Friday 24 April 2020

OTTOMAN DYNASTY 1299 - 1923



OTTOMAN DYNASTY 1299 - 1923



உலக வரலாற்றில் இடைக்கட்டத்தில் உதுமானிய பேரரசு மிகப்பெரும் வல்லரசாக திகழ்ந்தது. வரலாற்றில் அவ்வாறான வல்லரசாக திகழ்ந்தவை மூன்று. ஒன்று துருக்கிய உதுமானிய பேரரசு, இரண்டாவது முகலாய பேரரசு, மூன்றாவது ஈரானின் சபாவித் வம்சம் .மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மிகப்பெரும் சமூக, கலாசார மற்றும் அரசியல் மாற்றங்கள் அவர்களின் காலகட்டத்தில் தான் நடந்தேறியது. உலகின் பேரரசின் வரலாற்றிலே மிக அதிக காலமாக சுமார் 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்த உதுமானிய பேரரசின் வரலாறு மிக நீண்டது. நீண்ட எல்லையை, நீண்ட காலத்தை உட்கொண்ட வரலாறு அதற்குண்டு. அதாவது உலகின் மிகப்பெரும் பகுதிகளை, இருகண்டங்களை உதுமானிய பேரரசு ஆண்டது.  ரோம் முதல் ஹங்கேரி வரை, போலந்து முதல் எமன், யரித்திரியா வரை, அல்ஜீரியா முதல் அசர்பைஜான் வரை , அதாவது தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதி, மேற்கு ஆசியா முதல் வட ஆப்ரிக்கா வரை இதன் எல்லைகள் நீண்டிருந்தன. இதில் 29 மாகாணங்கள் மற்றும் ஏராளமான வரி செலுத்தும் சிற்றரசுகள் அடங்கியிருந்தன. இவற்றுள் பல பிந்தைய கட்டத்தில் பேரரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. இவற்றுள் சுயாட்சி பெற்ற மாகாண அரசுகளும் உண்டு. துருக்கியின் தலைநகரான இஸ்தான்புலை தங்கள் தலைநகராக கொண்டு மத்திய தரைக்கடல் பகுதியின் பெரும் பரப்பை ஆண்ட உதுமானிய பேரரசு கிழக்கிற்கும் மேற்குலகத்திற்கும் இடையே கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகள் உறவு கொண்டிருந்தது.

உதுமானிய பேரரசின் வேர் காசி வம்ச அரசோடு தொடர்பு கொண்டது. கி.பி 1300 ல் அனதோலிய பிராந்தியமானது செல்யூஜ் வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது. அவர்களின் முடிவுக்கு பிறகு அந்த பிராந்தியமானது பல பகுதிகளாக பிரிக்க்பட்டது . இது காசிமேத் என்றழைக்கப்பட்டது. அனதோலியா பிராந்தியத்தின் ஒரு பகுதியை காசிமேத் அரசரான உஸ்மான் ஆட்கொண்டார். அந்த கட்டத்தில் பைசாண்டிய பேரரசு மிக பலவீனப்பட்டு காசிமேத்களிடம் தங்களின் பல பிரதேசங்களை இழந்தது. இந்நிலையில் இடைக்கால துருக்கிய கதையான உஸ்மானின் கனவு குறிப்பிட்டது போல் இளம் துருக்கிய அரசனான உஸ்மான் மூன்று கண்டங்களையும், மத்திய கிழக்கு பகுதி முழுவதையும் தன் அதிகார பரப்பாக்கிக் கொண்டார். அந்த பேரரசிற்கு உலகின் பாரம்பரிய ஜீவநதிகளான நைல், யூப்ரடீஸ், டைக்ரீஸ், தனூபி போன்றவை ஆகப்பெரும் வளமிக்க எல்லைகளாக இருந்தன. அவை நான்கு திசைகளிலிருந்தும் பாய்ந்து உதுமானிய பேரரசை வளமாக்கின. மேலும் அதன் வலுமிக்க அரண்களாக காகஸ், டாரஸ், பல்கான், அட்லஸ் ஆகிய பெரும் மலைத்தொடர்கள் இருந்தன. இதன் தொடர்ச்சியில் முதலாம் உஸ்மான் பைஸாண்டிய பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இவரின் காலமானது துருக்கியின் சீர்திருத்தங்களின் தொடக்க காலம். சமூக, பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் செய்யப்பட்டன. இவரின் காலத்திற்கு பிறகு அவரின் மகனான ஒர்கான் அதிகாரத்திற்கு வந்தார்.இவர் தன் அதிகார எல்லையை கிழக்கு மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து பல்கான் வரை நீட்டித்தார்.  இவர் பர்ஸா நகரை கைப்பற்றி பின்னர் அதனை தன் தலைநகராக்கிக்கொண்டார். ஒர்கான் தன் பேரரசை மேலும் வளப்படுத்தினார். இவரின் காலத்தில் தான் கட்டிடக்கலையில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டன. துருக்கிய கட்டடக்கலை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் நுட்ப தாட்பங்கள் பரிணமிந்து சென்றன.

