Friday 3 January 2020







எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (4)
December 1, 20170
cleo

அங்கம் -4 காட்சி -1

பூரிப்பு அடைகிறேன், எனது
வலுவிலாச் சொற்கள் தீப்பற்ற வைத்தன,
புரூட்டஸ் நெஞ்சிலே!

காஸ்ஸியஸ்

பருத்த உடல் கொண்டோர் என் பக்கத்தில் வரட்டும்,
மென்மை மூளையோடு ஓய்வும் எடுப்போர் !
அதோ பார் ஆண்டனி!
பசித்த பார்வையும், நலிந்த மேனியும்
படைத்த காஸ்ஸியஸ் !
ஆழ்ந்து உளவிடும் அத்தகை மாந்தர்
அபாய மனிதர்கள்!

ஜூலியஸ் சீஸர்

வில்லியம் ஷேக்ஸ்பியர்

என்ன சாதித்து விட்டார் சீஸர்?
எந்த வெற்றியோடு ரோமுக்கு வருகிறார்?
அறிவில்லா மூடர்களே! கல் நெஞ்சர்களே!
பாம்ப்பியை நினைவில்லையா?
பாம்ப்பியின் புதல்வரைக் கொன்று, சீஸர்
ரோமுக்கு மீள்கிறார்!
மரத்தின் மீதும், வீட்டின் மீதும் ஏறி
மாவீரர் பாம்ப்பி வந்ததைப் பார்த்தீர்!
இரதத்தில் அவர் சென்ற போது,
தைபர் நதி தாளமிட வில்லையா?
புத்தாடை அணிந்து சீஸரை வரவேற்பதா?
விடுமுறை என அறிவித்துப்
பாம்பியின் குருதியில் மிதித்த
பாவி மனிதர் சீஸரை வரவேற்பதா?
பாதை யெல்லாம் வண்ணமலர் வீசுவதா?
ஒழிந்து போவீர்! ஓடிச் செல்வீர்!
உமது வீட்டில்
மண்டி யிட்டு மன்னிப்புக் கேட்பீர்!

[மாருல்லஸ் பாம்ப்பின் அனுதாபி]

ஓடுவீர்! கூடுவீர் ! நல்லோரே!
நாடுவீர் தைபர் நதிக்கரை!
கண்ணீர் விடுவீர், நதியில் கலந்திட,
ஆறாய்ப் பெருகிச் சங்கமம் அடைய!
நிறுத்துவீர் சீஸரை வரவேற்கும்
தெரு விழாக்களை!
சீஸர் சிலைக்குப் பொன்னாடையா?
நீக்குவீர் அதைச் சீக்கிரம்!
முளைத்தெழும் சீஸரின் சிறகை
அறுத்து விடுவீர் !
கீழே விழட்டும் ஈசல்!
அடிமையாய் நாம் உழல
வானில் எப்படிப் பறப்பார் சீஸர்?

[ஃபிளாவியஸ் பாம்ப்பின் அனுதாபி]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

Julius Caesar Arrives in Rome

நாடகப் பாத்திரங்கள்:

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

நேரம், இடம்:

பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி.

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் வரவேற்கும் பொதுமக்கள்

காட்சி அமைப்பு: ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் கையை உயர்த்தி அசைத்துக் கொண்டு குதிரை வாகனத்தில் ரோமாபுரிக்குத் திரும்பி வருகிறார். ஒரு ஓரத்தில் பாம்ப்பியின் அனுதாபிகள் சீஸருக்கு எதிராக உரையாற்றி விழாக்களைத் தடை செய்து வருகிறார்கள். சீஸரின் பகைவர் மற்றும் செனட்டர் சிலர் அடுத்தொரு பகுதியில் சீஸர் வரவேற்பைத் தடை செய்து வருகிறார்கள். ஜோதிடன் ஒருவன் வரப் போகும் அபாயத்தை சீஸருக்கு எச்சரிக்கை செய்கிறான். கல்பூரினியா, ஆண்டனி, புரூடஸ், காஸ்ஸியஸ், காஸ்கா ஆகியோர் கூட்டத்தில் காணப் படுகிறார். சீஸர் இரதத்திலிருந்து கீழிறங்கி கல்பூர்ணியாவிடம் வருகிறார்.



ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன், கைகளை நீட்டி] கண்ணே! கல்பூர்ணியா! உன்னைக் காண வந்து விட்டேன். உன்னைப் பிரிந்து எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன? எனக்கே மறந்து விட்டது.

கல்பூர்ணியா: [சீஸரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் பெருக] என்னை மறந்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்பது எப்படி நினைவில் இருக்கும், உங்களுக்கு? நான் புறக்கணிக்கப் பட்ட மாது! உங்களுக்கோ அடுத்தடுத்துப் பல போர்கள்! அடுத்தடுத்து பல நாடுகள்! அடுத்தடுத்துப் பல மாதர்கள்! என்னை எப்படி நினைவிருக்கும் உங்களுக்கு? நாளும், கிழமையும் நினைவில் தங்காத உங்களுக்கு எப்படி மாதம், வருடம் ஞாபகம் இருக்கும்? மெலிந்து போன என் உடம்பு கூட உங்களுக்குத் தெரிவில்லை!
நீங்களோ தலை வழுக்கையாகி வயதான வாலிபராய்க் காணப்படுகிறீர்!



ஜூலியஸ் சீஸர்: வயதான வாலிபரா நான்? நல்ல கணிப்பு, கல்பூர்ணியா! .. சரி சரி! பார் ஆடவர் நிர்வாணப் பந்தயம் தொடங்குகிறது! அதோ ஆண்டனி ஓடிவரும் பாதையில் நில்! … ஆண்டனி! என்னைப் பார்!

ஆண்டனி: அழைத்தீரா என் மதிப்புக்குரிய அதிபதி அவர்களே?

ஜூலியஸ் சீஸர்: ஆமாம் ஆண்டனி! ஓடிவரும் வேகத்தில் உனது கை, கல்பூர்ணியா மீது படட்டும்! நம் மூதாதையரின் பண்டை நடப்புப்படி, நிர்வாண ஆடவர் புனித விரட்டலின் போது மலடியர் மீது கரங்கள் பட்டால், அவரது மலடு நீங்கிச் சாபம் ஒழிந்து போய்விடும்!

கல்பூர்ணியா: [உரத்த குரலில் சினத்துடன்] பல்லாண்டுகளுக்குப் பிறகும் என்னை மலடியெனப் பழி சுமத்தும் உங்கள் பழக்கம் இன்னும் போக வில்லையே! ரோமானியர் முன்பாக என்னை மீண்டும் மலடி என்று முரசடிக்கலாமா? [அழுகிறாள்]. .. ஆண்டனி! என்னருகில் வராதே! உன் கையால் என்னைத் தொடாதே! என் மலட்டுத் தன்மை உன் முரட்டுக் கரங்கள் படுவதால் நீங்காது! போதும் உமது மூட நம்பிக்கை! [சீஸரிடமிருந்து விலகிக் கொள்கிறாள்]



ஆண்டனி: [முறுவலுடன்] என் அதிபதி சீஸர் சொல்லி விட்டார். அதை நிறைவேற்றுவது என் பணி!

Caesar & Calpurnia in Rome

[கூட்டத்திலிருந்து சீஸர், சீஸர் என்றோர் உரத்த குரல் கேட்கிறது]

ஜூலியஸ் சீஸர்: [காதைத் திருப்பி, கவனமுடன்] யாரென் பெயரைச் சொல்லி அழைப்பது?

காஸ்கா: நிசப்தம்! அமைதி! யாரோ அழைக்கிறார், சீஸரை? அமைதி! அமைதி!

ஜூலியஸ் சீஸர்: கூட்டத்தில் யாரென்னைக் கூப்பிடுகிறார்? குரலில் ஏதோ சோகத் தொனி ஒலிக்கிறது! யாரங்கே? அவரை என் முன்னே அழைத்து வா!

ஜோதிடன்: எச்சரிக்கை உமக்கு! வருகிற மார்ச் 15 ஆம் தேதி!

ஜூலியஸ் சீஸர்: நீ என்ன சொல்கிறாய்? சரியாகக் காதில் விழவில்லை! மீண்டும் ஒருமுறை சொல்!

ஜோதிடன்: கவனம், வருகிற மார்ச் 15 ஆம் தேதி! எச்சரிக்கை உமக்கு!

ஜூலியஸ் சீஸர்: [புறக்கணிப்புடன்] அவன் கனவு காண்பவன்! ஒதுக்கித் தள்ளுங்கள் அவனை!



காஸ்ஸியஸ்: புரூட்டஸ்! மலடிப் பெண்களை நிர்வாண வாலிபர் அடிக்கும் வேடிக்கையை நீங்கள் பார்க்கப் போக வில்லையா?

புரூட்டஸ்: அந்தக் கோமாளித்தனத்தை நான் பார்க்கப் போவதில்லை! எனக்கு வேலைப் பளு மிகுதி. சீஸரை நான் வரவேற்று நேராக உரையாட வேண்டும்.

காஸ்ஸியஸ்: நீங்கள் முன்போல் இல்லை இப்போது! உங்களிடமிருந்த பரிவும், பாசமும் தற்போது மைத்துனன் என்மீதில்லை! நீங்கள் ஒதுங்கிச் செல்வதை நான் பார்த்தேன். என்னைப் புறக்கணிக்கக் காரணம் என்ன, புரூட்டஸ்?

புரூட்டஸ்: காஸ்ஸியஸ்! நீ ஒரு பயங்கரவாதி! என்னை நீ அண்டுவதே ஏதோ ஒரு சுயநலத் தேவைக்கு! எனக்குத் தெரியும் அது! ஆனால் உன் உள்மனதை அறிவது கடினம். என்ன வினை புரிய என்னை வசப்படுத்துகிறாய்?

காஸ்ஸியஸ்: புரூட்டஸ், பேரதிபதி சீஸர் ரோமாபுரிக்கு வந்திருப்பது ஏனென்று தெரியுமா? ரோம் ஏகாதிபத்தியத்துக்குச் சக்கரவர்த்தியாக! நம்மை யெல்லாம் அடிமையாக்க! ரோமை ஏகாதிபத்திய நாடாக்க!

[அப்போது சீஸரைச் சுற்றிலும் நிற்கும் கூட்டத்தின் ஆரவாரம் கேட்கிறது]

புரூட்டஸ்: [சட்டெனத் திரும்பி] என்ன கூக்குரல் அது? ரோமானியர் சீஸரை வேந்தராக்கத் தேர்ந்தெடுக்கிறார் என்று ஓர் அச்சம் எழுகிறது எனக்கு.



காஸ்ஸியஸ்: அப்படியானால் அதை நாம் தடுக்க வேண்டும் புரூட்டஸ்! சீஸர் வேந்தராவது உங்களுக்கும் பிடிக்க வில்லை என்று தெரிகிறது எனக்கு! என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது! எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ராவைத் திருமணம் புரிந்தபின், சீஸர் ·பாரோ மன்னர் பரம்பரையாகி விட்டார்! ·பாரோ மன்னர் போல் கடவுள்களில் ஒருவராகி விட்டார்! மேலும் ·பாரோ பரம்பரையில் ஓர் ஆண்மகவைப் பெற்றுக் கொண்டு விட்டார்! தற்போது ரோமாபுரியில் அவரைக் கடவுளாகவே வணங்கி வருகிறார்! நான் குனித்து வளைந்து அந்த சீஸருக்கு வணக்கம் செய்ய வேண்டும்! சீஸர் நீட்டி நிமிர்ந்து தலை அசைத்து என்னை ஆசீர்வதிப்பார்! எனக்குத் தெரியும் அவரது நோயைப் பற்றி! ஸ்பெயினில் போரிடும் போது காக்கா வலிப்பு வந்து வாயில் நுரை தள்ளி, அந்த கடவுள் தரையில் வீழ்ந்தார்! துடித்தார்! புரண்டார்! மனிதர் மடிந்தாரா? அதுதான் கிடையாது. விழுந்தும், விழாமலும், மடிந்தும் மாளாமலும் வாழும் நோயாளி சீஸர். நோயாளி சீஸரா நமக்கு தேவன்? நமக்கு வேந்தன்?

