Sunday 29 March 2020

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் 1

அமெரிக்க கண்டங்களின் பூர்வகுடிகள் செவ்விந்தியர்கள், அவர்களுக்கு எதற்கு இந்தியர்கள் என பெயர் வந்தது?

துருக்கிய நாட்டினர், ஆசிய பட்டு சாலையை மூடியதும், செல்வம் கொழித்த இந்திய மண்ணுக்கு வந்து வர்த்தகம் செய்ய ஒரே வழி ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றுவது தான், இதற்கு மாற்று கடல் பாதை தேடி, 1492-ல் மேற்கு வழியாக கொலம்பஸ் செல்ல, அவன் கரைஒதுங்கிய பரப்பு தான், இன்றைய அமெரிக்க கண்டம். அங்கிருந்த செவ்வின பூர்வகுடிகளை இந்தியர்கள் என் நினைத்ததால், செவ்விந்தியர்கள் ஆனார்கள்.

“1492 conquest of paradise” என்ற படத்தை பார்க்க நேரிட, அதில் அவனை நல்லவன் போல் திரித்து செல்லபட்ட கட்டுக்கதைகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகள் என கூறிக்கொண்டு, ஐரோப்பியர்கள் செய்த காட்டுமிராண்டித்தனங்கள் கொலம்பஸ் காலத்தில் ஆரம்பித்து பல நூற்றாண்டுகளாக தொடந்து கொண்டிருக்கிறது. ஆம் இன்றும் தொடந்து கொண்டுதானிருக்கிறது, மறைமுகமாக.

செவ்விந்தியர்கள் தங்கள் இனம் காக்க, இரத்தம் சிந்திய வரலாறு நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்திற்க்காக வில் அம்பு கொண்டு போரிடும் வல்லவர்களை துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் கொண்டு கொத்து கொத்தாக கொன்று குவித்தார்கள். (இது தான் Avathar படத்தின் ஒன் லைன்).

கால்நடைகளை மந்தை மந்தையாக பட்டிக்குள் அடைப்பது போல, Reservations என கூறி, ஒரு குறுகிய உபயோகப்படாத நிலபரப்பில் இவர்களில் பலர் இன்றளவும் அடைப்பட்டிருக்கிறார்கள்.

போலி வாக்குறுதிகள் வழங்கி, பல விதமான ஒப்பந்தங்களை போட்டு நிலங்களை கையகப்படுத்தி கொண்டு, எதையும் நிறைவேற்றாமல் மேற்கு பக்கமாக துரத்தப்பட்டிருக்கிறார்கள்.

குளிர்காலங்களில், அம்மை நோய் கண்டு இறந்த ஐரோப்பியரின் கம்பளிக்களை கொடுத்து பல ஆயிரக்கண்க்கான ஏக்கர் நிலத்தை செவ்விந்தியர்களிடமிருந்து எழுதி வாங்கிக்கொண்டார்கள்.

அவர்களின் மொழியையும், கலாச்சாரத்தையும் முடிவுக்கு கொண்டு வர, சிறு குழந்தைகளை பொற்றோரிடமிருந்து வழுக்கட்டாயமாகப் பிரித்து Borading school எனக் கூறி கிருத்துவர்களாக மாற்றி சித்திரவதை படுத்தப்பட்டார்கள். அந்த திட்டத்திற்க்கு பெயர், kill indians save men.

தங்கம் தேடி வெட்டப்பட்ட சுரங்கங்களிலும், கரும்பு, புகையிலை தோட்டங்களும் கூலி வேலை செய்ய அடிமைகளாகவும், கருப்பினத்தவர்களுக்கு முன்பாகவே பயன்படுத்தப்பட்டார்கள்.

உழவர் திருநாள் (Thanks Giving) என்பது, கடவுளுக்கும், நிலம் கொடுத்து விவாசாயத்திற்கு உதவிய செவ்விந்தியர்களுக்கும் நன்றி கூறும் திருநாள் என பட புத்தகத்தில் சொல்லி கொடுத்துக்கொண்டிருக்கின்றது இன்றைய அமெரிக்கா.

அமெரிக்காவில், நவம்பர் நான்காம் வியாழன் கொண்டாடப்படும் இந்த திருநாளை செவ்விந்தியர்கள் யாரும் கொண்டாடுவதில்லை. இது அவர்களுக்கு ஒரு துக்க நாள்.

அமெரிக்காவில், 12 வருடங்கள் பணிபுரிந்து, பல இடங்களை சுற்றி இருக்கிறேன், இதில் செவ்விந்தியர்களின் இன்றைய, பண்டைய நகரங்களும் அடக்கம். தழிழில், அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே, பதியப்பட்டுள்ளது, எனக்கு தெரிந்து முழுமையாக யாரும் எழுதியதாக தெரியவில்லை, இருந்தால் தெரிவியுங்கள்.

இலங்கையில், இன படுகொலைகளை சமகாலத்தில் கண்ட நமக்கு, அதை விட பல மடங்கு வீரியம் கொண்ட இந்த வரலாற்று நிகழ்வுகள் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

வேலை காரணமாக 2009-ல் Blogging - யை முடித்துக்கொண்டேன். இதை தழிழில் பதிவு செய்யவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன், என்னுடைய "பட்டைய கிளப்பு" -ஐ தூசி தட்டி ஆரம்பிக்கிறேன் இந்த தொடருக்காக. முடித்தவரை தவறாமல், ஒவ்வோரு வாரமும், வெள்ளிக்கிழமை பதிவிட எண்ணம்.

இதை thanksgiving weekend-ல் ஆரம்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

தொடரும்...






செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 2

கொலம்பஸ் முதலில் காலடி பதித்த இடம், இன்றைய West Indies என அழைக்கப்படும் Haiti, Domini Republic மற்றும் Bahamas தீவுகள் தான். அந்த தீவுகளை இந்தியாவின் பகுதி என நினைத்தார்கள் அப்பயணக்குழு. அதனால் தான் அத்தீவுகள் west Indies ஆனது. (விவ்வியன் ரிச்சர்ட், ப்ரைன் லாரா, போன்ற கருப்பினத்தவர்களின் மூதாதையர்கள் அங்கே வந்து வாழம் காரணத்தை ஒரு தனித்தொடராக எழுதலாம்) மேற்கத்தைய உலகைப் பொறுத்தவரை நாமெல்லாம் இன்றளவும் East Indians தான்.

கொலம்பஸ் மேற்கொண்ட நான்கு பயணத்திலும், மெயின் லேண்ட் எனப்படும், வட அமெரிக்காவையோ அல்லது தென் அமெரிக்காவையோ தொட்டதில்லை. மேற்கிந்திய தீவுகள், கியூபா, மற்றும் சில மத்திய அமெரிக்க நாடுகளின் கிழக்கு கரையை மட்டும் தான்.

முதலில் அவன் எதிர் கொண்ட மக்கள், அரவாக், டைனோ மற்றும் லூக்கயன்(Arwaks, Tainos and Lycayans) இனத்தவர்கள் தான். இவர்கள் அன்பான, பழக இனிமையானவர்கள். புதிய மனிதர்களைக் கண்டதும், தங்களிடம் இருந்த பழங்கள், பருத்தி மூட்டைகள், கிளிகளைக் பரிசாக கொடுத்து வரவேற்றார்கள். அவர்களுக்கு பதிலாக கொலம்பஸூம் அவன் ஆட்களும் தந்த பரிசு, அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, அதை ஸ்பெயின் நாட்டின் காலனிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக அறிவித்து, அதன் கவர்னராக தன்னை அறிவித்துக்கொண்டது தான்.

தங்களின் காதுகளில் தங்க ஆபரணங்களை அணிந்திருந்த அரவாக் இனத்தவர் சிலரை, அந்த புதிய உலகத்தைப்பற்றியும், தங்கம் மற்றும் மற்ற விலைமதிப்புள்ள பொருட்களைப்பற்றியும் தெரிந்து கொள்ள ஆயுத பலத்தை கொண்டு வழுகட்டாயமாக அடிமைகளாக்கினார்கள்.

“செவ்விந்தியர்கள், கட்டுடல் கொண்ட சிறந்த தோற்றம் கொண்டவர்கள், அவர்களிடமிருந்தவற்றை தானாக முன்வந்து, எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள், அவர்களுக்கு ஆயுதங்களைப்பற்றி எதுவும் தெரியவில்லை, தெரிந்ததெல்லாம் வெறும் அம்பு மட்டும் தான், அதிலும் இருப்பு இல்லை, மூங்கில் போன்ற மரத்தால் ஆனது. எங்களின் இரும்பு வாளைக்கூட பிடிக்கத் தெரியாமல், கூர்மையான பகுதியை தொட்டுத் தூக்கி கைகளில் காயம் பட்டுக்கொண்டார்கள். அவர்கள், மிக சிறந்த வேலைக்காரர்களுக்கான தகுதிகளை பெற்றிருந்தார்கள். அதனால் தான், 50 பேர் கொண்ட எங்கள் குழுவினால், அவர்களை ஒட்டுமொத்தமாக ஆட்டிப்படைக்க முடிந்தது.” இப்படி ஆரம்பத்தில் குறிப்பிட்ட கொலம்பஸ், இரண்டாம் பயணத்திற்க்கு பின் ஐரோப்பியர்களின் படை பலத்தை அதிகரித்துக் கொண்ட பின்பு, “செவ்விந்தியர்கள் மனித மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள், தங்களிடம் மாட்டியவரின் இரத்தத்தை குடிக்கும் நாய்களை போன்ற மூக்கை உடையவர்கள்" என்று குறிப்பிடுகிறான்.

முதல் பயணத்தில் அழைத்து வந்த 39 பேரை விட்டு விட்டு, ஓரளவிற்க்கு கிடைத்த தங்கத்தையும், 500 செவ்விந்தியர்களை பிடித்துக்கொண்டு, ஸ்பெயின் புறப்பட்டான், “புதிய உலகத்தில் இது போன்ற, நம் சொல்படி கேட்கின்ற அடிமைகள் ஆயிரக்கணக்கில் கிடைப்பார்கள்" என் ஸ்பெயின் மன்னருக்கும், ராணிக்கும் காட்டி தன் அடுத்த பயணத்தை உறுதி செய்து கொண்டான்.

இரண்டாம் பயணத்தில், 1200 க்கும் மேற்பட்ட படை வீரகளையும், ஆயுதங்களையும், குதிரைகளையும் கொண்டுவந்து இறக்கினான். விட்டு சென்ற 39 பேரும் இறந்து விட்ட செய்தி கேட்டு, செவ்விந்தியர்களின் மீது கொலை வெறி தாக்குதலை தொடங்கினார்கள்.

ஒவ்வொரு கிராமமாக சென்று, கூடாரங்களில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தவர்களை கொத்து கொத்தாக வெட்டிக்கொன்றார்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், கர்பிணி பெண்கள் என் எந்த பாகுபாடும் காட்டவில்லை. கர்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து வளரும் சிசுவை தூக்கி எறிந்தார்கள். ஆயுதம் ஏதும் இன்றி செவ்விந்தியர்களால் எந்தவித எதிர்ப்பும் காட்டமுடியவில்லை. அதையும் மீறி எதிர்த்தவர்களை கும்பளாக பொதுவிடத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்றார்கள். கொதிக்கும் மிகப்பெரிய பாத்திரங்களில், குழந்தைகளை தூக்கி போட்டு வருங்கால சந்ததியை அழித்தார்கள்.

