Wednesday 6 April 2022

SUDHAKAR BIOGRAPHY

 


SUDHAKAR BIOGRAPHY

சுதாகர்....


நான் சின்னப்பையனா இருக்கும் போது சுதாகர் அப்படி ஒரு ஃபேமஸ்..கிழக்கே போகும் ரயில் வந்த நேரம்..ரேடீயோ சிலோனில் கோவில் மணி ஓசை தன்னை கேட்காத நாளே இருக்காது...எங்க அக்கா கல்யாணமாகி தன் மகனுக்கு 'சுதாகர்'னு பெயர் வச்சாங்க...

ஆந்திராவை பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த கலெக்டரின் மகன் சுதாகர் மாதிரி அதிர்ஷ்டசாலியும் கிடையாது. துரதிர்ஷ்டசாலியும் இங்கே கிடையாது. அதிர்ஷ்டசாலி எப்படின்னா அவர் மூஞ்சிக்கு அவருக்கு உடனே சினிமா சான்ஸ் கிடைச்சி எல்லா படமும் ஹிட்டானது. துரதிர்ஷ்டசாலின்னா ஹீரோவா நடிச்சு ஜெயிச்சும் ஒரு காமெடியனா மாற்றப்பட்டது....

சுதாகர் சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்ல படிச்சவர். படிக்கும் போது இவருக்கு ரூம்மேட்ஸ் யாருன்னா சிரஞ்சீவி, ஹரிபிரசாத். இவங்க மூணு பேரும் ஒரே ரூமில் தங்கி சமைச்சு சாப்பிட்டு, மணிஆர்டர் ஷேர் பண்ணி தன் வாழ்க்கையை சென்னையில் துவக்கியவர்கள். சிரஞ்சீவி நமக்குத்தெரியும். ஹரிபிரசாத் யாருன்னா ஸ்ரீப்ரியா நடித்த 'நட்சத்திரம்' படத்தில் சிவரஞ்சனின்னு பாடி நடித்தவர் தான். புதிய வார்ப்புகள் ஹிட்டானதும் பாரதிராஜா தெலுங்கில் எடுத்தார். பாக்யராஜ் ரோலில் ஹரிபிரசாத்தும், ரதி ரோலில் சுஹாசினியும் நடிச்சாங்க. ஹரிபிரசாத் பின்னாளில் வடிவுக்கரசியை திருமணம் செய்து டைவர்ஸ் பண்ணினார்.

மூன்று பேரில் முதலில் லக் அடிச்சது சுதாகருக்கு தான். எங்கேயோ


அவரை பார்த்த பாரதிராஜா ஆள் விட்டு அழைத்து அந்த சான்ஸை கொடுத்தார். சுதாகருக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் அப்போ வராது. பாக்யராஜுக்கு தெலுங்கு தெரிஞ்சதால அவர் மூலமா தமிழ் டயலாக் மாடுலேஷன் படிச்சி தெலுங்கில் எழுதி வைத்து படிப்பார். கிழக்கே போகும் ரயில் படு ஹிட். உடனே அதே ஜோடி 'இனிக்கும் இளமை'. அதுவும் ஓடியது. இதில் தான் விஜய்காந்த் வில்லனாக அறிமுகமானார்.

அடுத்த சூப்பர் ஹிட் 'மாந்தோப்புக்கிளியே'..படம் சுருளிராஜன் காமெடியால் பிச்சுக்கிட்டு போச்சு. தீபா, சுதாகர் நடிப்பும் நன்றாக இருந்தது. கிராமத்து படிக்காத அப்பாவி இளைஞன் பாத்திரத்துக்கு அவர் முகமும், பம்பை தலையும், ஒல்லியான உடல்வாகும் பர்ஃபெக்டா செட்டாச்சு..அதனால் அதிக கிராமப்படங்கள் தான் வந்தது. பொண்ணு ஊருக்கு புதுசு 'ஓரம்போ' பாடல் அன்னைக்கு வைரலான ஸாங்...பின் பாரதிராஜாவோட நிறம் மாறாத பூக்கள், பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள், தேவராஜ்-மோகனின் சக்களத்தி....இதெல்லாம் வெற்றி பெற்ற படங்கள்..

தைப்பொங்கல், ஆயிரம் வாசல் இதயம், சின்ன சின்ன வீடு கட்டி, கல்லுக்குள் ஈரம், எதிர் வீட்டு ஜன்னல், கரும்பு வில்...