உதுமானிய பேரரசின் ஐரோப்பிய நுழைவின் முக்கியகட்டம் என்பது 1389 ஆம் ஆண்டு கொசாவா பகுதியை கைப்பற்றிய நிகழ்வு . இது செர்பிய ஆளுகையை முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும் சிலுவைப்போர்களின் உச்சகட்டமாக  1396 ல் நடந்த நிகோபலஸ் போரில் உதுமானிய அரசின் ஐரோப்பா நோக்கிய பரவலை பைஸாண்டிய அரசால் தடுக்க முடியவில்லை. அக்காலத்தில் பால்கன் பிரதேசத்தில் உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டை யாராலும் தடுக்க முடியவில்லை. பின்னர் ஆட்சி, அதிகார கட்டத்தின் தொடர்ச்சியில் 1402-1413 ல் துருக்கியில் பெரும் உள்நாட்டு கலகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உதுமானிய பேரரசு சிதைந்தது. இதனை தொடர்ந்து ஒன்றாம் மெஹ்மூத்  உதுமானிய பேரரசை மறுநிர்மாணம் செய்தார். இந்நிலையில் உதுமானிய பேரரசிற்கு பிராந்திய, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக பல சவால்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியில் 1512 ல் ஒன்றாம் சலீம் உதுமானிய அரசராக பொறுப்பேற்றுக்கொண்டார். வரலாற்றில் உதுமானிய பேரரசை விரிவாக்கி, அதற்கு சரியான வல்லரசு அடையாளத்தை கொடுத்தவர் சலீம். இவர் காலகட்டத்தில் தான் பேரரசு மிகப்பெரும் இராணுவ பலத்தைப்பெற்றது. 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு மிகப்பெரும் சவாலாக  சலீம் இருந்தார். அரசியல் மற்றும் பொருளாதார பலம் இவர்காலத்திய பேரரசிற்கு மிகப்பெரும் வீச்சாக இருந்தது. மேலும் அரபுலக வரலாற்றில் அதன் முழுப்பிராந்தியமும் இவரின் கட்டுப்பாட்டில் வந்தது. குறிப்பாக 1512 -1517  ல் எகிப்திய பகுதி முழுவதையும் கைப்பற்றினார். மேலும் இதே காலகட்டத்தில் சிரியா, சவூதியின் ஹிஜாஸ் பாலைவனம் முழுவதும் இவர் கட்டுப்பாட்டில் வந்தது.  இவ்வாறாக அரபுலகின் இதயப்பகுதிகள் உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு , அதன் மூலம் உதுமானிய பேரரசு இஸ்லாமிய உலகின் அதிகாரபூர்வ நபராக மாற்றம்  பெற்றது.