இவையெல்லாம், செவ்விந்தியர்களை வைத்து அடிமைகள் வியாபாரம் செய்து கொண்டிருந்த கொலம்பஸின் படையிலிருந்த ஒருவன், பின்நாளில், பாதிரியாராக மாறிய பின் எழுதிய குறிப்பில் இருப்பவை. இதை எழுதும் போது, என்கைகள் நடுங்குகிறது, அவ்வளவு அரக்கத்தனம் அரங்கேரியது அன்று என குமுறுகிறார். மேலும் குறிப்பிடும் போது,

வீரர்கள், பால் குடிக்கும் பச்சிளம் குழந்தையின் கால்களை பிடித்து, தாயின் மார்பிலிருந்து பிரித்து, தலையை பாறைகளில் மோதி கொன்று ஆற்றில் தூக்கி எறிந்தார்கள்.

தங்களின் வாள்களின் கூர்மையை சோதிக்க வேண்டி, பலரை துடிதுடிக்க வெட்டி வீழ்த்தியிருக்கிறார்கள். ஒரே வெட்டில், செவ்விந்தியரின் உடலை இரண்டாக வேண்டும் என தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டு, அதை நடத்தியும் காட்டினார்கள்.

பொழுது போக்கிற்க்காக, கிளிகளை வைத்து கொண்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் கிளிகளை பிடுங்கிக்கொண்டு, அவர்களின் தலைகளை துண்டித்து இருக்கிறார்கள், இதற்கு அவர்கள் கொடுத்த காரணம், “Just for fun”.

இவையல்லாமல், அவ்வினப் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடுமைகள் கட்டுக்கடங்காதவை. ஒரு கிராமத்திற்க்கு சென்று, மொத்த கூடாரத்தையும் அழிக்கும் முன், அந்த கூட்டத்தில் உள்ள அழகிய பெண்களை, தனியாக பிரித்து விரர்கள் தங்களின் அறைகளில் அடைத்து வைத்து பாலியல் அடிமைகளாக பயன்படுத்திக்கொண்டார்கள். 9 வயது தாண்டிய எந்த பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இதனால், 9 மற்றும் 10 வயது மதிக்க தக்க சிறு பெண் குழந்தைகளை அடிமையாக்கி கொள்ள வீரர்களுக்குள் போட்டா போட்டி அதிகபடியாக இருந்தது.

அடங்க மறுத்தவர்கள், தேவை தீர்ந்த பின் வேட்டை நாய்களுக்கு உணவாக அளிக்கப்பட்டார்கள்.

"வீரர்களால் பிடிபட்ட ஒரு பெண்ணை கொலம்பஸின் பரிசாக, படகில் உள்ள என் அறையில் எனக்காக நிர்வாணமாக அனுப்பி வைத்தார்கள். அவளிடம் என் விருப்பத்தை வெளிப்படுத்த, அவள் அதற்கு சம்மதிக்காமல், தன் நகங்களைக் கொண்டு போராடி, எதிர்ப்பு தெரிவித்தாள். கோபம் கொண்ட நான் சாட்டை எடுத்து விலாசிய விலாசில், நான் இதுவரை கேட்டிராத மரண ஓலத்தை எழுப்பி அடங்கிப்போனாள். அதன் பின்பு அவள் என்னிடம் ஒரு தேர்ந்த விபச்சாரி போல் சிறப்பாக நடந்து கொண்டாள்.” கொலம்பஸின் நண்பரான Michele De Cuneo, மேலே குறிப்பிடும் சம்பவம் ஒரு உதாரணம்.

இந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க, தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தங்களையும் மாய்த்துக்கொண்டார்கள். இக்கொடுமைக்கு அஞ்சி மாஸ் சூசைட் மூலமும் பல கிராமங்கள் காலியானது.

அத்தீவில்(Haiti), 1492-ல் 250,000 ஆக இருந்த செவ்விந்தியரின் மக்கள் தொகை முதல் இரண்டு ஆண்டுகளில், பாதியாகவும், 1515-ல் 50,000 ஆக மாறியது. 1550-ல் வெறும் 500 ஆக மாறிய அந்த எண்ணிக்கை, 1650 மொத்தமாக அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இப்படி பலவாறாக, கொன்று குவித்து இனத்தை அழித்து விட்டு, அம்மை நோய் தாக்கி இறந்து விட்டதாக இக்கால குழந்தைகளுக்கு பள்ளி பாடங்களில் வரலாறு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது மேற்கத்திய உலகம்.

தங்கம் தேடிப்போன கொலம்பஸுக்கு தங்கம் கிடைத்ததா? எவ்வளவு கிடைத்தது. அதற்கு, அவர்கள் மேற்கொண்ட அழிச்சாட்டங்கள் என்னன்ன? அவனை இந்த வேட்டைக்கு யார் அனுப்பினார்கள்? வாருங்கள் பார்க்கலாம் வரும் வாரங்களில்...





செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 3

இவ்வளவு வெறியாட்டத்திற்க்கும் முதற்க்காரணம், கொலம்பஸின் போராசை தான். அடிப்படையில் அவன் ஒரு மாலுமி மற்றும் பிசினஸ் மேன்.

ஐரோப்பிய தொழில் செழிக்க முக்கியமானது, அது ஆசிய நாடுகளுடன் செய்துவந்த வர்த்தகம், அதிலும் செல்வம் கொழித்த, முன்னேறிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா. விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கலைகளில் செழிப்பான இந்தியா மற்றும் சீனாவுடன் செய்து கொண்டிருந்த வர்த்தகத்தால் தான், வருடத்தில் பாதி நாட்கள் பனியில் மூடிக்கிடக்கும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த வர்த்தகத்திற்க்கு உதவியாக இருந்தது அப்போதய பல நாடுகளை இணைத்த சர்வதேச சாலையான 'சில்க் ரூட்'. சில்க் ரூட்டை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இணையத்தில் தேடிப்பாருங்கள். வரலாற்று பிரியர்களுக்கு பல சுவாரசியமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றது.

அந்நாட்களில் முக்கியமாக மேற்காசிய நாடுகளில், மதம்சார்ந்த போர்கள் நடந்துக்கொண்டிருந்தது. குறிப்பாக கிருத்துவ இஸ்லாமிய நாடுகளுக்குள் அடிக்கடி போர் மூழும். இதில் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இடம், Constantinople எனும் நகரம். இன்றைய துருக்கியின் தலைநகரான இஸ்தான்பூல் தான் இந்த Constantinople நகரம். அது 1453-ல் சக்தி வாய்ந்த இஸ்லாமிய ஓட்டமன் போரரசர்களின் கைவசம் வந்தது.

அவர்கள், சில்க் ரூட்டை கிருத்துவ நாட்டவருக்கு மூடிவிட்டார்கள், மாற்றுப்பாதை மத்தியதரைகடல் வழியாக எகிப்து, தொடர்ந்து தரைவழியாக செங்கடல், அப்புறம் செங்கடல் வழியாக அரபிக்கடல் மூலம் இந்தியா. அதற்க்கும் சாத்தியமில்லை, காரணம் அந்த பகுதிகளும் ஒட்டமன் பேரரசின் கீழே. மத்திய தரைகடலையும், செங்கடலையும் இனைக்கும் சூயஸ் கால்வாய் எல்லாம் அக்கலத்தில் இல்லை.

இதனால் ஓட்டமன் அரசுக்கு மேற்கே இருந்த ஐரோப்பிய நாடுகளின் பொருளாதரம் திண்டாட ஆரம்பித்தது.

அவர்களுக்கு தங்கத்திற்க்கு ஈடான மிளகு, மஞ்சள், பட்டை இலவங்கம் போன்ற spices வியாபாரம் மொத்தமாக படுத்துக்கொண்டது.

இதனால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்க்கு கடல் வழி என்பது உடனடி தேவையானது. இதுதான் age of discovery என்னும் ஒரு சகாப்தத்தை வரலாற்றில் உருவாக்கிவைத்தது.

உலகப்போர்கள் உலகின் தொழில் வளர்ச்சிக்கு உதவியதைப்போல, ஒருவகையில் age of discovery உருவாக மறைமுகக்காரணமாக இருந்த ஓட்டமன் மன்னர்களுக்கு உலகம் நிச்சயமாக கடமைப்பட்டிருக்கிறது.

இன்னிலையில் கொலம்பஸ் போர்சுகீசிய மன்னரை அணுகி தன்னுடைய 'மேற்கு புறமாக இந்திய கடல் வழி பாதை'(Enterprise of the Indies) திட்டத்தை முன் வைத்தான். அதை அவர் பொருட்டாக மதிக்கவில்லை. பின்னர் ஸ்பானிஸ் அரசை அணுகி, திட்டத்தை விவரித்தான். ஆனால், அங்கும் திட்டம் நிராகரிக்கப்பட்டது. காரணம், அதற்கு முன் உலகம் தட்டையானது என்றும், கடலில் போக போக பூமியின் விளிம்பை எட்டியதும், கீழே விழுந்துவிட்டுவோம் எனவும் நம்பிக்கொண்டிருந்தார்கள். பூமி தான் பிரபஞ்சத்தின் மையம் என்றும் அதை சுற்றித்தான் சூரியன் முதல் எல்லாக் கோள்களும் உள்ளது என நம்பிக்கொண்டிருந்தவர்கள், பூமி உருண்டை என சொன்ன குற்றத்திற்க்காக Bruno -வை உயிருடன் எரித்துக்கொன்று விட்டார்கள். அதன் பின் கலிலியோ வந்து நிரூப்பித்த பின்னும், அவரையும் குற்றாவாளியாகத்தான் பார்த்தார்கள்.

கொலம்பஸின் காலம், அதற்குப்பின் சில நூற்றாண்டுகள் ஆனதால், பூமி ஏறக்குறைய உருண்டை தானோ என ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த கால கட்டத்தின் தொடக்கம், ஆனால் யாரும் போய் பார்த்ததில்லை.

அட்லாண்டிக்கடலில் பயணித்தால், அது இந்தியாவின் கிழக்கு கடற்கரையை அடையும் என் கொலம்பஸ் நம்பினான். ஆனால் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பது யாருக்கும் தெரியாது.

[பூமி தட்டையானது தான், இந்த உலக மக்களை ஒரு சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று பல கோஷ்டி இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறது. நம்பவில்லையென்னால், https://wiki.tfes.org/The_Flat_Earth_Wiki பக்கத்தை போய் பாருங்கள். அவர்கள் பகல் இரவு, பருவ காலங்கள் இப்படியான விசயங்கள் தட்டையான பூமியில் எப்படி ஏற்படுகின்றது என விளக்கமாக கூறுகிறார்கள்.]

எது எப்படியோ, ஆசியாவிற்க்கு மேற்கு வழியாக கடல் வழி கண்டு பிடிப்பதற்கான திட்டம் இரண்டு முறை நிராகரிப்புக்குப்பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொலம்பஸை ஸ்பானிஸ் அரசி இசபெல்லா நம்பினாள். ஒரே பிரச்சனை இந்த பயணத்திற்கு ஆகப்போகும் மிகப்பெரிய பொருட்செலவு.

ஸ்பானிய King Ferdinand and Queen Isabella, அந்நாட்டு யூதர்கள் மற்றும் இஸ்லாமியரை கிருத்துவராக மாற கட்டளையிட்டனர். பெயருக்கு மாறியதாக கூறிக்கொண்டு, வீட்டிற்க்குள் தன் சொந்த மதத்தை பின்பற்றியவரை எரித்துக் கொன்றார்கள். அவர்களுடைய சொத்துக்களை நாட்டுடமை ஆக்க புதிய சட்டம் கொண்டு வந்து அவற்றை அபகரித்து விற்று பணம் தேற்றினர். ஒரு வேளை பயணம் தோல்வியடைந்தாலும் கஜானாவிற்கு எந்த வித பாதிப்பும் இல்லை. வெற்றி பெற்றால் நாட்டிற்க்கு தொழில் வளம் மற்றும் வரலாற்றில் ஓர் இடம்.

