Tuesday 2 January 2018

KIRTI SRI RAJA SINGHA , LAST KING OF KANDY DIED 1782,JANUARY 2




KIRTI SRI RAJA SINGHA , 
LAST KING OF KANDY 
DIED 1782,JANUARY 2






கீர்த்தி சிறீ இராஜசிங்கன் (Kirti Sri Raja Singha, சிங்களம்: ශ්‍රී කීර්ති ශ්‍රී රාජසිංහ, 1734 - 2 சனவரி 1782) என்பவன் கண்டி இராச்சியத்தின் இரண்டாவது நாயக்க வம்ச மன்னன் ஆவான். இவன் மதுரை நாயக்க இளவரசனும், சிறீ விஜய இராஜசிங்கனின் மனைவியின் சகோதரனும் ஆவான்.

சிறி விஜய இராஜசிங்கன் 1747 ஆம் ஆண்டில் இறந்த பின்னர், நாயக்க வம்ச மரபுப்படி அவனது மனைவியின் சகோதரன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் கண்டியின் மன்னன் ஆனான். அப்போது அவனுக்கு பதினாறு வயது. எனவே அவன் முடிசூடி ஆட்சியை பொறுப்பேற்றது 1751 ஆம் ஆண்டிலாகும். அதுவரையிலும் அவனது தந்தை நரனப்பா நாயக்க ஆட்சியை கவனித்தார். நாயக்கர்களது செயல்களை விரும்பாத பிரதானிகள் அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இவனது காலம் பிரதானிகளுக்கும் மன்னனுக்கும் இடையில் குழப்பம் நிறைந்ததாக இருந்தது.
அரசியல் பணிகள்[மூலத்தைத் தொகு]
இவன் கி.பி 1760ம் ஆண்டு ஒல்லாந்தருக்கு எதிராக மக்களை தூண்டி விட்டான். பிரித்தானியரின் உதவிபெற பிரித்தானியத் தூதுவான் ஜான் பைபசை சந்தித்துப் பேசினான். கி.பி.1765 சனவரியில் ஒல்லாந்தர் கண்டியை ஆக்கிரமிப்புச் செய்தபோது தப்பிச்சென்ற இவன் கி.பி.1766ம் ஆண்டு ஒல்லாந்தருடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்கிறான்.

சமய நடவடிக்கைகள்[மூலத்தைத் தொகு]
இவன் தலதா பெரகராவுடன் தேவாலயப் பெரகராவையும் இணைத்து எசல பெரகராவை நடத்தினான். பழைய இராசதானிகளில் சிதைவுற்றிருந்த விகாரைகளை புனர்நிர்மானம் செய்தான். வெலிவிட்ட சரணங்கர தேரர் என்ற பௌத்த பிக்குவின் சமய பணிகளிக்கு ஆதரவு வழங்கினான். விகாரைகளை கொண்டு நடத்த அதற்கு நிலபுலன்களை வழங்கினான்.








சில நிகழ்வுகள் வரலாற்றில் மீண்டும் மீண்டும் அதே போல் நிகழ்வதுண்டு. கண்டியரசன் கதையோடு ஒட்டிய நிகழ்வுகளும் அப்படி பலவற்றை நமக்கு நினைவூட்டுகின்றன.

இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) ஆங்கிலேயர்களிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு பெப்ரவரி  18ஆம் திகதியோடு 200 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் இலங்கையின் கடைசி சிங்கள மன்னன் என்று சிங்களவர்கள் கூறுவார்கள். இலங்கையை இறுதியாக ஆண்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஒரு தமிழன் என்று தமிழர்கள் கூறிக்கொள்வார்கள். இவை அனைத்துமே உண்மைதான்.

