம் சுற்றும் வாலிபர் ஆகிவிட்டார். 

10. "இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
- மாவீரன் நெப்போலியன் போனபார்ட் 

வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.

இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்

"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -

சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.

பாடல் மேலும் வளர்கிறது :

"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ 
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."

எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.

தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.

"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.

மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது." 
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. பாடலைக் கேட்டும் காட்சியைக் கண்டும் இன்புற இணைப்பு: (http://www.youtube.com/watch?v=UzN8Fs2AYc4)

தங்களது முந்தைய படத்துக்காக விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் பதிவான ஒரு பாடலை படத்தின் நீளம் கருதி அந்தப் படத்தில் பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன் அவர்களால் முடியாமல் போனது. அதனை தங்களது "திருடாதே" படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் அவர்.

பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்கள் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதுவும் வளர்ந்து வரும் இசை அமைப்பாளரின் பாடல் என்றால் கண்டிப்பாக சம்மதிக்கவே மாட்டார்கள்.

எனவே தயாரிப்பாளர் தரப்பில் ஒருவித தயக்கத்துடனே எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

"பாட்டு யார் போட்டது?" சுப்பையா நாயுடுவின் கேள்வி இது.

"விஸ்வநாதன்-ராம..." என்று முடிக்கக்கூடவில்லை.

"அட. நம்ம பையன் விஸ்வநாதன் போட்ட பாட்டா? அதுக்கென்ன? தாராளமா வச்சுகிட்டாப் போச்சு" என்று உற்சாகமாக சம்மத்திதார் சுப்பையா நாயுடு. 

அந்தப் பாடல் தான் கண்ணதாசன் எழுதி பி. பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்" - என்ற டூயட் பாட்டு.

படத்தின் டைட்டிலில் இரட்டையர்களின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் இன்றுவரை திருடாதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் "விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்" பாடலாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது.

மெல்லிசை வளர்ந்து வந்த காலத்திலும் தயாரிப்பாளர்களால் விரும்பப்படும் இசை அமைப்பாளராக அவர் இருந்தமைக்கு அவரது இந்தப் பரந்த மனப்பான்மையும் ஒரு காரணம். அதனால் தான் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களாவது அவரது இசையில் வெளிவந்து பாடல்களும் நிலைத்து நின்று திரை இசை உலகில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது

"திருடாதே" படம் வெளிவந்த அதே வருடம் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் இன்னொரு படமும் வெளிவந்தது.

தமிழில் முதல் "டெக்னிக்" வண்ண திரைப்படம் என்ற பெருமைக்குரிய படம் அது.

நடனக் கலைக்கும் இசைக் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட 
இந்தப் படத்துக்காக ஒரு பாடல் பதிவாக்கம் செய்யப்பட்டது.

அந்தப் பாடல் பதிவானதே ஒரு சுவாரஸ்யமான கதை. கதைப்படி நாயகன் நாதஸ்வரம் வாசிக்க நாயகி பாடவேண்டும். ஆபேரி ராகத்தில் முதலில் பிரபல நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலம் அவர்களில் நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்டது. 
அந்தப் பத்து நிமிட நாதஸ்வர இசைக்கும் அதன் ஸ்ருதிக்கும் இணைந்து பாடவேண்டிய பாடகியாக யாரைத் தேர்வு செய்வது?
.
அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்த பாடகி பி. லீலா அவர்கள்தான். ஆனால் லீலாவோ நாதஸ்வரத்தின் ஸ்ருதியோடு இணைந்து பாட தன்னால் முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு வேறு யாரை எல்லாமோ கேட்டுப்பார்த்துவிட்டார்கள்.

எல்லாருமே மறுத்து விட்டனர். கடைசியாக ஒருமுறை பி. லீலாவையே மீண்டும் அணுகி கேட்டுப் பார்ப்பது அவர் மறுத்துவிட்டால் காட்சியையே கைவிட்டுவிடுவது என்று தீமானித்து மறுபடி லீலாவிடம் கேட்டனர்.

லீலாவோ "என்னால் பாடமுடிந்தால் நான் மறுப்பேனா?. என்றாலும் எனக்கு தெரிந்து நாதஸ்வரத்தின் இசையோடு இணைந்து பாடக்கூடிய பாடகி ஒருவர் இருக்கிறார். குழலிசையும் அவர் குரலிசையும் வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாமல் ஒன்றிப் போய்விடும். இந்தப் பாடலைப் பாடக்கூடிய திறமைசாலி அவர் ஒருவர் தான். அவர் ஒருவரால் தான் இந்தப் பாட்டை பாட முடியும் " என்று அப்போதுதான் வளர்ந்து வந்துகொண்டிருந்த புதிய பாடகி ஒருவரை அடையாளம் காட்டி தன்னைத் தேடிவந்த அந்த வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்து இன்றளவும் அவரது பெயர் பாடலுடன் நிலைத்திருக்க வைத்தார்.

பி. லீலாவால் பலமாக பரிந்துரைக்கப் பட்ட அந்தப் பாடகி - திருமதி எஸ். ஜானகி.

பாடல் : "சிங்கார வேலனே தேவா."

எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் அற்புதமான இசையில் பாடல் இடம் பெற்ற 
படம் : "கொஞ்சும் சலங்கை." 

No comments:

Post a Comment