ஒரு வழியாக ஆகஸ்ட் 3, 1492-ல் மூன்று சிறிய கப்பலில் (சாண்டா மரியா, பிண்டோ மற்றும் நினா அவற்றின் பெயர்) பயணத்தை தொடங்கினார்கள். உற்சாகமாக கிளம்பிய பயணம் 50 நாட்களுக்கு மேலாகியும் முடியாததால், பயணக்குழு சோர்வடைந்தது, பாதி பேர் திருப்பி போகலாம் என வழியுறுத்த ஆரம்பித்தார்கள். இதனை சமாளிக்க கொலம்பஸ் இரண்டு உத்திகளை கையாண்டான்.

எத்தனை நாட்கள் பயணம் செய்தோம் என்ற கணக்கை குழுவிற்கு குறைத்து மாற்றி அறிவித்துக்கொண்டிருந்தான்.

இன்னொன்று, முதலில் நிலப்பரப்பை பார்த்து சொல்பவர்களுக்கு, 10000 மார்வாடிகள்(அக்காலத்தில் கடலில் பணிபுரிபவரின் ஒரு வருடத்தைய ஊதியம்) என அறிவித்தான்.

கடைசியில் முதலில் நிலபரப்பை பார்த்தவனுக்கு அந்த பரிசை அளிக்காமல், தான் முதல் நாள் இரவே சிறிய ஒளியை அந்த நிலபரப்பில் பார்த்து விட்டேன் எனக் கூறி தானே வைத்துக்கொண்டது தனிக்கதை.

ஒருவழியாக இரு மாதத்திற்க்கும் மேலான அப்பயணம், அக்டோபர் 12, 1942 வெள்ளிக்கிழமை புதிய உலகை கண்டதும் முடிந்தது. கொலம்பஸ் காலடி வைப்பதற்கு 500 வருடம் முன்பே வட அமெரிக்கா கண்டத்தின் ஒரு பகுதியில் (இன்றைய கனடா நாடு) காலடி வைத்து ஒரு காலனியை உருவாக்கியவர் ஐஸ்லாந்தை சேர்ந்த எரிக்சன்(Leif Erikson). அவர் தான் முதலில் அமெரிக்காவை கண்டுபிடித்தவர், அவர் கொலம்பஸைப்போல வரலாற்றில் இடம் பிடிக்காததற்க்கு பல காரணங்கள். அதை விவரித்தால், நம்முடைய செவ்விந்தியர் கதையிலிருந்து விலகி விடும் என்பதால், வாசகளின் கூகுள் ஆராய்ச்சிக்கே விட்டு விடுகிறேன்.


கொலம்பஸின் குறிப்பில் அவன் குறிப்பிட்டுள்ளது படி, அவன் ஆசியாவில் வந்து இறங்கிவிட்டதாகவும், அப்பகுதி ஜப்பான் அல்லது சீனாவிற்குட்ட பகுதியாக இருக்கலாம் எனவும், உள்ளே சென்றால் இந்தியாவை அடைந்து விடலாம் எனவும் இருக்கிறது.

விடியற்காலை கடற்கரையை அடைந்ததும், தங்கள் கொடியையும் சிலுவையையும் நட்டு வைத்து, அந்த பகுதியை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக வானத்தை நோக்கி கூவி அறிவித்தான்.

அப்போது தான் கூட்டம் கூட்டமாக கடற்கரையை நோக்கி அவர்கள் வரக்தொடங்கினார்கள். அவர்கள் ஆடையேதும் அனிந்திருக்கவில்லை. செந்நிறம் கொண்ட அவர்கள் புதிய மக்களை கண்டதும் உற்சாகமாக வரவேற்றார்கள்.

ஐரோப்பியர்கள் பின்னாளில் சென்ற இடங்களில் கூட எந்த இன செவ்விந்தியரும் அவர்களுக்கு எதிர்ப்பு காட்டவில்லை. பொதுவாக வரவேற்றார்கள் அல்லது பயந்து மலைகளில் ஓடிச்சென்று தஞ்சம் புகுந்து கொண்டார்கள். ஒரு சிலர் பெரிய கப்பலை பார்த்து கடவுளின் தேவ தூதர்களாக பார்த்தார்கள்.

இருவருக்குள்ளும் பொது மொழி சைகைகள் தான். அவர்களின் சைகைகளிலிருந்து, கொலம்பஸ் புரிந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளது, "மற்ற இனத்தை சேர்ந்த செவ்விந்தியர் எங்களை அடிமைகளாக பயன் படுத்துகிறார்கள்” என்பது. அது சரியோ தவறோ தெரியாது, ஆனால், "தீவை அடைந்த முதல் நாளே, இவர்கள் நமக்கும் நல்ல அடிமைகளாக இருப்பார்கள் என முடிவு செய்து, ஐந்து செவிந்தியர்களை அடிமையாக்கி படகில் வைத்துக்கொண்டோம்".

தங்களின் முதல் அடிமைகளிடமும், மற்றும் அடுத்து வந்த ஒரு நூற்றாண்டாக கேட்டுக்கொண்டிருந்த ஒரே கேள்வி, அவர்கள் காதில் அணிந்திருந்த "தங்கம் எங்கே?”

கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கை, "தங்கம் தான் சொர்க்கத்திற்கான ஒரே ஓரு நுழைவுசீட்டு, தங்கம் தான் இவ்வுலகில் எல்லாமே, அதை வைத்திருப்பவர் தங்கள் பாவங்களைக்கூட கழுவிவிட்டு, நரகத்திலிருந்து விடுபட்டு சொர்கம் சேரலாம் ” என்பது தான்.

அதனாலேயே தங்கத்தை அடைய எந்த பாவத்தையும் செய்ய தாயராகி மனித வேட்டையில் இறங்கினான்.
தொடரும்....





செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 4

செவிந்தியர்கள் சுமார் 13000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வட அமெரிக்காவும், ஆசியாவும் இணைந்திருந்த நிலப்பரப்பான Bering Strait வழியாக அமெரிக்க கண்டத்திற்குள் கால்நடையாக நுழைந்திருக்கலாம் என வரலாற்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். Bering Strait இப்போது ரஷ்யாவுக்கும் அலாஸ்காவிற்கும் இடைபட்ட சீற்றம் கொண்ட கடல் பகுதியாக உள்ளது.

ஐரோப்பியரின் வருகைக்கு முன்பே, வட அமெரிக்காவில் ஆரம்பித்து, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வரை பரவி இருந்தார்கள். வருடத்தின் பெரும்பகுதி பனியில் மூடிக்கிடக்கும் கனடா, பாலைவனம் போன்ற நியூ மெக்சிகோ, மத்திய அமெரிக்க சமவெளிகள், ப்ளோரிடா மற்றும் அதனை சுற்றி இருந்த அழகிய தீவுகள், அமேசான் காடுகள் என அந்தந்த நிலபரப்பு மற்றும் சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து கொண்டு பல குழுக்களாக வாழ்ந்து வந்தவர்கள்.

இன்றைய மெக்ஸிகோவின் மயன்(Mayan) இனத்தவரும், பெரு நாட்டின், இன்கா(Inca) இனத்தவரும் உன்னதமான நாகரிக வளர்ச்சி கண்டவர்கள். மத்திய அமெரிக்காவில் உள்ள பிரமீடுகளும், மயன் கோவில்களும், Machu Picchu (எந்திரன் கிளிமாஞ்சாரோ பாடல் Location) மலை நகரமும் இதற்கு சான்றுகள். உலகின் அதிகம் உற்பத்தியாகும் தானியத்தில் முதன்மையாக விளங்கும் மக்கா சோளத்தை (Corn) 7000 வருடங்களுக்கு முன்னமே காட்டுப் புற்களின் குருத்திலிருந்து படிபடியாக மேம்படுத்தி இன்றைக்கு நாம் உண்ணும் மக்கா சோளத்தினை உருவாக்கியவர்கள். உருளைகிழங்கை பல வருடங்களுக்கு பதப்படுத்தும் முறையை அறிந்து வைத்திருந்தார்கள்.

அளவற்ற இயற்கை வளம். எல்லோருக்கும் தேவைக்கு அதிகமாக எல்லாம் கிடைத்ததால், பஞ்சம் இல்லை, திருட்டு இல்லை, போலீஸ் இல்லை, நீதிபதியும் இல்லை. நிலப்பரப்பில் மட்டுமல்லாது, அவர்களின் வாழ்வியலிலும் அது ஒரு சொர்க்க பூமியாக விளங்கியது. நேர்மையின்மை என்பதே அவர்களின் அகராதியில் இல்லை என கொலம்பஸே குறிப்பிட்டுள்ளான்.

இரும்பினாலான கை, கால் விலங்கை காட்டி, இதைத்தான் எங்கள் நாட்டின் இராஜா இராணி அணிந்து கொள்வார்கள் எனக்கூறி, அவர்களின் தலைவனை நம்பவைத்து, சந்தேஷமாக அணிந்து கொள்ள சம்மதித்தவனை, விலங்கு பூட்டி சிறைப்பிடித்து கப்பலேற்றி அடிமையாக ஸ்பெயினுக்கு அனுப்பி இருக்கிறார்கள். செவ்விந்தியரின் வெள்ளேந்தித்தனத்திற்கும், ஐரோப்பியரின் நம்பிக்கை துரோகத்திற்க்கும் இதை விட ஒரு உதாரணம் இருக்கமுடியாது.

ஸ்பானியர்களை தொடர்ந்து வந்த அத்தனை ஐரோப்பியரும் இதைப்போன்ற துரோகத்தை தான் செய்து கொண்டிருந்ததால் ஸ்பானியர்கள் எனக் குறிப்பிடாமல், மொத்தமாக ஐரோப்பியர்கள் என்கிறேன். நம்நாட்டிலேயே, கோவாவை போர்ச்சுகீஸியரும், பாண்டிச்சேரியை பிரஞ்சுக்களும், மொத்த இந்தியாவை பிரிட்டிஷ் காரர்களும் பிடிக்க வில்லையா?

ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து ஐரோப்பா கொண்டுவரப்பட்டு, கருப்பினத்தவரை ஆடுமாடுகளை போல தெரு சந்தைகளில் விலை பேசும் அடிமை வியாபாரம் சர்வசாதாரணமாக நடந்து வந்த காலம் அது.

இந்தியாவிற்கு கடல் வழி கிடைக்கவில்லையென்றாலும், புதிய சொர்க்கபூமி கிடைத்திருக்கிறது. அங்கே அளவற்ற இயற்கை வளங்கள் மட்டும் இன்றி, நிறைய அடிமைகளும் கிடைப்பார்கள் எனக்கூறிய கொலம்பஸின் வாதத்தில் ஸ்பெயின் அரசுக்கு நாட்டமில்லை. காரணம் கப்பலில் ஸ்பெயினுக்கு வரும் வழியிலேயே பல செவ்விந்திய கைதிகள் இறந்து விடுவார்கள். புதிய உலகில் மூலம் கிடைக்கும் அத்துனை வருமானத்திலும் பத்து சதவீதம் மட்டும் தனக்கென்றும், மீதமுள்ள 90 சதவீதம் அரசுக்கு எனவும் கொலம்பஸின் ஆசை வார்த்தை பலிக்க ஆரம்பித்தது. தங்கள் இராஜியத்தின் எல்லைகளை அதிகப்படுத்தவும், பூலோக சொர்கத்தின் வளங்களை கொள்ளையடிக்கவும் எண்ணி, இரண்டாம் பயண திட்டத்தை ஒருவழியாக ஏற்றுக் கொண்டது ஸ்பெயின் அரசு. இம்முறையும் பயண செலவுகளுக்காக தங்கள் நாட்டின் ஜூஸ் (Jews) மதத்தவரின் சொத்துகளை அபகரித்தது.

