Sunday 21 April 2019






எந்தக்கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது? ஏன்??

இன்றைய நிலையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதைவிட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதுதான் சுலபம்!

நடைபெறப்போவது நாடாளுமன்றத் தேர்தல்!

பிரதமர் வேட்பாளரை வைத்திருக்கும், நாடாளப்போகும் இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் அதிகபட்சம் கால்வாசி இடங்களில்தான் போட்டியிடுகின்றன!

இந்த அளவில்தான் அந்தக்கட்சிகளை தமிழகமும், தமிழகத்தை அந்தக் கட்சிகளும் வைத்திருக்கின்றன!

இது அரை நூற்றாண்டு வரலாறு!
இப்போது அது எதற்கு?
நேரடியாக விஷயத்துக்கு வருவோம்!

காசை வீசியெறிந்தால் வாலாட்டிக்கொண்டு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் மத்தியில் கைகூப்பி வருகிறார்கள் கபட வேடதாரிகள்!

ஒருநாள் சாராயக் காசுக்கு தலைமுறைகளையும் அடமானம் வைக்கும் ஈனப்பழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்திவிட்டு குரூரமாக இளித்து வருகின்றன பச்சை ரத்தம் குடிக்கும் ஓநாய்கள்!   

இப்போதாவது விழித்துக்கொள்ள, கொஞ்சம் அந்த அரசியல் வியாதிகளின் தகுதிகளை அலசுவோம்!

முதலில் நாற்பது தொகுதிகளிலும் போட்டியிடும் மூன்று கட்சிகள்:

அதில் ஒன்று அறம் என்றால் என்னவென்றே தெரியாமல் காசை வாரியிறைத்து வெல்லத்  துடிக்கும் கொள்ளைக்கூட்டம்!

இன்னொன்று முட்டாள்தனமாக வரலாற்றைத் திரித்து உணர்வுகளைத் தூண்டிவிட்டு தலைமை சம்பாதிக்க மட்டும்  நடத்தப்படும் கட்சி!

இவற்றை விமர்சிக்காமல் ஒதுக்குவதே நல்லது!

அடுத்தது எங்கு கரையேறுவது என்றே தெரியாமல் மய்யத்தில் தடுமாறும் கட்சி!

இதன் ஸ்தாபகர் மக்களுக்கு எந்தக்காலத்திலும் நெருக்கமாக இருந்தவரல்ல!
தானொரு அறிவுஜீவி என்று தானே நம்பிக்கொண்டு, தன்னைச் சுற்றி ஒரு எலைட் ஒளிவட்ட வேலியைப் போட்டுக்கொண்டவர்!

யாருக்காக எதற்காக களமிறக்கப்பட்டாரோ, அதைமட்டும் செய்துகொண்டு காலத்தை ஓட்டுபவர்! 
இந்தத் தேர்தலுக்குப்பின் இந்தக் கட்சிக்கு முகவரி இருப்பதே சிரமம்!

எனவே, இதுவும் முற்றாக ஒதுக்கப்படவேண்டிய கட்சிதான்!

பாஜக தலைமையிலான அணி:

அப்படித்தான் சொல்லச்சொல்லி அமித்ஷா மிரட்டியிருக்கிறார்!

நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு இருக்கை விளிம்பில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தார் துணை முதல்வர்!

ஷேகர் ரெட்டி வீட்டில், ஏறத்தாழ எல்லா அமைச்சர்கள் வீட்டில், அவ்வளவு ஏன், தலைமைச் செயலகத்தில் என்று எல்லா இடங்களிலும் சிபிஐ , வருமானவரித்துறை என்று மாறிமாறி சோதனை!

தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்துவது ஜனநாயக விரோதம் என்று எல்லோரும் பொங்கியபோதும், இந்த ஊழல் பெருச்சாளிகளை வேரோடு ஒழிக்க மோடி அரசாங்கம் வேட்டையாடுகிறது என்று சந்தோஷமாக இருந்தது!

கட்டுக்கட்டாக பணம், குவியல்குவியலாக நகை, அடுக்கடுக்காக சொத்துப் பத்திரங்கள் பறிமுதல் என்று செய்தி ஊடகங்கள் பரபரக்க, புது இந்தியா பிறந்தேவிட்டது என்று புல்லரித்துப்போனது!

பிறகு ஏனோ ஒரே மயான அமைதி!

நாட்டு நலனுக்கோ, ஊழலை ஒழிக்கவோ அந்த சோதனைகள் நடத்தப்படவில்லை.
மாறாக,
கொஞ்சம் நிமிரப்பார்த்த அடிமைகளை பழைய நிலைக்கும் கீழாக குனியவைக்க வெறும் அச்சுறுத்தல் அஸ்திரங்கள் அவை என்பது என் மரமண்டைக்கு கொஞ்சம் தாமதமாகவே புரிந்தது!

