Monday 16 October 2017

JIAJING EMPEROR - 1521- 1567 MING DYNASTY 2



 JIAJING EMPEROR - 1521- 1567 MING DYNASTY 2 

மிங் வம்சாவளி ஆட்சி 1521–1567





சீனப் பெருஞ்சுவர் நமக்குத் தெரியும். ஆனால் அதற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சீனா தன்னைச் சுற்றி ஒரு கற்பனைச் சுவரை எழுப்பிக் கொண்டிருந்தது. பிற நாடுகளை அது ஒரு பொருட்டாக நினைத்ததே இல்லை. தங்களுடையதுதான் புராதனமான கலாச்சாரம் என்ற எண்ணம் கொண்ட நாடு.

முதலில் கரன்ஸி நோட்டை வெளியிட்ட நாடு எது? நாங்கள்தான். பட்டாசுகளை முதலில் தயாரித்த நாடு? நாங்கள்தான். தத்துவத்திலிருந்து இசை வரை மிகவும் பாரம்பரியமான செல்வாக்கு கொண்ட நாடு எது? சந்தேகமென்ன, நாங்கள்தான். வேறு எந்த அந்நிய சக்தியும் அடக்கி ஆளாத நாடு எது? நாங்களேதான்.

சீனர்கள் கொண்டிருந்தது நியாயமான பெருமைகள்தான். ஆனால் இப்படியொரு கற்பனைச் சுவரை எழுப்பிக் கொண்டதில் சீனர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தத் தவறி விட்டார்கள். தட்டச்சில் நான்தான் மேதை என்று சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி? அதுவும் கணினி அறிமுகமாகி ஜாலங்கள் செய்யத் தொடங்கிய பிறகு? அப்படித்தான் ஆகிவிட்டது சீனா. அறிவியலும், தொழில் நுட்பமும் உலகெங்கும் பரவியபோது சீனா கண்களை மூடிக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அது கண் திறந்தபோது நிலைமை கைமீறியதாக மாறிவிட்டிருந்தது. ஐரோப்பிய நாடுகள் தங்களை ‘நாங்களே உயர்ந்தவர்கள்’ என்று எண்ணத் தொடங்கி விட்டிருந்தன.

ஆனால் ஒரு வித்தியாசம். தன்னை உயர்வாக நினைத்த சீனா அந்த மகிழ்ச்சியோடு காலம் தள்ளியது. ஆனால் தங்களை உயர்வாக நினைத்த ஐரோப்பிய நாடுகள் பிற நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன.

இந்தக் காலகட்டத்தில் சீனாவை மிங் வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் ஆட்சி செய்யத் தொடங்கினார்கள்.

இந்த ஆட்சியில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு இருந்தது. சொல்லப்போனால் ஒருவிதத்தில் சீனாவின் தலையெழுத்தை மாற்றி அமைத்ததில் அவர்களுக்கும் பங்கு உண்டு.

ஸி ஸுங் என்ற சீன சக்ரவர்த்திக்குப் பல உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களில் வே சுங் ஸியென் என்ற திருநங்கையும் ஒருவர். இவருக்கு திறமைகள் மிக அதிக மாக இருந்தன. அடிக்கடி தன் புத்திசாலித் தனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ராஜ விசுவாசம் அவரிடம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இதனால் சக்ரவர்த்திக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. அந்த உதவியாளர்மீது மிகுந்த நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.

ஆட்சி தொடர்பான பல விஷயங்களை அவரிடம் ஒப்படைத்தார் சக்ரவர்த்தி. அரசு அறிக்கைகளை தயார் செய்யும் பொறுப்பும் அவற்றில் ஒன்று.

தனக்கு இவ்வளவு அதிகாரங்கள் கிடைத்ததும் வே சுங் ஸியென் செய்த முதல் காரியம் தன் இனத்தைச் சேர்ந்த பலரையும் அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளில் அமர்த்தியதுதான். ஆயிரக்கணக்கான திருநங்கைகள் அரசுப் பணிகளில் அமர்த்தப்பட்டார்கள்.

அடுத்ததாக வே சுங் ஸியென் செய்த காரியம் அராஜகமானது. தனக்காக நாட்டில் கோயில்களை எழுப்பச் செய்தார். மக்களில் பலரும் இந்தப் போக்கை வெறுத்தார்கள்.

“என்னை ஒன்பதாயிரம் ஆண்டுகள் என்று பிறர் குறிப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்தினார். எதற்காக இப்படிக் குறிப்பிட வேண்டும்? காரணம் இருந்தது. அக்காலத்தில் சீனச் சக்ரவர்த்திகளை ‘பத்தாயிரம் ஆண்டுகள்’ என்று அழைப்பது வழக்கம். (அதாவது அவரது புகழ் குறைந்தது அவ்வளவு ஆண்டுகள் நிலைத் திருக்குமாம்). ‘நான் சக்ரவர்த்தியைவிட கொஞ்சம்தான் குறைந்தவள். எனவே என்னை ஒன்பதாயிரம் ஆண்டுகள் என்று குறிப்பிட்டால் என்ன தப்பு?’ என்று நினைத்தார் வே சுங் ஸியென்.

ஒருகட்டத்தில் சக்ரவர்த்தி இறந்தார். அடுத்து அவருடைய மகன் முடிசூட்டிக் கொண்டார். முடிசூடியதும் அவர் செய்த முதல் காரியம் வே சுங் ஸியெனை பதவி இறக்கம் செய்ததுதான். இதனால் மனம் நொந்து போனார் வே சுங் ஸியென். அடுத்த தாக புதிய மன்னன் தனக்கு ஏதாவது தண்டனை அளிப்பானோ, தான் கைது செய்யப்படுவோமோ என்றெல்லாம் பயந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வே சுங் ஸியென் தலைக்கனமாக நடந்து கொண்டது மன்னனுக்குப் பிடிக்கவில்லையே தவிர அவர் திருநங்கை என்பதற்காக பதவி நீக்கப்படவில்லை. இதற்கு ஒரு முக்கிய சான்று, அரசுப் பணிகளில் இருந்த பிற திருநங்கைகள் பதவி நீக்கப்படவில்லை.

ஆக மிங் வம்சாவளி ஆட்சியில் பல திருநங்கைகள் தொடர்ந்து அரசுப் பதவிகளை அலங்கரித்தார்கள். முக்கியமாக ஒற்று வேலைகளில் அவர்களுக்கு தனித் திறமை இருந்தது.

இப்படிப்பட்ட மிங் வம்ச அரசர்கள் சீனாவை ஆண்டு கொண்டிருந்த போதுதான் மஞ்சூக்கள் சீனாவை ஆக்ரமிக்கத் தொடங்கினார்கள்.

சீனாவின் வடகிழக்கில் இருந்தது மஞ்சூரியா. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மஞ்சூக்கள். தொடக்கத்தில் சீனாவின் எல்லைப் பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். பிறகு துணிச்சல் பெற்று பெய்ஜிங்கை (அக்காலத்தில் அதன் பெயர் பீகிங்) நோக்கி படையோடு கிளம்பினார்கள்.

சீனா அதிர்ந்தது. முதல் முதலாக சீனர்கள் சந்தித்த வெளிநாட்டு எதிர்ப்பு.

No comments:

Post a Comment