குர்துகளின் வாழ்வியலில், அவர்களின் இயக்கத்தில் உதுமானிய பேரரசு மிகப்பெரும் எதிர்கொள்ளலாக இருந்தது. துருக்கிய குர்துகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க கட்டத்திலும் முதலாம் உலகப்போருக்கு முந்தைய கட்டம் வரையிலும் மிகப்பெரும் இனக்கொடுமைகளுக்கு உள்ளானார்கள். துருக்கிய குர்துகளின் தேசிய இனப்போராட்டத்தின் மிக முக்கிய பேரினவாதம் என்பது உதுமானிய பேரரசை  மையம் கொண்டதாக இருந்தது. சுல்தான் மஹ்மூத் இதன் கதாநாயகராக  இருந்தார். அவரின் காலகட்டம் குர்துகளின் வாழ்வில் மிகப்பெரும் துக்ககரமானதாக இருந்தது.குர்துக்களின் வாழ்க்கை நீரோட்டம் வற்றிப்போன நதியாக தொடர்ச்சியற்று சென்றது. பின்னர் சுல்தான் அப்துல் ஹமீத் அதிகாரத்திற்கு வந்தார். அவரின் காலகட்டத்தில் தான் துருக்கி ரஷ்யா போர் ஏற்பட்டது. அந்த கட்டத்தில் ஏராளமான துருக்கிய குர்துகள் அங்கிருந்து புலம்பெயர நேரிட்டது. ஆக உலக வரலாற்றில் உதுமானிய பேரரசு குர்துகள் தங்களின் சுயநிர்ணய உரிமையை கோருவதற்கான மிகப்பெரும் காரணமாக விளங்கியது.

உதுமானியப் பேரரசு (ஒட்டோமான் பேரரசு, Ottoman Empire, 1299–1922, துருக்கி: Osmanlı Devleti அல்லது Osmanlı İmparatorluğu) என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். இது துருக்கியப் பேரரசு எனவும் அழைக்கப்படுகிறது.இப்பேரரசு கி.பி. 1299இல் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த உஸ்மான் பே தலமையின் கீழ் வட-மேற்கு அனத்தோலியாவில் உருவாக்கப்பட்டது.கொன்ஸ்தான்து நோபில் நகரம் சுல்தான் இரண்டாம் முஹம்மத்தால் கி.பி.1453இல் கைப்பற்றப்பட்டதன் பின்னர் ஒட்டோமன் இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது.[1][2][3]

இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது (16ம் – 17ம் நூற்றாண்டுகளில்), இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் மேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணை முதல் கிழக்கே கஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா, ஆஸ்திரியா, சிலவாக்கியா, உக்ரேனின் பல பகுதிகள், சூடான், எரித்திரியா, தெற்கே சோமாலியா மற்றும் யேமன் வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது.

பெயர்

உதுமானிய துருக்கிய மொழியில்,பேரரசு என்பது தெவ்லெத்-இ-அலிய்யி-யீ உஸ்மானிய்யி (دَوْلَتِ عَلِيّه عُثمَانِیّه)அல்லது மாற்றீடாக உஸ்மான்லி தெவ்லெத் (عثمانلى دولتى)என்ற பதத்தால் குறிப்பிடப்படுகின்றது.நவீன துருக்கி மொழியில் இது 'Osmanlı Devleti or Osmanlı İmparatorluğu' என்பதால் அறியப்படுகின்றது. சில மேற்கத்தைய கணக்குகளில், "ஒட்டோமன்" மற்றும் "துருக்கி" என்ற இரு பெயர்களும் உள்மாற்றீடாக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன.இரட்டையாக எழுதும் இம்முறை 1920-1923 காலப்பகுதயில்,அங்காரா நகரை தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட துருக்கியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன்,அன்றிலிருந்து துருக்கி(Turkey)என்ற தனித்த சொல் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகின்றது.

வரலாறு
எழுச்சி(1299-1453)
நிகோபொலிஸ் போர், 1396. 1523இல் வரையப்பட்டது

துருக்கிய செல்ஜூக்ரும் சுல்தான் ஆட்சியின் வீழ்ச்சியின் பின்னர்,கி.பி.1300இல் உதுமானியர்களின் முன்னோடிகள் வாழந்த அனத்தோலியா பகுதியானது ஒரு சீறற்ற சுதந்திரப்பிரதேசமாகப் பிரிந்ததுடன், பல துருக்கிய மாநிலங்கள் காஸி குடியரசுகள்(Ghazi emirates)என அழைக்கபடலாயின.இதில் ஒரு காஸி குடியரசு முதலாம் உஸ்மானால்(1258[4] –1326) நிர்வகிக்கப்பட்டது.உஸ்மான் என்ற பெயரிலிருந்து ஒட்டோமன் என்ற பெயர் பெறப்பட்டது.முதலாம் உஸ்மான்,துருக்கியக் குடியிருப்புக்களை பைசாந்தியப் பேரரசின் (Byzantine Empire) முனைப்பகுதியை நோக்கி விரிவுபடுத்தினார்.

முதலாம் உஸ்மானின் மறைவுக்குப் பின்வந்த நூற்றாண்டில் உதுமானிய ஆட்சி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் பல்கேன் மேலாக விரிவடைய ஆரம்பித்தது.உஸ்மானின் மகன், உர்ஹான் 1324இல் பூர்சா நகரை கைப்பற்றியதுடன்,அதனை உதுமானிய மாநிலத்தின் புதிய தலைநகராக மாற்றினார்.அதாவது பூர்சா நகரின் வீழ்ச்சியினால் வட-மேற்குஅனத்தோலியா பகுதியின் கட்டுப்பாட்டை பைசாந்தியப் பேரரசிடம் (Byzantine Empire)இழந்தது.முக்கிய நகரான தெஸ்சாலுன்கி 1387இல் வெனேடியன்ஸ்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.1389இல் கொசோவோ உதுமானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் பிராந்தியத்தின் மீதான சேர்பியர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன்,இது உதுமானியர்கள் ஐரோப்பாவில் தடம்பதிப்பதற்கு காரணமாக அமைந்தது. 1396இல் நிகழ்ந்த நிகோபொலிஸ் போரில், மத்திய காலத்தின் பாரிய சிலுவைப்படை எனக்கருதப்படும் படையினருக்கு துருக்கிய உதுமானியர்களின் முன்னேற்றகரமான வெற்றியை தடுக்கமுடியவில்லை.

பல்கேன் மீதான துருக்கிய ஆட்சியின் விரிவாக்கமானது,கான்ஸ்டண்டினோப்பிள் நகரை கைப்பற்றும் மூலோபாய நோக்கத்திற்கு காரணமாக அமைந்தது.
விரிவாக்கம் மற்றும் உச்சநிலை(1453–1566)

இரண்டாம் முராத்தின் மகனான இரண்டாம் முகம்மத் ஆடசிப்பிரதேசத்தையும், இராணுவத்தையும் மறுசீரமைத்ததுடன்,29 மே 1453 அன்று கான்ஸ்டண்டினோப்பிள் நகரை கைப்பற்றினார்.உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டதற்கு பரிமாற்றாக மரபுவழி தேவாலயங்களை அதன் நிலங்களில் தன்னாட்சியாக இயங்குவதற்கு இரண்டாம் முகம்மத் அனுமதி வழங்கினார்.ஏனெனில்,ஐரோப்பிய ஆட்சி மாநிலங்களுக்கு மற்றும் இறுதி பிஸன்டைன் இராச்சியத்துக்கும் (Byzantine Empire) இடையே மோசமான உறவு நிலவிவந்தது. பெரும்பான்மையான மரபுவழி மக்கள் வெனேடியன் அரசை விடவும் விருப்பத்துடன் உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்.[5]

15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உதுமானியப் பேரரசானது ஒரு விரிவடையும் காலத்தினுள் நுழைந்தது.இக்காலப்பகுதயில் பேரரசு மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டதுடன்,ஆடசிப் பொறுப்பு திறமையுள்ள உறுதியான சுல்தான்களிடம் சென்றது.உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதைகளின் ஊடாகவே ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,பேரரசு பொருளாதாரத்திலும் தழைத்தோங்கியது.[6]