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற எல்லா நல்ல விஷயங்களையும் வேறு நோக்கங்களுக்கு உபயோகித்ததுபோல இந்த சோதனைகளையும் சுயநலத்துக்கே பயன்படுத்தியிருக்கிறது மோசடி அரசு!

நோட்டாவைக்கூட மிஞ்சமுடியாத வெறும் ஐந்து சீட்டுக்கே இத்தனை கேவலமான அச்சுறுத்தல் ப்ளாக்மெயில் உத்திகளை பயன்படுத்தும் இந்தக் கட்சியும் அரசும்,
மீதி 505 இடங்களுக்கு தேசம் முழுக்க எத்தனை தகிடுதத்தங்களை செய்திருக்கும்?

ஒரு பிரதமர் வென்ற தேர்தலே செல்லாது என்று அறிவிக்குமளவு தன்னாட்சியும் மாண்பும் கொண்டிருந்தன நீதிமன்றங்கள் இந்த நாட்டில்!

இன்று பழங்குடிகளை இடப்பெயர்வு செய்ய அதன் பின் விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் சர்வ சாதாரணமாக கண்ணை மூடிக்கொண்டு ஆணையிடுகிறது உச்சநீதிமன்றம்!
இது எந்தக் குழுமம் இயற்கை வளங்களை சுரண்ட சாதகமான தீர்ப்பு என்று நேற்றுப்பிறந்த குழந்தை சொல்லும்!

உச்ச நீதிமன்றம், ஆளும் கட்சி வேண்டிய நேரத்தில், வேண்டும் தீர்ப்பை தருகிறது!

அதுவரை எவ்வளவு அவசர வழக்காக இருந்தாலும் ஆறப்போடுகிறது!

ஒரு மாநில முதல்வரின் மரணத்தில் ஒரு பாமரனுக்கு வரும் சந்தேகங்கள் கூட வராமல் மண்ணுளிப்பாம்பாய் நெளிந்து கிடக்கிறது நீதி!

தேர்தல் ஆணையம் ஒருபடி மேலே போய் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தை கொடுக்கிறது! 
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அறிமுகமற்ற சின்னங்களை ஒதுக்குகிறது!

நீதிமன்றமே ஓங்கிக்குட்டினாலும் மூன்று சட்டசபை தொகுதிகளை தவிர்த்தே தேர்தல் நடத்துகிறது! மெஜாரிட்டி கணக்கை தேர்தல் ஆணையம் போட்டு ஆளும் கட்சிக்காய் கவலைப்படுகிறது.

இன்று வந்த தீர்ப்பின்படி, சட்டவிதிகளுக்குப் புறம்பாக ஏதோஒரு கைநாட்டை ஒப்புக்கொண்டு தேர்தலை நடத்தியிருக்கிறது!

இத்தனை குளறுபடிகளை அறிந்தே, யாருக்காகவோ செய்த தேர்தல் ஆணையம், கோவாவில் முதல்வர் மறைந்த வேகத்தில் தேர்தலை அறிவிக்கிறது வெட்கம் கெட்ட அடிமைத்தனம்!

கேவலம் பழகிப்போய் இனி அடுத்துவரும் அரசில், அரசியல்வியாதிகளின் வீட்டு நாய்க்குட்டிகளுக்கு கழுவிவிட்டுக்கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம்! அடிமைத்தனம் நம் அதிகாரவர்க்கத்தின் ரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது!

சிபிஐ, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் இதுபோன்ற அரசு சாராத சுயசார்பு நிறுவனங்களை இவ்வளவு அப்பட்டமாக உபயோகிப்பது எவ்வளவு தீயநெறிகளை ஊக்குவிக்கும் செயல்?

இதற்கு முந்தைய அரசு இதையெல்லாம் செய்ததில்லையா என்றால்,
கண்டிப்பாக செய்தது!

ஆனால், சந்துக்குள் ஒளிந்துகொண்டு கள்ளச்சாராயம் குடிப்பதுபோல் பயந்து பதுங்கி செய்தது!

இப்போது வெட்டவெளிச்சமாக காலை முதல் நள்ளிரவுவரை பாரில் உட்கார்ந்து குடிக்கிறது மோடி அரசு!

அரசியல் நெறிமுறைகள் கழுவிலேற்றி கொல்லப்படுகின்றன!
இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!

இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டை ஒற்றை மதம், ஒற்றை முகம் என்று மாற்ற முயலுவது தேசத்தை சுடுகாடு ஆக்கும் செயல்!

