Saturday 21 September 2019

REPUBLIC OF CHINA 1949 SEPTEMBER 21





REPUBLIC OF CHINA 1949 SEPTEMBER 21



சீனா (China) என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 1,306,313,812 மக்கள் வாழும் சீனா, உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் சாங்காய் உள்ளது.

உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, சியா வம்சம் (Xia) தொடக்கம் சிங் வம்சம் (Qing) வரையான அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தது. இது 1911 ஆம் ஆண்டில் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில், ஒற்றுமை இன்மையும், உள்நாட்டுப் போர்களும், சீனாவை இரண்டு முக்கியமான அரசியல் குழுக்களாகப் பிரித்தன. ஒரு குழு, தேசியவாதிகளான குவோமிந்தாங், மற்றது சீனப் பொதுவுடமைக் கட்சி. 1949 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றிபெற்று சீனத் தலை நிலத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதுடன், முக்கியமான பிணக்குகள் முடிவடைந்தன. தேசியவாதிகளின் சீனக் குடியரசின் அரசு தாய்வான் தீவுக்குள் அடங்கிக் கொண்டது. இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான, பிணக்குகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவை முக்கியமாக இறைமை, தாய்வானின் அரசியல் அங்கீகாரம் என்பன தொடர்பானவையாகும்.


இன்று மக்கள் சீனக் குடியரசு உலகின் மிகமுக்கியமான நாடும், வளர்ந்துவரும் வல்லரசும் ஆகும். சீனா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிலையான உறுப்புரிமையைக் கொண்டுள்ளதுடன், உலக வணிக நிறுவனம், ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், கிழக்காசிய உச்சிமாநாடு, சாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம், ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது. இது ஒரு அணுவாயுத நாடாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய, நிலையான பாதுகாப்புப் படையையும் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அத்துடன் ஏற்றுமதி அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. 1978 ஆம் ஆண்டில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 53% ஆக இருந்த வறுமை வீதம் (poverty rate) 2001 ஆம் ஆண்டில் 8% ஆகக் குறைந்துள்ளது. எனினும் சீனா வேறு பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது. மக்கள்தொகையில் வேகமாக அதிகரித்து வரும் வயதானவர்களின் வீதம், நகர்ப்புறங்களுக்கும், நாட்டுப்புறங்களுக்குமிடையில் விரிவடைந்துவரும் வருமான இடைவெளி, சூழல் தரங்குறைதல் என்பன இத்தகைய பிரச்சினைகளுள் சிலவாகும்

வரலாறு
ஐரோப்பியா நாடுகளில் நாகரிகம் தோன்று முன்பே சீனாவில் சிறந்த நாகரிகம் ஒன்று காணப்பட்டது. இங்கு Chopsticks மூலம் உணவு உட்கொள்ளும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது.


1949 ஆம் ஆண்டில் மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டதை மாவோ சே துங் அறிவிக்கும் காட்சி.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்தது. பொதுவுடமைவாதிகள் வெற்றிபெற்றுப் போர் முடிவுக்கு வந்து, தேசியவாதிகள் தாய்வானுக்குப் பின்வாங்கியதும், சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாகத் தலைவர் மா சே துங் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளன்று தியென் ஆன் மென் வாயிற்கோபுரத்தில் அறிவித்தார். முன்நோக்கிய பெரும் பாய்ச்சல் (Great Leap Forward) எனப்பட்ட திட்டத்தின் காரணமாகத் தொடர்ச்சியான பல பொருளாதாரத் தோல்விகள் ஏற்பட்டமையால், மாவோ சே துங் தனது தலைமைப் பதவியிலிருந்து இறங்கினார். லியூ ஷாவோக்கி அவரைத் தொடர்ந்து பதவியேற்றார். மாவோவுக்குத் தொடர்ந்தும் கட்சியில் பெருஞ் செல்வாக்கு இருந்துவந்தாலும் அவர் பொருளாதார அலுவல்களின் அன்றாட மேலாண்மை தொடர்பான விடயங்களிலிருந்து விலகியே இருந்தார். இவ்விடயங்கள், லியூ சாவோக்கி, டெங் சியாவோபிங் ஆகியோரின் பொறுப்பில் இருந்தது.