பின்புலம்
கண்டி நாயக்கர் என்போர் இலங்கையின் கண்டி அரசை ஆண்ட, தென்னிந்திய நாயக்கர் அரச மரபைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும். நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்த இவர்கள் கண்டியைத் தலை நகராகக் கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்தனர். இவர்கள் தொடக்கத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் பாளையக்காரராக இருந்து பின்னர் சுதந்திர அரசமரபை உருவாக்கிய மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த தெலுங்கர்கள் ஆவர். கண்டிய அரசமரபினருடன் செய்துகொண்ட மணத்தொடர்புகளின் வழியாகவே இவர்களுக்குக் கண்டியரசின் அரசுரிமை கிடைத்தது. இம் மரபைச் சேர்ந்த நான்கு அரசர்கள் கண்டியை ஆண்டுள்ளனர். இவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும் பின்னர் பௌத்தர்களாக மதம் மாறினர். இலங்கையில் பௌத்தமதத்தின் மறுமலர்ச்சிக்கு இவர்கள் பெருந் தொண்டாற்றியுள்ளனர்.

கண்டி நாயக்க மரபு 1739 ஆம் ஆண்டில் தொடங்கியது. இம் மரபில் 
ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739 – 1747 – இவரும் அரசியின் சகோதரன் என்பது கவனிக்கத்தக்கது),
ஸ்ரீ கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 - 1782),
ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782 - 1798),
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 - 1815)
ஆகியோர் கண்டியை ஆண்டு வந்தனர். 

கண்டி அரச மரபினர் மதுரை நாயக்கர் அல்லது தஞ்சை நாயக்கர் மரபிலிருந்து பெண் எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கண்டி அரசன்  ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு  (1782 - 1798) ஐந்து மனைவிமார் இருந்தும் ஒருவருக்கும் பட்டத்துக்குரிய வாரிசு இருக்கவில்லை. இந்த நிலைமையை சாதகமாக்கிக்கொள்ள அதிகாரிகளும், பிரதானிகளும், திசாவமார்களும் தருணம் பார்த்துகொண்டிருந்தனர். மன்னர் வாரிசின்றி இறக்க நேரிட்டது. தனக்குப் பின் அரசாட்சியை மேற்கொள்ளவென மூத்த மனைவியின் தம்பி முத்துசாமியையே இறப்பதற்கு முன் முடிக்குரிய இளவரசனாக நியமனம் செய்திருந்தார் மன்னார். ஆனால் மன்னரின் மரணத்திற்குப் பின்னர் அரசாட்சியில் கண் வைத்துக்கொண்டிருந்த கண்டி மந்திரிகளில் ஒருவரான பிலிமத்தலாவ அரசாட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் மன்னரின் மரணத்திற்குப் பின் முத்துசாமியை நியமிக்க விடவில்லை. மன்னரின் இரண்டாவது மனைவியின் சகோதரனான கண்ணுசாமியை மதுரையில் இருந்து அழைத்து வந்து அரசனாக்கினான். கண்ணுசாமி “ஸ்ரீ விக்ரமசிங்க” என்கிற பெயரில் 1798இல் மகுடம் சூட்டப்பட்டார்.

நாட்டை விட்டு துரத்தப்பட்ட மன்னரின் மூத்த மனைவியும் சகோதரன் முத்துசாமியும் ஆங்கிலேயர்களிடம் தஞ்சமடைந்தனர்.


ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஆட்சியின் போது இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி அரசில் தலையிடவில்லை. ஆனால், பிலிமத்தலாவ அரசாட்சியை கைப்பற்றுவதற்காக நயவஞ்சகமாக கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டி பிரித்தானியரின் மூலம் கண்டியை கைப்பற்றி தானே ஆட்சியமைக்கலாம் என்று நம்பினான். ஆள்பதிக்கு அது குறித்து தெரிவித்து உதவியையும் கோரினான். ஆங்கிலேயர்கள் அதற்கு இணங்க மறுத்த நிலையில்  இரு தரப்புக்கும் இடையில் சண்டையை மூட்டிவிடுவதில் இறங்கினான். கரையோர மாகாணங்களில் உறுதியான நிலையில் இருந்த பிரித்தானியருடன் போரில் ஈடுபடும்படி பிலிமத்தலாவ ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைத் தூண்டி விட்டான். 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது. பிரித்தானியர் எதிர்ப்புக்கள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர். கண்டி அரசன் தலைமறைவாக இயங்க நேரிட்டது. இந்த இடைவெளியை பயன்படுத்தி யாழ்ப்பாணக் கோட்டையில் பாதுகாப்பளிக்கப்பட்டு வந்த முத்துசாமியை (முடிக்குரிய இளவரசன்) 08.07.1803 அன்று ஆங்கிலேய ஆள்பதி மெக்டோவல் மன்னனாக பிரகடனம் செய்தான்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிலிமத்தலாவ ஆள்பதிக்கு எழுதிய கடிதத்துக்கு பதிலளித்த ஆள்பதி சில நிபந்தனைகளை முன்வைத்தார். அதிலொன்று பிலிமத்தலாவையை அரசனாக்குவதானால் முத்துசாமியை வன்னிப் பகுதிக்கு அரசனாக்க வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனை. 

