Monday 10 July 2017

KARICHAN KUNJU கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானிடம்”



KARICHCHAN KUNJU ,WRITER
BORN 1919 JULY 10- 1992




ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு (ஜூலை 10, 1919 - 1992) ஒரு தமிழ் எழுத்தாளர்

வாழ்க்கை வரலாறு
நாராயணசாமி தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ராமாமிருத சாஸ்திரி- ஈஸ்வரியம்மாள். எட்டு வயது முதல் பதினைந்து வயது வரை பெங்களூரில் வேதமும் வடமொழியும் கற்றார். மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் ஐந்தாண்டுகள் (17 முதல் 22 வயது வரை) தமிழ் பயின்றார். நாராயணசாமியின்21வது வயதில் (1940இல்) அவர் எழுதிய சிறுகதையான “மகிழ்ச்சி”, “ஏகாநதி” என்ற புனைப்பெயரில் கலைமகள் இதழில் வெளியானது.

கு. ப. ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். (கு.ப.ராவின் புனைப்பெயர் “கரிச்சான்”).

படைப்புகள்
சிறுகதைகள்
160 சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளாக வந்துள்ளன

புதினங்கள்
பசித்த மானுடம்
மொழிபெயர்ப்புகள்
தேவி ப்ரசாத் சட்டோபாத்யாயாவின் ”What is True and Relevant in Indian Philosophy”
ஆனந்த வர்தனரின் ”த்வன்யாலோகம்"
கட்டுரை நூல்கள்
பாரதியார் தேடியதும் கண்டதும்
கு.ப.ரா




கரிச்சான் குஞ்சு என்ற அதிமானிடன்

Oct 2, 2008


 சாரு நிவேதிதா வின் முதல் நாவல் ’எக்ஸிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும்’விமர்சனத்தில்(’மேலும்’ பத்திரிக்கை மே மாதம், 1990) நான் குறிப்பிட்டேன் .
"கு.ப .ரா எட்டடி பாய்ந்தால் கரிச்சான் குஞ்சு தன் 'பசித்த மானிடம் ' நாவலில் பதினாறடி பாய்ந்து விட்டார் ."
முப்பது வருடங்களுக்கு முன் மீனாக்ஷி நிலையம் வெளியிட்ட நாவல் .
தி.ஜா தான் மீனாக்ஷி நிலையம் செல்லப்பனிடம் இந்த நாவலை பிரசுரிக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் . நாவலின் தனி தன்மைக்காக மட்டுமல்ல . கரிச்சான் குஞ்சு வின் மகளுக்கு அப்போது கல்யாண செலவுக்கு பணம் தேவை பட்டது . செல்லப்பன் வியாபார நோக்குடனும் , இதை வெளியிடுவதினால் பின்னால் கலாச்சார காவலர்களின் அச்சுறுத்தல் களுக்காக வும் தயங்கியிருக்கிறார் . தி .ஜா வின் வற்புறுத்தல் தான் 'பசித்த மானிடம்' நூலை பதிப்பிக்க காரணம் ஆகியிருக்கிறது . என்னிடம் செல்லப்பன் இந்த விஷயத்தை நாவல் வெளியான மூன்றாம் ஆண்டு நான் நாவலை வாங்கிய போது தெரிவித்தார் . கலாச்சார காவலர்களின் பார்வைக்கு இது தப்பி விட்டதற்கு காரணமே இந்த நாவல் வெளியான விஷயமே அவர்கள் கவனத்திற்கு செல்ல வில்லை என்பது தான் . (அரசியல் கட்சிகாரர்களுக்கும் அப்போதெல்லாம் இப்போது போலவே படிக்கிற வேலையெல்லாம் கிடையாது .)அதன் காரணமாகவே விற்பனையும் படு மந்தம் . செல்லப்பன் என்னிடம் பேசும்போது பசித்த மானிடம் நாவல் பிரசுரம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை பற்றி தான் ஆதங்கமாக பேசினார் .
இலக்கிய பத்திரிகைகள் கூட இந்த நாவலை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை . க . நா . சு . சுந்தர ராம சாமி , வெங்கட் சுவாமிநாதன் , பிரமிள் போன்றோர் கூட பசித்த மானிடம் பற்றி பிரமாதமாக பேசவில்லை .

ஒரு மிக சிறந்த நாவலின் கதி பாருங்கள் . கோவை ஞானி , அ .மார்க்ஸ் கொஞ்சம் தாமதமாக கரிச்சான் குஞ்சு பற்றி கட்டுரை எழுதி பிற கட்டுரைகளுடன் புத்தகங்களாக வந்தன .
ஆதவன் தான் கரிச்சான் குஞ்சு ஆளுமை பற்றி மிக அழகாக சொன்னார்
' அறிவை மறைத்து வைத்து இயல்பாய் இருப்பது சிரமமான காரியம் . அது கரிச்சான் குஞ்சுவுக்கு சாத்தியம் ஆகியிருக்கிறது '
முன்பெல்லாம் மறு வாசிப்பு செய்கிற நாட்களில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மூன்று மாதம் ஒதுக்குவேன் . அப்படி மறு வாசிப்புக்காக கரிச்சான் குஞ்சுவுக்கு ஒதுக்கி ' பசித்த மானிடம் ' நாவல் மற்றும் அவரது சிறுகதைகள் மறு வாசிப்பு செய்த போது அவரை கண்டடைந்ததற்காக மிகவும் சந்தோசம் அடைந்திருக்கிறேன் .
தேவர்களுக்கு வாகனங்கள் !
சனீஸ்வரனுக்கு வாகனம் காகம் . பிள்ளையாருக்கு எலி . முருகனுக்கு வாகனம் மயில் . எமனுக்கு வாகனம் எருமை .
இப்படி குபேரனுக்கு வாகனம் என்ன தெரியுமா ? மனிதன் !
கரிச்சான் குஞ்சு ஒரு சிறுகதையில் சொல்வார் " பேஷ் பேஷ் . என்ன அழகாக வேதத்தில் எழுதி இருக்கிறான் . குபேரனுக்கு வாகனம் மனிதன் . பணக்காரன் மனிதர்கள் மீது தானே சவாரி செய்கிறான் . அதிலும் ஏழை எளியவர்கள் பணம் படைத்தவனுக்கு வாகனம் என்பது சரிதானே . பேஷ் பேஷ் ."
ஏழை எளியவர்கள் தானே பணம் படைத்த குபேரனுக்கு வாகனம் .
இப்போது என்னுடைய முந்தைய பதிவை -' விவசாயி - உழவும் வாழ்வும்' மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் .



...........................

Sep 1, 2009

நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது!? 
கரிச்சான் குஞ்சு எழுதிய "பசித்த மானிடம்" நாவலில் 
திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேசனில் தனியிடம் பார்த்து அமர்ந்து கணேசன் பணத்தை தன் பையில் இருந்து எடுக்க முயற்சி செய்யும்போது போலீஸ் பசுபதி பார்க்கிறார் . கணேசன் குஷ்டரோகி .
" இந்த ஊருக்கு நான் புதியவன் . பிச்சையெடுத்து சாப்பிட்டு பிச்சைக்காரர்களுடன் கலந்து வாழ முடிவு செய்திருக்கிறேன் " என்கிறான் .
பசுபதி தீவிர ஆன்மீகவாதி ." எவ்வளவு பழுத்த ஞானம் இருந்தால் இந்த முடிவுக்கு வர முடியும் !" புல்லரித்து ,செடியரித்து, மரமரித்து சிலிர்த்துப் போகிறார் .
கணேசன் உள்ளதை உள்ளபடி சொல்கிறான் "அப்படி கிடையாது நான் ஒரு அழுகல் , எச்சிக்கலை நாய் . மலத்தில் மகிழும் பன்றி."
பசுபதி விடுவதாய் இல்லை . மேலும் சிலிர்த்து " நாய் போல் பன்றி போல் , நாணம் இல்லா நக்கனுமாய் , பேய் போல் ,பித்தனைப்போல் பிரம்மவித்து தோன்றிடுவான் !" ஒரு செய்யுள் எடுத்து விட்டு கணேசனை வழிபடுகிறார் .
கணேசன் " நான் உதவாக்கரை . காசுபணம் சுகபோகம் கண்டவன் .பண்ணின பாவத்தால் அழுகிச்சொட்டுகிறது உடம்பு .நான் ரொம்ப நல்லாயிருப்பேன் முன்னெல்லாம் . அந்த உடம்பு செத்துப்போயிடுச்சி ; இது புது உடம்பு " யதார்த்தமாய் இப்படி சொல்வதையும் பசுபதி தத்துவார்த்தமாக எடுத்துக்கொண்டு "கொஞ்சமா பேசினீங்க . ஆனால் நிறைய சொல்லிட்டீங்க . அதிலேயும் ரத்தினச்சுருக்கமா , பழைய உடம்பு செத்துப்போயிடுச்சின்னு சொன்னீங்களே ! இதுவரை எனக்கு புரியாத ஞானங்கள் எல்லாம் புரியுதுங்க !" வியந்து கணேசனை சித்தன் என்றே நம்புகிறார் .
பசுபதி பின்னால் போலீஸ் வேலையிலிருந்து ரிட்டயர் ஆனதும் சேத்ராடனங்களுக்கு சாமி கும்பிட கிளம்பும் முன் " சாமி ! நல்லா பாருங்க என்னை . கண்ணால் வரும் ஞானம் பொன்னாலும் வராது .உங்க கண்பார்வை பட்டதால் நீங்க காட்டிய எல்லா தத்துவங்களும் எனக்கு நல்லா புரியது "
இல்லாத ஒன்றை இருப்பதாக பாவித்து சாதாரண சராசரி அல்லது சராசரிக்கும் கீழானவர்களை மகான் ஆககாட்டும் வறட்டு ஆன்மீகத்தை கரிச்சான் குஞ்சு சத்தமில்லாமல் ,கோஷமே இல்லாமல் பசித்த மானிடத்தில் மட்டுமல்ல 
"குச மேட்டு சோதி " சிறுகதையிலும் காட்டுகிறார் .
கோவில் கோபுரத்தடியில் விவாதம் செய்யும் நண்பர்களில் ஒருவன் சொல்கிறான் " இந்த நவீன காலத்திலும் வீண் பிரமைகள் . நம்புவது நல்லது என்றால் நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது " என்று இந்த மூட குருபக்திப் பற்றி சொல்கிறான் . ஒரு வேடிக்கையை அப்போதே நடத்தி காட்டுகிறான் .அங்கே இருக்கிற ஒரு பைத்தியத்தைக் கிளப்பி கடைவாசலில் ஒரு சீப்பு பழம் வாங்கி தருகிறான் .அந்தப் பைத்தியம் பழத்தை தின்னும்போது அதன் வாயிலிருந்து நழுவி விழுவதை பிடிக்க ஏந்துவது போல தன் கையை நீட்டிக்கொண்டே நிற்க ஆரம்பிக்கிறான் . சீப்பு ,சீப்பாக பைத்தியம் சாப்பிடுகிறது . கூட்டம் கூடிவிடுகிறது . " என்ன ? என்ன !"
இவன் சொல்கிறான் " ஒரு துளி எச்சல் கேட்கிறேன் . சாமி தரமாட்டேன்னுது !"
இருபத்தாறு மாதத்தில் குசமேட்டில் அந்த பைத்தியம் விஷேசமான மகானாக ஆக்கப்பட்டு ஆஸ்ரமம் , பூஜை, மேல்நாட்டு வெள்ளைக்கார பக்தர்கள் என்று அமர்க்களப்பட்டு விடுகிறது !

