Sunday 24 January 2021

BANUMATHI ,THE PRIDE OF INDIAN CINEMA

 

BANUMATHI ,THE PRIDE OF INDIAN CINEMA






'சபாஷ்' சரியான போட்டி!

போட்டி, எல்லாத் தொழிலிலும் உண்டு. போட்டியிருந்தால் தான் வளர்ச்சி.

சினிமாவில், போட்டி, பொறாமைக்கு பஞ்சமில்லை. அன்றைய திரையுலகில், ஆரோக்கியமான போட்டியிருந்தன. அதனால், சிறந்த படங்கள் கிடைத்தன.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில், பத்மினி, வைஜெயந்திமாலா இருவரிடையே ஒரு நடனப் போட்டி.

'சபாஷ்... சரியான போட்டி...' என்று, பி.எஸ்.வீரப்பா சொல்லும் அளவுக்கு, அசத்தலான நடன போட்டி. நிஜத்தில், இரு நடிகையரும், சிறந்த நடனமணிகள். எனவே, நாட்டியம் ஆடி, மிரட்டியிருப்பர்.


இந்த நடன காட்சியால், இயக்குனர் வாசனுக்கு, புதிய தலைவலி ஏற்பட்டது.

'போட்டியில் நான் தோல்வியடைவதாக காட்டாதீர்கள்...' என்று, வைஜெயந்தி மாலாவின் அம்மாவும், பத்மினி தரப்பும் கோரிக்கை வைத்தது. அப்போது, ஒரு யுக்தி செய்தார், வாசன்.

போட்டியின் உச்சகட்டத்தின் போது, ஜெமினிகணேசனை குறுக்கே நுழைய விட்டு, நடனத்தை, 'ட்ரா'வில் முடித்தார்.

இதே போல ஒரு நடிப்புப் போட்டி, அன்னை படத்தில். பானுமதி-, சவுகார் ஜானகியிடையே உருவாகியது. யதார்த்தமாக நடந்த இந்த போட்டியை, இயக்குனர், கிருஷ்ணன் பஞ்சு எப்படி சமாளித்தனர்?

அம்மாவின் இரு மகள்களில், அக்கா பானுமதி, தங்கை சவுகார்ஜானகி. வசதிமிக்க வழக்கறிஞரின் மனைவியாகிறாள், அக்கா; வசதியை கொடுத்த இறைவன், வாரிசு கொடுக்கவில்லை. ஏழையை காதலித்தாள், தங்கை; அவளுக்கு, அழகான குழந்தை பிறக்கிறது. அவள் கணவன், ஒரு விபத்தில் கால் இழக்கிறான்.


தங்கையின் குழந்தையை தத்து எடுக்கிறாள், அக்கா. தங்குவதற்கு வீடு, வசதிகளை செய்து கொடுத்து, 'இந்த குழந்தைக்கு, அம்மா நீ தான் என்பதை, இனி எந்த நிலையிலும் அவன் அறியும்படி நடந்து கொள்ளக்கூடாது...' என்று, தங்கையிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.

அக்கா, மாடியில்; தங்கை, கீழே. கண் முன்னே குழந்தை வளர்கிறது. பெற்ற அம்மா, குழந்தையை நெருங்க விடாமல் கண்காணிக்கிறாள், வளர்ப்பு அம்மா. பெற்ற அம்மா, வளர்ப்பு அம்மா இருவருக்குமிடையே மனப் போராட்டம்.

குழந்தை, இளைஞனாகிறான். ஒருநாள், கடும் காய்ச்சலில் மாடியில் கிடக்கிறான். பெற்ற மகனை காணவும், அவன் நெற்றியில் திருநீறு பூசவும், இரவில், பின்பக்க வழியாக, யாரும் பார்க்காதவாறு மாடிக்கு போய், பூசும்போது, பார்த்து விடுகிறாள், அக்கா.

'செய்து கொடுத்த சத்தியத்தை மீறி, பிள்ளையை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறாயா, துரோகி...' என்று, தங்கையை திட்டி, இழுத்து போய் வெளியே விடுகிறாள்.


'பத்து மாதம் சுமந்தவள். கண் எதிரில் மகன் உணர்வற்று கிடப்பதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்...' என்று கதறுகிறாள், தங்கை.

இப்படி உணர்ச்சிமயமான காட்சியில் நடிக்கும்போது, பெற்ற அம்மா பாசத்தில் கதறும் காட்சியில், சவுகார் ஜானகி நடிப்பு பிரமாதமாக இருந்தது; பானுமதியும் சிறப்பாக நடித்திருந்தார்.

பெற்ற அம்மாவின் கதறலுக்கு தான் ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், தன் நடிப்புத் திறன் எடுபடாமல் போய் விடுமோ என்று அஞ்சினார், பானுமதி.

சவுகார்ஜானகி உணர்வுபொங்க நடித்துக் கொண்டிருந்த போது, தனக்கு இருமல் வந்துவிட்டது போல இரும ஆரம்பித்து விட்டார், பானுமதி. உடனே, இயக்குனர், 'கட்' சொல்ல வேண்டிய சூழல்.

அந்தக் காலத்தில், இன்று போல், 'டப்பிங்' செய்வது கிடையாது. படப்பிடிப்பின்போதே, 'லைவ்'வாக வசனத்தை பதிவு செய்வர். அதனால், அந்த காட்சியை மறுபடியும் எடுக்கும்போது, முதல், 'டேக்'கில் நடித்த அளவுக்கு, சவுகார்ஜானகியால் செய்ய முடியவில்லை.

நடிப்பில் போட்டி வந்து விட்டதை புரிந்து கொண்ட இயக்குனர்கள், ஒரு ஐடியா செய்தனர்.

பானுமதி, சவுகார்ஜானகி, இருவரின் உணர்வுப்பூர்வமான நடிப்பையும், தனித் தனி, 'ஷாட்'டாக எடுத்து இணைத்து, அவர்களின் திறமையான நடிப்பைப் பதிவு செய்தனர்.

அன்னை படம் பற்றி குறிப்பிடும்போது, 'எனக்கு ஒதுக்கப்பட்ட கதாபாத்திரம், கொஞ்சம் அசட்டுத்தனமாகவும், வில்லி போலவும் இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, நான் மிகவும் போராட வேண்டியிருந்தது. நான் ஒரு எழுத்தாளர் என்பதால், திரைக்கதையில் உள்ள குறைகள் கண்ணில் பட்டன.

'அதையெல்லாம் சரி செய்து, கொஞ்சம், 'பாலிஷ்' பண்ணி எழுத வேண்டி வந்தது. இதை தயாரிப்பாளரின் நல்லதுக்குத் தான் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன்...' என்று, தஞ்சாவூர் கவிராயருக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார், பானுமதி.

'அன்னை படத்தை, ஹிந்தியில் எடுக்க விரும்பினோம். பானுமதி போல, 'பர்பார்ம்' பண்ணக் கூடிய நடிகையைத் தேடினோம். நர்கீஸ், மறுத்து விட்டார். நிருபா ராய் என்ற நடிகையை, பானுமதி வேடத்தில் நடிக்க வைத்து, லாட்லா என்ற பெயரில் எடுத்தோம்.

'பானுமதியை போல, நிருபா ராயால் நடிக்க முடியவில்லை என்பது நிரூபணமானது. நடிகர் - நடிகையர் தேர்வு எந்தளவுக்கு முக்கியம் என்பது புரிந்தது. ஹிந்தியில், லாட்லா படம் தோல்வி...' என்று, 'ஏவி.எம்.60 சினிமா' என்ற தொகுப்பு நுால் சொல்கிறது.

பாடகியாக விரும்பிய பானுமதி, திரை நட்சத்திரம் ஆனது ஏன், எதனால்?


* சினிமா நட்சத்திரங்களின் சோப்பு என்பரே, அந்தச் சோப்பின் விளம்பரத்தில் நடிப்பதற்காக, ஒருமுறை பானுமதியை அணுகினர்.

'நான் அந்த சோப்பில் குளிப்பதில்லை. எனக்கு அந்த சோப்பு பிடிக்காது. நான் வாங்காத சோப்பை, வாங்குங்கள் என்று எப்படி சொல்ல முடியும்...' என்று கேட்டு, திருப்பி அனுப்பி விட்டார்.


— தொடரும்

சபீதா ஜோசப்




பாட்டுக் குயில் மனசுக்குள்ளே!

யார் என்னவாக வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதையெல்லாம் மேலே இருக்கிறவன் தீர்மானிக்கிறான். அவன் திரைக்கதைக்கு நாம் நடிக்கிறோம். பாட்டுக் குயிலாக வேண்டும் என்று ஆசைப்பட்டார், பானுமதி. அவரின் அம்மா, அப்பாவும் அதையே நினைத்தனர். பானுமதியின் ரத்தத்தில் கலந்திருந்தது, சங்கீதம்.

