Tuesday 12 November 2019

ANNADURAI ,THE GREAT - CHINNA ANNAMALAI




ANNADURAI ,THE GREAT - CHINNA ANNAMALAI 


திருச்சியில், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய பின், சென்னை வருவதற்காக ரயில்வே ஜங்ஷனுக்கு வந்தேன். வண்டியில் இடமில்லாமல் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தேன். திடீரென, ஒரு போலீஸ் அதிகாரி வந்து, 'உங்களை, சி.எம்., கூப்பிடுகிறார்...' என்றார்.
'யார், அண்ணாதுரையா...' என்றேன். 'ஆம்' என்றார்.

அவரை பின் தொடர்ந்து, அண்ணாதுரை இருந்த பெட்டிக்கு போனேன். அவர் என்னை வரவேற்று, 'சென்னைக்கு தானே...' என்றார். 'ஆம்' என்றதும், 'என்னுடன் பயணம் செய்வதில், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே...' என்றார்.
'இல்லை' என்று கூறி, அவருடன் பயணத்தை துவங்கினேன்; ரயில் நகர ஆரம்பித்ததும், 'உங்களிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதா?' என்று கேட்டார்.
'வித் அவுட்டில் வருவதாக நினைத்து விட்டீர்களோ... இதோ, என் முதல் வகுப்பு டிக்கெட்...' என்று, டிக்கெட்டை எடுத்து காண்பித்தேன்.
'என் தம்பிமார்களில் சிலர், என்னுடன் வரும் தைரியத்தில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வதுண்டு. அவர்களுக்காக, நான் டிக்கெட் வாங்குவது வழக்கம்; அதனால் தான் கேட்டேன்...' என்றார்.
'நான், உங்களை நம்பி பயணம் செய்பவன் இல்லயே...' என்றேன்.
'நீங்கள் சொல்லும் அரசியல் கருத்து எனக்குப் புரிகிறது; திருச்சிக்கு எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டார். 'ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்காக வந்தேன்...' என்றேன்.
'சரி... தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கிறது; இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமென்று நினைக்கிறீர்கள்?' என்று எக்குத்தப்பான கேள்வியை கேட்டார்.
நான் சிறிது யோசித்து, 'நுால் தீருகிற வரை, கழி சுற்றிக் கொண்டேயிருக்கும்...' என்றேன்.
'விளக்கம் தேவை...' என்றார்.
'இந்தி எதிர்ப்பு என்ற மாயை நீங்கும் வரை, தி.மு.க., ஆட்சி இருக்கும்...' என்றேன்.
'இதுதான், காங்கிரஸ்காரர்களுடைய அபிப்ராயமா?' என்றார்.
'பெரும்பாலோரின் எண்ணம்...' என்றேன்.
'தேர்தலில், காங்கிரஸ் தோற்றதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா...' என்று கேட்டார்.
'கடந்த, 1962ல் நடந்த தேர்தலில் உங்களை காஞ்சிபுரத்தில் தோற்கடித்தது தான், காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம்...' என்றேன்.
'எப்படி?' என்றார்.
'உங்களை, 1962ல் வெற்றி பெற விட்டிருந்தால், இவ்வளவு முனைப்பாக வேலை செய்து, தங்களுக்கு பரம எதிரியான ராஜாஜி போன்றோருடன் சேர்ந்து, கூட்டணி அமைத்திருக்க மாட்டீர்கள்; எதிர்க்கட்சி தலைவராகவே இருந்திருப்பீர்கள்; காலம் ஓடியிருக்கும். இதை, நான் அப்போதே காமராஜரிடம் சொன்னதுடன், காஞ்சிபுரம் தேர்தல் கூட்டங்களில் பேசவும் மறுத்து விட்டேன்...' என்றேன்
.
பின்னர் இருவரும் படுத்து துாங்கி விட்டோம். காலையில் எழுந்ததும், செங்கல்பட்டு ஸ்டேஷனில், காலை ஆகாரத்தை அன்புடன் எனக்கு அவரே பரிமாறினார். அது முடிந்ததும், என்னிடமிருந்த ஒரு புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்; அது, நான் எழுதிய, 'மானமே பெரிது' என்ற நாவல்!
'இந்த நாவல், நம் சந்திப்பின் நினைவாக என்னிடமே இருக்கட்டும்; இதில், 'அன்பளிப்பு' என்று எழுதி, கையெழுத்திட்டு தாருங்கள்...' என்று புத்தகத்தை நீட்டினார். கையெழுத்து போட்டுக் கொடுத்தேன்.
மாம்பலம் ஸ்டேஷன் வந்ததும், அண்ணாதுரையிடம் விடைபெற்று, ரயிலை விட்டு இறங்கினேன்.
உண்மையில்,
என் மனதில் அது வரையில், அண்ணாதுரையை பற்றி இருந்த துவேஷ எண்ணம், ஸ்டேஷனை விட்டு ரயில் போனதைப் போல், என் இதயத்தை விட்டு போய் விட்டது!
- சின்ன அண்ணாமலை
வேலைக்காரி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு நான் சென்னையில் நிதி அளிப்பு விழா நடத்தியதை அறிஞர் அண்ணா அவர்கள் மிகவும் பாராட்டினார். அதிலிருந்து என்னிடம் அவருக்குத் தனியான அன்பு ஏற்பட்டிருந்தது.