1966 ஆம் ஆண்டில், மாவோவும் அவரது கூட்டாளிகளும் கலாச்சாரப் புரட்சியைத் தொடக்கி வைத்தனர் இது பத்தாண்டுகள் கழித்து மாவோ இறக்கும்வரை தொடர்ந்தது. கட்சிக்குள் நிலவிய பதவிப் போட்டியினாலும், சோவியத் ஒன்றியத்தின் மீது ஏற்பட்ட பயத்தினாலும் ஊக்குவிக்கப்பட்ட இக் கலாச்சாரப் புரட்சி சமுதாயத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. 1972 ஆம் ஆண்டில், சீனாவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பிளவு அதன் உச்சத்தை எட்டியபோது, மாவோவும், பிரதமர் சூ என்லாயும் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனை பெய்ஜிங்கில் சந்தித்து அந்நாட்டுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதே ஆண்டில், தாய்வானில் இயங்கிவந்த சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டிருந்த சீனாவுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமையும், அதன் பாதுகாப்புச் சபைக்கான நிலையான உறுப்புரிமையும், மக்கள் சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டது.


டெங் சியாவோபிங் சீனாவின் சந்தை நோக்கிய பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடக்கி வைத்தவர்.

1976 ஆம் ஆண்டில் மாவோ காலமானதும், கலாச்சாரப் புரட்சியின்போது இடம்பெற்ற அட்டூழியங்களுக்காகக் குற்றம் சுமத்தி நால்வர் குழு (Gang of Four) என அழைக்கப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டதுடன், மாவோவின் வாரிசு எனக் கருதப்பட்ட ஹுவா குவோபெங்கிடமிருந்து டெங் சியாவோபெங் பதவியைக் கைப்பற்றினார். டென் சியாவோ பெங் தான் நேரடியாகக் கட்சித் தலைவர் பதவியையோ அல்லது நாட்டின் தலைவர் பதவியையோ வகிக்காவிட்டாலும், கட்சிக்குள் அவருக்கிருந்த செல்வாக்கினால், குறிப்பிடத்தக்க அளவிலான பொருளாதாரச் சீர்திருத்தங்களை நோக்கி நாட்டை வழிநடத்தினார். தொடர்ந்து பொதுவுடமைக் கட்சி, தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன், கம்யூன்களையும் கலைத்துவிட்டது. பல குடியானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களையும் பெற்றார்கள். இவ்வாறான மேம்பட்ட ஊக்குவிப்புகளினால், வேளாண்மை உற்பத்திகள் பெருமளவு அதிகரித்தன. இந்த நிலைமைகள், சீனா திட்டமிட்ட பொருளாதார முறையிலிருந்து, கலப்புப் பொருளாதார முறைக்கு மாறும் சூழ்நிலையைக் குறித்தன.

புவியியல்

சீனாவின் புவியமைப்பு

சீனா ஆசிய கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். சீனாவின் கிழக்கில் வட கொரியாவும் வடக்கில் மங்கோலியாவும் உள்ளன. வடகிழக்கில் ரஷ்யா, வட மேற்கில் கசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளும் தெற்கில் மியன்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளன. கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.

சீனாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைப்பாங்கான நிலமாகும். உலகின் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் சீனா உரிமைக்கோரும் திபெத் மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இமய மலைத்தொடர், சீன-இந்திய எல்லையில் உள்ளது. இதுதவிர குன்லன், தியென் சான், தாங்குலா, சின்லின், பெரும் சிங் ஆன் லின், தைய்ஹான், சிலியென், ஹென்துவான் என்பவை சீனாவின் முக்கிய மலைகளாகும். சீனாவில் 1500க்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றன. இவற்றுள் யாங்சி ஆறு அசியாவில் மிக நீளமானதும், உலகில் மூன்றாவது நீளமான நதியுமாகும். மஞ்சள் ஆறுயும் ஒரு முக்கிய நதியாகும். யாங்சி, மஞ்சள், ஹெலுங், முத்து, லியௌ, ஹைய் எனற நதிகள் சினாவின் கிழக்கு நோக்கிப் பாய்ந்து பசிப்பிக் சமுத்திரத்தில் கலக்கின்றன. இந்தியாவில் பிரம்மபுத்ரா என்று அழைக்கப்படும் 'யாலு சாங்பு நதி' இந்து சமுத்திரத்தில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. அர்சிஸ் ஆறு வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் சமுத்திரத்தில் கலக்கிறது.