[மறுபடியும் கூட்டத்தின் ஆரவாரமும், கைதட்டலும் கேட்கின்றன]

புரூட்டஸ்: மீண்டும் ஆரவாரம், கைதட்டல்! சீஸருக்குப் புதுப்புது விருதுகள் கிடைக்கின்றன என்று நினைக்கிறேன். பாராட்டுகிறேன் அவரை! நேசிக்கிறேன் அவரை!

காஸ்ஸியஸ்: பரிசுக்கும், பதவிக்கும் உயிரைக் கொடுப்பவர் சீஸர்! ரோமாபுரிக்கு ஏகாந்த வேந்தனாவதே அவரது குறிக்கோள்! சீஸரின் பிரதமச் சீடர் ஆண்டனி அதைத்தான் செய்வார்! ஆண்டனியின் உன்னத அதிபதி சீஸர் அதைத்தான் நாடி வருகிறார்! புரூட்டஸ்! அதை நான் தடுப்பேன்! நிச்சயம் தடுப்பேன்! அதை நீங்களும் தடுப்பீரா? சீஸர் என்னும் பூத மனிதர் நம்மை எல்லாம் மிதிக்க இடம் கொடுக்கலாமா?

புரூட்டஸ்: மெய்யாக நீ என்னை நேசிப்பது தெரிகிறது எனக்கு! மெய்யாக என் உதவியை நீ நாடுவது புரிகிறது எனக்கு! நீ சொல்லியதில் உண்மை இருக்கிறது! சீஸரின் போக்கு வரவேற்கத் தக்கதாக இல்லை! ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன்! கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டருக்கு நிகராக ரோமாபுரியில் தோன்றியவர் சீஸர்! அவருக்கு இணை அவரே! அவரை ரோமாபுரியின் அதிபதியாகப் பெற்றதில் நான் பெருமைப் படுகிறேன். உனது கருத்துக்களைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும். உனது கூற்றுக்களை ஒருவர் ஒதுக்கவும் முடியாது! அதுபோல் ஒப்புக் கொள்ளவும் முடியாது! எனக்கு அவகாசம் தேவை!

காஸ்ஸியஸ்: மிக்க மகிழ்ச்சி புரூட்டஸ்! எனது வலுவற்ற சொற்கள் உங்கள் வைர நெஞ்சில் தீப்பொறி உண்டாக்கியதே போதும். ஆனால் அந்த தீப்பொறி அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வீர். பண்பு மிகும் புரூட்டஸ்! சீக்கிரம் முடிவு செய்யுங்கள்! சீஸர் முடிசூடி ரோமின் வேந்தனாய் ஆசனத்தில் அமரக் கூடாது! நாம் அதைத் தடுக்க வேண்டும்! உடனே நிறுத்த வேண்டும்! நாமெல்லாம் அதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும்.

++++++++++++++++++

அங்கம் -4 காட்சி -1 பாகம் -2

புரூட்டஸ்!
விழும் நோய் சீஸருக் கில்லை!
உனக்கும், எனக்கும் உள்ளது!
உத்தமன் காஸ்கா வுக்கும் உள்ளது!

காஸ்ஸியஸ்

குறுகிய நம் நாட்டின்மேல்  காலைப் பரப்பி,
பெரும் பூதம்போல் நிற்கிறார் சீஸர்!
நீண்ட கால்களின் கீழ் நடந்து நம்,
பிரேதக் குழிகளை எட்டிப் பார்க்க வைப்பார்!
விதிக்கு மனிதர் சில வேளையில்
அதிபதியா யிருப்பார்!
அருமை புரூட்டஸ் ! தவறு,
நாம் பிறக்கும் போதிருக்கும்
விண்கோளிட மில்லை! நம்
வினைக்கு நாமே காரண கர்த்தா!

காஸ்ஸியஸ்

ஆண்டனி !
காஸ்ஸியஸைக் கண்டு அஞ்ச வில்லை நான்!
சீஸர் என்னும் பெயர் அச்சம் ஊட்டுவதா?
காஸ்ஸியஸ் போல் விரைவில் யாரை
ஒதுக்க வேண்டும் என்றறியேன்! காஸ்ஸியஸ்
மெத்தப் படித்தவன்! உற்று நோக்குவன்!
மனிதர் போக்கை நுணுக்கி ஆய்பவன்!
நாடகம் விரும்பான்! பாடலைக் கேளான்,
நகைப்பது அவன் அபூர்வம்! நகைப்பினும்
தன்னை ஏளனப் படுத்தும் தன்மைதான்!
அமைதியில் ஆறாது அவனது இதயம் !
அத்தகையோர் ஆதலால் அபாய மாந்தர்!

ஜூலியஸ் சீஸர்

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

நேரம், இடம்:

பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி.

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் பொதுமக்கள்

காட்சி அமைப்பு:

ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் கையை உயர்த்தி அசைத்துக் கொண்டு குதிரை வாகனத்தில் ரோமாபுரிக்குத் திரும்பி வருகிறார். ஒரு ஓரத்தில் பாம்ப்பியின் அனுதாபிகள் சீஸருக்கு எதிராக உரையாற்றி வருகிறார். சீஸரின் பகைவர், சில செனட்டர்கள் அடுத்தொரு பகுதியில் சீஸர் வரவேற்பைத் தடை செய்து வருகிறார். ஜோதிடன் ஒருவன் வரப் போகும் அபாயத்தை சீஸருக்கு எச்சரிக்கிறான். கல்பூரிணியா, ஆண்டனி, புரூடஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, ஒரு ஜோதிடன் கூட்டத்தில் காணப் படுகிறார். சீஸருக்கு மார்ச் 15 ஆம் நாள் வரப் போகும் அபாய எச்சரிக்கையை ஜோதிடன் உரக்கக் கூறுகிறான்! அவன் கனவு காண்பவன் என்று ஒதுக்கிறார் சீஸர்! அவருடைய நிழலில் ஒளிந்து கொண்டு சில சதிகாரர் ஓர் பயங்கர நிகழ்ச்சிக்கு விதையிடுகிறார்.

காஸ்ஸியஸ்: மிக்க மகிழ்ச்சி புரூட்டஸ்! வலுவற்ற எனது சொற்கள் உங்கள் வைர நெஞ்சில் தீப்பொறி உண்டாக்கியதே போதும். ஆனால் அந்த தீப்பொறி அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வீர். பண்பு மிகும் புரூட்டஸ்! சீக்கிரம் முடிவு செய்வீர்! சீஸர் முடிசூடி ரோமின் வேந்தனாய் ஆசனத்தில் அமரக் கூடாது! நாம் அதைத் தடுக்க வேண்டும்! உடனே நிறுத்த வேண்டும்!



புரூட்டஸ்: ஆரவாரம் குறைந்து விட்டது, அரங்கத்தில். அதோ சீஸர் எழுந்து வெளியே வருகிறார்.

காஸ்ஸியஸ்: புரூட்டஸ்! கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை நாமறிய வேண்டும்! சீஸரை முந்திக் கொண்டு காஸ்கா வருகிறான்! அவனைப் பிடித்து நம்பக்கம் இழுக்க வேண்டும். கைதட்டலுக்கும், எதிரான கூச்சலுக்கும் என்ன காரணம் என்று தெரிய வேண்டும். காஸ்கா கையைப் பற்றி விக்கென இழுப்பீரா புரூட்டஸ்?

புரூட்டஸ்: நிச்சயம் செய்கிறேன். ஆனால் சீஸரை பார்த்தாயா? கோபக் கனல் அவர் கண்களில் சுடர்விட்டு எரிகிறது! பின்னால் வரும் சீஸரின் ஆட்டு மந்தை பொறுமை யிழந்து ஏமாந்த முகத்துடன் தொடர்கிறது! கல்பூர்ணியாவின் கன்னங்கள் ஏன் வெளுத்துப் போயுள்ளன? மாமேதை சிசெரோ ஆந்தை விழியில் பேதலித்துக் காணப் படுகிறார்! ரோமாபுரி மன்றத் தர்க்கத்தில், செனட்டர் அவரை குறுக்கிட்டு எதிர்க்கும் போது, அப்படித்தான் சிசெரோ ஆந்தை விழியில் விழித்துக் கொண்டு நிற்பார்!

காஸ்ஸியஸ்: அதைத்தான் ஏனென்று காஸ்காவிடம் கேட்கப் போகிறோம். அவனைத் துளைத்து நாம் வினவ வேண்டும்! அவன் வாயிலிருந்து வார்த்தைகளைக் கறப்பது மிகக் கடினம், புரூட்டஸ்!

[போட்டி முடிந்து பிறகு, ரோமானியர் சூழ சீஸர் கல்பூர்ணியாவுடன் வீதியில் நடக்கிறார். ஆண்டனி கூடவெ வருகிறார்]

ஜூலியஸ் சீஸர்: ஆண்டனி! ஆண்டனி!

ஆண்டனி: [சற்று பின்னிருந்து முன் தாவி] சீஸர், எதற்காக அழைத்தீர் என்னை?

ஜூலியஸ் சீஸர்: ஆண்டனி! என்னைச் சுற்றிலும் பருத்த உடலுடைய ரோமானியர்தான் நிற்க வேண்டும்! அதோ! அங்கே பார்! பசித்த பார்வையும், மெலிந்த மேனியும் கொண்ட காஸ்ஸியஸ்! கழுகுக் கண்களுடன் யாரையோ கொத்தித் தின்னக் காத்துக் கொண்டிருக்கிறான்! ஆழமாய்ச் சிந்திக்கிறான்! அதிகமாய் யோசிக்கிறான்! எதையும் குதர்க்கமாய் ஆராய்கிறான்! அங்குமிங்கும் அலை மோதுகிறான்! அத்தகைய மனிதர் அபாயகரமானவர்!

ஆண்டனி: அஞ்ச வேண்டாம் சீஸர், அவனுக்கு! பயங்கரவாதி யில்லை காஸ்ஸியஸ்! பண்பு மிக்க ரோமானியன் அவன்! பரிவு மிக்கவன் அவன்! பயப்பட வேண்டாம் அவனுக்கு!



ஜூலியஸ் சீஸர்: அவனிடம் பயமில்லை எனக்கு! ஆனால் அவனது மனக் கொந்தளிப்பால் ரோமாபுரிக்கு என்ன தீங்கு நேரப் போகிறது என்று தெரியவில்லை! பூமிக்குள் பதுங்கி யிருக்கும் எரிமலை போல் அவன் நெஞ்சத்தில் புகையும் தீப்பொறி என் கண்களுக்குத் தெரிகிறது! காஸ்ஸியஸ் நிரம்பப் படிக்கிறான்! ஆவேசமாய்த் தர்க்கம் புரிகிறான்! தன்னெஞ்சில் எரியும் தீயை அவன் பிறர் உள்ளத்திலும் ஏற்றுகிறான்! அமைதியாக அமர்ந்து அவன் நாடகம் பார்ப்பதில்லை! காதுக்கினிய கீதம் ஒன்றைக் கேட்பதில்லை! முகத்தில் புன்முறுவல் கிடையாது! சிரித்தாலும் அதிலும் தன்மீது ஓர் ஏளனம் கொக்கரிக்கும்! அம்மாதிரி நபரின் மனம் எப்போதும் கொந்தளிப்பில் குமுறும்! .. எனக்கு ஒன்று மட்டும் புரிய வில்லை! புரூட்டஸை நான் என் புதல்வனாய்க் கருதுகிறேன்! அவன் காஸ்ஸியஸ் அருகே ஏன் நிற்கிறான்? காஸ்ஸியஸ் கூறுவதைக் காது கொடுத்து ஏன் கேட்கிறான்? ஆண்டனி! நீ பேசும் போது எனது வலப்புறம் வந்துவிடு! என்னிடது காது செவிடு! .. வலப்புறம் வந்து காஸ்ஸியஸைப் பற்றி உன் கருத்தைச் சொல்! புனிதன் புரூட்டஸைப் பற்றி எனக்குத் தெரியும்.

