Saturday 21 July 2018

BICYCLE THEIF MOVIE CREATED DIRECTOR SATYAJIT ROY






BICYCLE THEIF MOVIE CREATED 
DIRECTOR SATYAJIT ROY



விதைகளில் இருந்து தான் ,மரங்களும் ,செடிகளும் ,கொடிகளும் உருவாகின்றன .இவ்வாறு விதைத்த விதைகளில் இருந்து தான் ஒரு சத்தியஜித் ராய் நமக்கு கிடைத்தார் .அவர் பார்த்த இந்த திரைப்படம் அவருக்கு இருந்த உணர்ச்சிகளையும் ,யதார்த்தத்தையும் 
வெளிக்கொணர்ந்தது - அந்த படம்

" bicycle thief "

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

உங்கள் வாழ்வில் எப்போதேனும் நீங்கள் திருடியிருக்கிறீர்களா..? இந்தக்கேள்வியைக் கேட்டால் யாரிடமிருந்தும் ஒருமாதிரியான புன்னகைதான் பதிலாக வரும். அந்தப் புன்னகைக்கு ஆமாம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்..அல்லது இல்லையென்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உள்ளே திருடனாக ஒளிந்திருப்பதென்னவோ.. அப்பப்ப...

விளையாட்டுத்தனமாகவேனும்... சின்னச்சின்னத் திருட்டுகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்பதாக த்தான் இருக்கும். வெற்றிகரமான திருட்டின் சாகசத்தன்மைதான் மறுபடியும் மறுபடியும் நம்மை அதை நோக்கி தள்ளியிருக்கக்கூடும். கள்ளன்-போலீஸ்
விளையாடுகிறபோதும்கூட, ஒரு போலீஸ்காரனாய் இருந்து திருடனை கண்டுபிடிக்கும்போது கிடைக்கிற பெருமிதத்தைக்காட்டிலும், ஒரு திருடனாக மாறி, வீடுகளின் கூரைகளைத்தாவித்தாவி கடக்கிறபோதும்.. போலீசுக்கு டிமிக்கி கொடுக் கிறபோதும் அடைகிற ஆனந்தமே.. பேரானந்தமாக இன்றும் நமது நினைவின் அடுக்குகளில் ஒரு ஆதிவாசியின் பச்சிலைச் சித்திரத்தைப்போல அழியாமல் பதிந்திருக்கிறது.

ஆனால், வாழ்வின் அர்த்தங்கள் பிடிபடத்துவங்கி விட்டபின் அதே திருட்டு உங்களுக்கு பேரானந்தமாக இருப்பதில்லை. மாறாக அது உங்களை அவமானத்தி ற்குள்ளாக்குகிறது. துரத்தும் இந்த வாழ்வின் வறுமை யும், அது உருவாக்கும் போதாமையும், அதை எதிர்கொ ள்ளமுடியாத இயலாமையும், திருட்டின் வாசலில் நம்மை கொண்டுபோய் நிறுத்திவைத்து வேடிக்கை பார்க்கிறது. வயிற்றுப்பாடும் வாழ்க்கைப்பாடும், களவாண்ட பொழுதுகளில் அது ஒரு நேர்மைக்குறை வான செயல் என்று நம்மை யோசிக்க விடுவதில்லை. அதிலும், உழைப்பை நம்பி வாழ நினைக்கும் ஒருவன், திருட்டில் இறங்கும் நிலைக்கு தள்ளப்படுவது துயர மானது. அதிலும் துயரமானது, அந்த திருட்டைக்கூட செய்யத்தெரியாமல் கையும் களவுமாகச் 
சிக்கிக்கொ ள்வது.

அந்த துயரம்கூட உங்கள் பிள்ளையின் கண்ணெதிரி லேயே நடக்க நேர்ந்துவிட்டால்... அது உங்களை என்ன பாடுபடுத்திவிடும்... அதை நீங்கள் எப்படி எதிர்கொ ள்வீர்கள்...உங்கள் மகன் அதை எப்படி புரிந்து கொள்வா ன்... தந்தை குறித்து அவன் கட்டிவைத்திருக்கும்

மனக்கோ ட்டை சீட்டுக்கட்டைப் போல அப்படியே சரிந்துவிடாதா...? இப்படியெல்லாம் உங்களுக்கு கேள்விகள் எழுந்தால், அதற்கான பதிலை ‘விட்டோரியா டி சிகா’ வின் ‘’பை சைக்கிள் தீவ்ஸ்’’ (BICYCLE THIEVES ) என்ற இத்தாலிய மொழி படத்தில் நீங்கள் கண்டடையலாம்.


இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ரோம் நகரத்தின் புறநகர் பகுதியில் கதை துவங்குகிறது. வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் அலுவலகத்தின் முன்பாக ஏராளமானோர் கூடியிருக்கின்றனர். சுருட்டு புகைத்தபடியே வெளியேவரும் அதிகாரி, நமது கதாநாயகன் ‘அன்டோனியா ரிசி ’ போஸ்டர் ஒட்டும் கம்பெனியில் வேலை கிடைத்திருப்பதாகவும், நாளைக் காலையில் ஒரு சைக்கிளுடன் அங்கு சென்று ஆஜராக வேண்டுமென்றும் கூறுகிறார். சைக்கிள் இல்லை யென்றால் இந்த வேலை கிடைக்காது என்றும் தெரிவிக்கிறார். எப்படியும் சைக்கிளுடன் வந்து விடுவேன் எனக்கூறி வேலைக்கான உத்தரவை பெற்றுச்செல்கிறான் ரிசி.

ஆனால் ரிசியின் சைக்கிளோ, அடகு வைக்கப்பட்டி ருக்கிறது. வீட்டில் இருக்கும் படுக்கை விரிப்புகளை அடகுவைத்து பணம் திரட்டி சைக்கிளை மீட்டு எடுத்துக்கொண்டு போஸ்டர் கம்பெனிக்கு சென்று வேலையை உறுதிசெய்துகொண்டு ரிசியும் அவனது துணைவியான மரியாவும் வீடு திரும்புகின்றனர். வரும் வழியில் குறி சொல்லும் ஒரு பெண்ணைப் பார்த்து, அவளால்தான் வேலை கிடைத்தது என்று அவளுக்கு நன்றி சொல்லி காணிக்கை செலுத்த செல்கிறாள் .
மரியா.

ரிசிக்கு அது பிடிக்காவிட்டாலும் மனைவியின் விருப்பத்திற்காக உடன் செல்கிறான். அடகிலிருந்து மீட்டு வந்த சைக்கிளை அன்று இரவு அவர்களது மகன் ப்ரூனோ, துடைத்து சுத்தம் செய்கிறான். அடுத்த நாள் காலையில் மகனுடன் வேலைக்கு கிளம்புகிறான். மகன் ப்ரூனோவை அவன் வேலைபார்க்கும் இடத்தில் விட்டுவிட்டு மாலையில் சந்திப்பதாக சொல்லிவிட்டு உற்சாகமாக புதிய வேலைக்கு செல்கிறான் ரிசி.

கம்பெனிக்கு சென்று ஒட்டுவதற்கான போஸ்டர்க ளையும், பசைச்சட்டியையும், ஒரு ஏணியையும் பெற்றுக்கொண்டு சக ஊழியருடன் சென்ரு பணியைத் துவக்குகிறான். ஓரிடத்தில் போஸ்டர்களை ஒட்டி விட்டு, அடுத்த இடத்திற்கு ஒட்டுவதற்காக தனியே செல்கிறான்.

சைக்கிளை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு ஏணியைப்போட்டு மேலே ஏறிச்சென்று போஸ்டரை ஒட்டுகிறான். அப்போது அங்கு வரும் ஒருவன் சுற்றும்முற்றும் நோட்டம் பார்த்துவிட்டு, அந்த சைக்கிளை திருடிக்கொண்டு செல்கிறான். அதை கவனித்து திடுக்கிடும் ரிசி, ஏணியிலிருந்து குதித்து அந்த சைக்கிள் திருடனை, ‘’ பிடியுங்கள்... திருடன்... திருடன்...’’ என்று கத்தியபடியே விரட்டிச்செல்கிறான். அந்தப்பக்கமாக வரும் ஒரு காரை மடக்கி அதில் தொற்றிக்கொண்டு திருடனை விரட்டுகிறான்.

