Sunday 27 March 2022

SIR ,SYED, AHEMED, KHAN ,GREAT SCHOLAR OF EDUCATION FOUNDER OF ALIGARH UNIVERSITY 1817 OCTOBER 17 - 1898 MARCH 27

 


SIR SYED AHEMED  KHAN ,GREAT SCHOLAR OF EDUCATION FOUNDER OF ALIGARH UNIVERSITY 1817 OCTOBER 17 - 1898 MARCH 27



சர் சையது அகமது கான். மேற்கத்திய அறிவியல் கல்விதான் இந்தியாவின் இன்றியமையாத தேவை என்று வலியுறுத்திய மிகச் சில இந்திய ஆளுமைகளில் ஒருவர். மே 24, 1877-ம் ஆண்டு தான் நிறுவிய, ‘முகம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் காலேஜ்’ எனும் கல்லூரியின் வளர்ச்சிக்காகவே உடல் பொருள், ஆவியை தியாகம் செய்தவர். அந்தக் கல்லூரிதான் உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக உருவெடுத்து நிற்கிறது.


இந்தியாவின் பழமையான மத்தியப் பல்கலைக்கழகமான இதில், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அனுமதி என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவின் மதநல்லிணக்கச் சின்னமான இங்கு 1881-ல் பட்டம் பெற்ற முதல் மாணவர் பாபு ஈஸ்வரி பிரசாத் என்ற இந்து. இங்கு முஸ்லிம்களுக்கென்று தனியாக இடஒதுக்கீடு குறித்து 1980-களில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற அமர்வின் நிலுவையில் உள்ளது. முஸ்லிம்கள் இடைக்கால நாகரிகம் மற்றும் கோட்பாடுகளில் இருந்து மாறாமல் இருந்த காலம் அது. இவர்களில் பெரும்பாலானோர், உலகில் நிகழ்ந்துவரும் மாற்றத்தை உணராமல், நாளை வரப்போகும் நவீன உலகை எதிர்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். இந்துக்கள், முஸ்லிம்களைவிட அப்போது முன்னேறியிருந்தனர். 1857-ன் துயர நிகழ்ச்சியைத் தொடர்ந்து சர் சையது அகமது கான் கல்வியின் தேவையை உணர்ந்தபோதும், கல்வியை ஓர் இயக்கமாக மாற்ற சில காலம் ஆயிற்று. இதைத்தான், அலிகர் இயக்கம் என நாம் வரலாற்று பாடங்களில் படிக்கிறோம்.


மதரசா என்றாலே முஸ்லிம்கள் மட்டும் பயிலும் இடம் என இன்றைய நிலை உள்ளது. ஆனால், இந்த நிலை காலத்தால் ஏற்பட்ட மாற்றம்தான். இடைக்கால இந்தியாவில், மதரசாக்கள் வெறும் கல்வி நிலையங்களாக மட்டுமே கருதப்பட்டன. அவற்றில், சாதி, மதப் பாகுபாடின்றி முஸ்லிம்கள், இந்துக்கள் என அனைவருமே கல்வி பயின்றனர். இந்நிலையில், தான் வகித்த அரசுப் பணிக்காக 1859-ல் முராதாபாத் சென்ற சர் சையது, அங்கு பாரசீக மதரசாவைத் தொடங்கினார். அவருடைய கல்வி இயக்கத்தின் முதல் பணியில், இந்துக்களும் முஸ்லிம்களும் பயன்பெறும் வண்ணம் உருது, அரபி,பாரசீகம், சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளையும் கற்பிக்க ஏற்பாடு செய்தார். இதன் தொடர்ச்சியாக உருவானதுதான் இன்றைய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.


சுமார் 467.6 ஹெக்டேர் பரப்பளவில் உறைவிடப் பல்கலைக்கழகமாக விரிந்திருக்கும் அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில், தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி, அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி, பலதொழில்நுட்பக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் பெண்களுக்கென்று தனியாகக் கல்லூரி உட்பட 38 நிறுவனங்கள் இருக்கின்றன. 37,804 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 300 பேர் வெளிநாட்டு மாணவர்கள். 109 துறைகளில் 2000 ஆசிரியர்கள் மற்றும் 7540 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒருகாலத்தில் நூற்றுக் கணக்கான தமிழர்களும் பயின்றுவந்தார்கள். இன்றைக்குத் தமிழகத்தில் முக்கியமான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் திருச்சி ஜமால் முகம்மது, புது கல்லூரி, கீழக்கரை கல்வி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களின் முன்மாதிரி அலிகர் பல்கலைக்கழகம்தான். இந்து தேசியவாதியான மதன் மோகன் மாளவியாவும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைப் பார்த்து காசியில் தொடங்கியதே பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்.



இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ல் தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் இவ்வியக்கத்தைப் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இதை, சையது மட்டும் ஆதரிக்கவில்லை. காங்கிரஸின் மூன்றாவது மாநாடு 1887-ல் சென்னையில் நடந்தது. இதில், கலந்துகொள்ள வேண்டாம் என சையது முஸ்லீம்களை கேட்டுக்கொண்டார். இதற்குச் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் (1857-ல்) ஏற்பட்ட சிப்பாய்க் கலவரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக ஆங்கில அரசால் பழிவாங்கப்பட்ட நிலையில், “சமூகத்தில் பின்தங்கியுள்ள முஸ்லிம்கள் போராட இது சரியான நேரம் அல்ல. அவர்கள் கல்வி மேம்பாட்டில்தான் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும்” எனக் காரணம் கூறினார் சையது. ஆனால், அந்த காங்கிரஸ் மாநாட்டில் முஸ்லிம்களும் கலந்துகொண்ட போதும், பெரும்பாலான இந்துக்களும் சையதின் கருத்தை ஆதரித்தனர்.


சையது இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். பொதுவாக, தங்களுடைய கல்விக்காகவே இந்தியர்கள் இங்கிலாந்து செல்லும் காலம் அது. ஆனால், இங்கிலாந்து கல்வியை நமது மக்களுக்குத் தருவதற்காக அங்கு செல்ல வேண்டும் என நினைத்தார் சையது. தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கே தந்தார். உண்மையான முன்னேற்றமும் சமூக விடுதலையும் கல்வியின் மூலமே சாத்தியம் என்று அவர் நம்பியதைப் பறைசாற்றுகிறது அலிகர் பல்கலைக்கழகம்.


(சர் சையது அகமது கானின் 196 ஆவது பிறந்த நாள் இன்று.)


- சாந்தினி பீ, அலிகர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் உதவி பேராசிரியர், தொடர்புக்கு: chandnibi@gmail.com




காதலுக்காகப் பெற்றோரையும், ஊரையும் விட்டு ஓடியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கல்வி பெறுவதற்காக ஓடியவர்களைப் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம். 1920-களில் பழனியைச் சேர்ந்த உசைன் நைனார் என்பவர், படிப்பதற்காகவே தன் ஊரை விட்டு ஓடிப்போயிருக்கிறார். படிப்பவர்கள் விவசாய வேலை செய்ய மாட்டார்கள் என்று அவரது குடும்பத்தினர் அஞ்சியதுதான் காரணம். கடைசியில், அவர் சென்று சேர்ந்தது உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.


அலிகரில் அரபி மொழி மற்றும் சட்டத் துறைகளில் முதுகலைப் பட்டங்கள் பெற்ற பிறகு, நைனார் பல நாடுகளின் உயரிய பதவிகளில் பணியாற்றினார். நைனாரின் அலிகர் கல்வி, அவரது நான்காவது தலைமுறையையும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் பயிலவும், பணியாற்றவும் அடித்தளம் வகுத்திருக்கிறது. நைனார் குடும்பம் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களில் நிகழ்ந்த நல்ல மாற்றங்களின் பின்னணியில் அவர்கள் பெற்ற அலிகர் கல்வி இருந்துள்ளது.


இன்றும், உபி அல்லது பிஹார் கிராமங்களில் வாழும் குடும்பத்தில் ஒரு மாணவருக்கு இப்பல்கலையில் அனுமதி கிடைத்துவிட்டால், அவரது குடும்பமே அந்த ஊரை விட்டு அலிகருக்கு வந்துவிடுகிறது. தன் பிள்ளையின் கல்விக்காகப் பெற்றோர் தம் விளைநிலங்களை குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, அலிகரில் வாட்ச்மேன் வேலை செய்வதை இன்றும் பார்க்கலாம். கல்வி வாய்ப்புகளின் வழியாகச் சமூக மாற்றத்துக்குக் காரணமான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், 1875-ல் சர் சையது அகமது கானால் ‘ஆங்கிலோ ஓரியண்டல் முகம்மதன் கல்லூரி’ எனும் பெயரில் நிறுவப்பட்டது. இந்தச் சம்பவம், இந்திய வரலாற்றில் ‘அலிகர் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.


முகலாயர் ஆட்சிக் காலத்தில் ஆட்சி மொழியாகப் பாரசீகம் இருந்தது. அதன் பிறகு, ஆங்கிலேயர்கள் காலத்தில் 1842-ல் ஆங்கிலம் ஆட்சிமொழியானது. அதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்த நிலையை மாற்றி, ஆங்கிலம் கற்பதால்தான் முன்னேற முடியும் என்பதை சர் சையது முஸ்லிம்களுக்கு உணர்த்தினார். அரபி மற்றும் மறைக் கல்வியைத் தவிர ஆங்கிலம், அறிவியல் என மற்ற பாடங்களைப் படிப்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என இருந்த காலம் அது. இதனால், சர் சையது அகமது கான் ஒரு ‘காஃபிர் (முஸ்லிம் அல்லாதவர்)’ என அக்காலத்தில் முஸ்லிம் மெளலானாக்களால் ‘ஃபத்வா (மதக் கட்டளை)’ அளிக்கப்பட்டார். ஆனால், இன்று மெளலானாக்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தம் மத அடையாளமாக்கி பெருமை கொள்கின்றனர்.


மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில், ஆண்டொன்றுக்கு வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 40,000 மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். இங்கு கலை, அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட 100-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காகத் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் இந்துக்களும் படிக்கின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் மாணவர் ஒரு இந்து. இங்கு படிக்கும் இந்து மாணவர்களின் எண்ணிக்கை தொடக்கம் முதலே கிட்டத்தட்ட சரிபாதியாக இருந்துவருகிறது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இதற்கு அளிக்கப்பட்ட சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து உச்ச நீதிமன்ற வழக்காகி இன்னமும் சிக்கலில் உள்ளது.


- எஸ்.சாந்தினிபீ,அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர்.தொடர்புக்கு: chandnibi@gmail.com


அக். 17: சர் சையது அகமது கானின்


200-வது பிறந்தநாள்


No comments:

Post a Comment