வெள்ளைக்கொடி விவகாரம்
ஆனால் இதற்குள் ஆங்கிலேயப் படைகள் போரில் பலவீனமுற்றுக்கொண்டு போவதை அறிந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் மீண்டும் அரண்மனைக்கு வந்து போரை முன்னெடுத்தான். ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டார்கள். கூலிக்கு போர்புரிந்த மலாயர் படை கண்டியரசன் தரப்புக்கு சார்ந்தது. ஆங்கிலேயப் படையினர் ஒருவனின் வெள்ளைத் தலைப்பாகையைத் தடியில் கட்டித் தூக்கிக்கொண்டு வந்து சரணடைந்தனர். போரும் ஓய்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் நடந்தன. மேஜர் டேவியுடன் ஒரு “புரிந்துணர்வு உடன்படிக்கையும்” செய்துகொள்ளப்பட்டது. ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளில் முக்கியமாக பாதுகாப்பாக திரும்பிப் போக உதவுவது, முத்துசாமியை மீண்டும் அழைத்துக்கொண்டு போவது உள்ளிட்ட அந்தக் கோரிக்கைகள் அதில் உள்ளடக்கம். இவை ஏற்றுக்கொண்டு பலர் விடுவிக்கப்பட்டாலும் பின்னர் மேஜர் டேவியின் படையை சேர்ந்த அனைவரும் கொல்லப்பட்டனர். காயப்பட்ட ஒருவன் மாத்திரம் இறந்ததைப்போல நடித்து பின்னர் தப்பி காடு,மலை எல்லாம் கடந்து மாத்தளை அடைந்து நடந்தவற்றை சொன்னான். படையிலிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் அவன் ஒருவனே தப்பினான். அந்த வெள்ளைக்கொடி விவகாரத்தில் சரணடைந்த ஒருவரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். கண்டியப் படைகளால் அப்படி நிர்மூலமாக்கப்பட்ட நாள் 26.05.1803. என்ன! “முள்ளிவாய்க்கால்” நாள் நினைவுக்கு வருகிறதா.

பிலிமத்தலாவ அதற்கு முன்னரும் இரு தடவைகள் அரச கவிழ்ப்பு சதி முயற்சிகளில் ஈடுபட்டமை அறியப்பட்டாலும் மன்னிக்கப்பட்டான். ஆனால் மூன்றாவது தடவையும் அவன் பிடிபட்டபோது அவன் கொல்லப்பட்டான்.

“தமிழரிடமிருந்து சிங்களவர்களை மீட்கும் யுத்தம்”
ஆனாலும் கண்டியரசனுக்கு எதிரான சதி அத்தோடு முடியவில்லை. பிலிமத்தலாவைக்குப் பதிலாக அவனது இடத்துக்கு மருமகனான எஹெலப்பொல அதிகாரியாக நியமிக்கப்பட்டான். அவனும் தனது மாமனைப் போலவே அரசனுக்கு எதிராகச் செயற்பட்டுக் குழப்பங்களைத் தூண்டி விட்டான். இக்குழப்பங்கள் அடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எஹெலப்பொல தப்பி கொழும்பில் பிரித்தானியருடன் தஞ்சம் புகுந்தான். தனது குடும்பத்தை கொன்று விட்டதாகக் கூறி தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுது புலம்பினான்.