கொலம்பஸ் சொன்னபடி ஒப்பந்தம் தயார் ஆனது, ஒப்பந்தத்தில் செவ்விந்தியரை கிருத்துவர்களாக மாற்றுவது என்பது ஒரு சரத்து மட்டுமே, மற்றபடி முழு ஒப்பந்ததில் பாதிக்கு மேல் கிடைக்கப்போகும் தங்கத்தை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பதைப் பற்றித்தான் எழுதப்பட்டிருந்தது.

இம்முறை மூன்று படகுகள் இல்லை, 17 கப்பல்கள், 1200க்கும் மேற்பட்ட படை வீரர்கள், முக்கியமாக குதிரை மீதிருந்து, ஈட்டியால் தாக்கி அழிக்கும் பயிற்சி பெற்றவர்கள், மதம் மாற்ற 6 பாதிரியார்கள், எண்ணற்ற மனித மாமிசம் தின்னும் வேட்டை நாய்கள். அந்த கூட்டத்தில் ஒரே ஒரு பெண்கூட இல்லை. பின்னாளில் அத்தீவுகளில் செவ்விந்திய பெண்களிடம் அறங்கேறிய பாலியல் வெறியாட்டத்திற்கு கொலம்பஸின் இம்மாதிரியான கொள்கைதான் முழு முதற்க் காரணம்.

வேட்டையாட மர அம்புகளை வைத்திருக்கும்; புதியவர்களை அன்போடு உபசரிக்கும் அப்பாவிகளிடம் 'தங்கம் எங்கே?' எனக்கேட்கத்தான் மேலே சொன்ன இந்தனை படைகளும்.

இம்முறை வேறு தீவில் இறங்கிய அந்த கூட்டம், கண்ணில் பட்டவர்களை பிடித்து கைதியாக்கி கப்பலுக்குள் ஏற்றினார்கள். சுதந்திரமாக சுற்றித்திரிந்தவர்களை கைது செய்து, 'இனி நீங்கள் அடிமைகள், எங்கள் சொல்படித்தான் கேட்க வேண்டும்' என்ற ஐரோப்பியர்களின் கட்டளை அவர்களுக்கு விளங்கவில்லை. பிடிபட்டவர்களுக்கு அவர்கள் அடிமைகள் என்பதை உணர்துவதே ஐரோப்பியருக்கு கடினமான வேலையாக இருந்தது. ஆப்பிரிக்க அடிமை வியாபாரத்தில் முன் அனுபவம் கொண்ட கொலம்பஸுக்கே இது சவாலாக இருந்தது. கைதிகள் மிக மிக முரண்டு பிடித்தார்கள்.

இந்த பிரச்சனையை சமாளிக்க தனி ஆளாக பிடிக்காமல் அவர்களை குடும்பத்தோடு அடிமைகளாக பிடிக்க ஆரம்பித்தார்கள். இந்த அணுகுமுறை கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தது. அடிமைகளும் நிறைய பேர் தானாக வந்து மாட்டிக்கொண்டார்கள். முதல் நாளே 6 பேரை பிடித்து கப்பலுக்கு அடிமைகளாக கொண்டுவந்தவர்கள், அவர்களை தேடி வந்த 7 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளையும் பிடித்து கைது செய்து கப்பலில் ஏற்றினார்கள். கப்பலையே பார்த்திராத அவர்கள், வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு வந்தவர்களையும் கப்பலை சுற்றிக்காட்டுவதாக கூறி கைதியாக்கினார்கள்.

கைதியாக பிடிக்கும் போது, வாளால் குத்து பட்டு குடல் வெளியே தொங்கிக் கொண்டிருந்த ஒருவனை எப்படியும் பிழைக்க வைக்க முடியாது என உணர்ந்து, கடலில் தூக்கி போட்டு விட்டார்கள். அவன் ஒரு கையால் குடலை பிடித்துக்கொண்டு, மறுகையால் நீந்தி கொண்டு கரை சேர, அவன் தப்பித்தால் இவர்களின் உண்மை தெரிந்து விடும் என எண்ணி அவனை மீண்டும் கப்பலுக்கு பிடித்து வந்து கை கால்களை கட்டி, இம்முறை கப்பலின் மேல்தளத்திலிருந்து கடலில் தூக்கி போட, அந்நிலையிலும் அவன் தத்தளித்து கரை நோக்கி நீந்த, வெறுத்து போன படை வீரர்கள் நீந்திக்கொண்டிருந்தவனை கப்பலில் இருந்த படியே சுட்டுக் கொன்ற பின் தான் நிம்மதியடைந்தார்கள்
தொடரும்...






செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 5

கிடைத்த அடிமைகளை பிடித்துக்கொண்டு, முதல் முறை காலடி பதித்த தீவிற்கு வந்து பார்த்த போது தான் அவர்கள் கட்டி வைத்திருந்த சிறிய கோட்டையான லா நேவிடாட்(La Navidad), தரைமட்டமாக்கப் பட்டுக்கிடந்தது அம்பலமானது. அதில் தங்க வைக்கப்பட்டிருந்த 39 பேரும் காணவில்லை.

அந்த 39 பேரும் செவ்விந்திய பெண்களை தங்களின் அடிமைகளாக பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ் தரமாக நடத்தியதின் விளைவாக சர்ச்சை ஏற்பட்டு, அதனால் உண்டான போரில் கொல்லப்பட்டது கொலம்பஸின் குழுவிற்கு பின்னாளில் தான் தெரிந்தது.

கிடைத்த அடிமைகள் மற்றும், 1200 வீரர்கள் அனைவரும் துரிதமாக செயல் பட்டு, தரைமட்டமாக்கப்பட்ட கோட்டைக்கு பதிலாக புதிதாக ஒரு கோட்டையை சற்று பெரியதாகவே கட்டினார்கள். இம்முறை காலனி அமைப்பதும் ஒரு நோக்கமாக இருந்தபடியால், 12 கப்பல்களிலும் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களையும் கொஞ்சம் கொண்டுவந்திருந்தார்கள். அதனால் கட்டுமான பணிகள் மல மலவென நடைப்பெற்றது. ஒரு தேவாலயம், கொலம்பஸ் ஆட்சி செய்வதற்கான அலுவலகம், வீரர்கள் தங்க அறைகள் என பல விஷயங்கள் உள்ளடக்கி இருந்தது அந்த கோட்டை. அக்கோட்டைக்கு, பயணத்திற்கு அனுமதி கொடுத்து பண உதவியும் செய்த ஸ்பெயின் ராணியின் நினைவாக லா இஸபெல்லா(La Isabella) என பெயரிடப்பட்டது. அந்த புதிய கோட்டையில் கொலம்பஸ் அட்மிரல் ஜெனரலாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு தன் ஆட்சியை தொடங்கினான். ஆட்சியை தொடங்கினான் என்பதைக்காட்டிலும், தங்க வேட்டைக்கான ஆயத்த பணிகளை ஆரம்பித்தான் என தான் கூறவேண்டும்.

கோட்டை அமைத்து செட்டில் ஆனவுடன், ஆரம்பித்த முதல் வேலை தங்கச்சுரங்கம் தோண்டியது. தோண்டும் வேலை செவ்விந்தியர்களுடையது எனவும், அவர்களை கண்காணிக்கும் வேலை ஸ்பானிய வீரர்களுடையது எனவும் சரி சமமாக பிரித்துக்கொண்டார்கள். பதினான்கு வயதை தொட்ட ஒவ்வொரு செவ்விந்திய ஆணும் கட்டாயமாக சுரங்கப்பணியில் ஈடுபட்டே ஆக வேண்டும். இல்லையெனில் நிச்சயமாக தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கும். எவ்வளவு உழைத்த போதும் கிடைக்கும் தங்கத்தின் அளவு மிகக்குறைவாக இருந்தது. இதனால், செவ்விந்தியர்கள் சரியாக உழைக்காமல் தங்களை ஏமாற்றுகிறார்கள் என நினைத்து கொலம்பஸ் ஒரு ஆணையிட்டான்.

அதாவது ஒவ்வொரு முன்று மாதத்திற்கும், சுரங்க பணியாளர்கள்(அடிமைகள்) ஒவ்வொருவரும் தங்கள் கணக்காக ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் தயாரிக்க போதுமான தாதுவை ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும். அப்படி கொடுப்பவர்களுக்கு பரிசாக ஒரு பித்தளை காசு கிடைக்கும், அதை அவர்கள் தங்களின் கழுத்தில் அடையாளமாக அணிந்து கொள்ளலாம். பித்தளை காசு கிடைத்து, கழுத்தில் போட்டுக்கொண்டவர்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு நிம்மதி, தொடர்ந்து பணி செய்யலாம்.

சரி, ஆனால் இப்படி குறிப்பிட்ட அளவு தாதுவை ஒப்படைக்காதவர்களுக்கு எந்த பரிசும் கிடைக்கவில்லையா என்கிறீர்களா?

ஏன் இல்லை? பரிசு கிடைத்தது, அவர்களும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள அரசு கொடுத்த பரிசு, அவர்களின் துண்டிக்கப்பட்ட கைகள். ஆம், நீங்கள் படிப்பது உண்மைதான். குறிப்பிட்ட அளவு தாது கொடுக்க முடியாதவர்களின் கைகளை முழங்கை வரை வெட்டி அவர்களின் கழுத்திலேயே மாலையாக அணிவித்தார்கள்.

மேற்படி தண்டனையை மேற்பார்வைப்பார்த்து, தவறாமல் நிறைவேற்றியது கொலம்பஸின் சொந்த தம்பிகள். வெட்டு பட்ட கைகளுக்கு மருத்துவமும் கிடையாது. வெட்டு பட்ட கைகளிலிருந்து, இரத்தம் வெளியேறி இறந்தவர்கள் நிறைய பேர்.

இந்த தண்டனைக்கு பயந்து, மலைகளில் ஓடி ஒழிந்தவர்களின் முடிவு இதைவிட கொடூரமானது. தப்பியவர்களை பிடிக்க வேட்டை நாய்கள் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய்கள் சாதாரணமானவை அல்ல, மனிதனின் ஒவ்வொரு இணைப்பையும் கடித்தே பிரித்து விடும் சக்தி வாய்ந்தது. அவைகளை, எதிர்த்து போராடவும் முடியாது, அவற்றின் பாதுகாப்பிற்காக, அதன் உடல் முழுதும், இரும்பினால் ஆன கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. வேட்டை நாயிடம் மாட்டி கதை முடிந்தவர்களின் உடலும் அந்நாய்களுக்கே சொந்தம். அவற்றின் இரையாக!!!

உயிருடன் இருக்கும் ஆண்களின் ஒரே கடமை சுரங்களில் தங்கத்தாதுவை சேகரிப்பது மட்டும் தான், அதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கெடு. அம்மக்களுக்கு ஊசலாடும் கத்தி எப்போதும் தலை மீது தொங்கிக்கொண்டே இருந்தது. தங்கள் குடும்பத்திற்காக உழைக்க முடியாது, விவசாயம் செய்ய முடியாது, வேட்டையாட முடியாது அனைத்தும் பெண்களே செய்து, தங்கள் கணவனையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இதற்கிடையே வீரர்களின் இச்சைக்கும் பலியாக வேண்டும்.