மத சார்பற்ற நாட்டில் பெரும்பான்மை மதத்துக்கு மதம் பிடிப்பது கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும்!

நேரிடையாக மதக்கலவரங்களை நடத்தாமல், பசு பாதுகாப்பு என்று சுற்றிவளைத்து மத தீவிரவாதத்துக்கு விதை போட்டு வளர்க்கிறது மோசடி அரசு!

கல்வித்துறையில் பழங்குடி இனத்தவர்க்கான மேற்படிப்புக்காக தகுதி மதிப்பெண்களை 5 விழுக்காடு உயர்த்தி அவர்களை கல்வியின்றி முடமாக்கத் துடிக்கிறது!

கொஞ்சம் கொஞ்சமாக மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அதிகாரத்தை மத்தியில் குவிக்கிறது!

இது எதுவுமே இந்திய இறையாண்மைக்கு உகந்த செயல்கள் அல்ல!

தமிழகம் தங்களுக்கு என்றுமே வாக்களிக்கப்போவதில்லை என்று அப்பட்டமான உண்மை உறைக்க, எத்தனை இயற்கைப் பேரிடர் வந்தபோதும் கண்டுகொள்ளாது கடக்கிறது  மத்திய அரசு!

இயற்கை சீரழிவு ஏற்படுத்தும் அத்தனை திட்டங்களையும் தமிழகத்துக்கு தள்ளிவிட்டு சுடுகாடாக்கத் துடிக்கிறது மோசடி அரசு!

இவை எல்லாவற்றுக்கும் உச்சமாக, ஊழலில் ஊறிப் புரையோடிப்போன ஒரு பேயரசை தாங்கிப்பிடித்து காப்பாற்றிவருகிறது!
தன்னுடைய சுயநலனுக்காக தமிழகத்தை பலிகடா ஆக்குகிறது!

அதன் அடிமை அரசோ, தூத்துக்குடி கலவரத்தில் அப்பாவிகளை குறிவைத்து சுடுகிறது!

இயற்கைப் பேரிடரின்போது ஆடம்பரத் தோரணங்களோடு மேளதாளம் முழங்க மாமனார் வீட்டில் கிடா விருந்து சாப்பிடுகிறார் அடுத்த வாய்ப்பு இந்த ஜென்மத்தில் இல்லை என்பதை உணர்ந்த நம் முதல்வர்!

பொள்ளாச்சியில் புகார் கொடுத்த பெண்ணின் முழு முகவரியை தவறுதலாக மூன்றுமுறை பகிர்கிறது காவல்துறையும் அரசும்! 

பாதிக்கப்பட்ட பெண்களை புகார் கொடுக்க விடாமல் நேரிடையாக அச்சுறுத்தும் செயல் இது என்பது அவர்களுக்குத் தெரியாது என்று முட்டாள்கூட நம்பமாட்டான்!

சம்பந்திக்கு அரசு காண்ட்ராக்ட் வழங்கக்கூடாது என்று சட்டத்தில் சொல்லவில்லை என்று திமிர்ப்பேச்சு வேறு!

சட்டம் சொல்லாத நெறிமுறைகள் ஆயிரம் உண்டு உலகில்!
அறம் என்பது என்னவென்றே தெரியாத, சுரண்டிப்பிழைப்பதே தொழிலாகக்கொண்ட அடிமைக்கூட்டத்துக்கு அதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை!

சட்டம், நீதி, நெறிமுறை, அறம்  எல்லாவற்றையும் காலுக்குக்கீழ் போட்டு மிதித்துக்கொண்டு வெறியாட்டம் போடுகிறது மெஜாரிட்டி இல்லாத சிறுபான்மை அரசு!

அதற்கு எதிரான வழக்குகளை நீதிமன்றத்தில் முடக்கி அதை தாங்கிப்பிடிக்கிறது மத்திய அரசு!

அது போதாதென்று, ஊரறிந்த கொள்ளைக்காரர்களின் வாரிசுகளை இந்தத் தேர்தலில் களமிறக்கி ஊழலின் அடுத்த தளத்துக்கு நகர துடிக்கிறது அடிமை அரசு!

இந்தக்கூட்டணிக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் தமிழகம் தனக்குத்தானே தோண்டிக்கொள்ளும் சவக்குழி!

மொத்தமாக புறக்கணிக்கப்படவேண்டிய, ஊழல், அராஜக கூட்டணி இது!

ஐந்து வருடம் முழுமையாக ஆண்டுவிட்டு,  மக்களின் மறதியை மட்டுமே நம்பி
பழைய தேர்தல் அறிக்கையையே தூசி தட்டி எடுத்துவரும் இவர்களை
ஓடவிட்டு விரட்டுவதே இவர்களின் தவறுகளுக்கு நாம் தரக்கூடிய குறைந்தபட்ச தண்டனை!