ஆந்திர மாநிலம், ஓங்கோல் நகரின் அருகிலுள்ள தெட்டாவரம் கிராமத்தில், செப்., 7, 1925ல், பானுமதி எனும் துருவ நட்சத்திரம், பொம்மராஜு வெங்கடசுப்பையா- - அம்மணி அம்மாள் தம்பதியின் மூத்த மகளாய் உதயமானார்.

பானுமதியின் அப்பா, ஜமீன்தார்; ஓங்கோல் நகரின் வருவாய் ஆய்வாளர். இதையெல்லாம் தாண்டி, இசையின் மேல் பெருங்காதல் கொண்டவர்.

தியாகராஜ சுவாமிகளின் பாரம்பரியத்தைச் சேர்ந்த, சின்னையா பந்துலுவிடம் முறைப்படி, கர்நாடக சங்கீதம் படித்தவர். தான் பெற்ற இசை இன்பத்தை, மனைவி, மக்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.


கணவனும் - மனைவியும், காலை, மாலை வேளைகளில், தியாகராஜ கீர்த்தனைகளை மனமுருக பாடி, சங்கீத சஞ்சாரம் செய்து கொண்டிருப்பர்.

இசை தம்பதியின் இரு மகள்களில், கண்ணுக்கு லட்சணமாக இருந்த மூத்தவளுக்கு, சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம், சங்கீதம் தான்.

எப்போதும், ஏதேனும் ஹிந்தி பாட்டு மற்றும் தெலுங்கு கீர்த்தனையை அவர் வாய் அசைப்போட்டபடி இருக்கும். மூத்தவளின் அழகும், காதில் தேனாக பாயும் குரலும் கேட்டு, அப்பாவுக்கு பெருமிதம்.

எந்த ஒரு பாடலையும், ஒருமுறை கேட்டால் போதும், தாள லயத்துடன், அதே பாவத்தோடு, பாடும் ஆற்றல் பெற்றிருந்தார், பானுமதி. மகளின் சங்கீத ஆலாபனை கேட்டு மகிழும் வெங்கடசுப்பையா, மகளை ஊக்கபடுத்த மறந்ததில்லை.

அலுவல் விஷயமாக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் போதெல்லாம், அன்றைய கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீத மேதைகளின், 'கிராமபோன் ரெக்கார்டு'களை வாங்கி வந்து, மகளுக்கு கொடுப்பார்.

இப்படி நாளொரு இசையும், பொழுதொரு பாட்டுமாக பானுமதியின் இளம் பருவம், இசையை கைகோர்த்து நடந்தன.

சுடர்விடும் சுட்டித்தனம் அவரிடம் சின்ன வயது முதலே தொற்றிக் கொண்டது. அவர் ஒரு நேர்காணலில், 'சின்ன வயதிலிருந்தே, எனக்கு எதைக் கேட்டாலும், அப்படியே அச்சு அசலாக மனப்பாடம் ஆகிவிடும்.

'புராண, இதிகாசக் கதைகள் கேட்பதிலும், சுலோகங்களை சொல்வதிலும் நான் காட்டிய ஆர்வத்தை பார்த்து, பள்ளிப் படிப்பிலும் நான் சிறந்து விளங்குவேன் என்று நினைத்தார், அப்பா...' என்றார், பானுமதி.

அப்பாவின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. பாடுவதில் கெட்டிக்காரியான தன் மகள், படிப்பிலும் நன்றாக பிரகாசிப்பாள் என்று, வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்த பள்ளியில் சேர்த்தார்.

அதேபோல, அடுத்த வீட்டு பண்டிதரிடம் சமஸ்கிருத ஸ்லோகங்கள் கற்றுக்கொள்ள அனுப்பினார்; அதையும் முறையாக, ஆழமாக பயின்றார்.

பானுமதிக்கு பாட்டும், படிப்பும் நன்றாக மனப்பாடமாகி வரும் காலகட்டத்தில், 12 வயதின் இறுதியில், ஒரு கண்டம்.

மகளை பெரிய பாடகி ஆக்காமல் ஓய்வதில்லை என்றிருந்த, வெங்கடசுப்பையா, நோய்வாய் பட்டு, படுத்த படுக்கையானார். தமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது. தான் கண் மூடுவதற்குள், மகளை மணக்கோலத்தில் பார்த்து விட நினைத்தார்.

அவரது அவசரத்துக்கு வந்த வரன்கள், இரண்டாம் தாரம், மூன்றாம் தாரமாகவும், ஊனமுற்றவருக்கும் பெண் கேட்டு வந்தனர். இதைக் கண்டு நொந்துப் போனார்.

'கிளியை வளர்த்தது குரங்கு கையில் கொடுக்கவா...' என்று கொதித்தார்.

'முதல்ல, உங்க உடம்பு குணமாகட்டும், அப்புறம் இதெல்லாம் பார்க்கலாம்...' என்று, கடிந்து கொண்டார், மனைவி.


பானுமதி - ராமகிருஷ்ணா தம்பதிக்கு, ஒரே மகன். பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால், மகனுக்கு, பரணி என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தனர். தங்கள் படப்பிடிப்பு நிலையத்துக்கு, 'பரணி ஸ்டூடியோ' என்றும், பட நிறுவனத்துக்கு, 'பரணி பிக்சர்ஸ்' என்றும் பெயர் சூட்டினர்.

மகன் பரணியை, மருத்துவம் படிக்க வைத்தனர். சினிமா ஸ்டுடியோ, இப்போது, பரணி மருத்துவமனையாக மாறி, சேவை செய்து வருகிறது.



தேடி வந்த வாய்ப்பு!

மகளை பெரிய பாடகி ஆக்காமல் ஓய்வதில்லை என்றிருந்த, வெங்கட சுப்பையா, நோய்வாய் பட்டு, படுத்த படுக்கையானார். தமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது. தான் கண் மூடுவதற்குள், மகளை மணக்கோலத்தில் பார்த்து விட நினைத்தார்.

'உங்க அவசரத்தாலே நம் பெண்ணோட வாழ்வை பாழாக்கிடாதீங்க...' என்று, மனைவி கடிந்து கொண்டதும், தன் முடிவை கை விட்டார்.

உடல் நலம் பெற்றதும், மகளின் ஜாதகத்துடன், தன் நம்பிக்கைக்குரிய ஜோதிடர் ராமையாவை சென்று பார்த்தார்.

ஜாதக ஏட்டைப் பார்த்து, மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும். பெரிய பாடகி ஆவாளா... திருமண யோகம் எப்படி இருக்கிறது என, சொல்லும்படி, வேண்டிக் கொண்டார், வெங்கட சுப்பையா.

கட்டம் போட்டு பார்த்தவர், 'உங்க மகளோட ஜாதகம் அமோகமா இருக்கு. இவள், கலையுலகில் மிகப்பெரிய இடத்தையும், அந்தஸ்தையும் அடைவாள். இவளோட விவாகம், 18 வயதில் தான் நடக்கும். அவள் விரும்பியபடியே எல்லாம் நடக்கும்...' என்று, ஜோதிடர் நல்வாக்கு சொன்னார்.

அப்பாவான அவருக்கு, ஏக சந்தோஷம்.

'கலையுலகில் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள், சரி; திருமணம், அவள் விருப்பப்படி நடக்குமா... அது தான் கொஞ்சம் இடிக்கிறது. நம் பேச்சை மீறாதவள், நம் சொல்லுக்கு மரியாதை தரும் பெண், நம்மை மீறி நடக்க மாட்டாள்...' என்று, தனக்குள் சொல்லிக் கொண்டார்.

வீட்டுக்கு வந்ததும், 'ஜோசியர் என்ன சொன்னார்...' என்றார், மனைவி.

'நம் பானு, பெரிய பாடகி ஆக போறா. கலையுலகில் கொடி கட்டிப் பறக்க போறா. அடுத்த வாரம், நான் மெட்ராஸ் போறேன். சினிமா சினேகிதரைப் பார்த்து, 'பெண்ண பாட வைக்க வாய்ப்பு இருக்கா'ன்னு, கேட்க போறேன்...' என்றார், மகிழ்ச்சி பொங்க.

தயாரிப்பாளர் நண்பரைப் பார்க்க, மகளுடன் சென்றார், வெங்கட சுப்பையா.

மகளின் குரல் வளத்தை, இனிமையை சிலாகித்தார்.

'ரொம்ப சந்தோஷம்... நல்ல வாய்ப்பு அமையும்போது பாட வெச்சுடலாம்...' என்றார், நண்பர்.

தன் சொல்லுக்கு மரியாதை கிடைத்த மகிழ்ச்சியில், 'ஒரு பாட்டு பாடிக் காட்டும்மா...' என்றார், மகளிடம்.

புது இடம், புது மனிதர்கள் முன் எப்படி பாடுவது... சற்று கூச்சத்துடனே பாடினார், குட்டிப் பெண், பானுமதி.

அங்கு அமர்ந்திருந்த பிரபல தெலுங்கு இயக்குனர், சி.புல்லையா, கை தட்டி, 'அருமையாக பாடுகிறாள். இப்படி பாடி நடிக்கிற வேஷத்துக்கு தான், ஒரு புதுமுகத்தை தேடிக் கொண்டிருந்தேன். இதோ கிடைத்து விட்டாள். என் படத்தின், இரண்டாவது கதாநாயகி, இவள் தான்... உங்க மகளை, நடிக்க வைக்கிறீங்களா?' என்று கேட்டார்.

'நடிப்பா... என் மகளை, பாடகியாக பார்க்க தான் விரும்புகிறேன்...'

'மிஸ்டர் வெங்கட சுப்பையா... உங்க மகள் பாடினால், எத்தனை பேர் கேட்பர். ஒரு கச்சேரியில் பாடினால், அந்த ஊருக்கு மட்டும் தெரியும். சினிமாவில் பாடி நடித்தால், இந்தியாவுக்கே தெரியுமே... உங்க மகளின் பாட்டை இந்தியாவே கேட்க வேண்டாமா...' என்ற, இயக்குனரின் பேச்சு, பானுமதியின் அப்பாவை யோசிக்க வைத்தது.

அவரது தயாரிப்பாள நண்பரும் பரிந்துரைக்க, சம்மதம் கொடுத்தார்.

சினிமாவில் நடிப்பதில் ஆர்வமில்லாத போதும், அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, தலையாட்டினார், இளம் பெண் பானுமதி.

'கோல்கட்டாவுக்கு புறப்பட்டு வந்திருங்க... அங்கே தான் படப்பிடிப்பு. பிரபல நடிகை புஷ்பவல்லியின் தங்கை வேஷம், உங்க மகளுக்கு... மாதம், 150 ரூபாய் சம்பளம்...' என்றார், இயக்குனர் புல்லையா.

'சம்பளம் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. என் மகளை நிறைய பாட்டு பாட வைங்க...' என்று கேட்டுக் கொண்டார், வெங்கட சுப்பையா.

கோல்கட்டாவில், வரவிக்ரேயம் தெலுங்கு பட, படப்பிடிப்பு துவங்கியது.

13 வயது பானுமதி, அறியாத பெண் காளிந்தியாக, தியாகராஜரின், 'பலுகவேமி நாதெய்வமா' கீர்த்தனையை பாடி, நடித்தார்.

படத்தில் ஒரு சோகமான கட்டம். அதில் அழுது கொண்டே நடிக்க வேண்டும். அழுது பழக்கமில்லாத செல்வச் சிறுமி, நடிப்பது எப்படி என, விழித்தார்.

எப்படியெல்லாமோ சொல்லி காட்டியும், அழுவது போல் அவரால் செய்ய தெரியவில்லை என்றதும், கோபத்தில் கண் சிவக்க, கத்தினார், இயக்குனர். அதைப் பார்த்த பானுமதி, அழ ஆரம்பித்து விட்டார். அவரது நிஜ அழுகை, அப்படியே படமானது.

'உன்னை அழ வைக்கத்தாம்மா அப்படிக் கத்தினேன். உன் மேலே கோபமோ, வருத்தமோ இல்லே...' என்று, 13 வயது நட்சத்திரம் பானுமதியை, சமாதானப்படுத்தினார், இயக்குனர்.

கடந்த, 1939ல் படம் வெளியானது. 'பானுமதியின் பாட்டும் பிரமாதம், நடிப்பும் பிரமாதம்...' என, பத்திரிகைகள் பாராட்டின. படத்தின் மாபெரும் வெற்றியால், அடுத்து, நான்கு படங்களின் வாய்ப்புகள் தேடி வந்தன.

புது நிபந்தனை போட்டார், வெங்கட சுப்பையா.


சென்னை, சாலிகிராமத்தில், டாக்டர் பி.பானுமதி ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் என்ற பெயரில், பள்ளியை நிறுவி, அதன் மூலம் ஏழை குழந்தைகளுக்கு, இலவசமாக கல்வியை வழங்கினார். இப்படி, பல நற்பணிகளை செய்துள்ளார், பானுமதி.


No comments:

Post a Comment