" ஒரு மாதிரியான கூட்டம் " கரிச்சான் குஞ்சுவின் குறுநாவல் . மயிலாப்பூரில் வசிக்கும் ஜெயாவின் 'அப்பா , அம்மா , அக்கா ,தம்பி' இவர்கள் தான் மிக பலகீனமான 'ஒரு மாதிரியான' கூட்டம் . பெரியப்பாவிடம் டெல்லியில் வளரும் பெண் ஜெயா . பெரியப்பா ரொம்ப ஸ்ட்ராங் கேரக்டர் . ஜெயாவின் பெரியப்பா அவளுடைய அப்பா பற்றி இப்படி சொல்கிறார் :" என் தம்பி ஒரு வெறும் ஆள் ,சுத்த உதவாக்கரை , குதிரை ரேஸ் , சீட்டாட்டம் நு சூதாடியே வீணாப் போனவன் . இப்போ இந்த (காஞ்சி ) பெரியவாள் பைத்தியம் வேற ஏற்பட்டிருக்கு. வெறும் ஆஷாடபூதித்தனம் ,பூஜை ,கீஜை ன்னு வேற கூத்தடிக்கிறான் " 
காஞ்சி மடத்தின் மீதான போலி அனுஷ்டான பித்து பற்றி இப்படி ஒரு பிராமண எழுத்தாளர் நாற்பது , ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதி இருக்கிறார் !
மறைந்த மகத்தான எழுத்தாளர் ஆதவன் சொல்வார் : 

"தி ஜானகிராமன் கதைகளில் ஆஷாடபூதித்தனத்திற்கும் ,போலி அனுஷ்டானங்களுக்கும் எதிரான ஒரு கோபம் எழுத்தில் இழையோடக்காணலாம் . கரிச்சான் குஞ்சு கதைகளும் அது போலத்தான் "

R P ராஜநாயஹம்





கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானிடம்”


ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்த புத்தகம். நண்பர் அன்பரசனிடம்இரவல் வாங்கினேன். திருப்பிக் கொடுப்பதற்குள் அவர் டெக்சாசுக்கு குடிபெயர்ந்துவிட்டார். புத்தகம் என்னிடமே தங்கிவிட்டது. (ஹை ஜாலி!)
என்னதான் இலக்கியம் கிலக்கியம் என்றாலும் இந்தப் புத்தகம் நிறைய பேர் நினைவில் தங்குவதற்கு அதன் ஷாக் வால்யூதான் காரணமாக இருந்திருக்கும். ஓரினச் சேர்க்கையைப் பற்றி இன்னும் கூட இந்த அளவுக்கு வெளிப்படையாக யாரும் தமிழில் எழுதவில்லை என்று நினைக்கிறேன். ஒரு கதாநாயகனை அதற்காகவே சிறு வயதிலேயே ஒரு பணக்காரர் தேடிப் பிடித்து “சின்ன வீடாக” வைத்துக் கொள்கிறார். அவன் அங்கிருந்து ஆண் பெண் பலர் கை மாறுகிறான். இவற்றை எல்லாம் matter of fact ஸ்டைலில் எழுதி இருக்கிறார். இது கல்கி விகடன் படித்து வளர்ந்தவர்களுக்கு பெரிய ஷாக்காகத்தான் இருந்திருக்கும். ஹரல்ட் ராபின்ஸ் படித்து வளர்ந்த எனக்கே தஞ்சாவூர் பக்கத்தில் 1920-40-களில் இப்படி எல்லாம் நடந்திருக்குமா, அப்படியே நடந்தாலும் இதெல்லாம் சர்வசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்திருக்குமா என்று தோன்றுகிறது.
பாலியல் உறவுகள் பற்றிய சமூகத்தில் எழுதப்படாத விதிகள் வெறும் வேஷமாக இருப்பது பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் கணேசன் பள்ளிப் பருவத்திலேயே ராவுத்தருக்கு வைப்பாட்டியாகப் போவது, ராவுத்தர் உறவு அலுக்கும்போது வேறு ஒருவனிடம் போவது, அவன் எப்படா தொடுவான், எப்ப படுக்கலாம் என்று காய்ந்து போய் கிடக்கும் பெண், அவனை gigolo-வாக மட்டுமே நடத்தும் இன்னொரு டாக்டர் பெண்மணி என்பதெல்லாம் எனக்கு ஆச்சரியமான சித்தரிப்பாக இருந்தது. தஞ்சாவூர் பிராமணப் பையனுக்கு இப்படி நடந்ததா என்பதை விட, எந்த விதமான courting-உம் இல்லாமல் நேராக படுக்கைக்கு அழைக்கும் ஆண் பெண் சித்திரங்கள் எல்லாம் வாசகனின் பிம்பங்களை அலட்சியமாக (casually) உடைக்கும் ஒரு கை தேர்ந்த எழுத்தாளரைக் காட்டுகின்றன. ஒரு விதத்தில் எனக்கு ஜி. நாகராஜனை நினைவுபடுத்தினார். ஆனால் நாகராஜனின் உலகம் விபசாரிகளும் மாமாக்களும் ரவுடிகளும் நிறைந்த உலகம். விபசாரி நேராக படுக்கைக்குப் போவதை விட தஞ்சாவூர் பிராமணப் பின்புலத்தில் இது நடப்பது பிம்பங்களை இன்னும் சுக்கல் சுக்கலாக உடைக்கிறது.
இன்னொரு விதத்தில் பொய்த்தேவு புத்தகத்தையும் நினைவுபடுத்தியது. சோமுவுக்கு முடியாத தேடல் என்று க.நா.சு. சொன்னால் இவர் தீராத பசி என்கிறார்.
உண்மையைச் சொல்லப் போனால் இந்தப் புத்தகம் என்னை ரொம்பக் குழப்புகிறது. ஒரு புத்தகம் படித்தால் – முக்கால்வாசி நேரம் ஒரு ஐம்பது நூறு பக்கம் படித்த உடனே – புத்தகம் எனக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று தெரிந்துவிடும். படித்து இரண்டு மாதம் ஆயிற்று, சில பல முறை யோசித்தும் ஆயிற்று, இன்னும் புத்தகம் பிடிக்கிறதா இல்லையா என்று சொல்லத் தெரியவில்லை. சர்வ அலட்சியமாக பிம்பங்களை உடைப்பது பிடித்திருக்கிறது. அந்தக் கால தஞ்சாவூர் பின்புலம் நன்றாக வந்திருக்கிறது. இரண்டு நாயகர்களின் பாத்திரப் படைப்பு, அவர்களின் பசிகள், அவர்களின் குடும்பங்கள் எல்லாம் நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இரண்டு திரிகளுக்கும் உள்ள தொடர்பு ரொம்ப மெலிதாக இருக்கிறது. கதைக்கு என்ன பாயின்ட் என்று புரியவே இல்லை. மனிதனுக்கு பசி – காமம், பணம், அதிகாரம் ஏன் பந்தம் கூட அடங்கவே அடங்காது என்கிறாரா? அதற்கு இத்தனை பெரிய கதையா? அதுதான் பாயின்ட் என்றால் மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போலிருக்கிறது.
கதைச் சுருக்கம் எல்லாம் நான் எழுதப் போவதில்லை. கட்டாயமாக வேண்டும் என்றால் வெங்கட் சாமிநாதனின் வார்த்தைகளில்:
நாவலின் பிரதான பாத்திரங்கள் இருவரில், ஒருவன் அனாதை, கிராமத்து ஆசிரியர் ஒருவரால் வளர்க்கப்படுபவன். இன்னொருவன் ஒரு ஏழை குடும்பத்தவன். கண்டிப்பின்றி தத்தாரியாக வளர்பவன். அனாதைப் பையன் மிகவும் புத்திசாலி, கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் பிரியமானவன். ஆனால் வாழ்க்கையில் இலக்கின்றி அலைந்து கொண்டிருப்பவன். ஒரு கட்டத்தில் அவன் வளர்ச்சியில் சில பணக்காரர்களின் வேண்டாத நட்புறவில் சிக்கிக் கொள்கிறான். விரும்பித்தான் அவர்களின் பாலியல் இச்சைக்கு இரையாகிறான். அத்தோடு பல பெண்களுக்கும் அவனிடம் மோகம் மிகுந்து அவனைச் சக்கையாக்கித்தான் விடுகிறார்கள். கடைசியில் வாழ்க்கையே பாழாகிவிடுகிறது. குஷ்டநோய் பீடித்து. ஏதும் சம்பாதிக்கும் வழியற்று வறுமையில் வீழ்ந்தவன் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகிறான். தன் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளுக்கு ஆளானவன், எதிர்கொண்ட இன்னல்களே அவனைப் புடம் போட்டது போல, இப்போது அவன் எல்லோருக்கும் உதவுகிறவனாக, மரியாதைக்குரியவனாக ஆக்கிவிடுகின்றன.
