Tuesday 25 July 2017

MAWLYNNONG VILLAGE ,A NEAT VILLAGE IN INDIA /ASIA


MAWLYNNONG  VILLAGE ,

A NEAT VILLAGE IN INDIA /ASIA





மாவ்லின்னாங் கிராமத்தை ஆசியாவிலேயே வெகு சுத்தமான கிராமமாக ‘டிஸ்கவர் இந்தியா’ பத்திரிகை சான்றளித்திருக்கிறது. இது ஷில்லாங் நகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த அழகிய சிறு கிராமம் இந்தோ-பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. இந்த கிராமவாசிகளின் முக்கியத்தொழில் விவசாயமே ஆகும். பலகாலமாகவே இப்பகுதியின் பூர்வகுடி மக்கள் இந்த கிராமப்பகுதியின் இயற்கைத்தூய்மையை பேணிக்காத்து வருகின்றனர்.

மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைக்கூடைகள் இந்த கிராமம் முழுக்க வைக்கப்பட்டிருப்பதோடு எந்த ஒரு குப்பை மற்றும் வேண்டாத பொருளும் வெளியிடங்களில் சிதறிக்கிடப்பதை இவர்கள் விரும்புவதில்லை.
குப்பைக்கூடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் பின்னர் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். அது மட்டுமல்லாமல் காட்டு வளத்தை காப்பதிலும் இந்த கிராம மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். புதிய மரங்கள் நடுவதிலும் முனைப்பாக ஈடுபடுகின்றனர்.
ரம்மியமான இயற்கை காட்சிகள் மற்றும் வேர்ப்பாலம், சாய்வுப்பாறை போன்றவை இந்த கிராமத்தில் பயணிகளுக்காக காத்திருக்கும் சுவாரசிய அமங்களாகும். நகரச்சந்தடிகளிலிருந்து விலகி ஒரு உண்மையான, அமைதியான, தூய்மையான கிராமத்து அழகை அள்ளிப்பருக விரும்பும் ரசிகர்களுக்கு இந்த மாவ்லின்னாங் கிராமம் மிகவும் ஏற்றது.
நீங்கள் யாராவது “மாவ்லின்னாங்” சென்றிருக்கிறீர்களா? குறைந்த பட்சம் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவலாவது இருக்கிறதா? இந்த இரண்டு கெள்விக்குமே “இல்லை” என்பதுதான் உங்களின் பதிலென்றால் நீங்கள் கண்டிப்பாக இந்தப் பதிவை படித்தே ஆக வேண்டும்.அப்படி படித்தீர்களானால் நிச்சயம் “மாவ்லின்னாங்” சென்று வர வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் துளிர்ப்பதை உங்களால் தடுக்க இயலாது! என்னடா இவன் வெகு நேரமாய் ஏதோ வேற்றுமொழியினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறானே என எண்ணத்தோன்றுகிறதா? சரி விஷயத்துக்கு வருவோம்.

