Sunday 13 February 2022

BIOGRAPHY OF MARUTHA KASI -LYRICS

 

BIOGRAPHY OF 

MARUTHAKASI -LYRICS




திரைக்கவித் திலகம் அய்யம்பெருமாள் மருதகாசி பிறந்த தினம் இன்று. 

 மருதகாசி பாடல்கள் மின்னூல் இணைப்புடன் கூடிய பதிவு.  

மருதகாசி (பிப்ரவரி 13, 1920 - நவம்பர் 29, 1989)  தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் . 

1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். 

 இயற்பெயர் - அய்யம்பெருமாள் மருதகாசி பிறப்பு - 13 - பிப்ரவரி - 1920 இறப்பு- 29 - நவம்பர் - 1989 பிறந்த இடம் - மேலக்குடிகாடு - தமிழ்நாடு திரைத்துறை அனுபவம் 1949 - 1989 பணி - பாடலாசிரியர் துணைவி - தனக்கோடி அம்மாள் குழந்தைகள் - 6 மகன்கள் - 3 மகள்கள் பெற்றோர் அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள் உடன் பிறந்தவர்கள் அ முத்தையன் (சகோதரர்) புனைப்பெயர் திரைக்கவித்திலகம். 




 1950 களில் மிக வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர் அ மருதகாசி.  ஜி ராமனாதன், கே வி மகாதேவன், டி ஆர் பாப்பா என அன்றைய முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான வெற்றிப் பாடல்களை வழங்கிய இவர், மேலக்குடிகாடு என்ற சிற்றூரில் ஒரு வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

  இவரது கைவண்ணத்தில் உருவான விவசாயம் சார்ந்த திரைப்பாடல்கள் தமிழகத்தின் கடைக்கோடி சாமானியனும் இன்றளவும் முணுமுணுக்கக் கூடியவை என்றால் அது மிகையன்று.  

 "மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி", "ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே", "மாட்டுக்கார வேலா உன் மாட்ட கொஞ்சம் பாத்துக்கடா" என்று வேளாண் பெருமக்களின் பெருமையை கூறும் இந்தப் பட்டியல் நீளும்.  

 இன்டர்மீடியட் வரை படித்த இவர், ஆரம்பக் காலங்களில் நாடக நடிகராகவும் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும,; நாடகப்பாடல்கள் எழுதியும் பணிபுரிந்திருக்கின்றார். 

திருச்சி லோகநாதன் தான் அமைத்திருந்த மெட்டுகளுக்கு, இவர் எழுதியிருந்த பாடல்களை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாடிக் காட்ட, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து அழைப்பு வந்தது அ.மருதகாசிக்கு. 

  "பெண்ணெனும் மாயா பேயாம் பொய் மாதராய்" என்று ஆரம்பமாகும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "மாயாவதி" படப்பாடல்தான் இவர் எழுதிய முதல் திரைப்படப்பாடல். இப்படம் வெளியான ஆண்டு 1949. இதனைத் தொடர்ந்து "தூக்கு தூக்கி", "பாசவலை", "அலிபாபாவும் 40 திருடர்களும்", "மங்கையர் திலகம்", "தாய்க்குப் பின் தாரம்", சதாராம், "அமரதீபம்", "மல்லிகா", "நீலமலைத்திருடன்", "சாரங்கதாரா", "உத்தமபுத்திரன்", "பாகப்பிரிவினை", "பாவை விளக்கு", "மன்னாதி மன்னன்", என 1950களில் ஏராளமான படங்களுக்கு எண்ணற்ற வெற்றிப் பாடல்களைத் தந்து ஓய்வறியா   பாடலாசிரியராக இருந்து வந்தார்.  

60களில் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் பார்வை கவிஞர் கண்ணதாசனின் மீது விழ, இவருக்கு சற்று வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. அல்லி பெற்ற பிள்ளை என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நஷ்டம் அடைந்தார். 1967 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு மீண்டு வந்தபின் தேவர் தயாரித்து எம் ஜி ஆர் நடிக்கவிருந்த "மறுபிறவி" என்ற திரைப்படத்திற்கு இவரை பாடல் எழுத தேவர் கேட்டுக் கொண்டார். ஒரு பாடல் எழுதிய நிலையில் படத்தைத் தொடர முடியாமல் போயிற்று. அதன் பின் தேவர் தயாரிதத "தேர்த்திருவிழா", "விவசாயி" வெள்ளிக்கிழமை விரதம் என்று தொடர்ந்து தேவர் தயாரித்து வந்த படங்களில் இவரது பாடல்கள் இடம் பெற்று வந்தன.   ஏறக்குறைய 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய இவர் 4000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 

பாமரன் முதல் படித்தவன் வரை அனைவரும் விரும்பும் வண்ணம் காதல், பாசம், சோகம், தத்துவம், வீரம் என்று அத்தனை பரிமாணங்களிலும் காலத்தால் அழிக்க முடியா காவியப் பாடல்களைத் தந்த இந்த கவிஞரை அவரது பிறந்த நாளில்நினைவு கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.

No comments:

Post a Comment