தத்தாரியாக வளர்ந்தவனோ கிராமத்தில் எல்லோருடைய வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டு விட்ட காரணத்தால், முதலில் கிராமத்தை விட்டே வெளியேறி நல்லபடியாக வாழ்ந்து தன்னை வெறுத்தவர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்று நினைக்கிறான். வெகு ஜாக்கிரதையாக தன் ஒவ்வொரு அடிவைப்பையும் திட்டமிட்டுச் செய்யவே அவனுக்கு விதியும் உதவுகிறது. ஒரு கட்டத்தில் மிகப் பெரிய செல்வந்தனாகிறான். வரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவும், தன்னை நாடி வந்தவர்களைக் கவர்ந்து தன் விருப்பத்திற்கு அவர்களை வளைத்துப் போடவும் தெரிகிறது. வியாபாரத்தில் குவித்த செல்வம் வாழ்க்கையில் அவன் ஆசைப்பட்டதையெல்லாம், அதிகாரம், பெண்கள், அந்தஸ்து என எல்லாம் பெற்றுத்தருகிறது. அவனை உதவாக்கரை என்று வெறுத்து ஒதுக்கியவர்கள் எல்லாம் இப்போது அவனிடம் பயத்துடன் நடந்து கொள்கிறார்கள். இருப்பினும், தான் வாழ்க்கையை வெற்றி கொண்டு அதன் சிகரத்தில் அமர்ந்துள்ளதாக எண்ணும் அதேசமயம் தான் வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக ஒரு எண்ணம் அவன் மனத்தைக் குடைகிறது. கடைசியில் தன் கிராமத்துக்கு ஒரு மகான் வந்து எழுந்தருளியுள்ளதாக, மக்கள் அவரைத் தரிசித்து ஆசிகள் பெறுவதாகக் கேட்டதும் தானும் அம்மகானைச் சரணடைவது என்று நிச்சயித்து அந்த மகானிடம் செல்கிறான். அந்த மகான் தன் சிறு பிராயத்தில் தன் கிராமத்திலேயே வளர்ந்த தன்னில் பொறாமையை வளர்த்த அந்த அனாதைப் பையனே தான்.
இவ்வளவும் அந்த நாவலைப் பற்றிச் சொன்னபிறகு, இது அதிகமும் கற்பனையான சம்பவங்களை இஷ்டத்துக்கு உருவாக்கிக் கோர்த்த, மிகை உணர்ச்சியாகக் கொட்டி நிரப்பிய தமிழ் சினிமாக்கதை போன்றிருப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. நாவலின் ‘உண்மையும்” அது விரிக்கும் வாழ்க்கையும் முற்றிலும் வேறு குணத்தவை. இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் எல்லாம், காவேரி நதி தீரத்தின் கிராமங்களில் காணும் மனிதர்கள் தான். வாழ்க்கைதான். அந்த கலாச்சாரம் தந்தது தான். நாவல் விரிக்கும் காலம் 1920-களிலிருந்து 1950-கள் வரைய கால கட்டத்தைச் சேர்ந்தது. கரிச்சான் குஞ்சு தன் நாவலை இரண்டு பிரதான பாத்திரங்களை மாத்திரமே எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரை மாத்திரமே மையமாகக் கொண்டு எழுதியிருப்பதான தோற்றம் தந்தாலும், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் நாற்பது வருட கால கட்டத்தின் பண்பாட்டையே, வாழ்க்கையின் கதியையே நம் முன் வைத்துள்ளதான ஒரு உணர்வை நமக்குத் தந்துவிடுகிறார்.
சிறு வயதில் கிராமத்தில் தத்தாரியாக இருந்த பையன் பின் தன் வழி கண்டு பல லக்ஷங்கள் கோடிகள் புரளும் வியாபார வெற்றி அடைவதும் மனிதர்களை தன் இஷ்டத்திற்கு வளைத்து ஆள்வது என்பதெல்லாம் நம்பத்தகுந்த விஷயங்கள் தான். நம் முன்னேயே நாம் வாழும் காலத்திலேயே இப்படிப் பல மாதிரிகள் தமிழ் வாழ்க்கையிலேயே உலவக் காண்கிறோம். அதே சமயம் கிராமத்து நல்ல பையன் பெற்ற வளர்ச்சியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. அவன் வாழ்க்கையில் எல்லா பாலியல் உறவுகளையும் அனுபவித்துக் கடந்து குஷ்டரோகியாகி, பின்னர் மனம் திருந்தி ஞானியாகிறான் அவன். அவன் வாழ்க்கை யில் கண்ட மேடு பள்ளங்களோ, அவன் மனம் பெற்ற கோணல்கள் நிறைந்த வளர்ச்சியோ, பின்னர் அவன் சமூகத்தின் வழிபடற்குரிய ஞானியாக மாறுவதோ, இந்த வாழ்க்கையின் அடியோட்டமாக, சொல்லாது குறிப்பிடப்படும் தத்துவ நோக்கோ, எல்லாம் அசாதாரணமான ஒரு சங்கிலித் தொடரில் தோன்றினாலும், இவை வலிந்து புகுத்தப்பட்ட கற்பனையல்ல. இவையெல்லாம் தமிழ் கலாச்சார சரித்திரத்தில், அதன் இலக்கிய, தத்துவார்த்த மரபில் வேர்கொண்டவை தான்.
17- 18- 19-ம் நூற்றாண்டுகளில் தலை சிறந்த கவிஞர்களாகவும் இசைவல்லுனர்களாகவும், பாடகர்களாகவும் இருந்த ஞானிகள் பலரை தமிழ் நாடு கண்டுள்ளது. பட்டினத்தார், அருணகிரிநாதர், சதாசிவ பிரம்மேந்திரர் போன்றோர் வாழ்க்கை இம்மாதிரியான வளர்ச்சிப் போக்கையும் சம்பவங்களையும் கண்டது தான். இம்மகான்களின் போலி மாதிரிகள் உண்டு தான். இம்மகான்களின் வாழ்க்கையை போலி செய்யும் திருகல்களையும் நாம் காண்போம் தான். அவைதான் இன்றைய தமிழ் வாழ்க்கையை நிரப்புகின்றன. இத்திருகல்களே கூட அவற்றின் உயரிய மரபின் சத்தியத்தை வலுயுறுத்துவனதான்.