சுதாகர் நடித்துக்கொண்டிருந்த அந்த காலத்தில் தான் கார்த்திக்கும், மோகனும், விஜய்காந்தும் என்ட்ரி. கிராமத்து இளைஞனுக்கு சுதாகரை விட விஜய்காந்த் செட்டானதால் இயக்குனர்கள் அந்த பக்கம் திரும்பறாங்க...மேலும் சுதாகர்-ராதிகா இஷ்யூ, சுதாகர்-ஜெயசித்ரா பிரச்சினைன்னு அவர் பெயர் மேலும் ரிப்பேராகிறது. இதில் தெலுங்குக்காரன் என்கிற முத்திரையும் குத்தப்பட்டு ஆந்திரத்திரையுலகத்தை நோக்கி கொண்டு போகப்பட்டது அவர் துரதிர்ஷ்டம்...

ஆந்திராவும் அவரை தமிழகம் போல் கொண்டாடவில்லை. சிறிய ரோல்களில் தம்பி, நண்பன் போல் நடித்தார். தமிழில் பூவே உனக்காக சார்லி நடித்தது போன்ற காமெடிக்கும், காமெடி கலந்த வில்லனுக்கும் அவர் பயன் பெற்றார். தன் குரலை மாற்றி பேசி காமெடி செய்தார். 

தன் பழைய நட்புக்களான சிரஞ்சீவி, ஹரிபிரசாத் நட்பில் சுதாகர் கூட்டு சேர்ந்து சிரஞ்சீவியை வைத்து 'யமுடுக்கி மொகுடு' என்கிற படத்தை எடுத்தார். இரட்டை வேடத்தில் சிரஞ்சீவி நடித்த அப்படம் சூப்பர்ஹிட்டானது..சூப்பர்ஹிட்டென்றால் அன்றைய அதிக வசூல் படம் இது. இதை தமிழில் ரீமேக் செய்யப்பட்ட போது அதில் சுதாகர் அதே ரோலை செய்தார். அது தான் ரஜினி நடித்து வெளியான அதிசய பிறவி...தெலுங்கில் மேலும் சில படங்களை தயாரித்தார் சுதாகர். ஆனால் அவை சுமாராக போக தயாரிப்பை நிறுத்திக்கொண்டார்.

சமீபத்தில் அவர் நடித்த சில தெலுங்கு காமெடிக்காட்சிகளை பார்த்தேன்..கொடுமையாக இருந்தது. ஹீரோவாக தமிழகமே கொண்டாடிய நடிகரா இவர் என தோன்றியது. ராமராஜன் போன்றோர் வேறு படங்களில் நடிக்காததன் காரணமும் விளங்கியது.

இப்போதும் எனக்கு ஆச்சர்யமான விஷயம் இந்த முகத்தை வைத்து நாம் நடிகனாகத்தான் வரவேண்டும் என எப்படித்தீர்மானித்தார்?..அதுவும் கிளாமர் சிரஞ்சீவி, ஹரிப்பிரசாத் போன்றோர் ரூம்மேட்டாக இருக்கும் போது..ஒரு மலையாளப்படத்தில் மோகன்லாலின் ரூம்மேட் சீனிவாசன் சூப்பர்ஸ்டாராகிடுவார். மற்ற ரூம்மேட் மோகன்லாலிடம் சொல்லி ஆச்சர்யப்படுவார்...அது மாதிரி...

இதைவிட ஆச்சர்யம் பாரதிராஜா கண்ணுக்கு சுதாகர் ஹீரோவாக தெரிந்தது...கார்த்திக்கை ஹீரோவாக பார்த்த கண்கள் தானே அது...பாத்திரத்துக்கேற்ற முகம் என தேர்ந்தெடுத்திருக்கலாம். பார்த்திபன் ஒரு இன்டர்வியூவில் சொல்லி இருப்பார். நடிக்க சான்ஸ்கேட்டு போகும் போதெல்லாம் சுதாகர் போன்றோர் ஸ்டைலாக அங்கு சான்ஸ் கேட்டு வருவார்களாம். அவர்கள் முன் தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என சந்தேகப்பட்டதாக சொன்னார்.

2005க்கு பிறகு அங்கும் வாய்ப்புகளில்லை...ஆள் ஒதுங்கிவிட்டார்..உடல் ரீதியான பிரச்சினைகளும் காரணம்..

அந்த பரஞ்சோதி...பரஞ்சோதி....

'மின்னல் ஒலியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ..'

மறக்கமுடியாத ஹீரோ தானே...

#செல்வன்

No comments:

Post a Comment