தொகு
மக்கள்

மொழி

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% ஹன் இனத்தவர். பௌத்தம், டாவோயிசம், இஸ்லாம், கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகிய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் சீனாவில் உள்ளனர்.

சீன நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகப் பல குடும்ப நலத்திட்டங்களை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. இவற்றில் முக்கியமானது ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை திட்டம். முதல் குழந்தை பெண் குழந்தையாக வாய்த்தாலோ, தம்பதியினர் கிராமப்புறத்தில் வசித்தாலோ இரண்டாவது குழந்தையைப் பெறலாம். உண்மையில் இத்திட்டம் மக்கள் தொகை வளர்ச்சியை நன்கு கட்டுப்படுத்தினாலும், 117 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற பால் விகித நிலை ஏற்பட்டுள்ளது.

சீன மொழி இந்நாட்டில் பேசப்படும் மொழியும் அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். இம்மொழியை அடிப்படையாகக் கொண்ட பல வட்டார மொழிகள் சீனாவில் பேசப்படுகிறது. இதில் ஒன்றான மாண்டரின் சீன மொழி, உலகில் அதிக மக்கள் பேசும் மொழி என்ற சிறப்பைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்
1949 முதல் சீனா பொதுவுடமைத் தத்துவத்தைக் கடைபிடித்து வரும் நாடாகும். 1980 ஆம் ஆண்டு முதல் சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனாவின் பொருளாதாரம் ஆண்டுக்குச் சராசரியாக 9% வேகத்துடன் வளர்ந்து வருகின்றது. சீனா உலகில் பாறை எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாகும்[15]

சுற்றுலாத்துறை

சீனப்பெருஞ்சுவர்
சுற்றுலாவுக்கு புகழ்பெற்றிராத சீனா அத்துறையில் வளர்ச்சி கண்டுவருகிறது. இதற்கு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார சீர்த்திருத்தங்களே முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. மார்ச் – ஏப்ரல் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் வரையுமான மாதங்கள் சீனச் சுற்றுலாவிற்கு சிறந்தது. பகல் பொழுதில் 20 முதல் 30 பாகை செல்சியஸ் இருக்கும் அதேவேலை இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவாகக் காணப்படும். சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்தச் சமயங்களில் தங்கும் அறை கிடைப்பதும் பயணம் செய்வதும் கடினம்.

முக்கிய விழாக்கள்
சீன புத்தாண்டு – இவ்விழா பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும். அதிகாரபூர்வமாக மூன்று நாட்கள் நீடிக்கும், ஆனால் பெரும்பாலோர் ஒரு வாரம் வரை இவ்விழாவை கொண்டாடுவர். பட்டாசு (வெடி) சப்தங்களும், வாண வேடிக்கைகளும் காணப்படும்.


இலாந்தர் பண்டிகை இது வர்ணமயமான விழாவாகும். வருடத்தின் முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும் நாளில் கொண்டாடப்படும் இவ்விழா புத்தாண்டு கொண்டாட்டங்களின் முடிவைக் குறிக்கிறது. சீனாவின் பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும். சீனாவில் இத்தினம் ஒரு பொது விடுமுறையல்ல.

சிங் மிங் ஏப்ரலில் நடக்கும், சீனக் குடும்பங்கள் மறைந்த தங்கள் உறவினர்களின் கல்லறையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி.


டிராகன் படகு திருவிழா ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது. 'வுட் யுவான்' என்ற கவிஞரைக் கௌரவிக்கும் முகமாக இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. குழுக்களாகப் படகு செலுத்தும் போட்டி இவ்விழாவின் ஒரு அங்கமாக நடைபெறுவது வழக்கமாகும்.

படகு குழுவைச் சேர்ந்த அனைவரும் ஒரே சமயத்தில் துடுப்பை வீசிப் படகைச் செலுத்தும் காட்சி கண்ணைப்பறிக்கும். பல வெளிநாட்டுக் குழுக்களும் இப்போட்டியில் பங்குபற்றுவது வழக்கமாகும்.



No comments:

Post a Comment