கு.ப. ரா கலையின் தனித்துவம்-கரிச்சான் குஞ்சு


எளிய சொற்கள், அழகிய நுண்ணுணர்வு மிக்க பதச் சேர்க்கைகள், தேர்ந்தெடுத்த சொற்பிணைப்பினால் உருவாக்கப்பட்ட, அர்த்த பேதங்கள் நிறைந்த, புதுமையான படைப்புகள் கு.ப.ரா. சிறுகதைகள். அவற்றை ரசனைத் திறத்தின் அளவு கோல்களாகவே குறிப்பிடலாம். அவரது கதைகளின் எளிமை ஆச்சரியமானது. மூடு மந்திரங்களோ, புரியாத சொற்றொடர்களோ, கஷ்டமான பதச்சேர்க்கைகளோ, சிரமமான வாக்கியங்களோ, நீண்டு புரியாது குழப்பும் சொற்றோடர்களோ காண முடியாது. மென்மையான குழந்தை உள்ளமும், பெண்மையின் பிடிவாதமும், அழகும் கொண்ட அற்புதமான நடையுடன் அவரது ஒவ்வொரு கதையும் தனித்தனி உலகங்களாக இப்பொழுதும் சுழல்கின்றன. வாழ்வில் காணும் உண்மையை ஊடுருவிப் பார்ப்பதே கு.ப. ரா கலையின் தனித்துவம்.
வாழ்க்கையின் ஆழங்களுக்கு, அனாயசமான பல தளங்களுக்கு மிகச் சாதாரணமாக தனது வாசகனை அழைத்துச் சென்று வாழ்வின் மூலாதாரங்களை அதன் முழு வேகத்துடன் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கு.ப.ரா. சிக்கல்கள் நேரும்போது முடிச்சுகளை அவிழ்க்க அவனுக்கு வழி சொல்லித் தந்ததில்லை, புதியதோர் வாழ்க்கையைக் கனவு காண வைக்கவில்லை, கோஷங்களை எழுப்பவில்லை. ஆனால், வாழ்வின் சாதாரணங்களை எளிமையை, சிறிய சம்பவங்களின் மூலமாக நுட்பமான இலக்கிய சாதனைகள் மூலமாக மிக உயர்ந்த தளங்களுக்கு வாசகனை உயர்த்தினார். எனவேதான் அவரது கதைகள் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இப்பொழுதும் புத்தம் புதியதாய், அழகாய், இளமையாய், துடிப்பும் உணர்வும் நிறைந்து ததும்பும் புதுமைகளாய் இருக்கின்றன.
ஒடுக்கப்பட்டு, ஒடுங்கி வீட்டின் மூலையில் நிறுத்தப்பட்ட விக்கிரகங்களாக, மாலையிட்டு, கட்டிலில் கிடத்தப்பட்ட அடிமைகளாக சமையலறையின் மூலையில் புகையும் எண்ணெயில் வேகும் பெண்களை, கு.ப.ரா. சித்தரித்த விதம் எளிமை, பின்பு யாருக்கும் கைவராதது. ஏறத்தாழ நூறு அல்லது நூற்றி இருபத்தி ஐந்து கதைகளை அவர் எழுதியிருக்கலாம். வாழ்வில் கண்ட நிதர்சன உண்மைகளை, எதார்த்தத்தை மீறாத அதே கணத்தில் ரசக்குறைவான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், சிக்கனமான வார்த்தைகளை உபயோகித்து எந்த விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ள அவரால் முடிந்தது.
தமிழில் எழுதிவரும் பல எழுத்தாளர்கள் இன்றும் சிறுகதை என்பதை ஏதோ ஒரு சிறு சம்பவம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சம்பவம் ஒரு செய்தியாகலாம் ஒரு சிறுகதை ஆக முடியாது. ஆனால், அன்றே சிறுகதை உருவ பிரக்ஞை கு.ப.ரா. கதைகளில் நிலைபெற்றிருக்கும் விதம் ஆச்சரியமும் அபூர்வமும் கூடியது. இந்த உருவப் பிரக்ஞையை கடைசிவரை அவர் காப்பாற்றி வந்தார்.
ஆணைக்கண்டு பெண் அஞ்சுவதும், பெண்ணைக் கண்டு ஆண் வெறிப்பதும், முறைப்பதும், இச்சை-யில்லாத இடங்களில் உற்றுப் பார்ப்பதும் இருபாலாரிடமும் காணப்படும் மனோபாவம். இந்த மனோபாவத்தை மனித மனங்களின் ரகசியங்களைத் தேடித் துருவி எழுதிக் காட்டிய கதை கனகாம்பரம். கட்டுப்பெட்டியான கிராமத்துப் பெண் பேசியது மட்டும் அல்ல, வாருங்கள் என்று அழைத்தது மட்டும் அல்ல, சிரித்தபடியே சந்தோஷத்துடன் அவனை உள்ளே வாருங்கள் என்று அழைத்தது மட்டும் அல்ல, சிரித்தபடியே சந்தோஷத்துடன் அவனை உள்ளே வாருங்கள் என்று அழைத்து விட்டாள். வந்தவனுக்கு திகைப்பு, ஆச்சர்யம்; ஏதோ ஒரு ரசக்குறைவு; நடக்கக் கூடாது நடந்துவிட்ட பதைபதைப்பு. கணவன் இல்லாத வீடு, நாகரிகமே என்றாலும் தனி பெண்; வந்தவன் நிலைகுலைந்து விட்டான். வெளிச்சம் கண்கூச வைத்துவிட்டது. அவள் இருக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவசரமாக பாய்ந்து வெளியேறினான் அவன். அவளுக்குத் திகைப்பு. உட்காரச் சொன்னது தவறா? அவன் ஏன் ஓடவேண்டும். தடால் என்று கதவு திறக்கும் சத்தம். கணவனுக்கு நிகழ்ந்தது கேள்விப்பட்டு ஆத்திரம் பொங்கியது. “உள்ளே வந்து உட்காரச் சொன்னாயா-?’’ என்று அழுத்தி கேட்கிறான். ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. “நீ என்ன சொன்னே சினேகிதங்கிட்ட’’
“ஒண்ணும் சொல்லலியே, இப்ப வந்துடுவார் என்று சொன்னேன்’’
“அதற்காக உள்ளே வந்து உட்காரச் சொல்லணுமா?’’
1940களில் இந்தச் சம்பவம் ஒரு பெரிய விசயமாகவும், இன்றைக்கு அப்படியொன்றும் முக்கியத்துவமான விசயம் அல்ல என்றும் மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு தெரியலாம். ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்றென்-றைக்குமாக நிகழும் இந்த மனோ விசித்திரங்கள், சமுத்திர புயல் என்றைக்கும் சாதாரணமானது அல்ல. மிகச் சிறிய சம்பவம் ஒன்றை அதிகம் பேசாமல், குரல் உயர்த்தாமல், தன் கட்சியை வலியுறுத்தாமல், எதிர்கட்சியைத் தாக்காமல், உலக இயல்பு மாறாமல் இந்தக் கதையை கு.ப.ரா. உருவப் பிரக்ஞையுடன் சாதித்து இருக்கிறார். அவர் சொல்வதற்கு மேலும் இந்தக் கதையை ஒரு வார்த்தைக்கூட நகர்த்த முடியாது. இந்த இடத்தில் இப்படித்தான் முடியும், முடியவேண்டும் என்ற உருவ அமைப்பு இந்தக் கதையில் மட்டும் அல்ல கு.ப.ராவின் அனைத்துக் கதைகளிலும் காணப்படும் அதிசயமாகும்.
பெண்களைப் பற்றி, கு.ப.ரா. கதைகளில் காணப்படும் நுட்பமான இந்த இலக்கிய விளைவுகளைத் தமிழில் வேறு எந்த இலக்கிய ஆசிரியர்களும் சாதித்தது கிடையாது. பெண்களின் குறிப்பாக தமிழ்ப் பெண்களின் மனப்பூட்டுகளைத் திறப்பதற்குரிய சாவிகளைத் தமது கதைகளில் பெரும்பாலும் சாதுர்யமாக வைத்துவிட்டுப் போயிருக்கிறார் அவர். ஆணும் மற்றொரு ஆணும் சினேகமாக இருப்பதுபோல் இன்றும், ஒரு பெண்ணும் ஆணும் சினேகமாக இருக்க முடியாதா-? என்ற கேள்வியை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தக் கதை எதிரொலி செய்துகொண்டே இருக்கும்.
இந்தக் கதை மட்டுமல்ல கு.ப.ராவின் ஏனைய மற்றக் கதைகளும் குறிப்பாக நூருண்ணிசா, ஆற்றாமை, விடியுமா, பண்ணை செங்கான், பாலம், சிறிது வெளிச்சம்_ அவர் ஒரு மிகச் சிறந்த தொடக்கம் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
சிறிது வெளிச்சம் கதையில் சாவித்திரி வாழ்வு இருண்டு கிடக்கிறது. புருஷன் பகல் முழுவதும் வீட்டில் இருக்கமாட்டான். இரவில் இருப்பதாக பெயர் பண்ணுவான். பெரும்பாலும் ராத்திரி 2 மணிக்கு வந்து கதவைத் தட்டுவான். பக்கத்து வீட்டில் கதை சொல்லும் எழுத்தாளன் குடியிருக்கிறான். தினமும் சாவித்திரியை அவன் கணவன் போட்டு அடிக்கிறான், உதைக்கிறான். ஒருநாள் இதுபோல் சாவித்திரியை அடித்துவிட்டு புருஷன் பின் வருமாறு சொல்லிவிட்டு வெளியே போகிறான். சாவித்திரி கதை சொல்லும் எழுத்தாளன் வீட்டிற்குள் வருகிறாள். இனி கதையிலிருந்து...