இதற்கிடையில் கண்டியரசனின் அரசவை குழப்பங்களால் நிறைந்தது. மன்னன் பலரை நம்பவில்லை. பல இடங்களில் மக்கள் கலகம் செய்ய தூண்டப்பட்டனர். நித்திரை இழந்து நிம்மதியையும் இழந்தான் மன்னன்.
இந்த தருணம் பார்த்து எஹெலப்பொலவின் வழிகாட்டலில் பிரித்தானியர் மீண்டும் 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். போர் பிரகடனம் செய்யப்பட்டு ஆள்பதி ரொபர்ட் பிரவுன்றிக் (Robert Brownrigg) தலைமையில் படையெடுக்கப்பட்டது. அந்த யுத்தப் பிரகடனம் வசீகரமானமான முறையில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. “சிங்கள மக்களைத் தமிழ் மன்னனிடம் இருந்து மீட்பதற்கான யுத்தம் இது” என்று பிரவுன்றிக் பிரச்சாரம் செய்தான். 

காட்டிக்கொடுப்பும் கைதும்
கண்டி மண்ணனுக்கு உறுதுணையாக இருந்த மொல்லிகொட உட்பட பல பிரதானிகள் ஆங்கிலேயர் பக்கம் சாய்ந்தனர். இதனால் மீண்டும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தலைமறைவாக பணிபுரிய நேரிட்டது. 18.02.1815 அன்று மெதமகாநுவரவில் மன்னனின் மறைவிடத்தை காட்டிக்கொடுப்பின் மூலம் அறிந்த ஆங்கிலேயப் படைகள் சுற்றிவளைத்தனர், ஒரு வீட்டிற்கு வெளியில் இரு பெண்களையும், எறிவேலைக் கையில் ஏந்திய காவலர்களையும் தாக்கி விட்டு நுழைந்தனர். ஆயுதங்கள் இருந்தால் வெளியே எரியுமாறு சத்தமிடப்படவே அறையின் உள்ளேயிருந்து கைத்துப்பாக்கிகளும் உடைவாள்களும் எறியப்பட்டன. மன்னன் வைத்திருந்த பொன் வாளை மன்னன் எரியவில்லை. கதவை உடைத்துக்கொண்டு சென்ற படையினர் உள்ளே மன்னரும் இராணிகள் இருவரும், மன்னரின் தாயார் சுப்பம்மாவும் இருந்ததைக் கண்டனர். பெண்களை சித்திரவதை செய்தனர். ஆனால் பின்னர் அதிகாரி ஜோன் டொய்லியின் ஆணையின் பேரில் அவர்கள் அனைவரும் அரச மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டனர். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தனது தாயாரையும், மனைவியரையும் டொய்லிக்கு முறையாக அறிமுகம் செய்துவைத்தார்.

மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனையும் குடும்பத்தினரையும் 06.03.1815 அன்று கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் போதிய வசதிகளுடன் வீட்டுக் கைதியாக வைத்திருந்தனர். 24.01.1816 அன்று குடும்பத்துடன் கொன்வோலிஸ் எனும் கப்பலின் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார். போகும் வழியில் கப்பலிலேயே ஒரு மனைவி இறந்து போனார். வேலூரில் திப்புசுல்தானின் மைந்தன் இருந்த அரண்மனையில் இருத்தப்பட்டனர். அங்கேயே அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். மனைவி ரெங்கம்மாளுக்கு ஊடாக மன்னருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆங்கிலேய அரசு வழங்கிவந்த சிறிய தொகை பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். இறுதியில் நீர்வீக்க நோயால் 30.01.1832 அன்று தனது 52வது வயதில் இறந்தார் மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன். அவருக்காக ஒரு கல்லறையையும் வேலூரில் அமைத்திருக்கிறார்கள். மன்னரின் மரணத்திற்குப் பின்னர் அவரின் துணைவியையும் விடுவித்துவிட்டது ஆங்கிலேய அரசு. அரசு வழங்கி வந்த மானியத் தொகையும் நின்றுவிட்டதன் பின்னர் வறுமையில் தள்ளாடிய அந்த குடும்பம் தெருவுக்கே வந்துவிட்டது. அவரது வாரிசுகள் இப்போதும் தமிழ்நாட்டில் வறுமையில் வாடுவதாக செய்திகள் வெளியாகின.

புதிய திரிபுகள்
அவர் மன்னராக முடிசூட்டப்பட்டது 18வது வயதில். அவர் அரசாட்சி புரிந்தது 17 ஆண்டுகள். சிறைவாசம் வாழ்ந்ததும் 17 ஆண்டுகள்.