நாற்பது டெபாசிட் தொகைகளை தேர்தல் கமிஷனுக்கு சேமித்துக் கொடுப்பது நம் கடமை!

இனி,
மிச்சமிருக்கும்
திமுக தலைமையிலான கூட்டணி:

இது அப்பழுக்கற்ற கூட்டணி, இதில் உள்ள எல்லாக் கட்சிகளும் புனிதமான கட்சிகள் என்று சொன்னால் அவர்களே சிரிப்பை அடக்கமுடியாமல் திணறுவார்கள்!

எல்லாத் தீமைகளுக்கும் முன்னேர் மாநிலத்தில் திமுகவும் மத்தியில் காங்கிரஸும்!

என்ன, அவர்களுக்குப் பின்னால் வருபவர்கள் எண்பதடி பாய்ந்து, இவர்களை வெறும் பிக்பாக்கெட்டுகளாய் உணரவைத்துவிடுகிறார்கள்!
அவ்வளவே!

ஊழல் உலகளாவிய பிரச்னை என்று முட்டுக்கொடுத்தவர் இன்றைய பிரதமர் வேட்பாளரின் பாட்டி!

ஐம்பதாண்டுகாலம் நாட்டை ஆண்ட கட்சி, இன்னும் வறுமையை ஒழிப்போம் என்று ஒட்டுக்கேட்டு வருவது குரூர நகைச்சுவை!

ஜாதியை ஒழிப்பதற்கு எங்களைவிட்டால் யாருமில்லை என்று கூவும் இந்தக் கூட்டணியின் தமிழகத் தலைமை, ஜாதி பார்த்தே எல்லாத் தொகுதிக்கும் வேட்பாளரை நிறுத்துகிறது!

அவர்களின் சாதி மறுப்பு என்னவென்றால், ஹிண்டு பத்திரிக்கை சாதகமாய் செய்தி வெளியிட்டால், ‘ஆங்கிலப்பத்திரிக்கை கழக அரசுக்கு புகழாரம்” என்று பெருமிதக் கடிதம்!

பாதகமாய் போனால், “பார்ப்பன ஏடு பல்லிளிக்கிறது உடன்பிறப்பே” என்று வசவுக் கடிதம்!

இதுதான் சாதி ஒழிப்பில் மூன்றாம் கலைஞரின் பாட்டனார் காலத்திலிருந்து நடைமுறை!

இந்தப்போக்குக்கு சமீபகாலத்து உதாரணம் கமல்ஹாசன் மீதான சாதிரீதி விமர்சனங்கள்!

பெரும்பாலான இணைய உடன்பிறப்புக்கள் நாம் தமிழர்போல் வரலாற்றை சிதைத்து எழுதுவதும்,
எந்தக் கட்சியும் சாராதோரின் (இவர்கள் பாஷையில் நடுநிலை ...கள்) விமர்சனங்களுக்கு நரகல் நடையில் பதில் சொல்வதும் என்று
கற்காலத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்!

பிறகேன் இந்தக்கூட்டணியை ஆதரிக்கவேண்டும்?

நமக்கு வேறு வழி ஏதும் இருக்கிறதா?

குடும்பத்துக்கே மத்திய அரசில் பங்கு வாங்கினாலும்,

இவர்கள் ஆட்சியில் புல்லுக்குப் பாயும் நீர் கொஞ்சம் நெல்லுக்கும் கசியும் என்பதால்…

அந்தப் பெரும் தீமைகளை ஒப்பிடுகையில் இவர்கள் பரவாயில்லை என்பதால்…

பாஜக மோடிபோல் காங்கிரஸ் அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளைகளாய் நடத்தாது என்பதால்…

மொத்தமாய் தேர்தலை புறக்கணிக்கும் வல்லமையும், ஒற்றுமையும் தமிழர்களுக்கு இல்லாத காரணத்தால்…

எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்வரை போராடும் தீவிரம் நீர்த்துப்போனதால்…

ஐபிஎல் ஆரம்பித்தால் அரசியல் மறந்துபோகும் கூட்டம்  மட்டுமே இங்கு உள்ளதால்…

இப்போதைக்கு,

இந்தக்கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து, ஓரளவுக்காவது தமிழக நலனைக் காப்போம்!

ஈசனோ, ஈவேராவோ
இனிவரும் காலத்திலாவது
அரசியல்வாதிகளுக்கு
கொஞ்சமாவது நேர்மையை அருளட்டும்
என்று பிரார்த்தனைகளோடு
இவர்களுக்கே வாக்களிப்போம்!

No comments:

Post a Comment