அது என்ன “மாவ்லின்னாங்”? அதுதானே இப்போது உங்களை குழப்பும் வார்த்தை? அது ஒன்றும் குலு மனாலி,சிம்லா,கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் ஒன்றல்ல நண்பர்களே.ஆனால் அதையும் விட மிக மிக சுவாரசியமான, இன்று இந்தியாவின் முக்கியமான இடங்களில் ஒன்று.அது எப்படி என்கிறீர்களா? ஆமாம், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் “மாவ்லின்னாங்” எனும் இந்த கிராமம்தான் இன்று இந்தியாவுக்கு ஏன் உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்கிறது! காரணம் என்ன தெரியுமா? இன்று உலகை ஆட்டிப்படைக்கும் உலக வெப்பமயமாதலிலிருந்து எப்படி நம்மை நாமே காத்துக்கொள்வது என்பதுதான் சூடான விவாதம். அத்தகைய ஒரு யுக்தியை ஒரு தவம் போல கருதி, அதை பின்பற்றி உலக நாடுகளுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது இந்த “மாவ்லின்னாங்” கிராமம்.இன்னும் புரியும்படிச் சொல்கிறேன்.
மேகாலயா மானிலத்தின் தலை நகர் ஷில்லாங்கிலிருந்து 90 கி.மீ தூரத்தில், வங்கதேசத்திலிருந்து வெறும் 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது “மாவ்லின்னாங்” எனும் ஒரு பசுமையான கிராமம்.இங்கு வாழும் மக்கள் “காசி பழங்குடியினர்” என அழைக்கப்படுகின்றனர்! அவர்களை நாம் பழங்குடியினர் என இனி அழைப்பது முற்றிலும் தவறு என்பேன் நான்! ஏன் என்றால் இன்று தம்மைத் தாமே மேல்தட்டு மக்கள் என பெயரளவில் மட்டுமே சொல்லிக்கொள்ளும் மக்கள் கூட எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு சுத்தமும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுச் சிந்தனையும் தங்களின் ரத்தத்தில் கலந்துவிட்ட மக்கள்தான் இந்த “காசி பழங்குடியினர்”! நாம் இவர்களிடம் கற்றுகொள்ள எவ்வளவோ இருக்கிறது நண்பர்களே.வாருங்கள் அவை என்னென்ன என்று விலாவாரியாக பார்ப்போம்!
அதாவது நாமெல்லாம் “காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு” என்றுதான் நம் பிள்ளைகளை வளர்த்தோம்,வளர்க்கிறோம்.ஆனால் காசி பழங்குடியின மக்கள் என்ன சொல்லி தம் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் ஆனால் இது முற்றிலும் உண்மை.அதாவது “காலை எழுந்தவுடன் கிராம சுத்தம் செய்தல்,பின்பு படிப்பு…. பாட்டு, எல்லாம்”.என்ன நம்ப முடியவில்லையா? என்ன செய்வது, நாமெல்லாம் “தானுண்டு தன் வீடுண்டு” என இருந்துவிட்டோம்! ஆனால் இந்த மக்கள் தங்கள் கிராமத்தையே தங்களின் வீடாக எண்ணி சுத்தம், சுகாதாரம் என பாதுகாத்து அதையே தங்கள் சந்ததிக்கும் போதிக்கிறார்கள்!
அவர்களின் இந்த செயல், இன்று உலகத்தையே அவர்கள் பக்கம் திருப்பி, எப்படி அத்தகைய ஒரு செயல்பாட்டினை பொதுவாக்கி செயல்படுத்தினார்கள் என வாய் பிளந்து பார்க்கச் செய்துவிட்டது! அது எப்படி, மெட்ரோபாலிட்டன் என்று அழைக்கப்படும் பெருநகரங்களுக்கே பெரும் சவாலாய் ஏன் இதுவரை வெறும் கனவாகவே இருக்கும் இந்த ஒரு சாதனை, இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் மட்டும் எப்படிச் சாத்தியாமாயிற்று என்றுதானே கேட்கத்தோன்றுகிறது? ஆம் கண்டிப்பாக இது சாத்தியமே! “மனமிருந்தால் மார்க்கமுண்டு” என்கிறார் “மாவ்லின்னாங்” கிராமத்தின் தலைவர் கொம்லின் தொம்தோஹ்ரெம்!
மனமிருந்தால் மார்கமுண்டு! மாவ்லின்னாங் போலவே இந்தியா மொத்தமும் மாறுவதுண்டு!
இன்னொரு விசேஷமும் உண்டு இந்த மாவ்லின்னாங் கிராமத்துக்கு.அது என்னவென்றால், இந்தியாவின் சுத்தமான மற்றும் சிறந்த கல்வியறிவு நிறைந்த கிராமம் மாவ்லின்னாங் ஒன்றுதான் என்பதுதான் அந்த விசேஷமான செய்தி.இந்த சாதனையை எட்ட ஒருவர் மட்டும் உழைக்கவில்லை இந்த கிராமத்தில். நடக்கத் தொடங்கிய சிறு குழந்தை முதல் நடை தளந்த வயதானவர் வரை எல்லோருமே “ஊர் கூடித் தேர் இழுப்பது போல” ஒவ்வொறு நாளும் தங்களால் இயன்றவரை கிராமத் தூய்மைக்கும், பசுமைக்கும் வித்திடுகிறார்கள் ஏதோ ஒரு வகையில்.அது எல்லாம் சரி, இந்த ஊர் மக்கள் எப்படி தங்கள் ஊரை சுத்தப்படுத்துவாங்க?

