Sunday 1 March 2020

SIVAJI GANESAN - M.S.VISWANATHAN,


SIVAJI GANESAN - M.S.VISWANATHAN, 





ஒரு நாள் சிவாஜி கணேசனிடமிருந்து எம்.எஸ்.விக்கு டெலிபோன் வந்தது. 
சீண்டலான குரலில், ’உன்னை ‘மெல்லிசை மன்னன்’னு எல்லாரும் சொல்றாங்க! மியூசிக்கில் அத்தனை பெரிய ஆளா நீ? ஹாலிவுட்ல கிளிஃப் ரிச்சர்ட்னு ஒரு பாடகர்.. நீ கேள்விப்பட்டிருக்க மாட்டே!’ என்று சிவாஜி சொல்ல, ’இப்ப அவனுக்கு என்ன?’ என்று எம்.எஸ்.வி. கேட்டாராம்.
’அவன் ஸ்லோ ஃபேஸ்ல ஒரு மெலடி பாடி இருக்கான். என்ன பிரமாதமா பாடி இருக்கான் தெரியுமா? அது மாதிரி ஒரு பாட்டு உன்னால டியூன் போட முடியுமா?’ என்று சிவாஜி சவால் விடும் தொனியில் கேட்டதும், சுருக்கென்று எம்.எஸ்.விக்கு கோபம் வந்துவிட்டதாம்.
‘அப்படி ஒரு பாட்டு போட்டால், அதுக்கு ஏத்தா மாதிரி உங்களால நடிக்க முடியுமா?’ என்று கேட்டுவிட்டார் எம்.எஸ்.வி.
’நீ போட்டுக் குடு! நான் நடிக்கிறேனா இல்லையான்னு பார்!’ என்று சொல்லிவிட்டு, போனை வைத்துவிட்டார் சிவாஜி.

அவ்வளவுதான்! பரபரப்பாகிவிட்டார் எம்.எஸ்.வி.! ஹார்மோனியத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து, அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு டியூனை போட்டு விட்டார். அதற்கு முன்பாகவே 
கவிஞர் கண்ணதாசனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லி விட்டார். எனவே, டியூன் ரெடியானதும், அதை டெலிபோனிலேயே போட்டுக்காட்டி, அதற்கேற்றபடியாக ஒரு மென்மையான பாடலையும் எழுதும்படிச் சொல்லிவிட்டார்.
நேரே புறப்பட்டு, கண்ணதாசனைப் போய்ப் பார்த்து, அவர் தயாராக எழுதி வைத்திருந்த பாட்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டார் எம்.எஸ்.வி. 
எங்கே தெரியுமா? பாடகர் டி.எம்.எஸ். வீட்டுக்கு. அவரிடம் விஷயத்தை விளக்கிச் சொன்னதுமே, 
’நான் இப்போது ஹை பிட்ச்சில் பாட்டுக்கள் பாடி, அவை எல்லாமே பெரிய அளவில் ஹிட் ஆகிக்கொண்டிருக்கின்றன! இந்த சந்தர்ப்பத்தில், என்னைப் போய் ஒரு மென்மையான டியூனுக்கு பாடச் சொல்றீங்களே?’’ என்று கேட்டாராம் டி.எம்.எஸ்..

’இது ஒரு சவால்! சிவாஜி எனக்கு மட்டும் விட்ட சவால் இல்லை! விஸ்வநாதன், கண்ணதாசன், டி.எம்.சௌந்தரராஜன் என மூணு பேருக்குமாக சேர்த்து விட்டிருக்கும் சவால். இதற்கு நாம சரியான பதில் சொல்லியே ஆகணும்!’ என்று அவரிடம் பேச, 
டி.எம்.எஸ். பாட சம்மதித்து விட்டாராம்.
மறுநாளே, டி.எம்.எஸ். அந்தப் பாட்டைப் பாட, ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பாட்டின் டேப்பை எம்.எஸ்.வி.யே நேரில் சிவாஜி வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்தார். 
‘குடுத்துட்டுப் போ! பாட்டைக் கேக்கறேன்! அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்லறேன்!’ என்று சொல்லி, எம்.எஸ்.வி.யை அனுப்பிவிட்டார் சிவாஜி.
டைரக்டர் பீம்சிங்கின் ‘சாந்தி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் இந்த சவால் சம்பவம் நடந்தது. 