அப்போதய கத்தோலிய கிருத்துவ மத போதனைப்படி, ஒரு கிருத்துவர் மற்றொரு கிருத்துவரை அடிமையாக பயன்படுத்தக்கூடாது. மத நம்பிக்கை கொண்ட கொலம்பஸ் இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வைக் கண்டுபிடித்தான். செவ்விந்தியர்களை மதம் மாற்ற பாதிரியார்களை அழைத்து வந்திருந்தாலும், அவர்களுக்கு ஞானஸ்தானம் செய்விக்காமல் பார்த்துக்கொண்டான். இதனால் மொத்த மக்கள் தொகையையும் அடிமைகளாக பயன்படுத்திக் கொள்ளலாமே!

தங்க தாது நிறைய கிடைக்காத மண்ணில், இக்கொள்ளையர்களின் ஆசைக்காக தங்கத்தாதுவை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்றால் எப்படி?

செவ்விந்திய ஆண்களின் முடிவு மூன்று வகையில் முடிந்தது. ஒன்று, தாது கிடைக்காமல் கைகள் வெட்டப்பட்டு இரத்தம் இழந்து உண்டானது ஒரு வகை, இரண்டாவது வகை, வேட்டை நாய்களால் கடி பட்டு கொடுரமுறையில் இறப்பது. அத்தேடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு இரையாகவும் ஆனது.

சிலர் இவ்விரு வகை கொடுமைகளுக்கு பயந்து மற்றொரு வகையை தேர்ந்தெடுத்தார்கள். அது தற்கொலை. ஆம் மாஸ் சூசைட் எனப்படும் முறையில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள். அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள்.

இவையனைத்தும் கொலம்பஸின் தங்க மோகத்தால் உண்டான ஒரே ஒரு சட்டத்தத்தினால்!!!

கொடுமைகள் தொடரும்...







செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 6

கொலம்பஸ் ஆட்சியின் முக்கிய வேலை தங்கச்சுரங்கம் தோண்டுவதும், கப்பலை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்து தீவுகளுக்கு சென்று அடிமைகளை பிடிப்பதும், அந்த நிலபரப்புகளை ஸ்பானிஸ் அரசாங்கத்தின் வட்டத்திற்குள்ளே கொண்டுவருவதும் தான்.

அவற்றில் சில தீவுகள் மனித இனம் அது வரை கால் பதித்திராதவை. அது போன்ற ஒரு தீவில் ஷீல்கள் மற்றும் கடல் சிங்கங்கள் மட்டுமே நிரம்பி வழிய அவற்றை வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள் ஸ்பானிய வீரர்கள். அந்த அப்பாவி ஜீவன்கள் செய்த பாவம், செவ்விந்தியர்களைப் போல் அவ்வீரர்களின் வரவைக்கண்டு பயந்து ஓடாமல் அல்லது அவர்களை வரவேற்காமல் இருந்தது மட்டுமே. அந்த அளவிற்கு குரூர குணத்தை கொண்டவர்களாக இருந்தார்கள் அவர்கள்.

எல்லாருக்கும் தங்கம் மட்டுமே குறிக்கோளாக இருந்தது, ஆனால் அத்தீவுகளில் பெரிய அளவிற்கு தங்கம் ஏதும் கிடைக்கவில்லை, கிடைத்த சிறிய அளவு தங்கத்தையும், ஸ்பெயினுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். விவாசயம் போன்ற தொழில் செய்து, பொருள் உற்பத்தி செய்ய ஆட்கள் இல்லை. விளைவு, உணவு பற்றாக்குறை! பஞ்சம்!!! ஸ்பெயினிலிருந்து கொண்டுவந்த பொருட்களும் தீர்ந்து போக, பஞ்சம் தலைவிரித்து ஆடியது, ஸ்பானிய வீரர்களுக்கிடையே உணவுக்காக கலவரம் ஆரம்பித்தது.

அதனால், அட்மிரல் கொலம்பஸ் திருப்பவும் ஸ்பெயின் சென்று, காலனி அமைதியாக தொடர அதனை விரிவாக்கம் செய்ய மேலும் நிறைய பொருளுதவி கேட்டு வேண்டுகோள் விடுத்தான். ஸ்பானிய அரசுக்கு இம்முறை முற்றிலுமாக சம்மதமில்லை, ஆயினும் போர்ச்சுகீசிய அரசும், புதிய உலகத்திற்க்கு ஆள் அனுப்ப தயாராகி விட்டதால், ஆரம்பித்த வேலையை ஒழுங்காக நடத்த வேண்டி, போர்ச்சுகீசியரை விட முன்னனியில் இருக்க வேண்டி, மூன்றாம் முறையும் பொருட்கள், வீரர்களை ஏற்பாடு செய்து, கொலம்பஸை புதிய கப்பல்களில் வழியனுப்பியது.

ஆனால் இரண்டாம் முறை ஆரம்பித்த பஞ்சம் அதன் தொடர்ச்சியாக உண்டான வன்முறை எல்லாம் மிகவும் மோசமான நிலையை அடைந்து, தொடர்ந்து கொண்டிருந்தது.

அங்கே பல கசாப்புக்கடைகளில், செவ்விந்தியரின் உடல்கள் நாய்களின் உணவாக கிடைப்பது சர்வ சாதாரணமாக இருந்தது.

Roque Martín என்பவன் வைத்திருந்த நாய் பண்ணையில் அவற்றின் உணவிற்காக எப்போதும் நான்கைந்து செவ்விந்தியரின் உடல்கள் மாட்டிறைச்சியை தொங்க விடுவதைப்போல தலைகீழாக தொங்கவிடபட்டிருந்தது என குறிப்புகளில் உள்ளது.

செவ்விந்தியர்களை நரமாமிசம் உண்ணும் cannibals என குறிப்பிட்ட ஐரோப்பியர்கள், பஞ்சத்தின் போது, அந்த செவ்விந்தியர்களின் மனித இறைச்சி உண்டு வளர்ந்த போர் நாய்களை தங்களின் உணவாக உட்கொண்டார்கள் என்பது தான் உண்மை.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதும், கடைசியில் விழித்துக்கொண்ட ஸ்பெயின் அரசு Francisco de Bobadilla என்பவனை ஆட்சியில் அரமவைத்து கொலம்பஸை கைது செய்தது. புதிய அட்மிரல் இத்தனைக்கும் காரணமான கொலம்பஸையும் அவன் இரு தம்பிகளையும் சங்கிலியில் இணைத்து, கப்பலேற்றி அனுப்பி வைத்தான்.

ஸ்பெயின் வந்தடைந்ததும், அங்கு நடந்த கலவர குற்றங்களை காரணம் காட்டி, அந்நாட்டு அரசு அவனை சிறையில் அடைத்தது. இங்கு முக்கியமாக கவனிக்க பட வேண்டியது, அந்த தண்டனை செவ்விந்தியருக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களுக்காக அல்ல, கலவரம் உருவாகவும், கலவரத்தால் உண்டான ஐரோப்பியரின் உயிர் இழப்பிற்க்காகவும் தான்.

சிறைதண்டனை வெறும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே. சிறை தண்டனைக்குப்பின்னும், ஒரு வழியாக அரசை சமாதானப்படுத்தி நான்காவது முறையாக பயணம் மேற்கொண்டான். ஆனால் அவன் முதலில் காலடி வைத்து, நிர்மானித்த Hispaniola நகரில் அவன் கப்பலை யாரும் அனுமதிக்கவில்லை. அதனால் உயிருக்கு பயந்து இன்றைய கியூபாவின் ஒரு பகுதியாக இருக்கும் தீவில் தஞ்சம் அடைந்து, புயலில் சிக்கி சீரழிந்து, உடல் நலம் குன்றி வேறு வழியின்றி ஸ்பெயின் திரும்பி தன்னுடைய கடைசி காலத்தை கழித்தான்.

ஆனால், அவன் பற்ற வைத்த நெருப்பு அடுத்த 500 ஆண்டுகளுக்கு கொளுந்து விட்டு எரிந்தது.

இத்தகைய கொடுங்கோலனின் நினைவாக அவன் வழி வந்தவர்கள் அவனை அமெரிக்க ஹீரோவாக உருவகப்படுத்தி, 1930 லிருந்து 1934 வரை அன்றைய அமெரிக்க அரசியலில் செல்வாக்கை உபயோகித்து 'கொலம்பஸ் தினம்' எனும் அரசு விடுமுறை தினத்தை உருவாக்கினார்கள்.

பள்ளி பாடங்களில் அவனை ஒரு ஹீரோவாகத்தான் இன்றைக்கும் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் பெயரில் ஒரு பெரு நகரமும், பல சிறு ஊர்களும் பல மாகாணங்களில் உள்ளது.

Howard Zinn's A People's History of the United States எனும் புத்தகத்தை படித்து பார்த்தால் கொலம்பஸின் உண்மை முகம் விளங்கும். Howard Zinn -யை தொடர்ந்து பல ஆய்வாலர்கள் தங்களின் புத்தகங்களில், அவனின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறார்கள்.

அதனால் சில ஆண்டுகளாக (குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளுக்குள் என்று தான் சொல்ல வேண்டும்), சொற்பமே இருக்கும் செவ்விந்தியரின் வம்சாவழியினரும், சில அமெரிக்க நகரங்களும், மேற்கிந்திய தீவு நாடுகளில் சிலவும், கொலம்பஸ் தினத்தை வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு நாட்களில் செவ்விந்தியர் தினமாக கொண்டாடுகிறது.

கொலம்பஸிடமிருந்து பதவி எற்று கொண்டவனும் அவன் பின் வந்தவர்களும் கூட லேசு பட்டவர்கள் கிடையாது. செவ்விந்தியர்களிடம் கொலம்பஸுக்கும் மேலே கொடூரமாக தான் நடந்து கொண்டார்கள்.

புதிய உலகத்தை அப்போதைய போப் அப்போதைய சூப்பர் பவராக இருந்த ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்லுக்கு பிரித்து கொடுத்து உத்தரவிட்டார். அதன்படி இன்றைய பிரேசில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போர்ச்சுகல்லுக்கும், கொலம்பஸ் கண்டறிந்த பகுதிகள் மற்றும் அதன் வடக்கு, மேற்கு பகுதிகள் ஸ்பெயினுக்கும் என முடிவானது. அதனால் அன்றைய சூப்பர் பவர்களுக்குள் புதிய உலகத்தால் கொஞ்சகாலத்திற்கு சண்டை வராமல் சமாதானமாக இருந்தது.

இவ்விரு நாடுகள் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளும் பல தடவை பயணம் செய்து ஒட்டு மொத்த வட மற்றும் தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தங்களின் காலனியாக அறிவித்தது. இதில் ப்ரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா குறிப்பிட தக்க அளவு பெரும் பகுதிகளை ஆக்கிரமித்தது.

[ரஷ்யா தான் ஆக்கிரமித்து வைத்திருந்த அலாஸ்காவை சொற்ப காசுக்கு அமெரிக்காவிற்கு விற்ற கதை பின்னால் நடந்தது. இன்றைக்கு வட மற்றும் தென் அமெரிக்காவில் பல நாடுகள் உள்ளன. ஆனால அவை பிரிவதற்கு முன் ஒட்டு மொத்தமாக இரு கண்டங்களாக இருந்த போது, அந்த நிலபரப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பல விதமான போர்கள் நடந்தேறியது. இவற்றை பற்றி தனி தொடர் எழுதலாம், அதுவும் பேராசையால் இரத்தமும் உயிரும் இழந்த கதைகள் தான். நேரமும் வரவேற்பும் இருந்தால், இத்தொடரை தொடர்ந்து அந்த கதையை எழுதுகிறேன்].