அண்ணா அவர்களின் "வேலைக்காரி' என்ற திரைப்படம் வெளிவந்து தமிழகத்தில் ஒரு புதிய புரட்சியைச் செய்தது.
அதன் நூறாவது நாள் விழா கோவை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. ஜுபிடர் பிக்சர்ஸ் சோமு அவர்களும் மொகைதீன் அவர்களும் மேற்படி நூறாவது நாள் விழாவிற்கு யாரைக் கூப்பிடலாம் என்று அண்ணாவிடம் கேட்டார்களாம்.
அண்ணா அவர்கள், "விழாவிற்கு நாமக்கல் கவிஞர் தலைமை வகிக்கட்டும். சின்ன அண்ணாமலை பாராட்டிப் பேசட்டும்' என்று சொன்னாராம்.
அதன்படி நானும் நாமக்கல் கவிஞர் அவர்களும் விழாவிற்கு கோவை சென்றோம்.
அப்பொழுதெல்லாம் அண்ணா அவர்களை காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் மிகச் சாதாரணமாக நினைத்து, துச்சமாகப் பேசுவோம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டுக் கொள்ளுவதில்லை. கோபப்படுவதுமில்லை. அன்று "வேலைக்காரி' விழாவில் நான் பேசும்போது, ""நான் அண்ணாமலை--அவர் அண்ணாதுரை. நானோ மலை--அவரோ துரை. மலையிலிருந்து தான் நீர்வீழ்ச்சி வருகிறது, அது துறையில்தான் தங்குகிறது. இந்தத் துறையில் ர, தவறிக் கிடக்கிறது. இதைப் போல அண்ணாவின் கொள்கைகள் தவறிக் கிடக்கின்றன. "திராவிட நாடு' என்று அவர் சொல்வதெல்லாம் ஒரு நாளும் நடக்காத காரியம். அதற்காக அவர் செய்யும் முயற்சி, செலவிடும் நேரம் எல்லாம் வீண். அவரது சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளில் பல எனக்கு உடன்பாடுடையவை. ஆனால் அவரது அரசியல், அபத்தம் என்பது எனது உறுதியான கருத்து. நல்ல வேளை, இந்த "வேலைக்காரி' படத்தில் அவரது சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மட்டுமே புகுத்தி இருக்கிறார். அரசியல் வாடை இல்லை. நமது சமூகத்தை சீர்திருத்தம் செய்யவேண்டுமென்றால் நூறு "வேலைக்காரி' படம் வந்தாலும் சிரமம்தான். சட்டத்தின் மூலமே நமது சமூகத்தை சீர்திருத்த முடியும். ஜனநாயக யுகத்தில் சமூகப் பழக்க வழக்கங்களுக்கு மாறாகச் சட்டம் செய்தால் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமமே! அதனால் "வேலைக்காரி' போன்ற படங்கள் மக்களின் மனோநிலையைப் பக்குவப்படுத்தும் கைங்கரியத்தைச் செய்யும். சிறிது சிறிதாகத்தான் ஜனநாயகத்தில் சமூக சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வர முடியும். ஆகவே அண்ணாவின் "வேலைக்காரி' நூறு நாள் ஓடியதை நான் வரவேற்கிறேன். அண்ணாவை மனதாரப் பாராட்டுகிறேன்'' என்றுபேசினேன்.
பின்னர் அண்ணா பதில் கூறும்போது சிறிதும் முகம் சுளிக்காமல், ""சின்ன அண்ணாமலை பல தியாகங்கள் செய்தவர். புரட்சி செய்து சிறைக் கதவுகளை மக்கள் உடைக்க விடுதலையானவர். தமிழ் வளர்க்கத் தமிழ்ப்பண்ணை நடத்துகிறார். அவரது கருத்துக்களை அலட்சியப்படுத்தி விட முடியாது. அவர் நகைச்சுவையாகவே பேசிவிடுவதால் அவர் எங்களைத் தாக்கினாலும் நாங்கள் சிரித்து மகிழ்வோம்'' என்று இந்த விதமாக என்னைப் பாராட்டிப் பேசினார்.