சுல்தான் முதலாம் ஸலீம்(1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இசுமாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச்செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார்.[7] முதலாம் சலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன்,கடற்படை ஒன்றை உருவாக்கி செங்கடலில் நிலைநிறுத்தினார்.உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித்தன்மை போர்த்துக்கேய பேரரசுக்கும்,உதுமானியப் பேரரசுக்கும் இடையில் ஆரம்பித்தது.[8]
முஹாக்ஸ் போர், 1526

முதலாம் சுலைமான்(1520-1566) 1521இல் பெல்கிறேட் நகரை கைப்பற்றினார்,ஹங்கேரி பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது.[9] 1526 இல் வரலாற்று முக்கியத்துவமிக்க முஹாக்ஸ் போரில் வெற்றிபெற்றதன் பின்னர்,இன்றைய ஹங்கேரி(மேற்குப் பகுதி தவிர்ந்த) மற்றும் ஏனைய மத்திய ஐரோப்பா நிலப்பகுதிகளில் உதுமானிய ஆட்சி நிறுவப்பட்டது.

முதலாம் சுலைமானின் ஆட்சியின் இறுதிப்பகுதியில்,பேரரசின் மொத்த சனத்தொகை ஏறத்தாழ 15,000,000 தொகையாக மக்கள் மூன்று கண்டங்களுக்கும் மேலாக பரந்து காணப்பட்டதுடன், பேரரசின் சக்திவாய்ந்த கடற்படையொன்று மத்தியதரைக்கடலின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.[10]
தேக்கமும் சீர்திருத்தமும் (1566–1827)

1566க்குப் பிறகு பேரரசு தேக்கநிலையில் வீழ்ச்சியடையத் தொடங்கியதாக இசுடீபன் லீ கூறுகிறார்; இடையிடையே சில காலங்களில் மீளுருவாக்கமும் சீர்திருத்தமும் நிகழ்ந்து வந்தன. இந்த வீழ்ச்சி விரைவு பெற்று 1699இல் மிகத் தாழ்நிலையை அடைந்தது.[11] பல வரலாற்றாளர்கள் இக்கூற்றுடன் ஒப்பாதபோதும் பலரும் "மோசமான சுல்தான்கள், திறமையற்ற முதலமைச்சர்கள், வலுவற்ற, கருவிகள் பற்றாதப் படைகள், ஊழல் அலுவலர்கள், பேராசை பிடித்த முதலீட்டாளர்கள், வலுவான எதிரிகள், துரோகமிழைத்த நண்பர்கள்" வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகக் கூறுகின்றனர்.[12] தலைமையின் தோல்வியே முதன்மைக் காரணமாக கூறும் லீ முதல் 1292 முதல் 1566 வரை ஆண்ட பத்து சுல்தான்களில் ஒருவரைத் தவிர அனைவரும் மிகுந்த திறமை உள்ளவர்களாக இருந்தனர் என்கிறார். 1566 முதல் 1703 வரை ஆண்ட 13 சுல்தான்கள், இருவரைத் தவிர, ஈடுபாடின்றியும் திறமையின்றியும் இருந்தனர்.[13] மிகவும் மையப்படுத்தப்பட்ட அமைப்பில் மைய அரசின் தோல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இதன் நேரடி விளைவாக மாகாண பிரபுக்கள் வலுபெற்று கான்ஸ்டாண்டிநோபிளை தவிர்க்கத் தொடங்கினர். ஐரோப்பிய எதிரிகளும் வலுபெற்று வந்தனர்; உதுமானியப் படைகள் மேம்படுத்தப்படாதிருந்தது.[14][15] இறுதியாக உதுமானியப் பொருளியல் சீர் குலைந்தது; போர் விளைவாக ஏற்பட்ட பணவீக்கம், உலக வணிகத்தின் திசை மாற்றங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தன.[16]
வீழ்ச்சியும் நவீனமயமாக்கலும் (1828–1908)
1876இல் தொல்மாபாச்செ அரண்மனையில் முதல் உதுமானிய நாடாளுமன்றத்தின் துவக்கம். முதல் அரசமைப்புசார் ஆட்சி இரண்டாண்டுகளே நீடித்தது. முப்பதாண்டுகளுக்குப் பின்னர் 1908இல் இளந்துருக்கியர் புரட்சிக்கு அடுத்தே அரசமைப்பும் நாடாளுமன்றமும் மீளமைக்கப்பட்டன.

