Monday 17 January 2022

KAANUM PONGAL

 


KAANUM PONGAL

பறவைக்கு அன்னமிடும் பாரம்பரியம் .. சுற்றுலாத்தலங்களில் முகாமிட்டு கொண்டாட்டம் பொள்ளாச்சி:



பொள்ளாச்சி பகுதியில் காணும் பொங்கலை, பூப்பொங்கல், பூ நோம்பி, கன்னிப் பொங்கல் அல்லது கணுப்பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உறவினர்களை, நண்பர்களைக் காணுதல், பெரியோர் ஆசி பெறுதல், கோவில்கள், பொழுதுபோக்கு தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவார்கள்.கிராமங்களில் கால்நடைகளை குடும்ப உறுப்பினர்களாக எண்ணி வாழும் விவசாயிகள், அவற்றின் நலம் வேண்டி, 'மாலகோவில்' எனப்படும் கோவில்களுக்கு சென்று, நேர்த்திக் கடன், வேண்டுதல் செலுத்தி வருவது வழக்கம். மேலும், குடும்பத்துடன் ஆற்றங்கரை, மலைக்கோவில்களுக்கு சென்று பாட்டுப்பாடி, கும்மி அடித்து மகிழ்வாக பொழுது போக்கி விட்டு, அங்கிருந்து அழகான பூப்பறித்து வருவதும் நடைபெறும். இதைத்தான் 'பூ பறிக்கும் நோம்பி' என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகின்றனர்.அதே போல், காணும் பொங்கல் என்பது, பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். மணம் முடித்துக் கொடுத்த பெண்களுக்கு, பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பூப்பொங்கல் சீர் கொண்டு போய் கொடுத்து வாழ்த்துவர். சீர் பெறும் பெண்கள், சகோதரர்கள் நலம் பெற்று வாழ வேண்டி, நோன்பு நோற்று, கணுப்பிடி வைப்பது வழக்கம். முந்தைய நாள் பொங்கிய சாதத்தை, உடன்பிறந்தவர்களின் நன்மைக்கு வேண்டி, காக்கா குருவிக்கு அன்னமிடுவதே இந்த நோன்பாகும்.ஆற்றங்கரை அல்லது வீட்டு மொட்டைமாடியில் ,மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து ஐந்து வகையான சாதங்களை வைப்பர்.முதல் நாள் வைத்த பொங்கலில் கொஞ்சம் மஞ்சள் பொடி, குங்குமம் தூவியும், பால் சேர்த்தும், சக்கரைப் பொங்கல், தயிர் சாதமாகவும் காக்கை, குருவிகளுக்கு படையல் வைப்பர். இந்த கணுப்பிடி வைக்கும் போது, 'காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்,' என்று சொல்லி படையலிட்டு, அண்ணன், தம்பி நலம் பெற்று வாழ பிரார்த்திப்பர்கள்.ஆனால், இன்றைய காலகட்டத்தில், பலருக்கும் இந்த கணுப்பிடி வைக்கும் நோன்பு குறித்து அதிகம் தெரிவதில்லை. பொழுது போக்கு அம்சங்களுக்கு மட்டும் முக்கியத்தும் அளிப்பதாக, பெரியவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.பூ பொங்கலன்று, ஆழியாறு அணை பூங்கா, குரங்கு அருவி, சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மாலகோவில் மற்றும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.


No comments:

Post a Comment