Friday 20 November 2020

Lakshmi Vilas Bank

 

Lakshmi Vilas Bank



மொரட்டோரியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தில் ரிசர்வ் வங்கி இறுதிக் கட்டப் பணிகளில் இறங்கியுள்ளது. விரைவில் இவ்விரு வங்கிகளும் இணைக்கப்படவுள்ளன.

லட்சுமிக்கு என்ன ஆச்சு?


சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கி, நாட்டின் பல்வேறு இடங்களில் 566 வங்கிக் கிளைகளையும், 918 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே லட்சுமி விலாஸ் வங்கி மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த இவ்வங்கி பெரு நிறுவனங்கள் துறைக்கும் கடன் வழங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கியது. லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்தது.


களத்தில் இறங்கிய ரிசர்வ் வங்கி!

லட்சுமி விலாஸ் வங்கிக்கு வாராக் கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கியது. இவ்வங்கியின் டெபாசிட் தொகை ரூ.31,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாகக் குறைந்துவிட்டது. இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய ரிசர்வ் வங்கி. இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை வழங்கவோ அல்லது பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ முடியாது.


வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

மொரட்டோரியத்தின் கீழ் லட்சுமி விலாஸ் வங்கியைக் கொண்டுவந்தவுடனே அவ்வங்கியில் பணம் போட்டவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்தனர். வருகிற டிசம்பர் 16ஆம் தேதி வரையில் லட்சுமி விலாஸ் வங்கியை மொரட்டோரியத்தின் கீழ் கொண்டுவருவதாகவும், லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே வித்டிரா செய்ய முடியும் எனவும் அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. இதனால் இவ்வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்களது பணம் அனைத்தும் இல்லாமல் போய்விடுமோ என்று டெபாசிட் செய்தவர்கள் அஞ்சுகின்றனர்.


பணம் பாதுகாப்பாக இருக்கும்!


இப்பிரச்சினை பூதாகரமாக எழுந்தவுடன், லட்சுமி விலாஸ் வங்கியில் முதலீடு செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற உத்தரவாதத்தை வழங்குவதாக அந்த வங்கியின் நிர்வாகி டி.என். மனோகரன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலைக் கண்டு வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும், வங்கி விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். லட்சுமி விலாஸ் வங்கியின் ஏடிஎம்கள் மற்றும் வங்கிக் கிளைகள் அனைத்தும் விரைவில் செயல்படத் தொடங்கும் எனவும் மனோகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பு!



நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் இந்தியா லிமிடெட் வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த மிகப் பெரிய நிதி நிறுவனமான டிபிஎஸ் வங்கியின் இந்தியக் கிளையுடன் தான் லட்சுமி விலாஸ் வங்கி இணைக்கப்படவுள்ளது. இதையடுத்து தனது இந்தியக் கிளையில் ரூ.2,500 கோடியை முதலீடு செய்வதாக டிபிஎஸ் வங்கி அறிவித்துள்ளது. வங்கி விதிமுறைச் சட்டம் 1949-இன் படி லட்சுமி விலாஸ் வங்கியையும் டிபிஎஸ் இந்தியா வங்கியையும் இணைக்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.


ஆயத்தப் பணியில் ரிசர்வ் வங்கி!


டிபிஎஸ் வங்கி நல்ல நிதி நிலையில் இருப்பதால் அதனுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைத்தால் தொடர்ந்து இயங்கவும், சிறப்பான சேவை வழங்கவும் முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை ரிசர்வ் வங்கி தயார் செய்கிறது. புதிய வரைவுத் திட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கியின் பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் என அனவரிடமும் கருத்து மற்றும் எதிர்ப்பு இருந்தால் தெரிவிக்கலாம் என்று கேட்கப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 20) மாலை 5 மணி வரையில் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் பின்னர் வரைவுத் திட்டம் இறுதி செய்யப்படும். அதன் பின்னர் ரிசர்வ் வங்கி தனது இறுதி முடிவை அறிவிக்கும்.

No comments:

Post a Comment