Sunday 22 September 2019

SIND CIVILISATION BEFORE 5000 YEARS AGO




SIND CIVILISATION BEFORE 5000 YEARS AGO


5,000 ஆண்டுகளுக்கு முன்பு பாலை நிலத்தில் பசுமை புகுத்திய சிந்து சமவெளி நகரம்
ஜெய் மக்வானா
தோலா விரா கிராமம்


குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் தலைநகரான புஜ் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தோலா விரா கிராமம் அசாதாரணமான வரலாற்றைக் கொண்டுள்ளது.

காதிர் பேட் தீவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களால் 'கோட்டா திம்பா' என்று அழைக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சிப் பகுதியில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிந்து சமவெளி நாகரிக நகரம் இருந்தது.

இந்தியத் தொல்லியல் ஆய்வகமும், காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி குழுவினரும் நடத்திய ஆய்வில், தோலா விராவில் மிகப்பெரிய நீர் சேமிப்பு கட்டமைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.நிலத்துக்கு கீழே உள்ளவற்றை ரேடார் மூலம் அக்குழுவினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.நவீனத்துவம் மிக்க நகரமைப்பு, கால்வாய் திட்டம், கட்டடங்கள் ஆகியவற்றுக்கு சிந்து சமவெளி நாகரிகம் புகழ் பெற்றது.நில அளவை, கலை மற்றும் பிற திறன்களில் சிந்து சமவெளி நாகரிகத்தினர் நிபுணத்துவதுடன் விளங்கியுள்ளனர். தோலா விரா பாலைவனத்தில் அமைந்திருந்தாலும், அது வளம் மிக்க மற்றும் கலாசார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது.

"சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர். தோலா விரா ஒரு சர்வதேச வர்த்தக நகராகவும் இருந்துள்ளது," என்று டெக்கான் தொல்லியல் கல்லூரியின் துணை வேந்தர், பேராசிரியர் வசந்த் ஷிண்டே பிபிசியிடம் கூறினார்."தோலா விரா நகரம் நிறுவப்படும் முன்பே அங்கு ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் புவி அமைப்பு அங்கு ஒரு வர்த்தக நோக்கிலான துறைமுகத்தை நிறுவுவதற்கு ஏதுவாக இருந்துள்ளது."

"பாலைவனத்தால் அந்த நகரம் சூழப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்ந்தவர்கள் அதற்கு ஒரு தீர்வைக் கண்டறிந்தனர்.""தோலா விரா நகரின் இரு பக்கங்களிலிலும் மான்சர் மற்றும் மான்கர் ஆகிய இரு நதிகள் பாய்ந்துள்ளன. மழைக்காலங்களில் மட்டுமே அந்த நதிகளில் நீரோட்டம் இருந்துள்ளது. எனவே அவற்றின் நீரை தங்கள் நகருக்குத் திருப்ப அவர்கள் ஒரு திட்டம் வகுத்தனர்.""நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி, எப்போதெல்லாம் நீர் பாய்ந்துள்ளதோ அப்போதெல்லாம் நீரை தங்கள் நகருக்கு நீரைத் திசை திரும்பியுள்ளனர். கால்வாய், நிலத்தடி நீர்த் தொட்டி ஆகியவற்றை அவர்கள் கட்டமைத்து நீர்த்த தேவைகளை சமாளித்தனர். இதன்மூலமே அவர்கள் பாலைவனத்துக்குள் பசுமையைக் கொண்டுவந்தனர்," என்கிறார் வசந்த் ஷிண்டே.

ஹரப்பா நாகரிகாலத்தில் பின்பற்றப்பட்ட அதே முறை இன்று கட்ச் பகுதியில் பின்பற்றப்பட்டால், இப்போதும் இங்கு பசுமையைக் கொண்டுவரலாம் என்று அவர் நம்புகிறார்.கட்ச் பகுதியில் உள்ள தோலா விரா மற்றும் அகமதாபாத் அருகே உள்ள லோத்தல் ஆகிய நகரங்கள் ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின், இன்றைய குஜராத்தில் அமைந்துள்ள, முக்கிய இடங்களாகும்.

சிந்து சமவெளி நாகரிகம் கி.மு 3000 முதல் கி.மு 1500 வரை விளங்கியதாக இந்திய தொல்லியல் ஆய்வகம் கூறினாலும், இது சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக முனைவர் சமர் கண்டு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.பேராசிரியர் ஷிண்டேவும் சிந்து சமவெளி நாகரிகம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையை உடையது என்கிறார்."ராக்கிகார்ஹி மற்றும் பிற பகுதிகளில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தகவல் சிந்து சமவெளி நாகரிகம் குறைந்தது 5,500 ஆண்டுகள் பழமையானது என்பதை உணர்த்துகிறது," என்கிறார் ஷிண்டே.
கட்ச் பகுதியின் செயற்கைக்கோள் புகைப்படம்

மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர்கள் படையெடுப்பே சிந்து சமவெளி நாகரிகம் அழியக் காரணம் என்று பிரிட்டன் ராணுவ அதிகாரியும், தொல்லியல் ஆய்வாளருமான சர் எரிக் மார்டிமர் வீலர் கூறுவதை மறுக்கும் ஷிண்டே, இயற்கைச் சீற்றமே அந்த நாகரிகம் அழியக் காரணம் என்கிறார்.சுனாமி ஆழிப்பேரலை தோலா விரா நகரம் அழியக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அங்கு ஆய்வு செய்தவர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment