Wednesday 22 August 2018

தூரத்து பச்சை - யோகராணி



தூரத்து பச்சை - 
யோகராணி

நோர்வேயில் வசந்த கால பருவம் வந்ததால், எங்கும் உற்சாகம் களைகட்டியது. நகர வீதி எங்கும் மக்கள் திரள் வழிந்தது. அங்காடி வியாபாரிகள் தோன்றி வீதி கரைகளில் கடைகளை பரப்பிவைத்து உள்ளங்களை ஈர்த்தனர்.

விழாக்களும் விருந்துகளும், பாடல், ஆடல் பரவசங்களும் என, எங்கும் மகிழ்வு மையம் கொண்டு துலங்கியது. ஆனால் அந்த ஆடம்பரமான வீடு மட்டும் அமைதியாக ஆள்நடமாட்டம் அற்று தெரிந்தது.

முகுந்தனோ மாடிக்கும் தரைக்குமென ஏறி இறங்கிக்கொண்டிருந்தான். சிந்தனை வயப்பட்டவனாக தோன்றியவன், தனக்குள்ளே உரையாடிக்கொண்டிருந்தான்.

அமலாவுக்கு என்ன நடந்தது? என்னோடு ஏன் இப்படி நடந்து கொள்கின்றாள்? சில மாதத்திலேயே நான் அலுத்து விட்டேனா..?
இன்று காலமை போனவள்.... .ஏன் இப்படி நேரம் ஆகுது.என்று முணுமுணுத்துக்கொண்ட முகுந்தன், பொறுமை இழந்தவனாய் தொலைபேசியில் கதைக்க முயன்ற போதும் அவள் அதை நிறுத்தி விட்டாள்.

முகுந்தன் சிலோனில் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவன். மட்டுவில் அவனது ஊர். விவசாயத்துக்கு ஏற்ற அந்த கிராமத்தில், வளமாக விளங்கிய குடும்பத்தின் மூத்த மகனாக இவன் இருந்தான்.

படிப்பில் விண்ணனாக இருந்த முகுந்தன், பல்கலைக் கழகத்தில் இணைந்து படித்துக்கொண்டிருந்த காலத்தில் நோர்வேயில் இருந்து அங்கு வந்த மாமன் பாலசிங்கம் தனது ஒரே மகள் அமலாவுக்கு இவனை கல்யாணம் பேசி, ஆவன செய்து, நோர்வேக்கு அழைத்து திருமணம் செய்து வைத்தார்.

வெளி நாட்டு மயக்கமும், மாமன் கொடுத்த பணமும் பெற்றவர்களை பேதலிக்க வைத்து பெரும் கனவுக்கு உட்படுத்தியதால், முகுந்தன் நோர்வே மாப்பிள்ளையாக நேர்ந்தது. அமலாவோ படிப்பை நிறுத்தி விட்டு தந்தையாரின் செல்வத்தில் புரளும் சொகுசுக்காரியாக துலன்குபவள். அவள் தமிழில் பேசுவதோ அபூர்வம். பார்ப்பதற்கு அழகி. ஆடம்பர தோற்றத்தோடு அலைபவள்.

அமலா முகுந்தனை மனம் விரும்பி, ஏற்று கொண்டாலும், சில மாதங்களில் அவளின் போக்கு அடியோடு மாறியது. அடிமையை பார்க்கும் நோக்கோடு, அவனை அவள் நடத்தவே, துன்பத்தில் தோய்ந்தவனாக அவன் தோற்றம் பெற்று, துவண்டு போனான்.

துரத்து பச்சையில் மயங்கி தன்னை தாரை வார்த்த பெற்றோரை எண்ணி அவன் இன்றுவரை புளுங்காத நாளே இல்லை எனலாம். அவனின் நட்பும் பரிவும் கலந்த நயவுரைகளை அவள் காது கொடுத்து கேட்பதாய் இல்லை. மனதில் கனிந்த நம்பிக்கையின் ஊற்று முற்றாக அடைபட்டு விட்டதாக அவன் உணர்ந்தான்.

அமலாவுக்கு பிடித்த விதமாய் உணவுகளை சமைத்து முடித்திட்டான். வலுவாய் பசிக்குது. சாப்பிடலாம் என்றால், அவள் தன்னை பார்க்காமல் சாப்பிட்டதென்று, ஒரு புது பிரச்சனை எடுப்பாள். பாப்பம் கொஞ்ச நேரம்....

தனக்குள் பேசிய முகுந்தனை தொலைபேசியின் அழைப்பு குறுக்கிடவே, சென்று கதைத்தான். மறுமுனையில் அமலாவின் தம்பிதான் கதைத்தான்.

அவனின் தமிழை விளங்கிக் கொள்வதென்றால் வில்லங்கமான விஷயம்.

"அக்கா டு டாக்கன் (இரண்டு நாள்) இங்கைதான் இருப்பா. மம்மிதான் சொல்லு எண்டு சொன்னது.ஒகே!"

என்றவன், தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டு அவசரமாக தொலைபேசியை துண்டித்து கொண்டான்.

இப்படி அவள் அடிக்கடி தாய் வீட்டில் தங்குவது வழமைதான். அதை அவன் விரும்பாவிட்டாலும், நடக்கும் சம்பவம்தான்.

இனி வீடு திரும்பும் போது கண்டு கொள்ள வேண்டுயதுதான். விரத்தி ததும்பிய பார்வையோடு, அவன் உணவருந்த ஆயத்தமானான். அவனின் ஆண்மையின் கொக்கரிப்பு உள் எழுந்து மோத, முகம் சிவந்தவனாய் செயல்பட்டான்.

அடுத்த மூன்று நாள் கடந்து வீடு திரும்பிய அகிலாவோடு அவளது நொஸ்க் தோழி லைலாவும் கூடவந்தாள்.அவளை கண்டாலே முகுந்தன் சினம் கொள்வது வழக்கம்.

காரை நிறுத்தி விட்டு துள்ளல் நடையோடு வந்த இருவரும் கும்மாள தொனியில், உரையாடி ஆர்பரிக்கவே, முகுந்தன் தனது அறைக்கு சென்று, கதவை சாத்திக்கொண்டான். அமலாவை அழகி என்று கூறி, லைலா அனைத்து கொள்வதும்,சிலபோது முத்தம் இட்டு கொள்வதும் முகுந்தனை கோபங்கொள்ள வைக்கும்.

குடிப்பழக்கம் உள்ள லைலாவின் நட்பை துண்டிக்குமாறு அமலாவிடம் அவன் வேண்டியும் அவள் அதை கேட்பதாய் இல்லை. தான் கொண்டுவந்த மதுகுப்பியை திறந்து குவளையில் ஊற்றிய லைலா,அதை அகிலாவுக்குப் பருக முயலவே அவள் அதை மறுத்தாள். துரத்துப்பட்டனர்....ஆடினார்....கூகுரல் இட்டனர்.

யன்னலுடாக இவற்றை எல்லாம் நோக்கிய முகுந்தன் கோபக்கனலாய் பறக்க யன்னலை அடித்து சாத்திக்கொண்டான். நீண்ட பொழுதை அங்கு களித்த தோழிகள் காரில் எரிக் கிளம்பி மறைந்த பின்னே, முகுந்தன் அறையை விட்டு வெளியே வந்தான்.

அன்று வெகு நேரம் கழிந்த பின்னே வீடு திரும்பிய மனைவியை எதிர் கொட்ட முகுந்தனின் முகத்தில் கோபம் தெரிந்தது.

அமலா! அந்த லைலாவின் சிநேகம் வேணாம் எண்டு எத்தினை தரம் சொல்லிபோட்டன். நீ திருந்த மாட்டியே!

உன்னோடை சேர்ந்து என வாழ்க்கையும் நாசமாய் போகுது. கொஞ்சம் யோசி?.

அவன் கதையை நிறுத்த முன் குறுக்கிடடவள். "இஞ்சை பார் எனக்கு ஒருத்தரும் உபதேசம் செய்ய தேவையில்லை. அத்தோடை நான் நிண்டு சண்டை பிடிக்க தயாரில்லை. நான் முந்த நாள் அபோஷன் பண்ணினனான். அதனாலை ரெஸ்ட் எடுக்க வேணும். படுக்க போறான்.........."

என்று கூறியவாறு, மாடிப்படி எறியவளை மறித்த முகுந்தன் "என்ன..என்ன நீ சொன்னனி! அபோஷன் செய்தநியோ, எவ்வளவு பெரிய விஷயம் அது! என்னை கேளாமல் அது எப்படி நீ செய்யலாம்....?"

குறுக்கிட்ட அமலா "ஒ மிஸ்டர்! இந்த நாட்டிலை ஒரு பெண் தனக்கு பிள்ளை வேணுமோ...இல்லையோ எண்டதை தீர்மானிக்கிற உரிமை இருக்கு! எனக்கு தேவை இல்லை அதாலை நான் அழிச்சேன். விளங்குதோ!." என்று கூறிவிட்டு அறைக்குள் சென்ற அகிலா கதவையிழுத்து ஓங்கிய ஒலியில் சாத்திக்கொண்டாள். முகுந்தனோ சோந்து போய் கதிரையில் விழுந்தான். சத்தமிட்டு கதறவேண்டும்போல் இருந்தது அவனுக்கு.

No comments:

Post a Comment