Tuesday 17 November 2020

AC RSS MADHAV SPC AL

 


ACRSS MADHAV SPCAL



ஓவியக் கலைக் கல்லூரியில் படிக்கும்போது [1981] எங்கள் சீனியர் மாணவர் ஒருவர்  [ பெயர் வடிவேல் என்று ஞாபகம் ] காலேஜ் வளாகத்துக்குள்ளேயே , திறந்த வெளியில் கேன்வாஸ் வைத்து அருமையாக பெயிண்டிங்ஸ் வரைவார்.

ஜூனியர்கள் நாங்கள் , அவர் வரைவதை அவருக்குப் பின்னால் நின்று "ஆ" வென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்போம்...!

பெரும்பாலும்  இயற்கைக் காட்சிகள்தான் வரைவார். 


அப்புறம்  நடிகை மாதவியின் தோற்றத்தை அடிக்கடி வரைவார்..!

வேறு ஒரு நடிகையின்  படத்தையும்  வரைய மாட்டார்...!

பல நாள் அடக்கி வைத்திருந்த சந்தேகத்தை ஒரு நாள் அவரிடமே கேட்டு விட்டோம் :

"சார்.." 

சீனியர் வரைவதை நிறுத்தி விட்டு எங்கள் பக்கம் திரும்பினார் .

"நீங்க ஏன் அடிக்கடி மாதவி படத்தை மட்டும் வரையறீங்க...?"

வடிவேல் சில நொடிகள் மௌனமானார்.

பின் எங்களை உற்றுப் பார்த்து கேட்டார் : "நீங்க எல்லோரும் ஆர்டிஸ்ட்தானே..?"


நாங்கள் ஆம் என்று தலையை ஆட்டினோம் .

சீனியர் கேட்டார் : "மற்ற நடிகைகள் யாரிடமும் இல்லாத ஒரு சிறப்பு , மாதவியிடம் இருக்கிறது.

அது என்னவென்று தெரியுமா..?"

நாங்கள் பேந்த பேந்த முழித்தோம்..!

வடிவேல் சொன்னார் : "யோசிச்சு நாளைக்கு சொல்லுங்க...தெரியலேன்னா நானே  சொல்றேன் .."

அன்று மாலை ஹாஸ்டலில் எங்களுக்குள் மிகப் பெரிய விவாதமே நடந்தது.

"மாதவியிடம் என்ன ஸ்பெஷல்..?"

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னார்கள்.

நடு இரவு வரை யோசித்தும் 

நல்ல பதில்  கிடைக்கவில்லை.

அடுத்த நாள் வடிவேல் எங்கள் சந்தேகத்தை தீர்த்து வைத்தார் .

அவர் சொன்ன விஷயம் :

"முகத்தை பக்கவாட்டில்  திருப்பி கேமராவை  பார்க்கும்போது , எந்த நடிகைக்கும் கருவிழிகள் முழுமையாக தெரியாது... ஆனால் நடிகை மாதவி முகத்தை உற்றுப் பாருங்கள்...எவ்வளவு முகத்தை திருப்பினாலும் அவர் கருவிழிகள்  முழுமையாக தெரியும். அதுதான் மாதவியை எனக்குப் பிடிக்கும்..!"என்று சொல்லி விட்டு ,

மறுபடி  வேறு ஒரு கோணத்தில்  மாதவி முகத்தை வரைய ஆரம்பித்து விட்டார்.

அப்புறம்தான் நாங்கள் நன்கு கவனித்தோம். 

அவர் சொன்னது உண்மைதான்...!

மாதவியின் விழிகள்... 

Something Special !

அப்புறம் மாதவியை எங்களுக்கும் பிடித்துப் போனது..!

இப்போது.. எங்கள் சீனியர் வடிவேல் இருக்கும் இடமும் எங்களுக்கு தெரியாது..!

நடிகை மாதவி போன இடமும் எங்களுக்கு தெரியாது...!

Raju R. V.


No comments:

Post a Comment