Friday 8 November 2019

the lord litten லிட்டன் பிரபு 1831,november 8- 1891 november 24



லிட்டன் பிரபு 
1831,november 8- 1891 november 24



1857 ஆம் ஆண்டு கலகத்திற்குப்பின் இந்தியாவை ஆட்சிபுரியும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசாங்கமே எடுத்துக் கொண்டது. 1858ல் கானிங் பிரபு முதல் அரசப் பிரதிநிதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டமும், பேரரசியின் அறிக்கையும் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை காட்டுகின்றன. இந்தியாவில் பிரிட்டிஷார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றிய கொள்கைக்கு 

QUEEN VICTORIA

ராணி விக்டோரியா


பேரரசியின் அறிக்கையே அடிப்படையாக அமைந்தது. இக்காலத்தில், லிட்டன் பிரபு ரிப்பன் பிரபு, கர்சன் பிரபு ஆகியோரது நிர்வாக நடவடிக்கைகள் முக்கியமானவையாகும்.



லிட்டன் பிரபு (1876 - 1880)



Lord Lytton

லிட்டன் பிரபு


லிட்டன் பிரபு ஒரு அனுபவம் மிகுந்த ராஐதந்திரி, திறமையும் ஆற்றலும் பெற்று விளங்கியவர். எனவே, பிரிட்டிஷ் பிரதமர் டிஸ்ரேலி அவரை இந்திய வைஸ்ராயாக நியமித்தார். அவர் பதவியேற்றபோது இந்தியாவில் நிலவிய பஞ்சமும், வடமேற்கு எல்லைப்புறத்தில் காணப்பட்ட அரசியல் பதட்டங்களும் பிரிட்டிஷாருக்கு பெரும் கவலையை அளிப்பதாக இருந்தன.



பஞ்சக் கொள்கை



தொடர்ந்து இரண்டு பருவமழைகள் பொய்த்துப் போனதால் 1876 - 78 ஆண்டுகளில் இந்தியாவில் பஞ்சம் தலை விரித்தாடியது. 2,50,000 சதுர மைல்கள் பரப்பில் வாழ்ந்த 58 மில்லியன் மக்கள் இந்த பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டனர். சென்னை, மைகுர், ஹைதராபாத், பம்பாய், மத்திய இந்தியா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. ஒரே ஆண்டில் 5 மில்லியன் மக்கள் மடிந்தனர். காலரா மற்றும் கடும் சுரத்தால் மக்கள் பட்ட துன்பங்கள் மேலும் அதிகரித்தன. நிலைமையை சமாளிப்பதில் லிட்டன் அரசாங்கம் பெரும் தோல்வி கண்டது. அரசாங்கத்தில் நிவாரண நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் முதலாவது பஞ்சக்குழு (1878 - 80) ஏற்படுத்தப்பட்டது. போற்றத்தக்க பல பரிந்துரைகளை இக்குழு அரசாங்கத்துக்கு அளித்தது. ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பஞ்ச நிவாரணத்திற்கும் கட்டமைப்பு வேலைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று இக்குழு வலியுறுத்தியது. 1883 ஆம் ஆண்டிலிருந்து பஞ்சங்கள் குறித்த சட்டத் தொகுப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது.


நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் மற்றும் ஆயுதங்கள் சட்டம் (1878)



1878 ஆம் ஆண்டு நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒரு நாட்டுமொழி செய்தித்தாளின் ஆசிரியர், பதிப்பாளர் மற்றும் அச்சக உரிமையாளர் ஆகியோரிடம், ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராக ஏதும் பிரசுரிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழியை ஒரு நீதிபதி கேட்டுப் பெறுவதற்கு வகை செய்யப்பட்டது. உறுதிமொழி மீறப்பட்ட குற்றத்திற்காக, அச்சகத்தின் சாதனங்களை பறிமுதல் செய்யவும் இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டது. இந்த சட்டம் இந்தியப் பத்திரிகைகளின் சுதந்திரத்தை நசுக்கியது. இச்சட்டத்தினால் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான பொதுக் கருத்து உருவாயிற்று. அதே ஆண்டில் ஆயுதங்கள் சட்டமும் இயற்றப்பட்டது. சரியான உரிமங்கள் இன்றி இந்தியர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு இச்சட்டம் தடைவிதித்தது. இச்சட்டத்தை மீறுவது கிரிமினல் குற்றமாகும். ஆனால், ஐரோப்பியரும், ஆங்கிலோ - இந்தியரும் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தனர்.



பிற சீர்திருத்தங்கள்



பிரிட்டிஷ் இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான உப்பு வரியை லிட்டன் பிரபு அறிமுகப்படுத்தினார். மேலும் அவர் பல்வேறு இறக்குமதி வரிகளை ரத்து செய்தார். தடையற்ற வணிகக் கொள்கையை அவர் ஆதரித்தார். இது இந்தியப் பொருளாதார நலன்களை பெரிதும் பாதித்தது. மேயோ பிரபு ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட நிதி பன்முகப்படுத்தும் கொள்கை லிட்டன் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டது. நிலவரி, சுங்கவரி, பத்திரங்கள், சட்டம் ஒழுங்கு போன்ற துறைகளில் செலவிட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, எனினும், மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. வருவாய் வசூலிப்பதில் மாகாணங்கள் பெரும் பங்கு ஆற்றவேண்டும் என்று லிட்டன் விரும்பினார். அப்போதுதான் மாகாணங்களின் நிதிநிலைமை வலுப்படும் என்று அவர் கருதினார். 1878 ஆம் ஆண்டு இந்தியருக்கென தனி சட்டப்படியிலான ஆட்சிப் பணித்துறை நிறுவப்பட்டது. பின்னர், இது கலைக்கப்பட்டது.



லிட்டனும் இரண்டாம் ஆப்கானியப் போரும் (1878 - 80)



இந்தியா மீது ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சமே பிரிட்டிஷாரின் ஆப்கானியக் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்தது. முதல் ஆப்கானியப் போர் (1838 - 42) இந்தியாவிலிருந்த பிரிட்டிஷாருக்கு பெரும் துன்பமாக முடிவடைந்தது. லிட்டன் பிரபு இந்திய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டபோது முற்போக்குக் கொள்கையைப் பின்பற்றுமாறு தாய்நாட்டு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டார். ஆப்கானிஸ்தானத்திற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பிவைக்க ரஷ்யா முயற்சியெடுத்தது. இதுவே இரண்டாம் ஆப்கானியப் போருக்கு முக்கிய காரணமாகும்.








No comments:

Post a Comment