Friday 17 November 2017

பூரணியின் கவிதைகள்

பூரணியின் கவிதைகள் 

கவிதைகள் (எழுதிய காலம் – 1930-45)


நலங்குப்பாடல் 



இது தருணம் வருவீரே நாதா

என்னரும் நேசரே

பொன்னெனும் மாலை

தன்னிலே நலங்கிடவே (இ)

மாலையில் மேற்கே மறைந்திடு ரவியுடன்

நீல நிறமுடைய வானில்

கோலமுடைய பக்ஷி ஜாலங்கள் பறந்து

கூட்டினின் அடையுது பாரீர் (இ)

பசிய புல்வெளியில் பசுக்களும் மேய்ந்து

பசி ஒழித்து கன்றை நினைந்து

விசையுடன் வீட்டை நோக்கியே வந்திடும்

வேளையிதே வருவீரே (இ)

பூஜைக்குகந்த நல்ல பூ பழம் தேங்காய்

பூவையர் கரமதில் ஏந்தி

ஆலயம் செல்லும் அற்புத வேளையில்

ஆனந்த நலங்கிடுவோமே (இ)

***

நாகரிக ஓடம் 
















கணபதியே கலைமகளே இந்தக் கப்பல் செல்ல அருள் புரிவீர்.  கடுகியே முன் காலமதில் பெண்கள் உடை நகையும் இக்கால மடமயிலார் புடவையுடன் நகை விரைந்துரைக்க வரம் தருவாய்.

முடுகு

சுட்டி பட்டம் ஜடை

சிங்காரம் போச்சு

இஷ்டமுடன் தலையிலே

சிலைடு ரிப்பன் ஆச்சு

புஷ்பங்கள் தலையிலே

தைப்பதும் போச்சு

பிச்சோடா மேல் வளைத்துப்

பூ வைக்கலாச்சு

கம்மலுடன் வாளிகளும்

குண்டலமும் போச்சு

கமலங்களால் செய்த

டோலக்குமாச்சு

புல்லாக்கு நத்து நகை

இல்லாது போச்சு

பேசரியுடன் கிளாவர்

ஆசை நகை ஆச்சு

பசு மஞ்சள் பூசுவது

பழமையாய் போச்சு

பவுடர் முகம் தன்னில்

பூசிடவும் ஆச்சு

உட்கழுத்து அட்டிகை

செயினெல்லாம் போச்சு

மிக்க நகை அணிவதே

மௌடீகமாச்சு

காப்புடன் கொலுசுகளும்

கனத்த நகை போச்சு

கையிலே கடிகாரம்

சன்ன வளையாச்சு

கொட்டடிச் சேலைகளைக்

கட்டுவது போச்சு

புட்டாக்களோடு சரிகை

புடவைகள் உண்டாச்சு

கட்டமொடு காலிறங்கு

சேலைகளும் போச்சு

மட்டமான கார்டு கரை

டிக்கட் கரை யாச்சு

பெரிய கரைப் புடவைகள்

பழமையாய் போச்சு

பார்டரில் பூ புதுச்சேரி சில்காச்சு

பாதசரம் பட்டாடைகள்

பீலிகளும் போச்சு

பாவையர்கள் பாதமதில்

சிலிப்பர் இடலாச்சு

தண்ணீர் குடம் தூக்கும்

தருணியர்கள் இப்போ

டென்னிஸ் விளையாட

கிளப்புகள் உண்டாச்சு

ஏலேலோ இயற்கையதின் தன்மை எப்போழுதும் மாறுதலே

இதையறியா பல பெரியோர் கண்டு இகழுவதும் அறியாமை.

***


போஜனப் பாட்டு 



வித விதமான

விசித்திரப் பந்தலில்

இலை விரித்திருக்கு

போஜனம் செய்யவே

ராஜ ராஜாக்களே

நீர் வாரும்!

ஆசனங்களில் அமர்ந்து

ஆசையாய் உண்டிடும்

பளிங்கினால் பல மேஜை

பவளக்காலொடு குரிச்சி

பரிமாறுபவர் கனச் சுத்தம்

பரிசாரகரோ நளன் மட்டம்

பாதாம் கீர் பால் பாயாசம்

பிரமாதம் கேரளப் பிரதமன்

ஏதேதோ பல பரமான்னம்

எப்படிச் சொல்லுவ துபமானம்

சம்பா அன்னம் பூப்போல்

சுவை கூட்டும் பொன் பருப்பு

சாம்பாரும் தயிர்வடையும்

சாப்பிட உடனே வாரும்

கத்தரிக்காய் ரஸவாங்கி

காரமுள்ள கறிவகைகள்

கொத்தவரை அவரை காரட்

கோசுடன் பலபல காய்கள்

அவியல் பொரியல் துவையல்

வறுவல்களில் பல வகைகள்

புவியில் புகழ் படு துருவல்

பொங்கல் சட்னி கொத்சு

பொரிச்ச கூட்டில் ஆறுவகை

புளிச்ச கூட்டில் வேறுவகை

எரிசேரியுடன் புளிசேரி

எத்தனை கேரள வகைகள்

கர்னாடகா பிஸி பேளா பாத்

காரம்குறைந்த ஹுளி சொப்பு

ஆந்திர ஆயிட்டம் பல கண்டீர்

அதுவும் சாப்பிட உண்டு

கருவட வற்றல் குழம்பு

கண்கவர் கலரில் மோர் குழம்பு

கசக்கா பாவற்காய் பிட்டலை

கலந்திருக்கும் அதில் கடலை

பைனாப்பிள் பன்னீர் ரசங்கள்

சைனாக் கிண்ணியில் ஊற்றி

பருகிடுவீர் சுவைத்திடுவீர்

சுறுசுறுப்பாக்கிடும் மனதை

விளாமிச்சை கலந்த குளிர் நீர்

வெந்நீரும் குடித்திட உண்டு

வேண்டியதெதுவோ கேட்பீர்

விரைவாய் கிடைத்திடும் காண்பீர்

ஜிலேபி லட்டு பால் கோவா

குலாப் ஜாமூன் ஹல்வா

தில்லி பாதுஷா சுருள் பூரி

தித்திக்கும் மைசூர் பாகு

நாக்கில் போட்டால் கரையும்

கேக்குகள் எத்தனை வகைகள்

போக்கிட இனிப்பை பஜ்ஜி

பொங்கல் வடை வகை சொஜ்ஜி

மிக்சர் போண்டா சேவை

பிக்சர் பாப்கார்ன் பக்கோடா

சொச்சம் பலப் பல அயிட்டம்

சொல்வது மிகவும் கஷ்டம்

ஆடை தோய்த்த நல்ல தயிரும்

கூடை கூடையாய் பழவகையும்

ஐஸ்ஸுடனே வாசனை நீரும்

நைசாய் உண்டிட வாரும்

கைகளைக் கழுவவும் வெந்நீர்

ஹாங்கரில் கலர்கலர் டவல்கள்

காஷ்மீர் கம்பள விரிப்பு அதில்

சுவையாய் பீடா ட்ரே இருக்கு.

***

நடமாடும் நரகம்!

addicted-to-your-cellphone-you-re-not-alone-3a52e782b7

செல்பேசும் கருவியோடு

கையதுவோ காதினிலே

வாசலிது எனும் உணர்வை

மறந்த நிலை பரவசங்கள்…

யோசித்தல் எனும் செயலால்

எதிர்வருவோர் தெரிவதில்லை.

ஆக்ஸிடென்ட் அதிகரிப்பு,

அரிய உயிர் மதிப்பிழப்பு,

வேகப்பயணம் செய்

வண்டிகளால் உயிர்ச்சேதம்!

தாகத்தைத் தீர்க்கின்ற

குளிர் பானமதிலும் நச்சு!

மோகம் தருகின்ற

விளம்பரங்களில் மயக்கம்!

நாகரீக வாழ்வு தரும்

நாசமதோ கொஞ்சமல்ல!

(2009ல் எழுதப்பட்டது)

கவிதைகள்

ஆற்று வழி


Imageஅமராவதி பாயும் அழகியதோர் சிற்றூராம்
சிற்றூரின் ஆற்றுவழி சிந்தனைக்கு ஊற்றுவழி.
அடைத்திருக்கும் வேலியுள்ளே தழைத்திருக்கும் வெற்றிலையோ
மடைதிறக்க அருவியென வயல் நிறைந்து நீர் நிற்கும்
நீரோடு சேர்த்து சிறு மீன் வந்து துள்ளிவிழும்
துள்ளிவிழும் மீன் பிடிக்க தூரத்தே நாரை வரும்.
வெண்கழுத்துப் பொன் கருடன் வானத்தில் வட்டமிடும்.
சங்கெனவே வெண்கொக்கு தவமிருக்கும் நீர்த் தடத்தில்
முள்முருங்கையின் கிளையில் மாணிக்கம் பூத்திருக்கும்
கள்ளக் கரும் காகம் கண்சாய்த்துத் தேன் குடிக்கும்
கிள்ளை அருகில் வரக் காகம் அதைத் துரத்தும்
முள்ளுக் கிடைத்தாழை மஞ்சள்குளித்திருக்கும்
படர்ந்த செடியினிலே பச்சரிசி போல் அரும்பு
அடர்ந்த இலைகளிலே அழகழகாய்ச் செம்புள்ளி
மூக்குத்தி போன்ற மலர் மலர்ந்து மணம்வீசும்
தூக்கத்திலே கனவாய்த் தோற்றம் அளித்திருக்கும்
தங்கரளிப் பூ சிதறி தரைமுழுதும் பாய் விரிக்கும்
செங்கரும்பு பூத்திருக்கும் சாமரம்போல் ஆடிநிற்கும்
தென்னை பிளந்தளிக்கும் தந்தத்தின் பூச்சரங்கள்
அன்னையின் அன்பெனவே அமுதூட்டும் செவ்விளநீர்
பாறையிடை நாணல் பச்சைக்கொடி காட்டும்
கூரை கவிந்ததெனக் கார்முகில்கள் கூடிவரும்
ஆடிப்பெருக்கெடுத்து அழகு நதி பாய்ந்து வரும்
ஓடிவரும் செங்குழம்பில் உருண்டு வரும் பெருமரங்கள்
ஆடிப்பெருக்கினிலே ஆற்றுவழிக் காட்சியிலே
மோடிக்குப் பாம்பெனவே மனம் நிறைந்து தனை மறக்கும்
(கணியூர் அமராவதி ஆறு பற்றிய இக்கவிதை எழுதிய காலம் 1970. அவர் 1960-64 களில் வசித்த கணியூர் என்னும் சிற்றூர் பழநிக்கு அருகில் அமைந்தது.)
***
எழுத்து


கட்டிடத்தின் மாடியில்
கைப்பிடிச்சுவரை அண்டிய
கற்பாறைச் சந்தில்
விழுந்த ஒரு விதை
காலம் கடந்த நாளில்
செடியாக முளைத்துவிட்டது.
***
Image Courtesy:

http://uwalive.blogspot.in/

http://www.mdgfund.org

http://manakkalayyampet.blogspot.in

http://commons.wikimedia.org

http://media-cdn.tripadvisor.com

http://blog.gardenmediagroup.com

http://gorkhatimes.wordpress.com/

பூரணியின் காலத்தை வென்ற கதைகளை வாசிக்க…

பூரணி

No comments:

Post a Comment