டான்சிமாத் காலத்தில் (1839–1876), அரசு மேற்கொண்ட தொடர்ந்த சீர்திருத்தங்களால் படைகள் நவீனப்படுத்தப்பட்டன; வங்கி முறைமை மேம்படுத்தப்பட்டது; தற்பால் சேர்க்கை குற்றமற்றதாக்கப்பட்டது; சமயச் சட்டங்களுக்கு மாற்றாக சமயச்சார்பற்ற சட்டங்கள் உருவாகின.[17] பழங்கலைஞர்களுக்கு நவீனத் தொழிலகங்கள் கட்டப்பட்டன. உதுமானிய அஞ்சல் அமைச்சகம் அக்டோபர் 23, 1840இல் நிறுவப்பட்டது.[18][19]

சாமுவெல் மோர்சுக்கு தந்தி கண்டுபிடித்ததற்காக 1847இல் ஆக்கவுரிமை வழங்கப்பட்டது.[20] இதனையடுத்து முதல் தந்தி தடம் இசுத்தான்புல் - அட்ரியனோப்பிள் - சும்னு இடையே அமைக்கப்பட்டது.[21] இந்தக் காலத்தின் உச்சமாக அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அரசியலமைப்புச்சார் அரசு இரண்டாண்டுகளே நீடித்தது.

உயர்கல்வி பெற்றிருந்த பேரரசின் கிறித்தவக் குடிமக்கள், முசுலிம் பெரும்பான்மையை விட பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தனர்; இது முசுலிம்களிடையே மனக்கசப்பை உருவாக்கியது.[22] 1861இல் உதுமானியக் கிறித்தவர்களுக்கு 571 முதல்நிலை மற்றும் 94 இரண்டாம்நிலை பள்ளிகள் இருந்தன; இவற்றில் 140,000 மாணவர்கள் படித்தனர்.[22][22] 1911இல் இசுத்தான்புல்லில் இருந்த 654 மொத்த விற்பனை நிறுவனங்களில், கிரேக்க இனத்தவர்களுக்கு 528 உரிமையாக இருந்தன.[22]
1853–1856 கிரீமியப் போரின் போது துருக்கிய துருப்புக்கள் செப்கெடில் கோட்டையை தாக்குதல்.

பலமிழந்து வந்த உதுமானியப் பேரரசின் ஆட்சிகுட்பட்ட பகுதிகளில் தங்களது தாக்கத்தை நிலைநிறுத்த ஐரோப்பிய அரசுகள் நடத்திய நீண்ட போராட்டத்தின் ஓர் அங்கமே கிரீமியப் போர் (1853–1856) ஆகும். இந்தப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆகத்து 4, 1854இல் உதுமானியப் பேரரசு 5 மில்லியன் பவுண்டுகளுக்கு வெளிநாட்டுக் கடன்கள் பெற்றது.[23][24] மேலும் இப்போரின் விளைவாக 200,000 கிரீமிய டாடார்கள் உதுமானியப் பேரரசிற்குள் குடி புகுந்தனர்.[25] காக்கேசியப் போர்களின் இறுதியில் 90% காக்கேசியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.[26] இதனால் காக்கேசியாவின் வடக்கில் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேறிய இவர்கள் உதுமான் பேரரசில் தஞ்சம் புகுந்தனர்.[27][28][29] சில மதிப்பீடுகளின்படி மொத்தமாக–1.5 மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.[30]
பெல்கிறேட் c. 1865. 1867இல் பிரித்தானியாவும் பிரான்சும் உதுமானிய அரசின் படைகளை வடக்கு செர்பியாவிற்குப் பின்வாங்கச் செய்தன. செர்பியா உருசிய துருக்கிப் போர்களை அடுத்து 1878இல் விடுதலை பெற்றது.