ஆனால் அவனாவது... சிக்குவதாவது...! பஞ்சாய் பறந்துவிடுகிறான். திருடனைப் பிடிக்க முடியவில்லை. பல இடங்களிலும் தேடுகிறான்..ஒன்றும் பலனில்லை. மனச்சோர்வுடன் திரும்பிவரும் ரிசி, ஆத்திரத்தில் பசைச்சட்டியை தூக்கிப்போட்டு உடைக்கிறான்.

பின்னர், தனது சைக்கிளைக் காணவில்லையென போலீசில் புகார் செய்கிறான். போலீஸ் அதிகாரியோ, சைக்கிள் கிடைத்தாலும் கிடைக்கலாம்... அல்லது கிடைக்காமயே போனாலும் போகலாம் அலட்சியமாகக் என கூறுகிறான். மனம் உடைந்த நிலையில் தனக்காக காத்திருக்கும் மகனை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறான். சைக்கிள் எங்கேப்பா.. எனக்கேட்கும் மகனிடம், அது உடைந்துவிட்டதாக பொய் சொல்கி றான். வீட்டிற்கு வந்து மகனை விட்டுவிட்டு, தனது நண்பன் பையாக்கோவைச் சந்தித்து சைக்கிள் திருடு போய்விட்ட விஷயத்தை சொல்கிறான்.

மறுநாள் பழைய மற்றும் திருட்டு பொருட்களை விற்பனை செய்யும் ஒரு மார்க்கெட் பகுதிக்கு சென்று தேடுகிறார்கள். ரிசி, ப்ரூனோ, பையாக்கோ, அவந்து நண்பர்கள் சிலர் என ஆளுக்கு ஒரு பகுதியாக பிரிந்து சென்று பறி கொடுத்த சைக்கிளை தேடுகின்றனர். அது கிடைத்தபாடில்லை.

அங்கு ஒருவன் ஒரு சைக்கிளின் பிரேமுக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு, அவனிடம் சென்று விசாரிக்க... அவனோ காச்மூச்சென்று கத்த... கடைக்கா ரன் மனைவியும் வந்து சண்டை போட... போலீஸ் வந்து விசாரிக்கிறது.. கடைசியில் அது ரிசியின் சைக்கிள் அல்ல என தெரிகிறது. ஏமாற்றத்துடன் திரும்புகி றார்கள். அடுத்த நாள் மற்றொரு மார்க்கெட் பகுதிகு சென்று தேடுவதென முடிவு செய்து, அதன்படியே ரிசியும் ப்ரூனோவும் அங்கு செல்கின்றனர். அப்போது பலத்த மழை கொட்டுகிறது. தந்தையும் மகனும் ஒரு சுவற்றின் ஓரம் ஒதுங்கி நிற்கின்றனர்.

அந்த சமயத்தில் அங்கு வரும் ஒருவனைப் பார்த்ததும், தனது சைக்கிளைத் திருடியவனோ என ரிசிக்கு சந்தேகம் வர, ஒரு கிழவனிடம் பேசிக்கொண்டிருக்கும் அவனை துரத்துகின்றனர். அவனோ தப்பியோடி விடுகிறான். அந்த கிழவனைப் பிடித்து விசாரிக்கலா மென அவனைப் பின் தொடர்கின்றனர்.

அந்தக் கிழவனோ, தனக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறிவிட்டு அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனை ரிசி விடுவதாக இல்லை. விடாமல் பின்தொடர்கின்றனர். அந்தக்கிழ வன் ஒரு தேவாலயத்திற்குள் நுழைந்துவிடுகிறான். ரிசியும் பின் தொடர்கிறான்.

அங்கு பிரார்த்தனை தொடங்குவதற்கான நேரம். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துவிடும் கிழவனை, ரிசி அங்கேயும் விடுவதாக இல்லை. உன்னிடம் பேசிக்கொ ண்டிருந்த சைக்கிள் திருடனைப் பற்றிக் கூறாவிட்டால் விடமாட்டேன் என கட்டாயப்படுத்துகிறான். ஆனால் தனக்கு யாரையும் தெரியாது எனக்கூறும் அந்தக் கிழவன் சமயம் பார்த்து அங்கிருந்து தப்பிவிடுகிறான்.

விரக்தியுடன் திரும்பிவரும் தந்தையிடம், நானாகயி ருந்தால் அப்போதே பிடித்திருப்பேன்... இப்படி தப்பிக்க விட்டுவிட்டீர்களே அப்பா... என மகன் ப்ரூனோ கேட்க, அவனை ஆத்திரத்தில் அடித்துவிடுகிறான் ரிசி. அதனால் கோபித்து கொள்ளும் ப்ரூனோவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறான். அவனை உணவுவிடுதிக்கு அழைத்துச்சென்று அவனுக்கு பிடித்தமானவைகளை வாங்கித்தருகிறான்.

தானும் சிறிது ஒயின் குடிக்கிறான். அப்போது, மீண்டும் வேலைக்கு போய் நிறைய சம்பாதிப்பேன் மகனே... அப்போது நாம் மிகுந்த சந்தோஷமாக இருக்க லாம்..என்று நம்பிக்கையுடன் கூறுகிறான்.

வீட்டிற்கு திரும்பும் வழியில், தனது மனைவியிடம் குறி சொன்ன சந்தோனாவின் வீட்டிற்கு சென்று, தனது சைக்கிள் மீண்டும் கிடைக்குமா என்று கேட்கிறான். அவளும் போலீஸ் அதிகாரி சொன்னது போலவே, கிடைத்தாலும் கிடைக்கலாம்...கிடைக்காமலும் போகலாம்.. என்று சொல்கிறாள். வெளியே வரும்போது, ஒருவனைப் பார்த்ததும் தனது சைக்கிளைத் திருடியவனோ என சந்தேகம் எழ, அவனைத்துரத்துகிறான்.

அவன் ஓடிச்சென்று ஒரு பாலியல் தொழிலாளியின் வீட்டுக்குள் புகுந்துவிட, ரிசியும் பின் தொடர்கிறான். அங்கும் சண்டையாகி... அவனை வெளியே தள்ளிக்கொண்டு வந்து விசாரிக்கிறான். அப்போது அவனுக்கு ஆதரவாக அப்பகுதியிலிருப்பவர்கள் கூடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து ரிசியின் மகன் ப்ரூனோ, போலீசை அழைத்துவருகிறான். போலீசுடன் சென்று அந்த இளைஞனின் வீட்டிற்குள் சைக்கிள் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். எதுவும் கிடைக்கவில்லை. போலீஸ் ரிசியை எச்சரித்து அனுப்புகிறது.

தனது முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியிலேயே முடிவதால், ரிசி மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகி றான். தந்தையும் மகனும் பல இடங்களிலும் திருடு போன தங்கள் சைக்கிளைத் தேடி அலைகி றார்கள். அப்போது ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வருகிறார்கள். அந்தத் தெருவின் நடைபாதையில் மிகுந்த சோர்வுடன் உட்கார்ந்து விடுகிறார்கள். அந்தவழியே ஏராளமான மனிதர்கள் விதவிதமான சைக்கிள்களை ஓட்டிச் செல்வதை பார்க்கிறார்கள். இருவருக்கும் சோர்வும் துக்கமும் பீறிடுகிறது. மைதானத்திலிருந்து கிளம்பும் ஆர்ப்பரிப்பு சத்தம் அவர்களை மேலும் துயரத்துக்குள்ளாக்குகிறது. மைதானத்திற்கு வெளியே விடப்பட்டிருக்கும் சைக்கிள்களின் வரிசை ரிசியை துன்புறுத்துகிறது. துக்கமும், இயலாமையும் ரிசியையும் ப்ரூனோவையும் பிடித்து ஆட்டுகிறது.