கொலம்பஸ் காலத்திற்க்கு பிறகு நடந்த கொடூரங்கள் வரும் வாரங்களில்....









செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 7

அரசி அனகோனா('தங்க மலர்') :

கரீபியன் தீவுகளின் கியூபாவிற்கு அடுத்து இரண்டாவது மிக பெரிய தீவாக இருப்பது, இன்றைய ஹெட்டி மற்றும் டொமினிக் ரிபப்ளிக் நாடுகள் இணைந்த தீவு. அது ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்கு தலைவர்களும் இருந்தார்கள். அதன் ஒரு பகுதியின் தலைவனைத்தான் (சில வாரங்களுக்கு முன் பார்த்தோமே) ஸ்பானியர்கள், ஒரு பளபளப்பான கைகால் விலங்கைக்காட்டி, இது அரசர்கள் அணிந்து கொள்ளும் அணிகலன், எனக்கூறி கைது செய்து ஸ்பெயின் கொண்டுபோனார்கள்.

அத்தலைவனின் பெயர், caonoba, கப்பல் ஸ்பெயின் போய் சேரும் முன், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். ஸ்பானிய அரசு அவர்களின் காலனியை அம்மண்ணில் அமைக்க எதிர்ப்பு காட்டியதால் அவரை கைது செய்ததாக கூறிக்கொண்டது.

அம்மன்னனுக்கு பிறகு அவரது மனைவியான Anacaona அந்நாட்டின் அரசியாக பதவி ஏற்று கொண்டாள். பெரும்பாலான தீவை ஸ்பானியர்கள் ஆக்கிரமித்த பின்னும், ஒரு சிறு பகுதி மட்டும் அனகோனாவின் ஆட்சியின் கீழ் இருந்தது.

அனகோனா என்றால், அவர்களது மொழியில் தங்க மலர் என்பதாகும். பெயருக்கு ஏற்றார் போல், அவளும் மிகச்சிறந்த அழகி. அதுமட்டுமில்லாது, நடனத்திலும், பாடல் இயற்றுவதிலும், சிறந்து விழங்கினாள். பொதுவாக செவ்விந்தியர்கள் அவர்களின் பெயரை இயற்கையையும், விலங்கினங்களின் பெயரையும் உவமையையும் கலந்து வைப்பார்கள். தாக்கும் ஓனாய், வலிமையான எருது, அழகிய நிலவு, உயர்ந்த மரம், பளபளக்கும் ஒளி, வசந்த காலம், வானவில், சீரும் பாம்பு, மிகசிறியவன், ஆளுமையானவன் இதைப்போன்று தான் இருக்கும் அவர்களின் பெயர்கள். 'தங்க மலர்' (Anacaona) கூட அந்த வகையை சேர்ந்தது தான். கணவரின் கைதுக்கு பிறகு எஞ்சிய சிறு பகுதியை அவள் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தாள்.

செவ்விந்தியர்களிடம், கொலம்பஸூக்கு பின் வந்தவர்களும் அதைவிட கொடூரமாகத்தான் நடந்து கொண்டார்கள். Nicolas De Ovando என்பவன் கொலம்ஸுக்கு பின் வந்த கவர்னரில் ஒருவன், பன்மடங்கு வெறி கொண்டவன். செவ்விந்தியர்களை அடிமையாக மட்டுமே பார்க்க தெரிந்தவன், அவனால் அடிமைகள் ஆட்சியில் இருப்பதை சகிக்க முடியவில்லை. அனகோனாவிடம் தந்திரமாக சமாதானம் பேசினான். தன்னுடைய கணவனின் கைதுக்கு பிறகும், அவள் ஸ்பானியர்களை எதிரிகளாக பார்க்காமல், சமாதான பேச்சுக்கு சம்மதித்தாள். தன்க்கு கீழ் இருந்த 8 தலைவர்களையும் அழைத்து பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தாள்.

பெரிய கூடாரத்தில், சமாதான பேச்சும் விருந்தும் கோலாகலமாக தொடங்கியது. பாதி விருந்தில் ஓவண்டோ(Ovando) வின் ஆட்கள், கூடாரத்தை சுற்றி வளைத்து தீயிலிட்டு தரைமட்டமாக்கினார்கள். முன்னமே திட்டமிட்டதால் ஸ்பானியர்கள் அனைவரும் தீயிலிருந்து தப்பி ஓடி விட, செவ்விந்தியர்கள் அனைவரும் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அதையும் மீறி தீயிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்தவர்களை சுற்றியிருந்த ஸ்பானியர்கள், தங்களின் வாளுக்கு இறையாக்கினார்கள். சமாதானம் பேச வந்து, அனைத்து தலைவர்களையும் ஓரிடத்தில் சேர்த்து, தீயிட்டும், வாளால் வெட்டியும் அனைவரின் கதையையும் முடித்தார்கள்.

அரசி அனகோனாவை மட்டும் கொல்லாமல், கைது செய்து ஓவண்டோ முன் நிறுத்தினார்கள். ஸ்பானியரின் காலனி விரிவாக்கத்தை எதிர்த்தது தான் இந்நிகழ்விற்கும் காரணம், என விளக்கமளித்தது அவர்கள் உருவாக்கிய கோர்ட். கைது செய்யப்பட்ட அனகோனாவை உயிருடன் மன்னித்து விட ஒரு கடைசி வாய்ப்பு கொடுப்பதாக கூறினான் ஓவண்டோ. ஆட்சியை விட்டு விட்டு, யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல், ஸ்பானியர்களுக்கு மட்டும் பணி புரியும் பாலியல் அடிமையாக இருக்க ஒப்புக்கொண்டால், விடுதலை செய்வதாக அவளுக்கு தெரிவிக்கப்பட்டது. அத்தீர்ப்பை எதிர்த்தாள் அவள். அதனால் எதிர்ப்பவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டி, அனகோனாவை அனைவரின் முன்னிலையில் பொதுவெளியில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். அப்போது அவளுக்கு 29 வயது மட்டுமே!

உயிரை விட மானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவளின் செயல், இன்றைய ஹெட்டி (Haiti) மற்றும் டாமினிக் ரிபப்ளிக் (Dominic Republic) நாட்டு வரலாற்றில் அனகோனாவிற்கு ஒரு முக்கிய இடத்தை பிடித்து கொடுத்து விட்டது. நாம் கண்ணகியை கொண்டாடுவதை போல போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஹெட்டியர்கள்.

மாவீரன் ஹென்றிக்குல்லோ:

அந்த பலரின் உயிரை குடித்த தீசூவாலைகள் அடங்கியபின் அந்த சாம்பலில் நின்றிருந்த சிறுவன் தான் ஹென்றிக்குல்லோ. அனகோனாவின் சகோதரன் மகன், தன் தந்தை மற்றும் தாத்தாவின் உயிரை குடித்த, அத்தையை தூக்கிலிட்ட ஸ்பானியர்களில் ஒரு நற்குணம் கொண்ட பாதிரியார் ஒருவரின் கண்ணில் அவன் பட, அவர் அவனை கிருத்துவனாக மாற்றி அவனுக்கு ஹென்றிகே என பெயர் மாற்றி வளர்த்து வந்தார்.

ஸ்பானியர்களுடன் வளர்ந்து வந்தாலும் அச்சிறுவனின் மனதில் தன் குடும்பத்தை நெருப்பில் இட்டு அழித்த வந்தேறிகளின் நம்பிக்கை துரோக செயல் பசுமரத்தாணி போல என்றும் நிறைந்திருந்தது. வளர்ந்த பின் லூசியா என்னும் செவ்விந்திய பொண்ணை மணந்து குடும்பதை நடத்த ஆரம்பித்தான். வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிந்த அக்காலத்தில், அப்போதைய அரசின் புதிய சட்டம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

நிலம் வைத்திருக்கும் ஸ்பானியர்கள், அந்த நிலத்தில் வாழும் ஸ்பானியர் அல்லாதவரை தங்கள் அடிமையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான் அச்சட்டத்தின் சுருக்கம்.

ஒவ்வொரு ஸ்பானியரும் பல கிராமங்களை தங்களின் கீழ் வைத்திருந்ததால், ஹென்றிகேவை அவன் குடும்பத்தோடு வெனிஸூலா என்பவனின் அடிமையாக மாற்றியது அச்சட்டம். வெனிஸூலாவின் கரும்புத்தோட்ட தொழிலாளியாக மாற்றப்பட்டான். சொன்னபடி கேட்டவில்லையெனில் தண்டனைகள் கடுமையானதாக இருக்கும்.

மரங்களில் தொங்கவிட்டு சாட்டையடி கொடுத்து மூர்ச்சையானதும், அப்படியே ஒரு இரவு முழுவதும் விட்டு விட்டு மறுநாள் காலை தோட்ட வேலைக்கு அனுப்புவார்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே! இது போல இன்னல்கள் பல விதம். தங்கள் அடிமையை அடையாளம் கொள்ள, முதலாளிகள் மாடுகளுக்கு இடுவதை போல தங்களுக்கென்று தனி முத்திரையை அடிமைகளின் உடலில் பதிப்பார்கள். அடிமைகளுக்கு பிறக்கும் குழந்தைகளும், அந்த முதலாளிகளுக்கு அடிமைகள் தான்.

அடிமைகள் இந்த கொடுமைகளை எதிர்த்து போராட அச்சட்டத்தில் இடமில்லை. பல முறை தட்டி கேட்டு, அதற்கான தண்டனையை மட்டுமே அனுபவித்து கொண்டிருந்த ஹென்றிகே வெகுண்டெழுந்தது, முதலாளி வெனிஸூலா அவன் மனைவி லூசியாவை கற்பழித்த பிறகு தான். அதன் பின்னர், தன்னை போல பாதிக்க பட்ட தன் இனத்தவர் சிலருடன் தப்பி சென்று, அருகில் இருந்த மலைகுகைகளில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.

மலையின் உச்சியில் உள்ள குகைகளில் குழுந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்களை இருக்க செய்து விட்டு, ஹென்றிகேவும் இளம் வயதினரும் அவர்களுக்கு பாதுகாப்பாக உச்சிக்கு செல்லும் பாதைகளில் உள்ள குகைகளில் தங்கி தங்கள் இனைத்தை பாதுகாத்தார்கள். பாதைகளில் பெரிய பாறைகளை கொண்டு மூடிவிட்டு அங்கேயே காவல் காத்த படியால் ஸ்பானியரால் அவர்களை நெருங்க கூட முடியவில்லை.

பெண்கள் கோழி பண்ணை வைத்து, உருளை கிழங்கை பயிருட்டு, தன் இனத்தவரின் உணவு தேவையை பார்த்து கொண்டார்கள். ஸ்பானிஸ் அரசு தப்பிஓடியவர்கள் அனைவரும் போராளிகள் என முத்திரை குத்தி, அவர்களை பிடிக்க பல வழிகளில் முயன்றது. ஆனால் அந்த காட்டு மலைகளை நன்றாக தெரிந்திருந்து கொரில்லா முறையில் யுத்தம் செய்த வீரர்களிடம், ஸ்பானிய படை பல முறை அடிபட்டு உயிருக்கு பயந்து பின்வாங்கி ஓடியது.