1876இல் பல்கேரிய எழுச்சியை 100,000 மக்கள் கொல்லப்பட்ட பாசி-பசூக்கின் கொடூரம் அடக்கியது.[31] 1877-78இல் நடந்த உருசியத் துருக்கிப் போரில் உருசியா வென்றது. இதன் விளைவாக உதுமானியப் பேரரசு ஐரோப்பிய நிலப்பகுதிகளை இழந்தது; பல்கேரியா உதுமானியப் பேரரசில் தன்னாட்சி பெற்ற குறுமன்னராட்சியாக நிறுவப்பட்டது. உரோமானியாவிற்கு முழு விடுதலை வழங்கப்பட்டது. செர்பியாவும் மொண்டெனேகுரோவும் விடுதலை பெற்றன. 1878இல் ஆசுத்திரியா-அங்கேரி தன்னிச்சையாக உதுமானியப் பேரரசின் மாகாணங்களான பொசுனிய-எர்செகொவினாவையும் நோவி பாசரையும் கையகப்படுத்தியது. இதனை உதுமானிய அரசு எதிர்த்தபோதும் அதன் படைகள் மூன்றே வாரத்தில் தோற்றன.

பெர்லின் பேராயத்தில் பால்கள் தீபகற்பத்தில் உதுமானியப் பேரரசின் நிலப்பகுதிகள் மீட்கப்பட பிரித்தானியப் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரைலி உதவினார்; இதற்கு எதிர் உதவியாக பிரித்தானியாவிற்கு சைப்பிரசு வழங்கப்பட்டது.[32] தவிரவும் உராபிக் கலவரத்தை அடக்க உதுமானியாவிற்கு உதவுவதாக கூறி 1882இல் எகிப்திற்கு படைகளை அனுப்பிய பிரித்தானியா அப்பகுதியின் கட்டுப்பாட்டையும் பெற்றது.

1894 முதல் 1896 வரை நடைபெற்ற அமீதியப் படுகொலைகளில் 100,000 இலிருந்து 300,000 வரையிலான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.[33]

இவ்வாறு சுருங்கிய உதுமானியப் பேரரசில் பால்கனிய முசுலிம்கள் பால்கன் அல்லது அனடோலியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.[34] 1923இல் அனடோலியாவும் கிழக்கு திராசுமே முசுலிம் பகுதிகளாக இருந்தன.[35]
தோல்வியும் கலைப்பும் (1908–1922)
1908இல் உதுமானிய சமயநீதியரசர்கள் இரண்டாம் அரசியலமைப்பு அரசை அறிவித்தல். புரட்சியால் ஏற்பட்ட குழப்பத்தில் பல்கேரியாவும் (5 அக்டோபர் 1908) பொசுனியாவும் (6 அக்டோபர் 1908) விடுதலை பெற்றன.

சூலை 3, 1908இல் இளந்துருக்கியர் புரட்சிக்குப் பிறகு இரண்டாம் முறை அரசியலமைப்புசார் அரசை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1876ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்றமும் மீளமைக்கப்படும் என சுல்தான் அறிவித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அரசியல், படைத்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன; இது உதுமானியப் பேரரசு கலைக்கப்பட துவக்கமாகவும் அமைந்தது.