[ஜூலியஸ் சீஸர், கல்பூர்ணியா, ஆண்டனி அனைவரும் வெளியேறுகிறார். அச்சமயம் இடையில் செல்லும் காஸ்காவின் கையைப் பற்றி புரூட்டஸ் இழுக்கிறார்.]

காஸ்கா: [சற்று சீற்றமுடன்] புரூட்டஸ்! எதற்காக என்னை இழுத்தீர்? ஏதாவது என்னுடன் நீ பேச வேண்டுமா? [புரூட்டஸை நேராக நோக்கி அருகில் வருகிறான்]

புரூட்டஸ்: ஆமாம் காஸ்கா! அங்கே பெருங் கூச்சலில் என்ன நடந்தது? எனக்கும் காஸ்ஸியஸ¤க்கும் எதுவும் தெரியாது. நடந்ததை எமக்குச் சொல்வாயா? ஏன் சீஸர் முகத்தில் புன்னகை யின்றிச் சிடுசிடு வென்று கடூரம் காணப் படுகிறது? கல்பூர்ணியா பேய் அறைந்தவள்போல் ஏன் காணப்படுகிறாள்?

காஸ்கா: ஏனென்றா கேட்கிறீர்? சீஸருக்கு முடிசூட ஓர் மகுடம் அளிக்கப் பட்டது! ஆனால் தலையில் வைத்துக் கொண்ட சீஸரோ அதைக் கையால் தடுத்து நிராகரித்தார்! உடனே கூட்டத்தார் கூச்சலிட்டனர்! எல்லார் முன்பாக மலடி என்று சீஸர் மறைமுகமாகக் காட்டியது, கல்பூர்ணியாவுக்கு அறவே பிடிக்க வில்லை! அதனால் கல்பூர்ணியா உம்மென்று முகத்தைக் காட்டிக் கொண்டு நடந்தாள்!

புரூட்டஸ்: இரண்டாவது கூச்சல் ஏன் கேட்டது?

காஸ்கா: அதுவும் அதே காரணத்துக்குத்தான்! மகுடம் சூடப் போன இரண்டாம் தடவையும் சீஸர் தடுத்தார்!

காஸ்ஸியஸ்: மூன்று முறை கூச்சல் கேட்டதே! கடைசி ஆரவாரம் எதற்கு?

காஸ்கா: அந்தக் கூச்சலும் அதற்குத்தான், புரூட்டஸ்!

காஸ்ஸியஸ்: என்ன? மூன்று முறையா சீஸருக்கு மகுடம் அளிக்கப் பட்டது? யாரளித்தார் மகுடத்தை?

காஸ்கா: ஆமாம் மெய்யாக மூன்று தரம் முடிசூடினர் சீஸருக்கு! மூன்று முறையும் முறுவலுடன் சீஸர் கிரீடத்தை ஏற்றுக் கொண்டார்! கூட்டத்தார் பூரித்துப் போய் கை தட்டினர்! அடுத்த சிறிது கணத்தில் சீஸர் மகுடத்தை நிராகரித்துக் கீழே வைத்தார்! உடனே கூட்டத்தார் அதை விரும்பாது கூச்சலிட்டார்! யார் துணிச்சலுடன் சீஸருக்கு அப்படி மகுடம் சூடுவார்? ஆண்டனிதான்! சீஸரின் தாசர் ஆண்டனி!

புரூட்டஸ்: அருமை நண்பனே! அந்த வேடிக்கையைச் சற்று விளக்கமாகக் கூறுவாயா?

Calpurnia helping Caesar

காஸ்கா: [கேலியாக] நான் தூக்கில் தொங்கலாம், அந்த கூத்தை விளக்குவதற்குப் பதிலாக! அது ஒரு நகைச்சுவை நாடகம்! விருப்பமுடன் ஆண்டனி சீஸருக்கு கிரீடம் வைப்பது! வேண்டாம், வேண்டாம் என்று சீஸரின் வாயில் வெறும் வார்த்தைகள்தான் வரும்! ஆனால் சீஸரின் கரங்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும்! சீஸரின் வாய் உண்மை பேசுகிறா? அல்லது அவரது உடல் உண்மை பேசுகிறதா என்பதி அறிவது கடினம்! அது மெய்யாக ஓர் அரச கிரீடமில்லை! நாடகக் கிரீடம் மாதிரி தெரிந்தது! நடுத் தெருவில் யாரோ தயார் செய்தது! மூன்று முறை ஆண்டனி முடிமேல் சூடினார்! மூன்று தரமும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்! ஆனால் ஏனோ அவரது தலை நடுங்கும்! அடுத்த கணம் சீஸர் மகுடத்தை எடுத்து ஆண்டனி கரங்களிலே கொடுத்து விடுவார்! எனக்கு ஒன்றும் புரியவில்லை! ஆனால் மூன்றாம் தடவை மகுடத்தைக் கொடுத்த பிறகு கை கால்கள் ஆடிக், கண்கள் மூடி, தடாலெனச் சீஸர் மயக்கமுற்றுக் கீழே வீழ்ந்தார்!

காஸ்ஸியஸ்: [கண்களை அகல விரித்து] என்ன? முடிசூட்டு விழாவில், சீஸருக்குக் காக்காய் வலிப்பு வந்து விட்டதா? எல்லார் முன்பும் பரிதாபமாகக் கீழே வீழ்ந்தாரா? என்ன அவமானம் ரோமுக்கு? வயதாகி முதிர்ந்த கிழட்டு மரம் அப்படி எத்தனை தரம் விழப் போகிறதோ? சீஸர் தளபதியா? அல்லது கிழபதியா?

புரூட்டஸ்: ஆமாம்! சீஸருக்கு வீழும் நோய் உள்ளது உனக்குத் தெரியாதா?

காஸ்ஸியஸ்: [சினத்துடன்] சீஸருக்கு வீழும்நோய் கிடையாது புரூட்டஸ்! உனக்கும், எனக்கும், உத்தமன் காஸ்காவுக்கும்தான் உள்ளது, வீழும்நோய்! நிமிர்ந்து நோக்கும் எதேட்சை அதிபதி சீஸர்! நாமெல்லாம் கூன் விழுந்து அவருக்குப் பணிசெய்யும் அடிமைகள்!

காஸ்கா: நீ என்ன உட்பொருளில் பேசுகிறாய் என்று புரியவில்லை எனக்கு! சீஸர் எல்லார் முன்பும் தடலாலென விழுந்து மண்ணில் புரண்டார்! பற்களை நறநற வென்று அரைத்தார்! கல்பூர்ணியா மண்டி யிட்டு அமர்ந்து, மடிமேல் சீஸர் தலையை வைத்துக் கொண்டாள். ஆண்டனி தன் வாளுறையை சீஸர் வாயில் நுழைத்தார். நுரை தள்ளிய சீஸரின் வாய் பிறகு ஓய்ந்து உலர்ந்தது! என்ன பயங்கரமான காட்சி அது! காஸ்ஸியஸ்! நான் உத்தமன் அல்லன்!

புரூட்டஸ்: நினைவு பெற்று எழுந்ததும் சீஸர் என்ன சொன்னார்?

காஸ்கா: உயிர் பெற்றுக் கண்விழித்த சீஸரைத் தூக்கியவர் ஆண்டனியும், கல்பூர்ணியாவும்! சீஸரின் பேச்சு பரிதாபமாக இருந்தது. தழுதழுத்து குரலில் ஏதோ பிதற்றினார்! மயக்கமுற்ற தருவாயில் தான் ஏதாவது உளறி யிருந்தால், தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார்!

காஸ்ஸியஸ்: கண்ட விடமெல்லாம் கவிழ்ந்து வீழும் சீஸரா நமக்கு வேந்தர்? ரோமுக்கு ராஜா? வியாதியில் வேதனை அடையும் சீஸர் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும்! சீஸருக்கு வேறு ராஜ மகுடமா? தகுதியற்ற தளபதிக்கு மூன்று தரம், ஆண்டனி முடிசூட வேண்டுமா? அறிவு கெட்ட ஆண்டனி! ஆசை மிக்க சீஸர்! அடிமை ஆகப் போகிறவர் நாம்! ரோமானியர்!

புரூட்டஸ்: மாமேதை சிசெரோ என்ன பேசினார்? சீஸர் மகுடம் ஏற்பதை ஒப்புக் கொண்டாரா?

காஸ்கா: அவர் கிரேக்க மொழியில் ஏதோ பேசினார்! கிரீடம் வைக்கப் போகும் போது, கை தட்டவில்லை சிசெரோ! கிரீட்டத்தை சீஸர் புறக்கணிக்கும் போது ஆரவாரம் செய்ய வில்லை! ஆதலால் சிசெரோ மனதில் என்ன நினைத்தார் என்பது தெரியாது எனக்கு!

காஸ்ஸியஸ்: காஸ்கா! என் வீட்டுக்கு இன்றிரவில் வருவாயா? என்னுடன் விருந்துண்ண வருவாயா? உன்னுடன் பேச வேண்டும் நான்.

காஸ்கா: உணவருந்த வருகிறேன்! உயிரோடிருந்தால் வருகிறேன்! உம்மில்ல உணவு அறுசுவையோடிருந்தால் வருவேன்!

காஸ்ஸியஸ்: நாங்கள் வீட்டில் காத்திருப்போம் உனக்கு.

காஸ்கா: போய் வருகிறேன், புரூட்டஸ்! காஸ்ஸியஸ்! [போகிறான்]

புரூட்டஸ்: என்ன கேலித்தனமாய்ப் பேசுகிறான், இந்த காஸ்கா! வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று மொட்டையாக அல்லவா பேசுகிறான் காஸ்கா! எந்தக் காட்டுப் பள்ளியில் படித்தவன் இந்த காஸ்கா! பண்பில்லாமல் உளறுகிறான்! உயிரோடிருந்தால் வருவானாம்! உணவு அறுசுவையாய் இருந்தால் வருவானாம்! கோமாளி மாதிரி அல்லவா பிதற்றுகிறான்!

காஸ்ஸியஸ்: காஸ்கா எப்போதும் அப்படித்தான் யாரையும், தன்னையும் ஏளனம் செய்வான். முக்கியமான ஒரு திட்டத்தைப் பற்றிப் பேச வேண்டும், புரூட்டஸ்! விருந்தில் நீங்களும் கலந்து கொள்வீரா?

புரூட்டஸ்: முக்கியமான திட்ட மென்றால் நீ என் வீட்டுக்கு வா! நான் பலரது முன்பாக ரகசியம் பேசுபவன் அல்லன். நீயும் நானும் என்னிலத்தில் பேசுவோம். எதை வேண்டுமானாலும் பேசலாம்! எத்தனை நேரமானாலும் பேசலாம்! நாளைக்கு வருகிறாயா? நானிப்போது போயாக வேண்டும். போய் வருகிறேன், காஸ்ஸியஸ்!