கண்டியரசன் கைதுசெய்யப்பட்டு 200ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நாள் இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானித்த நாள். முழு நாடும் காலனித்துவத்துக்குள் கொண்டுவரப்பட்ட நாள். சூரியன் அஸ்தமிக்காத ஆங்கிலேய சாம்ராஜ்யத்துக்குள் இலங்கையும் கொண்டுவரப்பட்ட நாள். சிங்கள – தமிழ் அரசுகளை ஒன்றாக்கி “ஒற்றையாட்சி”க்கு கீழ் கொண்டுவர நேரிட்ட நாள். சுதேசிகளின் ஆட்சி கைநழுவிப்போய் ஒட்டுமொத்த இலங்கையும் அந்நியர் கட்டுப்பாட்டுக்குள் போன நாள். அன்று தொடக்கம் 133 ஆண்டுகள் இந்த நாட்டை அதிகாரம் செலுத்தி சுரண்டி, சூரையாடிவிட்டுப் போனார்கள் ஆங்கிலேயர்கள்.


சிங்கள மக்கள் மத்தியில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை வணங்கும் வழக்கம் கூட இருக்கிறது. அவரை ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இறுதிவரை போராடிய ஒரு சிங்கள அரசனாகவே கருதுகிறார்கள். ஆனால் இன்றைய பேரினவாத அரசியல் போக்கானது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை ஒரு சிங்கள அரசனாக போற்றுவதில்லை. அவரை தமிழனாகவும், வடுகனாகவும் திரித்து புனைவதுடன் ஆங்கிலேயர்களுக்கு நாட்டை காட்டிக்கொடுத்த ஒரு வழிதவறிய அரசனாகவே பிரசாரப்படுத்திவருகிறது. சென்ற ஆண்டு இலங்கையில் வெளியான “எஹெலபொல குமாரிஹாமி” என்கிற திரைப்படம் அப்படி கண்டியரசனை மோசமாக சித்திரிக்கும் திரைப்படம்.

200ஆண்டு நிறைவு குறித்து சில சிங்கள ஊடகங்கள் மட்டுமே கவனிப்புக்கு உள்ளாக்கின. ஆனால் கண்டியரசனின் கதை பல இனவாத மேடைகளில் இன்றும் பயன்படுத்தியே வருகின்றனர். விமல் வீரவங்ச சமீப காலமாக பல மேடைகளில் இப்படி குறிப்பிடுகிறார். “அன்றைய எஹெலபொல இன்றைய மைத்திரிபால, அன்றைய பிலிமத்தலாவ இன்றைய சம்பிக்க ரணவக்க, அன்றைய ஜோன் டொய்லி இன்றைய அமெரிக்க தூதுவர்”. அதாவது அதே வரலாறு மீண்டும் திரும்ப வந்துவிட்டது என்கிறார். காட்டிக்கொடுப்புகள், அரச கவிழ்ப்பு சதி, ஏகாதிபத்திய சதி அனைத்துமே அன்றைய வரலாற்று அனுபவம் என்கிறார் அவர்.

கண்டியரசன் காட்டிக்கொடுப்பின் நினைவு நாளில் பேரினவாத சித்தாந்தவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா திவய்ன பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார். “ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க அரசனை ஆங்கிலேயர்களுக்கு ஒப்படைத்து இன்றுடன் 200 ஆண்டுகள். மகிந்த ராஜபக்சவை ஆங்கிலேயர்களுக்கு ஒப்படைக்கப்போவது எப்போது. அதைத் தடுப்பதற்காகத் நாங்கள் பாடுபடுகிறோம்.”

கண்டி அரசன் குறித்து தமிழில் போதிய எழுத்துக்கள் வெளிவரவில்லை என்றே கூற வேண்டும். அப்படி கொண்டுவரப்படும் பட்சத்தில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். பல புனைவுகளை அது உடைக்கும். சமகால இனப் பிரச்சினை குறித்த கதையாடல்களில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் வகிபாகம் எப்பேற்பட்டது என்பதை உற்று நோக்கவேண்டும்.