அந்த மைதானத்திற்கு அடுத்திருக்கும் ஒரு சாலையை ரிசி கவனிக்கிறான். அந்தச் சாலையின் ஓரிடத்தில், ஒரு வீட்டின் முன்புறம் ஒரு சைக்கிள் நிறுத்திவைக்க ப்பட்டிருக்கிறது. அந்தச் சைக்கிளையே நோட்டம்விடும் ரிசி ஒரு முடிவுக்கு வருகிறான். தனது மகனிடம் காசு கொடுத்து, அருகிலுள்ள ஒரு இடத்திற்கு சென்று காத்திரு... நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்... என்று கூறுகிறான்.

அப்போது அந்தப்பகுதிவழியே வரும் டிராம் வண்டியில் ஏறிச்செல்லுமாறும் சொல்கிறான். தந்தையின் பதட்டமான நடவடிக்கைகளையே கவனித்துவரும் சிறுவன் ப்ரூனோ, ஒன்றும் புரியாதவனாய் டிராம் வண்டியை நோக்கிச் செல்கிறான். ரிசியோ.. ஒரு தீர்மானகரமான முடிவோடு.. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளை நோக்கிச்செல்கிறான்.

ப்ரூனோ டிராமில் ஏறுவதற்குள் வண்டி புறப்பட்டு விடுவதால்... அங்கேயே நின்றுவிடுகிறான்.அப்போது ரிசி சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளை நோக்கிப்பாய்ந்து... அதை திருடிக்கொண்டு... ஏறி மிதித்து தப்பிக்க முயற்சிக்கிறான். அதை கவனித்துவிட்ட அந்த சைக்கிளின் உரிமையாளன், திருடன்..திருடன்... பிடிங்க...பிடிங்க... என்று கத்தியபடியே ரிசியை துரத்துகிறான்.

அவன் குரல் கேட்டு அருகிலிருப்பவர்களும் ரிசியைத் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ரிசி முயலும்போது, டிராம் வண்டியொன்று குறுக்கே வந்துவிடுகிறது. அதனால் ரிசியால் தப்பிக்க முடியாமல் கூட்டத்தினரிடம் மாட்டிகொள்கிறான் . அதை சிறுவன் ப்ரூனோவும் பார்த்துவிடுகிறான். அவன் கண்ணெதிரிலேயே ரிசியை கூட்டத்தினர் கண்டபடி தாக்குகின்றனர்.

அப்பா..அப்பா...அடிக்காதீங்க... என சிறுவன் கதறுகிறான். கீழே விழுந்துகிடக்கும் தனது தந்தையின் தொப்பியை எடுத்து அதில் ஒட்டியுள்ள மண்ணை தட்டித்தட்டி துடைக்கிறான். கூட்டத்தினர் ரிசியை போலீசிடம் ஒப்படைக்க இழுத்துச் செல்கின்றனர். ப்ரூனோ ஓடிவந்து அப்பாவின் கால்களைக் கட்டிக்கொள்கிறான். சைக்கிள் உரிமையாளன் தந்தையும் மகனையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, போலீசில் ஒப்படைக்க வேணாம்... ஒருமுறை மன்னித்து விடலாம்... எனக்கூறி போய்விடுமாறு கூறுகிறான்.

ரிசியையும் ப்ரூனோவையும் கூட்டத்தினர் தள்ளிவிடுகின்றனர். தந்தையும் மகனும் மெல்ல நடக்கின்றனர். ரிசி அவமானத்தால் துடிக்கிறான். ப்ரூனோ தொப்பியை தருகிறான். அதை வாங்கி அணிந்து கொண்டு நடக்கிறான் ரிசி. மகனும் உடன் நடக்கிறான். துக்கம் தாளாமல் நடக்கும் ரிசி, மகனின் கைகளை பிடித்துக்கொள்கிறான். அழுகை வெடிக்கிறது. குலுங்கி... கதறி... அழுகிறான். அதைக் காணும் ப்ரூனோ, அப்பாவின் கைகளை இறுக்கிப்பி டித்துக்கொள்ள... துயரம் வழியும் இசையுடன் நிறைவடைகிறது படம்.

1940 களில் இத்தாலியில் உருவான நியோ-ரியலிச கோட்பாட்டு கலைப்படைப்பான இப்படம், உலகின் மிகச்சிறந்த திரைக்காவியங்களில் முதன்மையானது. சத்யஜித் ரே உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரையும் ஆகர்ஷித்த படம் இது. வறுமையும் வேலையின்மையும், எளிய மனிதர்களை திருடச்செ ய்யும் அளவுக்கு தள்ளுவதை.. அதன் வலியோடு சொல்கிற படம் இது.