காஸ்ஸியஸ்: நல்லது புரூட்டஸ்! நாளை இரவில் வருவேன் உன்னிலத்துக்கு. நானும் காஸ்காவும் இன்றிரவு பேசுவோம்! முக்கியத் திட்டம் என்பதை விட ரகசியத் திட்டம் என்பது தகுதியான தலைப்பு! …. போய் வருவீர், புரூட்டஸ்! பேய் உலகைப் பற்றிச் சிந்திப்பீர்! பேய்கள் நம்மைத் தின்பதற்கு முன்பு, நாம் பேய்களை ஓட்ட வேண்டும்!

[புரூட்டஸ் வெளியேறுகிறார்]

காஸ்ஸியஸ்: நல்லது புரூட்டஸ்! நீ ஒரு பண்பாளன்! அரசியல் சந்தையில் மந்தை ஆடுகள் குழிக்குள் விழுப் போவதை அறியாதவன் நீ! ஆட்டிடையன் அரசனாக ஆவப் போவதையும் அறியாதவன் நீ! சீஸர் புரூட்டஸை மிகவும் நேசிக்கிறார்! புரூட்டஸ் சீஸர் மீது தீராத மதிப்பை வைத்துள்ளார். அந்த பிணைப்புச் சங்கிலியை உடைப்பது எப்படி? சீஸர் மீதுள்ள பாசத் தீயில் புரூட்டஸ் என்னை உருக்கி விடக் கூடாது! என் வைர நெஞ்சை மாற்றி விடக் கூடாது! பேராசைக்காரன் சீஸர்! அவரது இறக்கைகளை நறுக்கப் போவது உறுதி! அவரது கொடி ரோமாபுரியில் பறப்பப் போவதில்லை! எவர் தடுப்பினும் நில்லேன், அஞ்சேன்! சீஸர் ஆசனத்தில் அதிபதியாய் அமர்வதை ரோமாபுரி காணப் போவதில்லை!

*********************


எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு


“காதல் நோக்குவது கண்கள் மூலமன்று!
உள்ளத்தின் மூலமே!”
“காதலின் மெய்யான போக்கு கரடு முரடானது.”

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஒரு வேனிற்காலக் கனவு]

பண்ணிசை உள்ளத்தைப் பெறாத மனிதன்,
இன்னிசைக் குரலுக்கு உருகாத மனிதன்,
பாழானவன்! துரோகம் செய்பவன்!
பகைவனாய் ஏமாற்றும் பாதகன்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [வெனிஸ் வர்த்தகன்]

வெளிச்சத்தைப் பொழிகிறது வெண்ணிலவு!
இம்மாதிரி இரவு வேளையில் தான்
மரங்களை அணைத்து
முத்த மிடுகிறது மிருதுவாய்,
சித்தம் குளிரும் தென்றல்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [வெனிஸ் வர்த்தகன்]


கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்.



அங்கம்:5 காட்சி:2 பாகம்:1

நேரம், இடம்: பகல் வேளை. ரோமாபுரியில் சீஸரின் தனி மாளிகை.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன், ஆண்டனி, புரூட்டஸ், அக்டேவியன், காஸ்ஸியஸ், காஸ்கா, சிசெரோ, மற்றும் சில செனட்டர்கள்.

காட்சி அமைப்பு: ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸர் தன் தனி மாளிகையில் ஆசன மெத்தையில் மகனுடன் அமர்ந்திருக்கிறார். கிளியோபாத்ரா சற்று தூரத்தில் நின்று சீஸரையும், மகனையும் கவனிக்கிறாள். அறையில் வரப் போகும் செனட்டர்களுக்காக பல நாற்காலிகள் போடப் பட்டுள்ளன.

ஜூலியஸ் சீஸர்: [மகனை மடிமேல் அமர்த்தி] கண்மணி! ரோமாபுரி அலெக்ஸாண்டிரியா போல் உள்ளதா? ரோம் தலைநகரம் உனக்குப் பிடித்திருக்கிறதா? நீச்சல் கற்றுக் கொண்டாய் என்று உன் அன்னை சொன்னாள்.

சிஸேரியன்: [முகத்தைச் சுழித்து] ரோம் எனக்குப் பிடிக்க வில்லை அப்பா! என்னைப் பார்ப்பவர் எல்லாம் ஒருமாதிரி விழிக்கிறார்! பரிவும், பாசமும் என்மேல் யாருக்கு மில்லை! முகத்தை உம்மென்று வைத்து ஆந்தை போல் கூர்ந்து பார்க்கிறார்! அலெக்ஸாண்டிரியாவில் புன்னகை முகத்தையே பார்ப்பேன். சேடியர் எனது கன்னத்தில் முத்தமாய்ப் பொழிவார்! யாரும் என்னருகில் வராமல் தள்ளியே நிற்கிறார்! எனக்கு ரோம் அறவே பிடிக்க வில்லை அப்பா! அலெக்ஸாண்டிரியாவுக்குத் திரும்பிப் போக விரும்புகிறேன்.

ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரிமுடன்] அப்படிச் சொல்லாதே கண்மணி! எகிப்த் உன் அன்னை ஊர்! ரோமாபுரி உன் தந்தை ஊர்! நீ ஒருநாள் ரோமாபுரிக்கு ராஜாவாகப் போகிறாய்! ரோம் பிடிக்க வில்லை என்று சொல்லக் கூடாது! ரோமானியர் வெளிப்புறத்தில் கடூரமாய்த் தோன்றினாலும், உள்ளத்தில் அன்பு கொண்டவர். ஆயிரக் கணக்கான் ரோமானியர் உன்னையும் உன் தாயையும் ஆரவாரமோடு வரவேற்க வில்லையா? நீ வந்து சில தினங்கள்தான் ஆகின்றன. போகப் போக ரோமானியரின் பரிவு தெரியும் உனக்கு. பார், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ரோமானியர், உன்னைத் தோளில் தூக்கி வைத்து ஆடுவார்! பாடுவார்! நாடுவார்!

சிஸேரியன்: அப்பா! எனக்குக் கத்திச் சண்டை போட ஆசை. வில்லம்பு ஏவிட ஆசை. பயிற்சிக்கு ஏற்பாடு செய்வீரா? தினமும் அலெக்ஸாண்டிரியாவில் எனக்கு மொழிப்பயிற்சி உண்டு. கிரேக்க மொழி கற்றுக் கொள்ள ஆசை எனக்கு. அதற்கும் ஏற்பாடு செய்வீரா? கிரேக்க வீரர் அலெக்ஸாண்டர் கதையை அம்மா எனக்குச் சொல்லி யிருக்கிறார்.

ஜூலியஸ் சீஸர்: ஈதோ, ஏற்பாடு செய்கிறேன். [மணி அடித்துக் காவலனை அழைக்கிறார். காவலன் சிறுவனைக் கூட்டிச் செல்கிறான்.]

[கிளியோபாத்ரா புன்னகையுடன் சீஸர் வருகிறாள். சீஸர் அவளை முத்தமிடுகிறார்]



கிளியோபாத்ரா: சிஸேரியன் கிரேக்க மொழி கற்றுக் கொள்வேன் என்று பிடிவாதமாய் உள்ளான். ரோமில் அதைக் கற்றுக் கொள்ள அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. .. அது சரி, நாளை ரோமாபுரியின் மக்கள் மன்றத்தில் உங்களுக்குப் பட்டாபிசேக விழா அல்லவா? வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி அல்லவா அது? சீஸரின் பொற்காலம் என்று என் குருநாதர் சொல்கிறார்! செனட்டர் செய்த முடிவுதான் என்ன? எப்படிப் பட்டம் சூடப் போகிறார் உங்களுக்கு?

ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] ரோமாபுரிக்கு வெறும் ஏகாதிபதியாக என்னை நியமிக்கப் போகிறார்! பெருத்த ஏமாற்றம் எனக்கு! எதிர்பாராத அடி எனக்கு! வெற்றிமேல் வெற்றி பெற்ற எனக்கு ரோமானியர் அளிக்கும் வெகுமதி வெறும் அதிபதி! அதுவும் ஏகாதிபதி!

கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] என்ன ஏகாதிபதியா? ஏமாற்றம் எனக்கும்தான்! ரோமாபுரிக்கு வேந்தரில்லையா நீங்கள்? வேடிக்கையாக உள்ளதே உங்கள் விநோத செனட்டர் முடிவு! அதை ஏற்றுக் கொள்ளப் போகிறீரா? தளபதியை அதிபதியாக ஆக்கியதில் என்ன மதிப்பிருக்கிறது? ரோமானிய செனட்டர்கள் கோமாளிகள்!

ஜூலியஸ் சீஸர்: நிச்சயம், ஒப்புக் கொள்ளப் போவதில்லை நான்! வேறு வழி என்ன என்று சிந்திக்கிறேன்.

[அப்போது செனட்டர்கள் வருகையைக் காவலன் அறிவிக்கிறான். சீஸர் அனுமதி அளிக்க ஆண்டனி, சின்னா, புரூட்டஸ், அக்டேவியன், சிசெரோ, காஸ்ஸியஸ், காஸ்கா ஆகிய செனட்டர் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்கிறார்கள். சீஸரும், கிளியோபாத்ராவும் ஆசனத்தில் அமர்கிறார்.]

ஆண்டனி: [எழுந்து நின்று] மாண்புமிகு தளபதி அவர்களே! செனட்டாரின் ஏகோபித்த முடிவை நான் அவர்கள் சார்பாக உங்களுக்குக் கூற விரும்புகிறேன். நாளை நடக்கும் பட்டாபிசேக விழாவில் ரோமாபுரியின் ஏகாதிபதியாக ஏற்றுக் கொள்ளப் படுவீர் தாங்கள். [செனட்டர் யாவரும் ஆரவாரமுடன் கைதட்டுகிறார்கள்]

ஜூலியஸ் சீஸர்: [சீற்றத்துடன் எழுந்து] நிறுத்துங்கள் கைதட்டலை! நிராகரிக்கிறேன் உமது முடிவை! முதலில் நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன், உமது ஏகோபித்த முடிவை! புறக்கணிக்கிறேன் உமது போலித் தனமான வேடிக்கை முடிவை!

புரூட்டஸ்: [எழுந்து நின்று கண்ணியமாக] மாண்புமிகு தளபதியாரே! மாபெரும் மத்திய கடற்கரை வெற்றி வீரருக்கு வேறென்ன வேண்டும்? ஏகாதிபதி என்பது ரோமாபுரியின் உன்னதப் பட்டமல்லவா? சீஸர் அதை வேண்டாம் என்று வெறுப்பதின் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று குரலைத் தணித்து] அருமை புரூட்டஸ்! என்னை நீ அறிவாய்! என் போர் வல்லமையை நீ அறிவாய்! பல்லாண்டு போரிட்டுச் சலிக்காதவன் நான்! ஸ்பெயின் முதல் எகிப்த் வரைக் கைப்பற்றியதை நீ அறிவாய்! பன்முறைப் போரிட்டு ரோமானிய சாம்ராஜியத்தைப் பல்லாயிரம் சதுர மைல் விரித்தவன் நான்! பார்புகழும் ஓர் மாவீரருக்கு அளிக்கும் வெகுமதியா இது? ஏமாற்றம் அடைந்தேன் புரூட்டஸ்! பெருத்த ஏமாற்றம் அடைந்தேன்! நான் எதிர்பார்த்தது இதுவன்று!



காஸ்ஸியஸ்: [எழுந்து நின்று] மேன்மைமிகு தளபதியாரே! நீங்கள் எதிர்பார்த்தது என்ன வென்று தெளிவாகச் சொல்வீரா? உங்கள் பேராற்றலை செனட்டார் யாரும் குறைக்க வில்லையே! வெறும் பட்டப் பெயரில் என்ன உள்ளது?

