Monday 14 June 2021

SEKKILAAR ,WROTE PERIA PURANAM ,DIED ON VAIKASI POOSAM

 

SEKKILAAR ,WROTE PERIA PURANAM ,DIED ON VAIKASI POOSAM 



சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.


பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.


பெயர்க்காரணம்

சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.[சான்று தேவை]


வரலாறு

கீழ்வருகின்ற சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம் எனும் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்ற நூலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நூலில் வருகின்ற சில செய்திகளையும், இந்த நூலின் ஆசிரியர் உமாதி சிவாச்சாரியார் என்பதையும், மா. இராசமாணிக்கனார் எனும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.


பிறப்பு

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர்[1] மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார்.[சான்று தேவை] இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர்.[1] இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.[1]


இளமைப் பருவம்

சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.


சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.


அமைச்சர் பணி

இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை செலுத்தியதாகவும், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.


மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.


திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்

புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.


பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.



மன்னன் சிறப்பு செய்தமை

சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானாக கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.



இராசமாணிக்கனார் ஆய்வு

சேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். மா. இராசமாணிக்கனார் அவரது பெரியபுராண ஆய்வு நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.[2]


அதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார்.[2] மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியை படித்ததும், அதற்கு சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளை பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார்.[2]


சேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார்.[2] இக்காலம் கிபி. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு.[2]


இயற்றியுள்ள நூல்கள்

பெரிய புராணம்

திருத்தொண்டர் புராணச் சாரம்

திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள்.[3]

தனி சன்னதி

உலகிலேயே சேக்கிழாருக்கு இரண்டு கோயில்களில் மட்டுமே தனி சன்னதி உண்டு, முதலாவது சேக்கிழார் பிறந்த ஊரான திருக்குன்றத்தூர் சிவன் கோயில், இரண்டாவது தேவகோட்டை நகரச் சிவன் கோயில்.


தெண்ணீர் வயல் தொண்டை நாடு நன்னாடு சான்றோர் உடைத்து என்னும் வாக்கிற்கிணங்க செல்வம்மலி குன்றத்தூரில் அவதரித்தார் சேக்கிழார். சேக்கிழாருக்கு பெற்றோர் இட்ட பெயர் அருண்மொழித்தேவர் என்பதாகும். பிறந்த குடிக்குப் பெருமை சேர்த்த காரணத்தால் கோவூர்கிழார் என வழங்கி அதுவே பின்னர் சேக்கிழார் ஆனது.

 சேக்கிழாரின் தந்தை பெயர் வெள்ளியங்கிரி என்பதும் தாயார் அழகாம்பிகை என்பதும் கர்ண பரம்பரைச் செய்தியாக உள்ளன. அவரது தம்பியின் பெயர் திருஞான சம்பந்தரின் திருப்பெயராகிய "பாலறாவாயர்' என்பதாகும். இளம் வயதிலேயே கல்வி, ஒழுக்கம், பக்தி ஞானம் ஆகியவற்றில் தலைசிறந்து காணப் பெற்றமையினால் இவரது புலமையும் புகழும் சோழ மன்னனின் செவிகள் வரை பாய்ந்தது. தக்கோரை அனுப்பி, வரவழைத்து கெüரவம் தந்து தலைமை அமைச்சராக்கி "உத்தம சோழப்பல்லவன்' என்னும் பட்டம் தந்து அதிகார உரிமைகளை வழங்கினான்.

 அமைச்சுரிமை பெற்ற சேக்கிழார் பெருமான் கும்பகோணத்துக்கு அருகில் தங்கினார். இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காத ஈசன் திருவடிகளை தினந்தோறும் காலையும், மாலையும் போற்றும் வண்ணம் திருநாகேசுரத்து ஈசன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார். சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சுரம் போலவே தமது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேச்சுரம் என்ற பெயரால் ஆலயம் அமைத்து தினசரி ஆறுகால பூஜைகள் செய்திட வேண்டுவன செய்தார்.

 மன்னன் சைவத்திலிருந்து மாற விரும்பியபோது சைவத்தின் பெருமையையும், சிவபெருமானின் பேரருளையும், அடியார்களின் சேவை மற்றும் தியாக வரலாறுகளையும் மன்னர் சற்று சிந்தித்தால் நலம் என்று எடுத்துரைத்தார் சேக்கிழார். மன்னனும் சேக்கிழாரின் அன்பில், எடுத்துச் சொல்லும் தாயன்பில் பெரிதும் உளம் வைத்து, அப்படியானால் இதனை விடச் சுவையான வரலாறும் உளதோ? எனக் கேட்டான். சேக்கிழாரும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்ந்த அற்புத நாயன்மார் பெருமக்களின் வரலாற்றினை சிறிது எடுத்துரைத்தார். தேசமும் மக்களும் நல்வழி செல்ல வேண்டின் தாங்கள் எனக்கு எடுத்துரைத்த இச்சிறப்பான தகவல்களை ஏன் ஒரு முழு நூலாக ஆக்கித் தரக்கூடாது என வினவினார்.

 தேசம் உய்வு பெற, சைவம் தழைத்திட ஈசனின் கட்டளையாகவே சேக்கிழார் அதனைக் கருதினார். அடியார்கள் வரலாற்றினை ஈசனருளால் பாடித்தருகிறேன் என உரைத்தார்.

 மன்னனும் மிக மகிழ்ந்து அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து தந்தார். சேக்கிழார் பெருமானும் தில்லையம்பதி சென்று ஆடல் வல்லானையும், அன்னை சிவகாமியையும் வணங்கி நூல் எழுத அருள் கேட்ட போது அம்பல வாணனே "உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்து அருளினார். சேக்கிழார் பெருமானும் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' எனத் தொடங்கி, "அடியார் புகழ் நின்றது உலகெலாம்' என நிறைவு செய்தார்.

 மன்னனும் மனம் மகிழ்ந்து அரங்கேற்றம் செய்திட தில்லைக்கு வந்தான். சைவ அடியார் பெருமக்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார் சேக்கிழார் பெருமான். நடராஜப் பெருமானுக்கு உகந்த சித்திரைக் திருவாதிரையில் தொடங்கி, சித்திரைத் திருவாதிரையிலேயே நிறைவு செய்தார்.

 திருக்கயிலையில் தொடங்கி, திருக்கயிலேயே நிறைவெய்துமாறு திருத்தொண்டர் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை வகை, தொகை நூல்களாகக் கொண்டு பதிமூன்று சருக்கங்களோடு 4286 பாடல்களாக அமைக்கப்பெற்று திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் அரங்கேற்றப் பெற்றது.

 மாமன்னன் அநபாயச் சோழன் சேக்கிழாரை யானை மீது அமரச்செய்து தான் அவர் பின்னால் அமர்ந்து தானே தன்னிரு கைகளால் அவருக்கு கவரி வீசி நன்றியினைப் புலப்படுத்தினார்.

 மன்னன் பணி தவிர்த்து, மன்றிலாடும் ஈசன் பணியே பணியாய்க் கொண்டு தில்லையிலே வாழ்ந்து தவநிலையிலமர்ந்து வைகாசிப் பூசத்திருநாளில் தில்லை நாதனின் திருவடிகளில் கலந்தார். தமிழைப் போற்றும் ஒவ்வொருவருக்கும் பெரியப் புராணத்தைப் பரவச் செய்வோம் எனும் உறுதி மொழியை இந்த நன்னாளில் ஏற்போம்

 - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்


No comments:

Post a Comment