மரத்தால் ஆன கம்பு, வேல்கள், மற்றும் மீன் எலும்புகள் போன்ற சிறு ஆயுதங்களை வைத்திருந்த, எண்ணிக்கையிலும் மிக சிறிய படையை வைத்திருந்த ஹென்றிகே ஸ்பானிய படைகளுக்கு 14 ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக விளங்கினான். தங்கள் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே ஸ்பானிய படை வீரர்களை கொல்லலாம் என்றும், பழிதீர்க்க வேண்டி யாரையும் கொல்ல வேண்டாம் எனவும் தங்கள் வீரர்களுக்கு ஆணையிட்டிருந்தான். ஒருமுறை போரின் போது, தன் முதலாளியான வெனிஸூலா சிக்கிக்கொண்டான், தன்னை கொடுமை படுத்திய, தன் மனைவியை கற்பழித்த அந்த பாதகனைக்கூட உயிருடன் மற்ற போர் வீரர்களுடன் சேர்த்து விடுவித்து விட்டான். அது தான் செவ்விந்தியரின் உயர்ந்த குணம்.

பல முறை போரில் படு தோல்வி அடைந்து அவமான பட்ட அரசு, அவனை போரில் வெல்ல முடியாது என முடிவு செய்து சமாதானத்தை கையிலெடுத்தது. பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. சமாதான பேச்சு வார்த்தையின் போது தன் தந்தையை நெருப்பில் பறி கொடுத்த ஹென்றிகே, இம்முறை அரசை நம்பத்தயாரில்லை.

ஒவ்வொரு இரவும் தானே முக்கிய வழிதடங்களை விடியும் வரை காவல் காத்து அதிகாலையில் மட்டுமே மற்ற வீரர்களிடம் பாதுகாப்பு பணியை ஒப்படைத்து தூங்க செல்வான் ஹென்றிகே.

மேலும் நான்கு ஆண்டுகள், சமாதான பேச்சுக்கு ஒத்துக்கொள்ளாதவன், தன்னை குழத்தையாக இருந்த போது காப்பாற்றிய பாதிரியாரின் மூலம் தூது விடவும் கடைசியில் ஒப்புக்கொண்டான்.

பாதிரியாரின் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் ஸ்பானிய அரசு கடைசியில் அடி பணிந்தது. தன்னை நம்பி வாழும் தன் இனத்தவர் 4000 பேருக்கும் சுதந்திரமாக வாழ எந்த தடையும் இருக்ககூடாது என்ற ஹென்றிகேவின் வேண்டுகோளை அரசு ஏற்றுக்கொண்டது. அவர்களின் 14 ஆண்டு கால போராட்டமும் முடிவுக்கு வந்தது.

இன்றைக்கும் ஹென்றிகே ஒரு மாவீரனாக போற்றப்படுகிறான். கால போக்கில் அந்த 4000 பேரும் அவர்களின் சந்ததியருக்கும் என்ன நடந்தது என்று வரலாற்றில் சரியான குறிப்புகள் இல்லை, ஆனால் ஹென்றிகேவிக்கு பின் வந்த நூற்றாண்டில், அந்த தீவில் வாழ்ந்த செவ்விந்ததிய இனம் முற்றிலுமாக அழிந்து விட்டதாக கணக்கெடுப்பில் உள்ளது.

தொடரும்....








செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 8



இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி வரலாற்று புத்தகத்தில் படித்திருப்பீர்கள் தானே... சுற்றிலும் மதில் சுவரால் ஆன மைதானத்தில் கூடிய மக்களை, எல்லா வழிகளையும் அடைத்து விட்டு ஒரே ஒரு வாயிலை மட்டும் திறந்து விட்டு, அதில் வெளியேறியவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டு பொசுக்கிய கோர படுகொலை நிகழ்ச்சி. அதை நடத்தியவன் ஜெனரல் டையர் என்பவன். தகவல் தொடர்பு இருந்த காலத்தில் நடந்த இது உலகிற்கு நன்றாக தெரியும்.

தகவல் தொடர்பு இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் கூண்டோடு அழிக்க பட அல்லது எஞ்சிய சிலர் எழுத்தறிவு இல்லாமல் இருந்தால், என்னவாகும்? இது போன்ற ஒரு நிகழ்வை நடத்திய ஜெனரல் டையரே அதைப்பற்றி பெருமையாக எங்காவது குறிப்பிட்டால் தான் உலகிற்கு தெரியும்.

செவ்விந்தியர்களுக்கு நேர்ந்தது இது தான். அக்காலத்தில் புதிய உலகம் பல ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் பார்த்திருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் அம்மாதிரியான நிகழ்வில் பங்கேற்ற ஸ்பானியர்களின் குறிப்பிலிருந்து கிடைத்தவை மட்டுமே. செவ்விந்தியர்களுக்கு பல மொழிகள் இருந்ததே தவிர எழுத்து இல்லை. அதனால் பல இன அழிப்பு சம்பவங்கள் வரலாற்றில் இடம் பிடிக்காமல் போய் விட்டது. உலகுக்கு தெரிந்த ஒரு சில சம்பவங்களும் கூட ஸ்பானியர்கள் பார்வையில் உலகிற்கு வெளிகாட்டப்பட்டவை தான். அதுவே இவ்வளவு குரூரமாக இருக்கிறதே, உண்மையில் என்னவெல்லாம் நடந்திருக்கும்?

ஹாத்துவே(Hatuey):



ஹெட்டி மற்றும் டோமினிக் ரிபப்ளிக் இணைந்த தீவை கொலம்பஸ் ஸ்பானியோலா(Hispaniola) என்று பெயரிட்டு, ஸ்பெயின் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது முன்பே பார்த்தோம்.

அந்த தீவை ஸ்பானியர்கள் முமுவதுமாக ஆக்கிரமித்த போது, அத்தீவின் ஒரு பகுதியின் தலைவனாக இருந்த ஹாத்துவே அங்கிருந்து தப்பிச்சென்று கியூபாவில் தஞ்சம் அடைந்தான். அங்கிருந்த தன் இன மக்களிடம் ஸ்பானியோலாவில் நடக்கும் கொடுமைகளை எடுத்து சொல்லி, அது மிகவிரைவில் கியூபாவிலும் நடக்கும் அதனால் ஸ்பானியர்களை எதிர்க்கவேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்தினான்.

Batolome De Las Casas எனும் பாதிரியாரின் கூற்றுப்படி, ஹாத்துவே கியூபாவிலிருந்த தன் இனமக்களிடம் இருந்த தங்கத்தை காட்டி சென்னது இதுதான்:

“தங்கம் தான் ஸ்பானியர்கள் வழிபடும் கடவுள். இதற்காகத்தான் அவர்கள் சண்டையிடவும், கொல்லவும் செய்வார்கள். நம்மை அடிமைகளாகவும் ஆக்குவார்கள், அதனால், இவற்றை கடலில் எறிந்து விடுங்கள். அந்த மிருகங்களின் பேச்சு, அவர்களின் அமைதியான கடவுளை பற்றியதாகவும், எல்லோரும் சமம் என்றும் இருக்கும், ஆனால் உண்மையில் நம் மண்ணிலேயே நம்மை அடிமையாக்குவார்கள். பரிசுத்த ஆன்மாவை பற்றி, சொர்கத்தை பற்றி, நரகத்தை பற்றி பேசுவார்கள், முடிவில் நம் உடமைகளை கொள்ளை அடிப்பார்கள், நம்மின பெண்களை கற்பழிப்பார்கள், நம் பெண்குழந்தைகளிடம் கீழ் தரமாக நடந்து கொள்வார்கள். நம் கண்ணியத்திற்க்கும், விவேகத்திற்க்கும் ஒருகாலத்திலும் சமமாகாத அவர்கள், நம்முடைய ஆயுதத்தால் உடைக்க முடியாத இரும்பினாலான கவசத்தை அணிந்திருப்பார்கள்"

உண்மையில், பேச்சு வேறு அனுபவம் வேறல்லவா? இப்பேச்சை கேட்ட ஒரு சிலர் மட்டுமே ஹாத்துவே பக்கம் சென்றார்கள், ஆனால் பெரும்பாலனவர்கள் உண்மையை அறியாததால், அப்பேச்சை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஹாத்துவேயும் தன்னுடன் இணைந்த 400 பேருடன் கொரில்லா போருக்கு ஆயுத்தமானான்.

இன்னிலையில் கிரிஸ்டோபர் கொலம்பஸின் மகன் டியேகோ கொலம்பஸ் ஸ்பானியோலாவின் நான்காவது கவர்னராக பெறுப்பேற்றுக் கொண்டான். அவன் டியேகோ வால்கியூஸ் என்பவனை கியூபாவை ஆக்கிரமிக்க அனுப்பினான்.

300 படை வீரர்களுடன் கியூபாவின் கடற்கரையில் வந்திறங்கிய டியேகோ வால்கியூஸ், அங்கிருந்த மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் சந்திக்கவில்லை. அதனால் அவனால் கியூபாவில் நிரந்தரமாக இருக்க முடிந்தது. கியூபாவில் கோட்டை அமைத்து நகரத்தை நிர்மானிக்க எதிர்ப்பு காட்டியது ஹாத்துவே மட்டுமே, அவ்வப்போது அவன் நடந்திய கொரில்லா தாக்குதலால் நான்கைந்து ஸ்பானியர்கள் இறக்க நேர்ந்தது. ஆனால் பெரியதாக ஒன்றும் ஆகவில்லை.

ஒருமுறை ஒரு கிராமத்திற்கு வால்கியூஸும் அவனது படையும் வந்த போது, அவர்களை வரவேற்று உண்ண உணவும் விலை உயர்ந்த பரிசுகளையும் கொடுத்து வரவேற்றனர் அம்மக்கள். உணவை உண்டவுடன், வால்கியூஸ் ஆணைப்படி அனைவரையும் சுற்றி வளைத்து, வாளாலும் துப்பாக்கியாலும் தாக்குதல் நடத்தினார்கள் அவனது வீரர்கள்.

அமைதியானவர்களை தாக்கவேண்டாம் என நான் சொன்னது யாரும் கேட்கவில்லை. அன்றைய தினம் மட்டும் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட ஆன்மாக்கள் அமைதியானது, இரத்தம் ஆறாக ஓடியது, எஞ்சியவர்கள் அடிமையாக்க பட்டார்கள், என்னால் ஏதும் செய்யமுடியவில்லை என Las Casas குறிப்பிட்டுள்ளார்.

கியூபாவில் வால்கியூஸ் சென்ற இடம் எல்லாம் இத்தகைய கொடூரம் தான் நடந்தது. இதனால் அவனால் ஸ்பான்யோலாவை விட வேகமாக கியூபாவை ஆக்கிரமிக்க முடிந்தது. அங்கு மக்கள் தொகையும் அதிகம் என்பதால் அடிமைகளும் நிறைய கிடைத்தார்கள். தங்க சுரங்களிலும், கரும்பு தோட்டத்திலும் வேலை செய்ய மனித சக்தி நிறைந்திருந்ததால், பணமும் நிறைய கிடைக்க ஆரம்பித்தது. (உலகின் சர்க்கரை கிண்ணமாக கியூபா மாறவும் இதுவே அடிப்படை) இதனால், தலைகனம் தலைக்கேற தன்னை கியூபாவிற்கு அனுப்பிய டியேகோ கொலம்பஸுக்கு அடிபணியாமல், நேரடியாக ஸ்பெயினில் உள்ள மன்னனுக்கு கீழ் வந்து, கியூபாவின் கவர்னராக ஆகிவிட்டான். போதாகுறைக்கு ஸ்பெயின் மன்னனின் அனுமதியுடன், ஸ்பானிஸ் பேசும் ஆப்பிரிக்க அடிமைகளையும் இறக்குமதி செய்து கொண்டான். இதை போன்று தலைவனை எதிர்த்து, தான் தோன்றி தனமாக செயல் படும் குணம், அவனுக்கே பின்னாளில் ஆப்பு வைக்கும் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. எப்படியோ, அக்காலத்தில் பணத்தாசையில் ஸ்பெயினிலிருந்து வந்த வீரர்களிலேயே, அவன் தான் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தான்.