இப்படத்தின் கதா நாயகனாக நடித்திருக்கும் லேம்பெ ர்ட்டோ மேகியோரனி, ஒரு சாதாரண ஆலைத்தொழிலாளி தான். தான் வேலை பார்த்த ஆலையில் இரண்டு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு இப்படத்தில் நடித்திருந்தார். ப்ரூனோவாக வரும் சிறுவன் ஸ்டெயோலா, படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கவந்த ஒரு சிறுவன்தான். அவனின் நடிப்பும் பாத்திரப்படைப்பும் அற்புதமாக வடிவமைக்க ப்பட்டிருக்கும். உலகம் முழுக்க திரைப்படக் காதலர்க ளால் பெரிதும் கொண்டாடப்படும் இந்தப்படம் பல விருதுகளையும் பெற்றது.

இந்தத் திரைப்படம் முன்வைக்கும் சமூகப்பார்வை மிகவும் முக்கியமானது. படத்தை பார்க்கும் எந்த ஒரு சாதாரண பார்வையாளன்கூட எந்தக் குழப்பமும் இல்லாமல் படத்துடன் பயணிக்கமுடியும். அத்துடன் ஒன்றிவிடமுடியும். ஒரு எளியவனின் நேர்மை எப்படி காயடிக்கப்படுகிறது என்பதை பார்வையாளனுக்கு எந்தக்குழப்பமும் இல்லாமல் தனது திரைக்கதையின் வழியே சொல்லியிருப்பார் படத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா. பிரபல திரைப்பட விமர்சகர் ஆந்த்ரே பாஸன் சொல்வதைப்போல, தங்கள் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக எளிய மக்கள் திருடி வாழ நிர்பந்திக்கப்பட்ட நிலையில், தனது ஒரே சேமிப்பான சைக்கிளை திருடு கொடுக்கும் ஒருவனைப் பற்றிய இந்தப்படம், பிரச்சார நெடியின்றி... உண்மையின் சாட்சியாக வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் திரைக்கதை வலிமைக்கு சான்றாகும்.

இந்த உத்திரவாதமற்ற வாழ்வு சாதாரண மனிதர்களை இப்படித்தான் கேலிசெய்து பார்க்கிறது. அவர்களின் நேர்மையோடு விளையாடிப்பார்க்கிறது. நெருக்கடியின் முச்சந்தியில் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. அதன் உக்கிரத்தை தாங்கமுடியாமல் நாமும் ரிசியைப் போல தடுமாறி விடுகிறோம். அந்த தடுமாற்றத்தின் பிரதிபலனாய் காலமெல்லாம் கண்ணீர் வடித்துக்கொண்டேயி ருக்கிறோம். மரியாவைப் போல.. ரிசியைப் போல... 
குறி சொல்பவர்களை நாடுகிறோம்.

கடவுள்களின் சன்னதிகளில் சரணடைகிறோம். எந்த சாமிகளாவது வந்து நம்மைக் கரையேற்றிவிடாதா என கைகளைக் காற்றில் துழாவுகிறோம். சாமிகள் வராவிட்டாலும் ப்ரூனோக்கள் வருவார்கள்.. தங்களின் கறைபடியாத பிஞ்சுக் கைகளைத் தந்து நம்மை தாங்கிப்பிடித்துக்கொள்வார்கள்.

அந்தக் கைகளை சேர்த்து இறுகப் பற்றியபடியே நாம் நடந்துகடந்துவிடலாம் இந்த வாழ்வை. எங்கே அந்த ப்ருனோக்கள் என தேடுகிறீர்களா... அவன் இந்த சைக்கிள் திருடனுக்குள்தான் ஒளிந்திருக்கிறான். நீங்கள் படத்தைப் பார்த்தால், ஒருவேளை அவன் உங்கள் கைகளை ஆதரவாகப் பற்றி நடக்கக்கூடும்.

No comments:

Post a Comment