ஒரு நாள் காலை டைரக்டர், சிவாஜிக்கு டெலிபோன் செய்தபோது, ’இன்றைக்கு ஷூட்டிங் வேணாம். பாட்டுக்கான ஷூட்டிங்கை ஒரு நாள் தள்ளிப் போடுங்க!’ என்று சிவாஜி சொன்னதும், டைரக்டருக்கு லேசான அதிர்ச்சி. சிவாஜிக்கு உடல் சௌகரியமில்லை போலிருக்கு என நினைத்து டைரக்டரும் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டார். மறுநாள் போன் செய்தபோதும், ‘‘இன்றைக்கும் ஷூட்டிங் வேண்டாம்’ என்று சிவாஜி சொல்ல, பீம்சிங் டென்ஷனாகி விட்டார்.
யாராவது, ஏதாவது தப்பாக சிவாஜியிடம் சொல்லி இருப்பார்களோ! அதனால் சிவாஜிக்கு கோபமோ! என்ற ரீதியில் சிந்திக்கத் துவங்கிவிட்டார் பீம்சிங்.
இதை இப்படியே விட்டால், வேண்டாத பின்விளைவுகள் ஏற்பட்டு, பெரிய சிக்கல் வரலாம் என்று பயந்து, பீம்சிங் நேரே சிவாஜி வீட்டுக்கே போய் விட்டார். 
’என்ன உடம்பு ஏதும் சரியில்லையா? வேற ஏதாவது பிரச்னையா? ஏன் ஷூட்டிங்கை தள்ளி வைக்கச் சொல்றீங்க? ஏதாவது இருந்தா என்கிட்ட சொல்லுங்க! எல்லாத்தையும் நான் சரி பண்றேன்’ என்று கேட்டார் பீம்சிங்.
சிவாஜி ஆழ்ந்த மௌனத்துக்குப் பின், ஷூட்டிங்கை தள்ளி வைக்கச் சொன்னதன் காரணத்தை பீம்சிங்கிடம் சொன்னார். ’தமாஷாக, எம்.எஸ்.வி.யிடம் ஒரு ஸ்லோ பேஸ் டியூன் போடச் சொன்னேன். ரொம்பப் பிரமாதமா ஒரு டீயூன் போட்டிருக்காரு.. கவிஞரோ அதுக்கு ஏத்தா மாதிரி பிச்சு உதறி இருக்காரு! எல்லாத்துக்கும் மேல இந்த டி.எம்.எஸ். எப்படிப் பாடியிருக்காரு! இதையெல்லாம் மேட்ச் பண்ற மாதிரி  நான் நடிக்க வேணாமா? அது பத்தித்தான் ரெண்டு நாளா நான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்!’ என்று சொல்லிவிட்டு,
 ‘‘இந்தப் பாட்டுக்கு ஒரு கார்டன் செட் போடு! கையில் ஒரு சிகரெட் இருக்கட்டும்.. மீதியை நான் பார்த்துக்கறேன்!’ என்றாராம்.
அடுத்த சில தினங்களில் சிவாஜி விருப்பப்படியே அந்தப் பாட்டும் படம் பிடிக்கப்பட்டது. சிவாஜியின் நடிப்பைப் பார்த்து பிரமித்த எம்.எஸ்.வி., நேரே சிவாஜியின் வீட்டுக்குப் போய் அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டி, ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அந்தப் பாட்டு எது என உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? ’யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு?’.

No comments:

Post a Comment