யார் இந்த டொய்லி

கண்டியரசனின் முடிவுக்கு பின்புலத்தில் இயங்கிய சூத்திரதாரி ஜோன் டொய்லி. ஆங்கில அரச அதிகாரியாக கடமையேற்று 1801இல் இலங்கை வந்த டொய்லி அரச சேவையில் சிங்களம் கற்றிருக்கவேண்டியதன் நிபந்தனையை ஏற்று சிங்களம் மட்டுமன்றி பாளி மொழியையும் கற்று பிற்காலத்தில் சிங்களத்தில் கவிதை எழுதுமளவுக்கு தேர்ச்சி பெற்றவர். 1815கண்டி ஒப்பந்தத்தின் சிங்களப் பிரதியை தயார் செய்ததும் டொய்லி தான். கண்டியில் புத்த பிக்கு வேடத்திலும், பிச்சைக்காரர் வேடத்திலும் பல ஒற்றர்களை வழிநடத்தியவர். கண்டி பிரதானிகளுடன் சதித் திட்டங்களை தீட்டிக்கொண்டே இருந்ததுடன் எஹெலபொல, பிலிமத்தலாவ போன்றோருடன் தொடர்புகளை பேணிக்கொண்டு இருந்தவர்.

கண்டி தலதா மாளிகைக்கு பின்னால் அமைந்துள்ள நூதனசாலையின் வாயிலில் உள்ள ஜோன் டொய்லியின் சிலை 

1800களில் நடந்த நிகழ்வுகளை ஆராய்பவர்கள் ஜோன் டொய்லியின் நாட்குறிப்புகளையும் அவரின் நூல்களையும் தவிர்த்துவிட்டு ஆராய்வதில் பயனில்லை. 1811இல் ஆள்பதியாக ரொபர்ட் பிரவுன்றிக் தெரிவானதோடு டொய்லியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு எதிராக தன்னாலான அனைத்து சதிகளையும் முடுக்கிவிட்ட டொய்லி தம்பி முதலி எனப்படும் முஸ்லிம் ஒருவரை மன்னரை கொலை செய்யும் முயற்சிக்கு பயன்படுத்தியதாக அறியக்கிடைக்கிறது. பிற்காலத்தில் இலங்கை ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்த தம்பி முதலி என்பவரின் வழித்தோன்றல் என்பது இன்னுமொரு கிளைக்கதை. அதனை அடுத்த ஒரு சந்தர்ப்பத்தில் தனியாக பார்ப்போம்.
மன்னரை மதுபோதைக்கு பழக்குவதற்காக பிரதானிகளில் ஒருவரான மொல்லிகொடவை ஏவி விட்டதும் கூட டொய்லி தான். மன்னரை பிடிப்பதில் பிரதான பாத்திரமேற்று நிறைவேற்றியதால் விருதுகளை பெற்றார். மன்னர் பிடிபட்டதன் பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது சொத்துக்களைத் தேடி கையகப்படுத்தும் வேலையும் டொய்லியால் சாத்தியப்பட்டது.
25.05.1814 அன்று டொய்லி காய்ச்சலால் மரணமாகும்போது அவருக்கு வயது 49. கண்டி கெரிசன் மயானத்தின் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். இலங்கையில் மரணமான ஆங்கிலேயர்களுக்காக கண்டியில் அமைக்கப்பட்ட கெரிசன் மயானத்துக்கு சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் வந்து மரியாதை செலுத்தி விட்டு போன செய்தி அறிந்ததே. அந்த மயானத்தை இன்னமும் இங்கிலாந்து அரசாலேயே முகாமை செய்யப்பட்டு வருகிறது. தலதா மாளிகைக்கு உயரமான இடத்தில் இருப்பதால் அந்த மயானம் அகற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சிங்கள பௌத்த தரப்பினரால் பலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.  டொய்லி எழுதிய A Sketch of The Constituton of The Kandyan Kingdom என்கிற நூல் முக்கியமான நூல்.




















மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் கல்லறை

















கொழும்பு கோட்டையில் ஆங்கிலேயரால் சிறை வைக்கப்பட்டிருந்த இடம்




நன்றி - தினக்குரல்
































கண்டி மன்னன் குறித்து மோசமாக சித்திரித்து 2014இல் வெளியான
"எஹெலபொல குமாரிஹாமி" திரைப்படம்


No comments:

Post a Comment