இதற்கிடையே, மூன்று ஆண்டுகள் குடைச்சல் கொடுத்து வந்த ஹாத்துவேவை வேட்டை நாய்கள், மற்றும் போராசை பிடித்த உள்ளூர் அடிமைகளின் உதவியுடன் கைது செய்தான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இம்முறை பொது இடத்தில் மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்து கொல்ல முடிவானது.

மரத்தில் கட்டப்பட்டிருந்த ஹாத்துவேவிடம் ஒரு மத குரு வந்தார். அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல் இதோ:

"இறப்பதற்கு முன்பு உனக்கு ஞான ஸ்நானம் செய்து வைக்கிறேன்"

"எதற்கு?”

"கிருத்துவனாக இறந்தால், சொர்கத்திற்கு செல்லலாம்.”

“அப்படியானால், ஸ்பானியர்கள் இறந்தால் எங்கு செல்வார்கள்?"

“சந்தேகம் என்ன? சொர்கத்திற்க்கு தான்...”

"நான் நரகத்திற்கே போகிறேன், கொடுரமான ஸ்பானியர்களுடன் சொர்க்கத்தில் இருப்பதை விட நரகத்தில் இருப்பது சால சிறந்தது.” ஹாத்துவே தயக்கமின்றி உடனே உதிர்த்த வார்த்தைகள்.

நம்முடைய கடவுளுக்கும், நம்பிக்கைக்கும் நம்மினத்தவர்கள் சம்பாதித்து கொடுத்த பெயர் இதுதான் என வருத்தப்படுகிறார் இந்த குறிப்பெழுதிய மதகுரு.

தீ படர்ந்தது, ஒரு நாயகன் உருவானன்.

ஹாத்துவே இன்றைக்கும் கியூபா வரலாற்றில் முதலில் போர்கொடி உயர்த்திய மாவீரனாக போற்றப்படுகிறான்.

பி.கு.1.: என் பார்வையில் ஹாத்துவேவிற்க்கும், சே குவாராக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இருவரும் கியூபா நாட்டை சேராதவர்கள், ஆனால் கியூபா நாட்டினரால் போற்றப்படும் மாபெரும் வீரர்கள்.

பி.கு.2: ஜியோகிரபியில் கொஞ்சம் வீக்கானவர்கள் மேலே உள்ள வரைபடத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த கட்டுரை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகும்.

தொடரும்....







செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 9

ஹாத்துவேயின் முடிவுக்குப்பின் டியேகோ வால்கியூஸ் அவனது ஸ்டெயிலில், கொஞ்சம் கொஞ்சமாக கியூபாவை முழுமையாக ஆக்கிரமித்தான்.

பணத்திற்காக ஸ்பெயினிலிருந்து புதிய உலகை நோக்கி வந்த ஐரோப்பியர்கள் கியூபாவிலும் குவிய ஆரம்பித்தார்கள். முதலில் வந்தவர்கள் அத்தீவில் வாழ்ந்த அனைத்து செவிந்தியர்களையும் ஏற்கனவே அடிமைகளாக வைத்திருந்த படியால், புதியவர்களுக்கு அடிமைகள் கிடைக்கவில்லை. ஒருசிலர் ஒரு கிராமம் முழுக்க இருந்த அடிமைகளுக்கு உரிமையாளர்களாகவும், ஒருசிலர் அடிமைகளே இல்லாமலும் இருந்தது, வந்தேரிகளுக்குள் பல குழப்பத்தையும், சிறு கலவரங்களையும் உருவாக்கியது.

அடிமைகள் கிடைக்காத அதிருப்திகாரர்கள் ஒன்றிணைந்து தங்கள் அதிகார வரம்பை விரிவு படுத்தவும், புதிய அடிமைகளை தேடியும், கியூபா தீவை சுற்றியிருக்கும் நிலப்பரப்பை கண்டறிந்து ஆக்கிரமிக்கும் நோக்கோடு ஒரு புதிய திட்டம் தீட்டி, கவர்னரான டியேகோ வால்கியூஸின் ஒப்புதலுக்கு அனுப்பினார்கள். அப்படி பயணம் மேற்கொண்டால் வரும் லாபத்தை பங்கு போட்டுக்கொள்ளும் முறை மீது கவர்னருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்தான் கவர்னர் வால்கியூஸ். ஒருவழியாக அதிருப்திக்காரர்களின் தொடர் முயற்சியின் மூலமாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பங்கு பிரித்தலில் உடன்பாடு ஏற்பட்டு, தானே கப்பல் கட்டும் செலவை ஏற்று கொள்வதாக கூறி அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தான். அந்த குழுவும் மூன்று கப்பல்களில் 110 பேருடன் மேற்கு நோக்கி பயணத்தை துவங்கியது. 1517-ல் புறப்பட்ட குழுவிற்கு தலைமை தாங்கி நடத்தி சென்றது பிரான்சிஸ்கோ ஹெர்னாண்டஸ் என்பவன்.

இதற்கிடையில் 16-ம் நூற்றாண்டின் முதல் பத்து வருடத்தில் ஸ்பானியோலாவிலிருந்து நாலாபுறமும் புது உலகை மேலும் கொள்ளையடிக்க, பலரின் தலைமையில் பல குழுக்கள் பயணங்களை மேற்கொண்டது.

அவ்வாறு சென்றவர்கள் சில இடங்களில் ஸ்பானிய காலனியை அமைத்தார்கள். இன்றைக்கு Darién Gap எனபடும் வட மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கும் பகுதியில் வடக்கில் ஒரு குழுவும் (இன்றைய தெற்கு பனாமா) தெற்கில் ஒரு குழுவும் (இன்றைய வடக்கு கொலம்பியா) செட்டில் ஆனது. தீவுகள் அல்லாது முதன் முதலில் மெயின் லேண்ட் எனப்படும் அமெரிக்க கண்டத்தில் நகரம் உருவாக்கப்பட்டது இந்த பகுதியில் தான். தெற்கு குழுவின் தலைவனான வாஸ்கோ நூன் டி பல்போவா தான் பசுபிக் பெருங்கடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியவனும் ஆவான். [அதற்கு முன் அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபக்கம் தான் ஆசியாவின் கிழக்கு கடல் பகுதியாக இருப்பதாக நம்பினார்கள், Darién Gap மற்றும் பசுபிக் பெருங்கடல் பற்றி தனியாக பார்ப்போம்] ஆனால் இந்த வடக்கு மற்றும் தெற்கு ஆக்கிரமிப்பாளர்களுக்குள் சதா சண்டை. இந்த சண்டைப்பற்றி தலைமைக்கு தெரிவிக்க வால்டிவியா என்பவனின் தலைமையில் ஒரு குழு ஸ்பானியோலாவிற்கு புறப்பட்டது. அவர்களின் கெட்ட நேரம் அப்பயணக்கப்பல் புயலில் சிக்கி பாறைகளில் இடித்து சேதமடைந்து இன்றைய ஜமாய்க்கா என்னும் தீவில் கரை ஒதுங்கியது. அதில் தப்பியவர்கள் இருபது பேரும், ஆபத்து காலத்தில் தப்பிக்க கப்பலில் கொண்டு செல்லும் சிறு படகில் ஏறி பயணத்தை தொடர்ந்தார்கள். சிறிய படகு, சரியான துடுப்புகள் இல்லை, தண்ணீர் இல்லை, உணவுப்பொருட்கள் இல்லை, அதன் விளைவாக வழியிலேயே இன்னும் சிலர் இறக்க, அந்த படகு கற்றடித்த திசைக்கு அலைகழித்து, இன்றைய மெக்ஸிகோவின் யுகேடன் என்னும் தீபகற்பத்தில் கடைசியில் கரை ஒதுங்கியது.

அங்கிருந்த மக்கள் ஸ்பானியோலாவில் இருந்த மக்களை போல் அல்லாது சற்று நாகரீகத்தில் முன்னேறியவர்களாக இருந்தார்கள். புகழ் பெற்ற மாயன் நாகரீகத்தின் எஞ்சியவர்கள். போர்குணம் கொண்டவர்கள். கொரில்லா முறையில் தாக்குதல் புரிவதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளாக சிதறிக் கிடந்தாலும், நாகரீகமுறை ஒன்றாகத்தானிருந்தது. அவர்களுக்குள் பிரிவு சண்டைகள் சர்வ சாதாரணம். (தலைத்தோங்கி இருந்த மாயன் நாகரீகத்தை பற்றியும் ஐரோப்பியரின் வருகைக்கு முன்பே அது எப்படி அழிந்து போயிருக்கலாம் என்பது பற்றியும் அடுத்த வாரம் பார்ப்போம்).

யுகேடனில் கடற்கரையில் சிறு படகில் கரை ஒதுங்கியவர்கள் மொத்தம் 12 பேர் மட்டுமே! அங்கு வாழ்ந்த ஒரு மாயன் பிரிவினர் அவர்களை பிடித்து தலைவனின் முன் நிறுத்த, தலைவனின் ஆணைப்படி ஊர் திருவிழாகோலம் பூண்டது. விழாவின் முடிவில் தங்கள் தெய்வத்திற்கு நன்றி சொல்லி, கேப்டன் வால்டிவியா உட்பட ஆறு பேரை பலியிட்டு அவர்களின் உடல்கள் ஊர் முழுக்க விருந்தாக வினியேகிக்கப்பட்டது.

அதில் மிகவும் மெலிந்து காணப்பட்ட ஜெரோனிமோ டி அகிலார் மற்றும் 5 பேரையும் விருந்தாக்குவதை அவர்கள் கொழுக்கும் வரை தள்ளிப்போடலாம் என முடிவானது. அதுவரையிலும் தங்களின் அடிமைகளாக இருக்கட்டுமே என தங்களுடன் வைத்து கொண்டார்கள்.

சிறிது நாட்கள் கழித்து அடிமையாக இருந்த ஜெரோனிமோ டி அகிலார்-ம் இன்னொருவனும், அந்த பிரிவினரிடமிருந்து தப்பி அவர்களின் எதிரிப்பிரிவின் தலைவனிடம் தஞ்சம் அடைந்தார்கள். அங்கு அவர்களின் தலை தப்பித்தது ஆனால் அங்கும் அடிமையாகத்தான் வாழ்க்கையை தொடர முடிந்தது. அந்த தலைவனுக்கு உண்மையாவனாக நடந்த கொண்டு, அங்கிருந்த ஒரு மாயன் குலப்பெண்ணையே மணந்து அவர்களின் மொழிகளை நன்கு அறிந்து, முழு நேர செவ்விந்தியனாக மாறிப்போனான் ஜெரோனிமோ டி அகிலார். இவன் தான் மெயின் லேண்டை ஆக்கிரமிக்க கியூபாவிலிருந்து பின்னாளில் வந்த ஆக்கிரமிப்பாளர்களின் முக்கிய மொழிபெயர்ப்பாளனாக இருந்தான்.

இந்த மொழி பெயர்ப்பு தான், செவ்விந்தியரிடம் முதலில் புரிந்து கொண்டு நட்பு பாராட்டவும், பின்பு அவர்களின் பிரிவுகளுக்குள் பிரிவினை அதிகரிக்கவும், கடைசியில் மொத்தமாக அனைவரையும் ஆக்கிரமிக்கவும் பேருதவியாக இருந்தது.

No comments:

Post a Comment