“நான் இங்கே படுத்துக் கொள்ள முடியாது. சோலி இருக்கிறது’’, என்று அந்த மனிதன் வெடுக்கென்று புறப்பட்டான். என்ன மனிதனவன், அவன் போக்கு எனக்கு அர்த்தமே ஆகவில்லை. சாவித்திரி உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற் கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என்முன் நின்றது. நல்ல யௌவனத்தில் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேநீர் பார்த்ததுபோல் தென்பட்டது. 18 வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்கிறோமே அது மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. இதழ்கள் மாந்துளிர்கள் போல் இருந்தன. அப்பொழுது தான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளை நன்றாகப் பார்த்தேன். கண்களுக்கு இதமான மெல்லிய பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒளி அவள் தேகத்தில் இருந்து வீசிற்று. தாழ்ப்பாள் விடுபடும் சத்தம் கேட்டது. நான் படுக்கையில் இருந்து சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போல் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.
“வேண்டாம் விளக்கு வேண்டாம் அணைத்து விடுங்கள் அதை’’ என்றாள் அவள்.
உடனே அதை அணைத்துவிட்டுப் படுக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். புருஷன் ஒருவிதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சர்யம்.
“உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேன் என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று... வந்தேன்.’’
“அம்மா...’’
“என் பெயர் சாவித்திரி.’’
“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப்போய் விட்டது?’’
“இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே, அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது? பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை, குருவி போலத்தான் மனிதர்களும்... இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?’’
“புருஷன்....’’
“என்னடா இந்தப் பெண் இப்படி பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா! புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண்கள் புதிதாக இருக்கிறாள்... பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...’’
“நீங்கள் அப்படி...’’
“நீங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள், நீங்கள்தானே பெரியவர். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும் எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்கு கலியாணம் ஆகிவிட்டதா?’’
“இல்லை.’’
“ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.’’
வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில் தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்து துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவனாக இருந்தன.
“அம்மா... சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக் கொண்டு...’’
“இனிமேல் என்னை என்ன செய்துவிடப் போகிறான். கொலைதானே செய்யலாம்?- அதற்குமேல்?-’’
“நீ இப்படி பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்குப் புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்...’’
“நல்ல வார்த்தையா-? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?’’
“பின் என்ன செய்யப் போகிறீர்கள்?’’
“என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை_ அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிறவரை அடிபட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான்.’’
“அடடா, இப்படியேயா!’’
“வேறு வழி என்ன இருக்கிறது?’’
என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை.
“என்ன? பதில் இல்லை?’’ என்று அவள் சிரித்தாள்.
“நான் என்ன சொல்வது... அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?’’ என்று திடீரென்று கேட்டேன்.
“கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே, சில மாதங்களுக்குப் பிறகு...?’’
“என்ன சாவித்திரி...’’
“அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும் போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஓய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புதுமுகத்தைப் பார்ப்பீர்கள்...’’
“நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்போது நானும் பேசலாமா?’’
“தாராளமாக’’
“என்னைக் கவர்ந்து வைத்துக் கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது.’’
“அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்ற உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு அழகு கொடுக்காது...’’
“நீ எப்படி அந்த மாதிரி பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?’’
“எப்படியா? என் புருஷனைப் போல என்னிடம் பல்லைக் காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல; கிழவியல்ல; நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்கிறேன்... மிருக இச்சைக்குப் பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?’’
“சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?’’
“எது சுகம்? நகை போட்டுக் கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப் பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர். புடவை, ரவிக்கை_ நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி, சரீர சுகம்; நான் ஒரு நாளும் அடையவில்லை இதுவரையில்.’’
“அதாவது...’’
“என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக் கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை.’’
“பின் எதைத்தான் சுகம் என்கிறாய்?’’
“நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும்கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலும் என்னை என்ன சொல்லச் சொல்லுகிறீர்கள்?’’
“உன் புருஷன் ஏன்...?’’
“என் புருஷனுக்கு என் சரீரம் சலித்து போய்விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.’’
“சாவித்திரி! தைரியமாக ஒன்று செய்யலாமே.’’
“நான் எதையும் செய்வேன்; ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம், அவ்வளவுதான்.’’
உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்துப் பார்க்கிறேன்.
“வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கி விட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்கு என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.’’
“எது சொன்னாலும்...’’
“ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.’’
நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.
“நான் போய் படுத்துக் கொள்ளட்டுமா.’’
“தூக்கம் வருகிறதா?’’
“தூக்கமா? இப்பொழுது இல்லை.’’
“பின் சற்றுதான் இரேன்.’’
“உங்கள் தூக்கமும் கெடவா?’’
“சாவித்திரி...’’
“நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது.”
“நிஜமா!’’ என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
“பொய் சொன்னால்தான் நீ உடனே...’’
“அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்!’’
“சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.’’ 
“அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக்கட்டும், என் கட்டை சாய்ந்த பிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.’’