ஜூலியஸ் சீஸர்: [அழுத்தமுடன்] ஏகாதிபதியாக இருக்க விருப்ப மில்லை எனக்கு! ரோமாபுரியின் ஆற்றல் மிக்க ஏகச் சக்ரவர்த்தியாக விளங்க விழைகிறேன்! ரோமின் வேந்தராகப் பட்டாபிசேகம் ஆக விரும்புகிறேன். ரோமானிய சாம்ராஜியத்தின் முடி சூடிய மாமன்னராக அறிவிக்கப்பட வேண்டுகிறேன்!

[செனட்டருக்குள் பல முணுமுணுப்புகள் எழுகின்றன]

காஸ்ஸியஸ்: [ஆத்திரமுடன்] வேந்தராக ஒருவர் ரோமுக்கு ஆகிவிட்டால், செனட்டராகிய எமக்கு வேலை யில்லை! குடியாட்சியைப் புதைத்து முடியாட்சியைப் புகுத்த விழைகிறீர்! எமது ஆற்றல் மங்கிப் போகும்! எமது குரல் மதிப்பற்றுப் போகும்! நூற்றுக் கணக்கான செனட்டர்களைக் கீழே தள்ளிவிட்டு நாங்கள் எதற்கு ஓர் வேந்தரை நியமிக்க வேண்டும் ரோமுக்கு?

ஜூலியஸ் சீஸர்: [சீற்றத்துடன்] பேராற்றல் படைத்த எனது அரசியல் உரிமையைச் செனட்டர் அபகரித்துக் கொள்வதை ஏற்கப் போவதில்லை நான்! என்றைக்கும் உடன்படப் போவதில்லை நான்!

புரூட்டஸ்: [சற்று யோசனையுடன்] மேன்மைமிகு தளபதியாரே! நாங்கள் அதைப் பற்றித் தனியாகச் சிந்திக்க வேண்டும்! சற்று அவகாசம் தேவை. கொடுப்பீரா? ரோமாபுரிக்கு ஒரு வேந்தர் தேவையா என்று செனட்டர்கள் ஆராய வேண்டும்! தர்க்கத்துக்குரிய பிரச்சனை அது! கூடிப் பேசி முடிவு செய்ய வேண்டிய பிரச்சனை அது!

காஸ்ஸியஸ்: [கோபத்துடன்] செனட்டர் தீர்மானம் செய்ய வேண்டாம் அதை! ரோமாபுரிக்கு மன்னர் பதவி தேவை யில்லை. மன்னர் ஆட்சியில் செனட்டருக்கு என்ன வேலை?

சிசெரோ: [எழுந்து நின்று] மன்னிக்க வேண்டும், சீஸர் நான் குறுக்கீடு செய்வதற்கு! செனட்டர்கள் கூடிப் பேச சில மணிநேரம் அவகாசம் வேண்டும். அடுத்த அறையில் உடனே முடிவு செய்கிறோம் நாங்கள்!

ஜூலியஸ் சீஸர்: அப்படியே செய்யுங்கள். அனுமதி அளிக்கிறேன். [ஆண்டனி, புரூட்டஸ் மற்றும் ஏனைய செனட்டர் அனைவரும் வெளியேறுகிறார். மூடிய அடுத்த அறையில் கூடி அளவளாவுகிறார்கள்]

கிளியோபாத்ரா: [ஆத்திரமோடு அருகில் வந்து] மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு மாவீரர் பரம்பரையில் சீஸரை மிஞ்சியவர் யார்? பல்லாயிரம் சதுர மைல் நாடுகளைப் பிடித்து ரோமானியப் பேராற்றலைக் காட்டியது யார்? உங்களை வேந்தர் என்று உங்கள் ரோமானியரே ஏற்றுக் கொள்ளாதது வியப்பாக உள்ளது எனக்கு! உங்கள் செனட்டார் அனைவரும் மூடர்கள்!

ஜூலியஸ் சீஸர்: ஆத்திரப் படாதே, கிளியோபாத்ரா! எகிப்திய மகாராணி ரோமானிய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வது கடினம்! நான் தளபதி ஆயினும், ரோமானிய செனட்டரைப் புறக்கணிக்க முடியாது. அத்தனை பேரது பகையையும் நான் தேடிக் கொள்ளலாகாது!

கிளியோபாத்ரா: [சினத்துடன்] சீஸர்! ·பாரோவின் பரம்பரை வாரிசைப் பெற்ற நீங்கள் தேவனுக்குச் சமமானவர்! என்னை மணந்ததால் எகிப்த் உங்களை மன்னராக ஏற்றுக் கொண்டது! ஆனால் ரோமாபுரி ஏன் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது? என்னை மணந்த காரணமா? அல்லது உங்களுக்கு ஓர் மகன் பிறந்த காரணமா? பரம்பரை முடியாட்சியை செனட்டார் வெறுக்கிறாரா? சொல்லுங்கள். குழப்பமாய் உள்ளது எனக்கு!

ஜூலியஸ் சீஸர்: அப்படி எல்லாம் சந்தேகப் படாதே கிளியோபாத்ரா.

[அப்போது செனட்டர்கள் யாவரும் உள்ளே நுழைகிறார். நாற்காலியில் அமர்கிறார்]

புரூட்டஸ்: [எழுந்து நின்று] மேன்மைமிகு தளபதி அவர்களே! செனட்டார் யாவரும் செய்த முடிவு இதுதான். ரோம் சாம்ராஜியத்துக்கு வேந்தர்! ஆனால் ரோமுக்கு நீங்கள் ஏகாதிபதி! ரோமாபுரியின் ஆட்சியில் செனட்டரின் முடிவு முதலிடம் பெறும்! ரோமாபுரிக்கு வெளியே நீங்கள் வேந்தராக அறிவிக்கப் படுவீர்.

ஜூலியஸ் சீஸர்: [ஆங்காரச் சிரிப்புடன்] என்ன? சீஸர் வெளி உலகுக்கு மட்டும் வேந்தர்! ஆனால் உள்ளூருக்குள் வெறும் தளபதி, அதாவது ஏகாதிபதி! வேடிக்கையான பட்டாபிசேகம்! உள் நாட்டில் வெறும் பீடம்! வெளிநாடு போகும் போது ராஜ கிரீடம்! உள்ளூரில் பொம்மை ராஜா! வெளியூரில் உண்மை ராஜா! வேண்டாம் எனக்கு இந்த இரட்டை வேடம்! எனக்குத் தேவை ஒரே வேடம்! ராஜக் கிரீடம்! ரோமாபுரியின் ஏகச் சக்ரவர்த்தி!

காஸ்ஸியஸ்: தளபதியாரே! செனட்டர் ஏகோபித்த முடிவை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்! அவமானம் எங்களுக்கு! எகிப்த் ராணியின் முன்பாக அனைத்து செனட்டரை அவமதித்தால் வெளியேறுகிறோம் நாங்கள்! உங்களுடன் பேச்சில்லை எமக்கு!

காஸ்கா: [சினத்துடன்] கிளம்புங்கள் வெளியே! நமக்கினிப் பேச்சில்லை! முடியாட்சி ரோமில் முளைத்திட யாம் அனுமதிக்க மாட்டோம்!

காஸ்ஸியஸ்: செனட்டர் கடமை ரோமாபுரியைக் காப்பாற்றுவது! குடியாட்சியைக் கீழே தள்ள நாம் எப்படி உடன்படுவோம்?

[ஆண்டனி, புரூட்டஸைத் தவிர அனைத்து செனட்டரும் வேகமாக வெளியேறுகிறார்]

புரூட்டஸ்: [கண்ணியமாக] செனட்டார் சொல்வதைச் சீஸர் கேட்பது சாலச் சிறந்தது. செனட்டர் சினத்துக்குச் சீஸர் தீனி போடுவது நல்லதன்று! செனட்டர் நெஞ்சில் கனலை வளர்ப்பது எரிமலையைத் தூண்டுவது போலாகும்.

ஜூலியஸ் சீஸர்: [கோபமாக] புரூட்டஸ்! உனக்கு உலகம் தெரியாது! நீ வாலிபன்! உன் அறிவுரை தேவை யில்லை எனக்கு! செனட்டர் பக்கம் சேரும் நீயும் அவருடன் வெளியேறிச் செல்!

[புரூட்டஸ் தலைகுனிந்து கொண்டு பரிதாபமாக வெளியேறுகிறார்]



ஆண்டனி: [கனிவாக] சீஸர்! கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் கோட்டையைப் பிடிக்கலாம்! ஒப்புக் கொள்ளுங்கள் சீஸர்! நீங்கள் கேட்டதில் முக்கால் பாகம் கிடைத்துள்ளதே! அது போதாதா? ரோம் ராஜியம் உங்கள் நேரடி ஆட்சிக்குக் கீழ்! ரோமாபுரி மட்டும் செனட்டர் ஆட்சிக்குக் கீழ்! ஏற்றுக் கொள்ளுங்கள் சீஸர் முதலில்! மாற்றிக் கொள்ளலாம் அவரைப் பின்னால்!

ஜூலியஸ் சீஸர்: [சற்று யோசனையுடன்] சிந்தித்துச் சொல்கிறேன் ஆண்டனி! அவகாசம் தேவை எனக்கும்! நன்றி உன் ஆலோசனைக்கு!

ஆண்டனி: [கிளியோபாத்ரா அருகில் சென்று] ரோமாபுரியின் கொந்தளிப்பில் உங்களைச் சந்தித்தது என் துர்பாக்கியமே! எத்தனை நாட்கள் ரோமில் தங்குவதாக உங்கள் திட்டம்? தனியாகப் பேச வேண்டும் நான் உங்களுடன்! உங்கள் வருகையால் ரோமாபுரியில் ஒளி வெள்ளம் பரவி உள்ளது! சீஸருக்கு ஆண்மகவைக் கொடுத்த கிளியோபாத்ரா ரோமாபுரியின் வரலாற்றைச் செழிப்பாக்கியவர்.

கிளியோபாத்ரா: [புன்னகையுடன்] மிக்க நன்றி ஆண்டனி! மூன்று மாதங்கள் ரோமில் நான் தங்குவேன்! எகிப்துக்கு நீங்கள் ஒருமுறை விஜயம் செய்ய வேண்டும்! அங்கே அரசாங்க விருந்தாளியாக நீங்கள் என் அரண்மனையில் தங்க வேண்டும்.

ஆண்டனி: மார்ச் பதினைந்தாம் தேதி சீஸருக்குப் பட்டாபிசேக விழா! என் அரசியல் பொறுப்புகளை அவர் மீது போட்ட பிறகுதான் எனக்கு விடுதலை! எகிப்துக்கு நான் வருவதை உறுதியாகச் சொல்ல முடியாது! அழைப்புக்கு மிக்க நன்றி, கிளியோபாத்ரா! [அருகில் வந்து கிளியோபாத்ராவின் வலது கரத்தில் முத்தமிடுகிறார்.] … போய் வருகிறேன் சீஸர்! கிளியோபாத்ரா! [ஆண்டனி வெளியேறுகிறார்]

கிளியோபாத்ரா: [அழுத்தமுடன்] ஒப்புக் கொள்ளுங்கள் சீஸர்! புரூட்டஸ் சொல்வதிலும், ஆண்டனி சொல்வதிலும் பொருள் உள்ளதாகத் தெரிகிறது எனக்கு! சிறுகச் சிறுகப் பிடி என்று ஆண்டனி கூறியது ஒரு வேத வாக்கு! செனட்டரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக வேண்டாம்! வயதில் சிறியவள் ஆயினும், என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். வயதில் பெரியவர் ஆயினும், ஒப்புக் கொள்வதில் உங்களுக்குத் தாழ்மை யில்லை! மகா அலெக்ஸாண்டரின் வெற்றிப் பாதை உங்களுக்குத் திறந்து விட்டது! அவர் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்! இந்தியாவின் சிந்து நதியைத் தாண்டி, கங்கைக் கரையைத் தாண்டிச் சென்று சைனாவைக் கைக்கொண்டு புது வரலாற்றைப் படைக்க வேண்டும் சீஸர். இது ஒருபெரும் வாய்ப்பு. இழந்து விடாதீர் அதனை!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று முதலில் நீதான் என்னுடன் வாதாடினாய்! ஏற்றுக்கொள் என்று மாறாக நீ வழக்காடுகிறாய்! ஒரு கணத்தில் 180 டிகிரி கோணத்துக்குத் திரும்பி விட்டாய்! ஆனால் நான் அப்படி ஒரு கணத்தில் மாறுபவன் அல்லன்! நான் போர்த்தளபதி! பிடித்துக் கொண்டதை எளிதில் விட்டுவிடுபவன் அல்லன்! ரோமாபுரிக்கு வேந்தர் பட்டாபிசேகம்! அதை வேண்டி நின்ற பின்னர், வேறு எதனையும் விரும்ப மாட்டேன் நான்! நாளை நடக்கப் போகும் வேடிக்கையைப் பார்!

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]





“எனக்குத் தொழில் விடுதலையாக வாழ்ந்து வருவது.”

“நியாயத்தையும், ஆண்பாலாரிடையே சமத்துவத்தையும் வற்புறுத்தும் ஓரிறைவனைத் தவிர, வேறு எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கை வைக்காதே!”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

“நீ தெரிந்த கொள்ள வேண்டியவற்றின் முடிவை நெருங்கும் போது, நீ உணர்ந்து கொள்ள வேண்டிவற்றின் ஆரம்பத்திற்கு வருகிறாய்!”

கலில் கிப்ரான் ஓவியர், கவிஞர் [Kahlil Gibrahn (1883-1931)]

விதியே! அறிவோம் நினது கேளிக்களை!
ஒருநாள் மடிவோம் என்று அறிவோம்!
நேரம் வரும் தருணம் ஒன்றை அறியோம்!
நீடிக்கும் ஆயுளை யாம் மிதித்து முறிப்போம்! … [புரூட்டஸ்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

ஆண்டனி குழப்ப மடைந்து வீட்டுக்கு ஓடினார்!
மானிடரே! மாதரே! சிறுவரே! நீவீரும் ஓடுவீர்!
வானை நோக்கிக் கதறுவீர், அழுவீர், அலறுவீர்,
வையக மின்று அழியப் போகுதென! .. [செனட்டர்: டிரிபோனஸ்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

மண்டியிட வைத்தார் என்னை என் பிரபு புரூட்டஸ்!
மண்ணில் விழ வைத்தார் என்னை மார்க் ஆண்டனி!
நேர்மையாளி, பண்பாளி, அறிவாளி, தீரர் எனக்கூற
ஆணை யிட்டவர் புரூட்டஸ், நான் பணிபவன் ஆதலால்!
வல்லவர், வாஞ்சை உள்ளவர், அஞ்சாதவர் சீஸர்
மாட்சிமை மிக்க அரச கம்பீரம் கொண்டவர், சீஸர்!
புரூட்டஸை நேசிப்பவன் நான்! மதிப்பவன் நான்!
ஆனால் சீஸர் ஒருவருக்கு அஞ்சுகிறேன்! …. [புரூட்டஸின் வேலையாள்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]



கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.

எகிப்தில் மற்றும்:

பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸியஸ் [30 வயது]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].



அங்கம்:3 காட்சி:3

நேரம், இடம்: பகல் நேரம், ரோமாபுரியின் செனட் மாளிகை.

நாடகப் பாத்திரங்கள்: புரூட்டஸ், ஆண்டனி, காஸியஸ், காஸ்கா, சின்னா, சிசெரோ, அக்டேவியன், கல்பூர்ணியா.

காட்சி அமைப்பு: ரோம் செனட் மாளிகைப் படிகளில் செனட்டர்கள், புரூட்டஸ், காஸியஸ், காஸ்கா, சின்னா, சிசெரோ, அக்டேவியன் ஆகியோர் நின்று உரையாடிக் கொண்டிருக்கிறார். காஸியஸ், காஸ்கா இருவரும் ஆங்காரத்துடன் காணப்படுகிறார். சீஸரை அறவே வெறுக்கும் காஸியஸ், காஸ்கா ஆகியோர் வாக்குவாதத்தில், சீஸரின் நெருங்கிய ஆதரவாளிகளை, எதிர்ப்பாளிகளாய் மாற்ற முனைகிறார்கள். சற்று தொலைவில் ஆண்டனியும், கல்பூர்ணியாவும் செனட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

காஸியஸ்: [கோபத்துடன் நடந்து கொண்டு] பண்புமிகு புரூட்டஸ்! ரோமிதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது! கேட்டீரா சீஸருக்கு ஆண்மகவு பிறந்துள்ளதாம்! எகிப்தை ஆளப் போகும் எதிர்கால ஆண்வாரிசு! ரோமானியரை ஆளப் போகும் அடிமை ராணியின் அற்புத மகன்! ஆண்பிள்ளைக்கு வெகுநாட்களாய் ஆசைபட்டார் சீஸர்! கல்பூர்ணியா பெற்றத் தர முடியவில்லை! ரோமானியப் பெண் பெற்றுத் தர முடியாத பிள்ளைச் செல்வத்தை, எகிப்த் ஆசைக் காதலி பெற்றுத் தந்தாள்! அடிமை நாட்டு எழிரசி பெற்றுத் தந்திருக்கிறாள்! புரூட்டஸ்! உங்களைத் தன் மகனாகப் பாவித்தார் சீஸர்! அந்த மதிப்பு உங்களை விட்டு நீங்கப் போகிறது! அந்த அடிமையின் பிள்ளை உங்களுக்கு ஈடாகுமா?

புரூட்டஸ்: [மனம் கலங்காமல்] ஆத்திரப் படாதே, காஸியஸ்! பிறந்து பல் முளைக்காத பிள்ளைக்கு யாராவது அஞ்சுவாரா? சீஸருக்கு ஆண்மகவு பிறந்த செய்தி எனக்குப் பூரிப்பை அளிக்கிறது! சீஸர் என்னைத் தன் மகன் என்று மதிப்பது என்றும் மாறப் போவதில்லை! சீஸரின் மூத்த மகன் நான்! கிளியோபாத்ராவின் மகனை என் செல்லத் தம்பியாகக் கருதுகிறேன்!



காஸ்கா: [ஆங்காரமாக, துச்சமாக] கிளியோபாத்ரா ஒரு பரத்தை! அவள் பெற்ற பிள்ளைக்கு நீ எப்படித் தமையன் ஆவாய்! அவன் பாதி எகிப்தியன்!

புரூட்டஸ்: [வெகுண்டு] அவன் பாதி ரோமானியன் என்பதை மறக்காதே, காஸ்கா! கிளியோபாத்ரா சீஸரின் மனைவி! எகிப்த் ராணியைப் பரத்தை என்று எள்ளி நகையாடுவது, ரோமானியத் தளபதிச் சீஸரைப் பழிப்பதாகும்! அப்படிச் சொன்ன அந்த நாக்கை அறுப்பது சட்டப்படிக் குற்ற மாகாது! உன் நாக்கைக் கட்டுப்படுத்து! காஸ்கா! நீ எப்படிப் பட்டவன் என்பதை மறந்து விட்டாயா? சூதாடி! கொலைகாரன்! களவாடி! புளுகன்! போதுமா, இன்னும் நான் அடுக்கவா?

காஸியஸ்: காஸ்கா! நீ கவனத்துடன் பேச வேண்டும்! கிளியோபாத்ராவை எகிப்தின் ராணியாக ஆக்கியவர் சீஸர்! சீஸரை எகிப்தின் மன்னராய் ஆக்கியவள் கிளியோபாத்ரா! அவளை நீ தாழ்வாகப் பேசலாமா? புரூட்டஸ் சொன்னதில் பொருள் உள்ளது!

சிசெரோ: [குறுக்கிட்டு] எகிப்துக்கு வேந்தரான சீஸர் ரோமாபுரிக்கும், ரோமானிய சாம்ராஜியத்துக்கும் பேரரசனாக முடிசூட்டிக் கொள்ளப் போவதாக அறிந்தேன்! அந்தப் பேராசைக்கு விதை யிட்டவள் கிளியோபாத்ரா! ரோமின் குடியரசை ஒழிக்க சீஸர் முடிவெடுத்து விட்டார்! அறிந்து கொள்வீர்!

காஸியஸ்: ஆமாம், புரூட்டஸ்! சீஸரின் பேராசைக்கோர் அளவில்லை! எல்லை யில்லை! அரணில்லை! அதை முளையிலே களை எடுப்பது செனட்டரின் கடமை! அதைத் தடுத்து நிறுத்துவது நமது பணி! சீஸர் மன்னரானால், செனட்டர்களை ஆட்டுக் குட்டிகளாய் ஆக்கி விடுவார்! செனட்டரின் சொற்கள் அவரது செவியில் ஏறா!

புரூட்டஸ்: [கேலியாக] அதென்ன நமது கடமை என்று சொல்கிறீர்! உங்கள் சதிக் கூட்டத்தில் என்னைச் சேர்க்காதீர்! அதோ வருகிறார், ரோமானிய ஆட்சித் தளபதி, ஆண்டனி! அவர் காதில் உமது சங்கொலி முதலில் ஒலிக்கட்டும்!

[ஆண்டனி சீஸர் பெயரைக் கேட்டதும் செனட்டர் அருகே வருகிறார். கூடவே கல்பூர்ணியாவும் வருகிறாள்]

காஸ்கா: [கேலியாக] ஆண்டனி! நினைவில் வைத்துக்கொள்! உனது பொற்காலம் கற்காலமாகப் போகுது! சீஸர் வரப் போவதாய்க் கேள்விப் பட்டோம்! சீக்கிரம் நீ ரோமாபுரித் தலைமை பதவியைத் துறக்க வேண்டி திருக்கும்! சீஸர் வருகிறார்! எப்போதென்று தெரியுமா? எகிப்தின் கடவுள் வரப் போகிறார்! வரவேற்பு பலமாய் இருக்கட்டும்!

கல்பூர்ணியா: [மிக்க மகிழ்ச்சியுடன்] என் பதி வரப் போகிறாரா? எப்போது வருகிறார்? காஸ்கா! அவரை ஏன் எகிப்தின் கடவுள் என்று ஏளனமாகச் சொல்கிறாய்?



காஸ்கா: கல்பூர்ணியா! சீஸர் வரப் போகிறார். எப்போதென்று என்னைக் கேட்காதே! கிளியோபாத்ராவைக் கேட்டால் தெரியும்! அந்த நாள் சீஸருக்கே தெரியுமா என்பது என் சந்தேகம்! கிளியோபாத்ரா ஐஸிஸ் தெய்வத்தின் அவதாரமாம்! அவளைத் திருமணம் செய்த சீஸரை எகிப்தியர் தேவனாகக் கொண்டாடுவதில் தவறில்லை! மேலும் ·பாரோ பரம்பரையில் வந்தவள் கிளியோபாத்ரா! அவளை மனைவியாக ஏற்றுக் கொண்ட சீஸருக்கு, ·பாரோ சந்ததியைப் பெற்றவர் என்று வரலாறு பாராட்டும்!

கல்பூர்ணியா: என் பதி முழுக்க முழுக்க ஒரு ரோமானியர்! எத்தனை மத்திய ஆசியப் பெண்களை அவர் மணந்தாலும், அவரது முகவரி மாறாது! அவரை எகிப்தியக் கடவுள் என்று ஏளனம் செய்யாதே!