மூங்கில் குப்பைத்தொட்டியும் குட்டீஸ் முதல் பெரியவர் வரை சேவையும்!
ஓவ்வொரு அதிகாலைப்பொழுதும் விடியும் பொழுது ஒரு தன்னார்வக்குழுவுக்கு கிராமத்தை சுத்தம் செய்யும் வேலை.மழை, வெயில், குளிர் இப்படி எதுவும் இந்த தன்னார்வலர்களை தடுப்பது இல்லை.ஒரு நாளில் குறைந்தது நான்கு/ஐந்து முறை சுத்தம் செய்து விடுவார்கள் ஊரின் தெருக்களை! சேரும் குப்பைகளை கொட்டிவிட ஏதுவாக ஒவ்வொரு சாலையும் பல மூங்கில் கூடகளோடு தயாராக! ஆனால் எந்தவொரு காரணத்தை முன்னிட்டும் ப்ளாஸ்டிக் இந்த குப்பை சேகரிக்கும் இடத்துக்கோ, ஊரின் எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதிக்குமோ வராமல் கண்ணும் கருத்துமாக சுற்றுச்சூழலை பாதுகாக்கிறார்கள் ஒவ்வொரு நாளும்.என்ன இப்பவே கண்ணக் கட்டுதா?! இருக்காதா பின்ன, இதையெல்லாம் நாம சினிமாவில பார்த்தால் மட்டுமே உண்டு!!
சுத்தமும் சுகாதாரமும் ஒவ்வொரு வீட்டிலிருந்து தொடங்குகிறது இந்த ஊர் சிறார்களுக்கு.அதனால் இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல்களில் தாங்களோ பிறரோ ஈடுபட அனுமதிப்பதில்லை! மேலும் மாவ்லின்னாங் எனும் இந்த் சிறு கிராமத்துக்கு நமக்கு இருப்பது போல நகராட்ச்சியோ, அரசு சம்பந்தப்பட்ட எந்த ஒரு சங்கமும் இல்லை.இதனால் அவர்களுக்கான குடி நீர்,எரிவாயு போன்ற எல்லாவற்றையும் அவர்களே ஏற்பாடி செய்துகொள்கிறார்கள்! மேலும் இவர்களுக்கு உலக வெப்பமயமாதலை தடுப்பதில் நகரவாசிகளான நம்மைவிட அதிகப்பங்கு உண்டு!
வெப்பமயமாதலும் மாவ்லின்னாங்கும்!

உலக வெப்பமயமாதல், அதன் விளைவுகள், தடுக்கும் வழிமுறைகள் என எல்லாம் இவர்களுக்கு அத்துபடி.அதெப்படி? சும்மா வருமா…எல்லாம் திட்டமிடப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்குகள், பயிலரங்குகள் என இப்படி ஏராளமான ஏற்பாடுகள் கிராம மேம்பாட்டுச் சங்கம் வாயிலாக! அதனால் கிராமத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் இதில் பங்குண்டு.எல்லாவற்றுக்கும் மேலாக, கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவறை என்பது மிகவும் அவசியம் என்பது சட்டமாக்கப்பட்டு மீறுபவர்கள் தண்டிக்கவோ அல்லது அபராதம் விதிக்கவோ படுகிறார்கள்.அப்படிப் போடு! ஒரு ஓ கூட போடலாமுங்கிறீங்க தானே?! கண்டிப்பா போடனும்ங்க! மேலும் கிராமத்தின் கழிவு நீர் சுத்திகரிப்பு, ஓவ்வொரு வீட்டின் பராமரிப்பு போன்றவற்றை ஒரு குழு அமைத்து அவ்வப்போது சரி பார்த்து எல்லாம் செவ்வனே நடக்க வழிவகை செய்கிறார்கள்.
நம்ம அந்நியன் படுத்துல வருகிற சார்லி மாதிரி நடுரோட்டில் துப்புவது, பின் அதை வடாங் காயப்போட சொல்வது,கண்ட இடத்தில் குப்பையை எறிவது, போன்ற தவறு இழைப்பவர்களுக்கு தகுந்த தண்டனை அல்லது அபராதமாக ஒரு டாலர் அமெரிக்க பணம் மதிப்புள்ள இந்திய பணம். ஆனால் இந்த அவமானத்திற்கு பயந்தே ஊர்மக்கள் மேற்கூரிய எந்த தவறும் செய்வதில்லை என்கிறார் தலைவர் தொம்லின்!இதற்கெல்லாம் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? உலக அரங்கில் மரியாதை, இந்தியாவுக்கு பெருமை.இதையெல்லாம் விட மிக முக்கியமாக ஒன்று….

மாவ்லின்னாங் இன்று ஒரு பிரபல சுற்றுலாத்தளம் இந்தியாவில்!



இந்தியாவே இன்று மாவ்லின்னாங்கை நோக்கி படையெடுக்கிறது.ஆமாங்க சுற்றுலாப் படை! அதனால் இந்த கிராமம் இன்று பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மக்களை ஒவ்வொரு நாளும் பெரும் திறளாக சந்திக்கிறது! விளைவு, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டு இந்த சாதனை எப்படி சாத்தியமாயிற்று எனத் தெரிந்து செல்கிறார்கள். ஆனால் தெரிந்து மட்டுமே செல்லாமல், அதை செயல்படுத்தவும் முயற்ச்சித்தார்கள் என்றால் இந்தியாவே ஒரு பெரிய மாவ்லின்னாங்காய் உருவெடுத்து நின்று உலகத்தை பின்பற்ற வைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என தீர்க்கமாக நம்பலாம்.

No comments:

Post a Comment