“ஏன் அப்படி சொல்லுகிறாய்?’’
“இல்லை, இனிமேல் இந்தச் சரீரம் என் சோகத்தை தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கே ஒரு திருப்தி ஏற்படுகிறது.’’
“நான் சொல்லவில்லையா?-’’ என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக் கொண்டேன். அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக்கொண்டு சிறிதுநேரம் சாய்ந்து கொண்டாள்.
இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததைப் பூசி, மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.
மெல்ல அவளை படுக்கையில் படுக்க வைத்தேன், என் படுக்கையில்! அப்பொழுதும், அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகசியங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின. இதழ்கள் ஓய்ந்து போனது போல பிரித்தபடியே கிடந்தன.
திடீரென்று “அம்மா! போதுமடி!’’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.
“சாவித்திரி, என்னம்மா?’’ என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக் கொண்டேன்.
“போதும்.’’
“சாவித்திரி விளக்கு...’’
அவள் திடீர் என்று எழுந்து உட்கார்ந்தாள்.
“ஆமாம். விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் இந்த வெளிச்சம் போதும்!’’ என்று எழுந்து நின்றாள்.
“நீ சொல்லுவது அர்த்தமாகவில்லை சாவித்திரி.’’
“இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக் கொள்ளுங்கள்.’’
“ஏன்... ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்.’’
“ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக்கூடாது. ஆபத்து’’ என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டு சிறிதும் தயங்காமல் உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.’’
சட்டென்று என் உள்ளத்திலும் எரிந்த விளக்கு அணைந்தது.
`போதும்.’
போதும்__எது போதும் என்றாள். தன் வாழ்க்கையையா? துக்கமா? தன் அழகா, என் ஆறுதலா அல்லது இந்தச் சிறிது வெளிச்சமா?’ என்று முடிகிறது கதை.
இதுதான், இவைதான் கு.ப. ராஜகோபாலன் சிறப்பு.

No comments:

Post a Comment