குடிமக்களின் சிக்கல்களுக்கிடையே, ஆசுத்திரியா-அங்கேரி அலுவல்முறையாக 1908இல் பொசுனியா எர்செகோவினாவை கைப்பற்றியது; ஆனால் போரைத் தவிர்க்க ஆக்கிரமித்திருந்த நோவி பசாரிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொண்டது. இத்தாலி-துருக்கியப் போரின் போது (1911–12) உதுமானியா லிபியாவை இழந்தது. பால்கன் சங்க நாடுகள் உதுமானியா மீது போர் தொடுத்தது; இந்தப் போர்களில் (1912–13) உதுமானியப் பேரரசு தோற்றது. இதன் விளைவாக கிழக்கு திரேசு தவிர்த்த பால்கன் நிலப்பகுதிகளை இழந்தது. வரலாற்றுச் சிறப்புமிகு உதுமானியத் தலைநகர நகரமான எடிர்னேயையும் இழந்தது. சமயக் கலவரங்களுக்கு அஞ்சி ஏறத்தாழ 400,000 முசுலிம்கள் தற்கால துருக்கிக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் பலர் வாந்திபேதி கொள்ளைநோயால் பயணத்தின்போதே இறந்தனர்.[36] 1821 முதல் 1922 வரை பால்கன் நாடுகளில் நடைபெற்ற முசுலிம் இனவழிப்பில், பல மில்லியன் கொல்லப்பட்டனர்;பலர் வெளியேற்றப்பட்டனர்.[37][38][39] 1914 வாக்கில் பெரும்பாலான ஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்டது. இருப்பினும் பேரரசின் ஆட்சியில் 15.5 மில்லியன் மக்கள் தற்கால துருக்கியிலும், 4.5 மில்லியன் மக்கள் சிரியா, பாலத்தீனம், யோர்டானிலும், 2.5 மக்கள் ஈராக்கிலுமாக மொத்தம் 28 மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்தனர். தவிர 5.5 மில்லியன் மக்கள் அராபியத் தீபகற்பத்தில் உதுமானியாவின் அரவணைப்பில் இருந்தனர்.[40]

நவம்பர் 1914இல் மைய சக்திகள் தரப்பில் பேரரசு முதல் உலகப் போரில் பங்கேற்றது. போரின் துவக்கத்தில் உதுமானியாவிற்கு கலிப்பொலி போர்த்தொடர் போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தபோதும் உருசியாவிற்கு எதிராக காக்கசுப் போரில் தோல்வியடைந்தது. உதுமானியப் பேரரசிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடுகள் போர் அறிவிக்கவில்லை.[41]
நவம்பர் 17, 1922இல் உதுமானியப் பேரரசு கலைக்கப்பட்ட பிறகு கடைசி சுல்தான் ஆறாம் மெகமது நாட்டை விட்டு வெளியேறுதல்

1915இல் உருசியப் படைகள் தொன்மை ஆர்மீனியாவினுள் நுழைந்தன.[42] இதற்கு ஆர்மீனியர்கள் ஒத்துழைப்பு நல்கியதால் உதுமானியப் பேரரசு ஆர்மீனியர்களை வெளியேற்றவும் கொல்லவும் முற்பட்டது; இது ஆர்மீனிய இனப்படுகொலை என அறியப்படுகின்றது.[43] கிரேக்க, அசிரிய சிறுபான்மையினர் மீதும் இனப்படுகொலை நிகழ்வுகள் நடந்தேறின.[44]

1916இல் ஏற்பட்ட அரபு புரட்சி மத்திய கிழக்கில் உதுமானியப் பேரரசுக்கு எதிராக மாறியது. இறுதி உடன்பாட்டின்படி, உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டது. 19வது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் 7–9 மில்லியன் துருக்கிய-முசுலிம் அகதிகள் காக்கேசியா, கிரீமியா, பால்கன் குடா, நடுநிலக் கடல் தீவுகளிலிருந்து அனத்தோலியாவிற்கும் கிழக்கு திரேசிற்கும் இடம் பெயர்ந்தனர்.[45]

கான்சுடான்டிநோபலின் முற்றுகையும் இசுமீர் முற்றுகையும் துருக்கிய தேசிய இயக்கத்தை முன்னிலைப்படுத்தியது. முஸ்தபா கெமால் தலைமையில் இவ்வியக்கம் துருக்கிய விடுதலைப் போரை (1919–22) வென்றது. 1918 முதல் 1922 வரை ஆண்டுவந்த கடைசி சுல்தான் ஆறாம் மெகமது நாட்டை விட்டு நவம்பர் 17, 1922இல் வெளியேறினார். துருக்கி தேசியப் பேரவை அக்டோபர் 29, 1923இல் துருக்கி குடியரசை நிறுவியது. மார்ச் 3, 1924இல் கலீபகமும் கலைக்கப்பட்டது.[46]

No comments:

Post a Comment