காஸியஸ்: கல்பூர்ணியா! சீஸர் ரோமாபுரிக்கு மீளாத வேளையில், ரோமானியரும் அவரைக் கடவுளாக மதிக்கிறார் தெரியுமா? பிற்கால வரலாறு சீஸர் கிளியோபாத்ராவின் பதி என்று சொல்லுமே தவிர, கல்பூர்ணியாவின் பதி என்று சொல்லப் போவதில்லை!

ஆண்டனி: காஸியஸ்! உன்னைப் போல் ஒருவனும் சொல்லப் போவதில்லை! சீஸரின் முதல் மனைவி கல்பூர்ணியா வென்பதை வரலாறு மாற்ற முடியாது! சீஸரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஆட்சி செய்பவன் நான்! அவர் வெற்றியைப் பங்கீட்டு ஆளுபவன் நான்! எங்கிருந்தாலும் அவர்தான் ரோமானிய சாம்ராஜியத்தின் அதிபதி!

சிசெரோ: ஆனால் அவர் ரோமாபுரியின் ஏதேட்சை அதிகாரி என்பது உனக்குத் தெரியாதா? ரோமானிய சாம்ராஜியத்தின் வேந்தர் அவர் என்பது உனக்குத் தெரியாதா? ரோமாபுரியின் குடியரசை சிதைக்கப் பிறந்தவர் என்பது உனக்குத் தெரியாதா? ரோமாபுரியின் மன்னராக சீஸர் முடிசூடப் போவது உனக்குத் தெரியாதா?



ஆண்டனி: தெரியாது! ரோமாபுரியின் மன்னராகப் பதவி ஏற்கச் சீஸர் எப்போதும் விரும்பிய தில்லை! நான் சொல்கிறேன், கேட்பீர்! ரோமின் குடியரைச் சீஸர் ஒருபோதும் முறிக்கப் போவதில்லை! மாற்றப் போவதில்லை! செனட்டர்களை எப்போதும் வரவேற்பவர் சீஸர்!

சிசெரோ: ஆண்டனி! நீ சீஸரை மிகவும் நேசிப்பதால், உன் கண்ணுக்கு அவரது சூழ்ச்சிகள் புரிவதில்லை! அவரது தவறுகள் தெரிவதில்லை! வெளிநின்று நோக்கும் எங்களுக்குப் பளிச்செனத் தெரிகிறது!

அக்டேவியன்: நான் ஒன்று கேட்கிறேன், கல்பூர்ணியா! கிளியோபாத்ராவுக்குப் பிறந்த சீஸரின் மகனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

கல்பூர்ணியா: ஆண்மகவைப் பற்றி எனக்குப் பூரண திருப்தியே! என் பதியின் ஆண்பிள்ளை அது! என் பதியின் அன்புக் குழந்தை அது! என் பதி ஏற்றுக் கொண்ட ஆண்மகவு யாருக்குப் பிறந்திருந்தால் என்ன! அந்த பிள்ளை எனக்கும் சொந்தப் பிள்ளைதான்! சீஸரின் பெயரைச் சொல்லப் பிறந்த ஆண்பிள்ளை அது! என் பதியின் காதலி என் மதிப்புக்கும், வரவேற்பிற்கும் உரியவள்! சீஸரின் வாரிசு அந்த சிறுவன் என்பது நன்றாகத் தெரியும் எனக்கு. அந்தச் சின்னஞ் சிறு குழந்தை மீது உங்களுக்கு ஏன் வெறுப்பென்று தெரியவில்லை எனக்கு!

அக்டேவியன்: எனக்கு அதிகாரம் கிடைக்கும் போது, சீஸரின் வாரிசை ஒழிக்க நான் முனைவேன் என்பதை அறிந்துகொள், கல்பூர்ணியா? யானைகொரு காலம்! பூனைக்கொரு காலம்! பூனை ஆட்சிக்கு வரும்போது அந்த எலியைப் பிடித்து விழுங்கி விடும் என்று அறிந்துகொள் கல்பூர்ணியா! அது ஒரு விஷப் பாம்பு! பாலைவன நச்சுப் பாம்பு! கிளியோபாத்ராவே ஒரு நாகப் பாம்பு! அவள் வயிற்றில் பாம்பு பிறக்காமல் பிறகு வேறென்ன பிறக்கும்? ஒருநாள் என் வாளுக்கிரையாகும் அந்த நாகம்! அந்த நாகத்தின் குட்டியை நான் விட்டு வைக்கப் போவதில்லை.

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]





மகத்தானது, மர்ம மானது மரணம்!
புகட்டலாம் அதனை இரண்டு விதத்தினில்!
என்றோ ஒருநாள் சாவது உறுதி!
எப்படிச் சாவு வரும் நமக்கு?
எப்போது சாவு வரும் நமக்கு?
என்பதி லில்லை உறுதி!
ஸொகியால் ரின்போச், திபெத் வேதாந்தி [Sogyal Rinpoche (1950-****)]

கடலில் பயணிக்க ஒரு படகையும்,
குடியிருந்து வாழ ஒரு வீட்டையும்
முடிவு செய்வது போல நான்
வாழ்வு யாத்திரை முடிக்க
தேர்ந்தெ டுக்கிறேன் மரணமதை!

செனேகா, ரோமன் வேதாந்தி [Seneca (B.C.4-A.D.65)]

வால்மீன்கள் தெரிவதில்லை பிச்சைக்காரர் செத்தால்!
வான மண்டலம் பற்றி எரியும் ஓரிளவரசர் மாண்டால்! …..
கோழையர் மடியும் முன் பன்முறைச் சாவர்!
வீரர்கள் ஒருமுறை தான் சாவைச் சுவைப்பர்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

சதியே! புன்னகையில் புதைந்து கொள்!
பதுங்கிக் கொள் பணிவுத் தன்மையில்!
பாதைமேல் நடந்தால் மெய்யுரு தெரிந்திடும்!
காரிருள் கூடக் காட்டிக் கொடுத்திடும்! …. (புரூட்டஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

வானத்தின் வயிறைக் கிழிக்குது மின்னல்!
வைர நெஞ்சை அடிக்குது பேரிடி! நாட்டின்
உருவைச் சிதைக்குது பேய்ப்புயல்! நகரின்
தெருவை நிரப்புது கொட்டும் மழை!

***********

வானும், பூமியும் வாழ்த்திடும் சீஸரை!
வீணாய்க் கலங்குதல் ஏனோ அறியேன்?
நற்கனவே கல்பூர்ணியா கண்டது நேற்று!
முற்றிலும் தவறே துர்க்கனா வென்பது! … தீஸியஸ்



கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ•பியோ: சீஸரின் லெ•ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.



அங்கம்:5 காட்சி:5

நேரம், இடம்: சீஸர் பட்டாபிசேக தினம். அதிகாலை வேளை. ரோமாபுரி சீஸரின் மாளிகையில் படுக்கை அறை.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், சீஸரின் மனைவி கல்பூர்ணியா, பணியாள், செனட்டர் தீஸியஸ்

காட்சி அமைப்பு: மார்ச் பதினைந்தாம் தேதி அதிகாலைப் பொழுது. இராப்பகலாய்ப் பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. சீஸர் மெத்தையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அருகில் உறங்கும் கல்பூர்ணியா பயங்கரக் கனவுகள் கண்டு கலங்கிப் புரண்டு அலறுகிறாள். சீஸர் தூக்கம் முறிந்து அதிர்ச்சியுடன் எழுந்து ஒன்றும் புரியாது நடமாடுகிறார்.

ஜூலியஸ் சீஸர்: வானமும், பூமியும் ஏனின்று கொந்தளித்துக் கூக்குரல் போடுகின்றன? மூன்று தரம் கல்பூர்ணியா தூக்கத்தில் அலறி விட்டாள்! “ஐயோ சீஸரைக் கொல்கிறார்” என்று மும்முறைக் கத்தி விட்டாள், கல்பூர்ணியா! பாழாய்ப் போன ராத்திரி அவளுக்குப் பயங்கரக் கனவுகளைக் காட்டி உலுக்கி விட்டது! யாருக்கு நெஞ்சுறுதி உள்ளது சீஸர் மீது வாளை வீசிட? அஞ்சாதே கல்பூர்ணியா! நான் உயிரோடுதான் உள்ளேன்! உன் கனவுக்கு ஓர் அர்த்த மில்லை! உன் கணவரைக் கொல்லும் எந்தப் பகைவனும் ரோமாபுரியில் இல்லை? அஞ்சாதே கண்ணே! அலறாதே கல்பூர்ணியா! …. யாரங்கே?

பணியாள்: [உள்ளே விரைந்து] பிரபு! நான்தான் உங்கள் பணியாள். என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்?

ஜூலியஸ் சீஸர்: போ! ஆலயப் பாதிரிகளைக் கண்டு விலங்குகளைப் பலியிடச் சொல்! குருதியைத் தொட்டு பின்னால் என்ன நடக்கப் போகுதென்று அவரை அறியச் சொல்! சொல்லும் தகவலைக் கேட்டு வா! சீக்கிரம் போ!

பணியாள்: அப்படியே செய்கிறேன் பிரபு!

[பணியாள் போகிறான். கல்பூர்ணியா கண்விழித்துப் பயமுடன் எழுந்து கவலையுடன் சீஸரை அண்டுகிறாள்]

கல்பூர்ணியா: [சோக முகத்துடன்] என்ன சொல்கிறீர் பிரபு? வெளியே போகக் கூடாது நீங்கள்! வீட்டுப் படியைத் தாண்டி வெளியேறக் கூடாது நீங்கள்! வெளியேற விடமாட்டேன் நான்! நான் கண்ட தீக்கனா என் நெஞ்சைப் பிளந்து விட்டது!

ஜூலியஸ் சீஸர்: ஏனப்படிச் சொல்கிறாய்? எனக்கென்ன நேரப் போகுது? என்னை பயமுறுத்துபவை முதுகுப் புறத்தில்தான் நிகழும். முகத்தைப் பார்த்தால் பயந்து ஓடிவிடும்.

கல்பூர்ணியா: பிரபு! சகுனங்களைப் பொருட் படுத்தாதவள் நான். ஆயினும் அவையின்று எனக்கு அச்சம் ஊட்டுகின்றன. பயங்கரக் கனவுகள் வந்து என்னை வாட்டுகின்றன. குழந்தை யில்லாத எனக்கு நீங்கள் ஒருவர்தான் உறவு! அந்த உறவு பறிபோவதாய்க் காட்டுது என் கனவு! என்ன சொல்வேன் என் அன்புக்குரியவரே! எப்படிச் சொல்வேன் என் ஆருயிரே! உங்கள் உயிருக்கு ஆபத்து என்றெண்ணும் போது என் எலும்பும், சதையும், ஆத்மாவும் ஆடுகின்றன! என்னிதயம் வில்லடி பட்ட பறவைபோல் துடிக்கிறது! கனவிலே உங்களைச் சுற்றிக் கூரிய கத்திகள் நெருங்கிடக் கண்டேன்! வீதியில் ஒரு வேங்கை குருதி
சிந்தி வீறிட்டு ஓடுவதைக் கண்டேன்! பிரேதக் குழிகளில் எழுந்த பிணங்கள் உம்மைத் தழுவிக் கொள்வதைக் கண்டேன்! வானத்தில் பிசாசுகள் போரிட்டு மக்கள் மன்றத்தில் குருதி பொழியக் கண்டேன்! பேய்களும், பிணங்களும் தீயைக் கையில் ஏந்தித் தெருவெல்லாம் சுற்றி வரக் கண்டேன்! அவை எல்லாம் அடிவயிற்றைக் கலக்கி அச்சமும் பீதியும் அடைகிறேன்! மக்கள் மன்றத்துக்கு நீங்கள் போக வேண்டாம்! போகக் கூடாது! போக விடமாட்டேன்!



ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] வரப் போகும் முடிவை யாரால் தடுக்க முடியும்? வருவது வந்தே தீரும்! வராததைக் கனவில் கண்டு வருமென நீ வருந்தலாமா? வரும் என்று நீ எதிர்பார்ப்பது வராது! வராது என்று வாளா விருக்கும் சமயம் வந்திடும் அது! விதியின் விளையாட்டு வேடிக்கையானது, மர்மமானது! பராக்கிரமன் சீஸர் அவற்றுக் கெல்லாம் பயந்தவனில்லை! அழைப்பை ஒப்புக் கொண்ட நான், மன்றத்துக் கின்று போகத்தான் வேண்டும், கல்பூர்ணியா! நீ கண்ட அபசகுனங்கள் சீஸருக்கு மட்டுமல்ல! ரோமானியர் அனைவருக்கும் எச்சரிக்கை அவை!

கல்பூர்ணியா: உண்மை! முற்றிலும் உண்மை! உங்களுக்கு ஆபத்தென்றால் அது ரோமா புரிக்குத்தானே எச்சரிக்கை! பிச்சைக்காரன் செத்தால் வான்மீன் வருவதில்லை! சாவு மணி அடிப்பதில்லை! ஆனால் ஓர் வேந்தன் மாண்டால், வான மண்டலமே வெடித்துப் பிளக்கிறது!

ஜூலியஸ் சீஸர்: கல்பூர்ணியா! ஆறிலும் சாவு! நூறிலும் சாவு! பிறப்பும், இறப்பும் நாணயத்தின் இரு முகங்கள்! கோழையர் மரணம் வருவதற்கு முன்பாகப் பன்முறை மடிவார்! வல்லவன் ஒருமுறைதான் சுவைக்கிறான் மரணத்தை! ஆச்சரியமாக உள்ளது! மரணம் மனிதனின் முடிவென்று அறிந்தும் ஏனவன் அதற்கு அஞ்சி ஒளிய வேண்டும்! அஞ்சி ஒளிந்தாலும், அவரை மரணம் தேடிப் பிடித்திடும்! யார் அதைத் தடுப்பார்? யார் அதிலிருந்து தப்புவார்? யார் அவரைக் காக்க முடியும்?

[பணியாள் அப்போது ஓடி வருகிறான்]

பணியாள்: பிரபு! சகுனத்தை விளக்கும் ஆலய ஜோதிடர் பலியிட்ட பிறகு சொன்னார், மன்றத்தில் உங்களுக்கு ஆபத்து வரலாம் என்று!

ஜூலியஸ் சீஸர்: [அலட்சியமாக] ஆபத்து வரும் என்று உறுதியாகச் சொல்ல வில்லையே! வரலாம் என்றால் ஐயப்பாடு அல்லவா தொனிக்கிறது! தெய்வப் பீடாதிபதிகள் என்னைக் கோழையாக்க முயல்கிறார். சீஸர் ஒருபோதும் அஞ்சி ஒளிவ தில்லை! அபாயத்துக்குத் தெரியுமா, அபாயத்தை விட நான் அபாயமானவன் என்று! பராக்கிரம சீஸர் பயந்து பின்தங்க மாட்டான்.

கல்பூர்ணியா: [கெஞ்சலுடன்] பிரபு! ஊக்கமும், உறுதியும் உங்கள் அறிவை மீறுகிறது! துணிவும், பலமும் உங்களைக் குருடாக்குகிறது! சீஸரை நிறுத்தியது, கல்பூர்ணியாவின் அச்சம் என்று எண்ணிக் கொள்வீர்! அது என் முடிவாகட்டும்! மார்க் ஆண்டனியை அனுப்பி, சீஸருக்கு உடல்நல மில்லை என்று மன்றத்தில் அறிவிக்கச் சொல்வீர்! உங்கள் காலில் விழுந்து மன்றாடுகிறேன். [சீஸர் முன்பு மண்யிட்டு அழுகிறாள்]

ஜூலியஸ் சீஸர்: [கேலிச் சிரிப்புடன்] “சீஸருக்கு நலமில்லை! மன்றத்துக் கின்று வரமாட்டார்!” என்று மார்க் ஆண்டனி சொன்னால், என்ன கேலிக் கூத்தாக இருக்கும்? செனட்டர் எல்லாரும் அதைக் கேட்டுச் சிரிக்காமல் இருப்பாரா?

[பணியாள் வந்து செனட்டர் தீஸியஸ் வந்துள்ளதாக அறிவித்த பிறகு, தீஸியஸ் உள்ளே நுழைகிறார்]



தீஸியஸ்: வணக்கம், மேன்மை மிகு தளபதியாரே! வணக்கம், மாண்பு மிகு கல்பூர்ணியா அம்மையாரே! நான் தளபதியை மக்கள் மன்றத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்! நீங்கள் தயாரானதும் உங்களுடன் வர புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சில செனட்டர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஜூலியஸ் சீஸர்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] நன்றி தீஸியஸ், நல்லது, பூரிப்படைகிறேன்! சரியான சமயத்தில் வந்திருக்கிறாய்! செனட்டருக்கு என் நன்றியை எடுத்துரை! ஆனால் மன்றத்துக்கு நான் வர முடியா தென்று சொல்! முடியா தென்பது சரியல்ல! மன்றத்துக்கு வரப் போவதில்லை என்று சொல்!

கல்பூர்ணியா: [சட்டென] சீஸருக்கு உடல்நல மில்லை என்று சொல். சுகமின்றி சீஸர் வீட்டில் படுத்திருக்கிறார் என்று சொல்!

ஜூலியஸ் சீஸர்: [தயக்கமுடன்] சீஸர் பொய் சொல்லாமா? கூடாது! கூடவே கூடாது! பேரவைக்கு சீஸர் வரப் போவதில்லை என்று சொல்!

தீஸியஸ்: [தயக்கமுடன், கெஞ்சலில்] பராக்கிரம பிரபு! ஏதாவது ஒரு காரணம் நான் சொல்ல வேண்டாமா? அல்லது மன்றத்தில் என்னைப் பார்த்து எல்லாரும் கைகொட்டிச் சிரிக்க மாட்டாரா?

ஜூலியஸ் சீஸர்: காரணம் என்ன? என் மன விருப்பம் என்று சொல்! செனட்டருக்கு அது போதும். ஆனால் உனக்கு மட்டும் உண்மைக் காரணம் சொல்கிறேன், நீ எனக்கு விருப்பமானன் என்னும் முறையில். கல்பூர்ணியா கெட்ட கனவு கண்டு என்னைத் தடுத்து விட்டாள்! நிறுத்தி என்னை வீட்டில் தங்க வைத்திருக்கிறாள். அவளது பயங்கரக் கனவில் என் சிலையைக் கண்டாளாம்! சிலை மீதிருந்து பல குருதி ஊற்றுக்கள் பீச்சி எழுவதைக் கண்டாளாம்! ரோமானிய மூர்க்கர் சிரித்துக் கொண்டு அந்தக் குருதியில் கைகளைக் குளிப்பாட்டினாராம்! அவற்றைக் கண்டதில் அச்சம் கொண்டு என்னை போக வேண்டாமெனத் தடுத்து மன்றாடுகிறாள்!

தீஸியஸ்: [சிரித்துக் கொண்டு] வானமும், பூமியும் முன்கூட்டி சீஸரை வாழ்த்துவதைத் தவறாகப் புரிந்திருக்கிறார்! வானம் கொட்டி முழக்குது! பூமி புயலடித்துப் பூரிக்குது! மழை நீர்ப் பூக்களைத் தெளிக்குது! நீரும், நிலமும், வானும் ஒருங்கே சீஸரை வேந்தராக வரவேற்குது! சீஸர் சிலையில் பீறிட்டெழும் குருதி, ரோம சாம்ராஜியத்தை விரிவாக்க அவர் செய்த தியாகத்தைக் காட்டுகிறது! பராக்கிரமப் பிரபு! கல்பூர்ணியா நேற்று கண்டது நற்கனவே! துர்க்கனவாய் எடுத்துக் கொள்வது சரியல்ல!

ஜூலியஸ் சீஸர்: [பேருகையுடன்] பார்த்தாயா கல்பூர்ணியா! தீஸியஸ் கூறும் விளக்கமே சிறந்ததாய்த் தெரியுது எனக்கு! உன் பயங்கர விளக்கம் தவறு! ஆலயப் பீடாதிபதிகள் சொன்னதும் தவறு! தீஸியஸ் சொல்வதே சரி. … தீஸியஸ்! நான் மன்றத்துக்கு வருவதாகச் செனட்டாரிடம் சொல்!

கல்பூர்ணியா: [கண்ணீர் வடித்து] மகா பிரபு! தீஸியஸ் சொல்வதுதான் தவறு! என் மனதில் அப்படித் தோன்ற வில்லை! வல்லமை மிக்க விதி உங்களை வலை போட்டுப் பிடிக்கிறது! தீயஸிஸ் சொல்வதில் தீமை ஒளிந்துள்ளதாகத் தெரியுது எனக்கு! போகாதீர் பிரபு, போகாதீர்!

தீஸியஸ்: பிரபு! செனட்டார் யாவரும் சீஸருக் கின்று பொற்கிரீடம் அணிவிக்கப் போவதாய்த் தீர்மானம் செய்துள்ளார்! தாங்கள் வரப் போவ தில்லை என்றால் அனைவரும் வருந்துவார்! பிறகு மனம் மாறி விடுவார். பெருஞ்சினங் கொண்டு மன்றத்தைக் கலைத்து விடுவார்! “தள்ளிப் போடுங்கள் பட்டாபிசேக நாளை, கல்பூர்ணியா நற்கனவு காணும் வரை!” என்று எள்ளி நகையாடுவார்! பிரபு! தங்கள் தலையை ஒப்பனை செய்த தங்கக் கிரீடம் தயாராக உள்ளது, மன்றத்தில்! தங்களை வேந்தராக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார் செனட்டார்! வாருங்கள் மன்றத்துக்கு! வந்து ஏற்றுக் கொள்வீர் வெகுமதியை! பராக்கிரம சீஸரே! உமது பொற்காலமிது! உமது மகத்தான பாராட்டு விழா இது! ஒருமுறைதான் வருமிது! விட்டுவிடாதீர் வீராதி வீரரே!



ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] எத்தகை அவமானத்தை எனக்கு உண்டாக்கி விட்டாய் கல்பூர்ணியா? உன் கனவைக் கேட்டு நான் ஒளிந்து கொள்வதா? தீஸியஸ்! வருகிறேன் மன்றத்துக்கு! மகிழ்ந்திடு கல்பூர்ணியா! …. யாரங்கே? கொண்டுவா எனது மேலங்கியை! குளித்து, முழுகி, ஆடை அணிந்து நான் தயாராக வேண்டும்! ….(மெதுவாக) ஆனால் தீஸியஸ்! இங்கு நடந்த அர்த்தமற்ற வாதங்களை வெளியில் எவருக்கும் சொல்லாதே! கல்பூர்ணியா என்னைத் தடுத்து நிறுத்தினாள் என்று யாரிடமும் கூறாதே! கெட்ட சகுனங்களைக் கண்டு சீஸர் அஞ்சினார் என்று எள்ளி நகையாட எவருக்கும் இடங் கொடாதே! … போ! சீஸர் மன்றத்துக்கு வருகிறார் என்று பறைசாற்று! என் பொற்காலம் உதயமாகட்டும்!

[தீஸியஸ் போகிறான்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

No comments:

Post a Comment