அரசியல் மேடையில் எவ்வளவோ காரசாரமாக அண்ணாவை நான் தாக்கிப் பேசியிருக்கிறேன். ஆயினும் அண்ணா நேரில் சந்திக்கும்போது அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார். கோபப்பட மாட்டார். அதற்கு மாறாக எங்கு என்னைச் சந்தித்தாலும் மகிழ்ச்சி பொங்கப் பேசுவார்.
ஒரு முறை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பம்மல் சம்பந்த முதலியார் விழாவில் அண்ணா அவர்கள் தலைமையில் நான் பேச வேண்டி வந்தது. அப்பொழுது அண்ணா அவர்கள், ""எனது அன்பிற்குரிய நண்பரும், மக்களை மகிழ்விப்பதற்காகவே சொற்பொழிவாற்றுபவருமான திரு. சின்ன அண்ணாமலை இப்பொழுது பேசுவார்'' என்று அறிவித்தார்.
இந்த மாதிரி, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் தன் வயப்படுத்தக் கூடிய ஆற்றல் அண்ணா அவர்களுக்கு இருந்தது. யாரிடம் திறமை இருந்தாலும் அதை அனுபவிக்கும் அறிவு, அவருக்கு இருந்தது.
"வேலைக்காரி' நூறாவது நாள் விழாவில், அண்ணா அவர்கள் பேசும்பொழுது, ""நாமக்கல் கவிஞரின் ஆற்றலை நாடறியச் செய்தவர், ஏன் நானறியச் செய்தவர் சின்ன அண்ணாமலை. எனது "வேலைக்காரி' நாடகம் சிறப்பான திரைப்படமாக உருவெடுத்து நூறு நாள் ஓடியிருக்கிறது. அதற்காக நான் அகந்தை அடையவில்லை. என்னைவிட மிகச் சிறந்த கதை எழுதக்கூடியவர் நாமக்கல் கவிஞர். அவர் எழுதிய "மலைக்கள்ளன்' என்ற நாவலைப் படித்து நான் பிரமிப்படைந்தேன். ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழில் அழகாக நாவல் எழுத முடியுமா? என்று பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வேன், "மலைக்கள்ளனை' ஒரு முறை படித்துப் பாருங்கள் என்று!
இந்த மலைக்கள்ளன் நாவல் கவிஞரால் எழுதப்பட்டு பல ஆண்டுகளாக, கேட்பாரற்றுக் கையெழுத்துப் பிரதியாகக் கிடந்திருக்கிறது. கவிஞரின் ஆற்றலை அறிந்த சின்ன அண்ணாமலை, இந்த அரிய கருவூலத்தைத் தேடி எடுத்து, கண்கவரும் அழகிய நூலாகத் தமிழ்ப்பண்ணை மூலம் வெளியிட்டிருக்கிறார்.
"வேலைக்காரி'யை விடப் பல மடங்கு சிறப்பான கதை "மலைக்கள்ளன்'. அதை யாராவது நல்ல முறையில் திரைப்படமாக்கினால் நிச்சயம், தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு வெற்றிகரமான தமிழ்ப்படம் கிடைக்கும்.
ஆற்றல் மிக்கவர் நாமக்கல் கவிஞர். அவரது ஆற்றலை உலகறியச் செய்தவர் சின்ன அண்ணாமலை. ஆகவேதான் இவ்விருவரையும் இந்த விழாவிற்கு அழைக்கச் சொன்னேன்'' என்று அண்ணா அவர்கள் அன்று மிக அருமையாகப் பேசினார்கள்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அன்று மாலையே நாராயணன் கம்பெனி திரு. நாராயண அய்யங்கார் அவர்கள் என்னைப் பட்சிராஜா ஸ்டூடியோவிற்குக் கூட்டிக்கொண்டு போய் ஸ்ரீராமலு நாயுடு அவர்களிடம் "மலைக்கள்ளன்' கதையைச் சொல்லச் சொன்னார்கள். சொன்னேன். கதை பிடித்தது. படமாக எடுத்தார்கள். திரு. எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தார்கள். படம் பிரமாதமான வெற்றியடைந்தது. எம்.ஜி.ஆருக்கும் சினிமாத் துறையில் அப்படத்தின் மூலம் புதிய திருப்பம் ஏற்பட்டது. "மலைக்கள்ளன்' தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பல மொழிகளிலும் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அத்தனையும் வெற்றிதான்!
"மலைக்கள்ளன்' திரைப்படமாவதற்குக் காரணமாக இருந்த அண்ணா அவர்களை, நானும் நாமக்கல் கவிஞரும் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை மரியாதை செய்து மகிழ்ந்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
நாடோடியாக நடித்தேன்!
பிரபல எழுத்தாளர் "நாடோடி' அவர்களை பெங்களூரில் பாரதி மண்டப நிதி அளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதியைப் பெற்று வருவதற்கு கல்கி ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். புறப்பட வேண்டிய கடைசி நிமிஷத்தில் நாடோடி அவர்களால் புறப்பட இயலவில்லை. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தடுமாறிவிடக் கூடாதே என்று கல்கி என்னைப் பெங்களூருக்குப் போகும்படி கேட்டுக் கொண்டார்.
நாடோடி பெயரால் "ரிசர்வ்' செய்யப்பட்ட டிக்கெட்டிலே நான் பிரயாணம் செய்ய நேர்ந்தது. பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேசன் வந்ததும் சிலர் மாலையும் கையுமாக ஓடிவந்தனர். "நாடோடி' என்ற பெயர் எழுதியிருந்த ரயில் பெட்டியைக் கண்டுபிடித்து அதன் அருகில் ஓடி வந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய என்னைக் கண்டதும், ""நாடோடி வாழ்க'' ""வாழ்க'' என்று கோஷம் போட்டு வரவேற்று மாலை அணிவித்தார்கள். நானும் புன்னகையுடன் மாலை மரியாதைகளைப் பெற்றுக்கொண்டேன். நான் யார் என்பதை அவர்களிடம் அப்போது சொல்லிக் கொள்ளவில்லை. அப்படியே எல்லோரும் என்னை "நாடோடி' என்றே நினைக்கும்படி மாலை வரை சமாளித்துக் கூட்டத்தில் விஷயத்தை உடைத்துச் சபையைத் திகைக்க வைக்க வேண்டுமென்பது என் திட்டம்.
என்னை வரவேற்று கூட்டிக்கொண்டு போனவர்கள் பெங்களூர் காந்தி நகரில் ஒரு வீட்டில் இறக்கினார்கள். அந்த வீடு திரு. சாமி என்பவருடையது. திரு. சாமி அவர்களின் புதல்வர்கள் மூன்று பேர், புதல்வியவர் ஐந்து பேர். எல்லோரும் உயர்ந்த படிப்பு படித்தவர்கள். "கல்கி'யின் விசிறிகள். என்னை "நாடோடி' என்று நினைத்துக் கொண்டு போட்டி போட்டுக்கொண்டு பிரமாதமாக உபசாரம் செய்தார்கள். என்னுடைய நகைச்சுவை வெடிகளைக் கேட்டு, சிரி சிரி என்று சிரித்தார்கள். "நாடோடி, எழுதிய பல விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்கள். எனக்கு அவை எங்கே ஞாபகத்திலிருக்கும்? ஆனால் நான் சமாளித்து, மழுப்பி ஒரு வழியாக கூட்டத்திற்குப் போகும்வரை "நாடோடி'யாகவே நன்றாக நடித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
- சின்ன அண்ணாமலை

No comments:

Post a Comment